Tuesday, June 3, 2025

ஐபிஎல் சம்பியன் பெங்களூரா? பஞ்சாப்பா?


 கிறிக்கெற் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிக்கப்படும் ஐபிஎல்  தொடரின்  இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

கடந்த மார்ச் 22-ஆம் திகதி தொட‌ங்கிய 2025 ஐபிஎல் கிறிக்கெற் தொடரின்  இறுதிப் போட்டியில் பெங்களூரும் ,பஞ்சாப்பும்  மோதுகின்றனர்.

ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் சென்னை ,மும்பை ஆகிய  இரண்டு அணிகளும்   இறுதிப் போட்டியில் இல்லை என்ப‌து ஒருபுறம் இருக்க  கிண்ணத்தை கோலி தூக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில்   ஒரு முறை கூட சம்பியனாகாத பெங்களூர்,பஞ்சாப்  அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால்,   ஐபிஎல் மகுடத்தை புதிய சம்பியன் கைப்பற்றப்போவது உறுதியாகியுள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ள ஆர்சிபி - பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் சரிசம பலத்துடன் களமிறங்குகிறன.ரி20 போட்டிகளைப் பொறுத்தமட்டில் குறிப்பாக ஐபிஎல் போன்ற தொடரில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதில்   பந்துவீச்சாளர்களின் பங்கே அதிகளவு ஆகும்.

ரி20 போட்டிகளைப் பொறுத்தவரை சிக்ஸர், பவுண்டரி விளாசும் நோக்கத்துடனே   களமிறங்குவார்கள். இவர்களை கட்டுப்படுத்தும் பெரும் பங்கு பந்துவீச்சாளர்களுக்கு உண்டு. திறம்பட இந்த அதிரடி வீரர்களிக்  கையாளும் பந்துவீச்சாளர்களின் கையில்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியும் உண்டு.

நீண்ட பேட்டிங் பட்டாளத்தை இரு அணிகளும் கொண்டுள்ள நிலையில், இந்த பேட்டிங் பட்டாளத்தை சமாளிக்கும் வல்லமை பந்துவீச்சு பட்டாளம் இரு அணிகளிலும் உண்டு

இதுவரை நடந்த 17 சீசன்களில் ஆர்சிபி அணி சம்பியனாகாததற்கு  கு முக்கிய காரணம்   பந்துவீச்சு பலவீனமே ஆகும். இதன்காரணமாகவே கெயில், டிவிலியர்ஸ் ஆகிய ஜாம்பவன்களுடன் இணைந்து கோலி பல வருடங்களாக முயற்சித்தும் கிண்ணம்  வசப்படவில்லை. ஆனால், நடப்பு சீசனில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்துள்ளது.

ஹேசில்வுட், புவனேஷ்வர், யஷ் தயாள் வேகத்தில் முக்கிய அம்சமாக உள்ளனர். குறிப்பாக,  நட்சத்திர பந்துவீச்சாளராக ஹேசில்வுட் உள்ளார். எதிரணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன் நெருக்கடியான சூழலில் ஆட்டத்தை மாற்றி ஆர்சிபி வசம் கொண்டு வரும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

ஸ்விங் கிங் எனப்படும் புவனேஷ்வர் குமார் முக்கிய வீரராக திகழ்கிறார். அவரது அனுபவமும், வேகமும் குவாலிஃபயரில் நன்றாக ஜொலித்தது. இந்த சீசனின் தொடக்கத்தில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் குவாலிஃபயர் 1ல் சிறப்பாக வீசினார். அவர் மீண்டும் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினாலே எதிரணிக்கு பெரும் சவால்தான். 

யஷ் தயாள் ஆர்சிபி அணியி்ன் தவிர்க்க முடியாத டெத் பவுலராக உருவெடுத்துள்ளார். மிகவும் நெருக்கடியான நேரத்தில் கட்டுக்கோப்பாக வீசுவதில் வல்லவராக உள்ளார். அவர் சிறப்பாக வீசினால் எதிரணிக்கு சவால். இவர்கள் 3 பேர் வேகத்தில் முக்கிய வீரர்களாக உள்ள நிலையில் சுழல் அஸ்திரமாக சுயாஷ் சர்மாவும், குருணல் பாண்ட்யாவும் உள்ளனர்.

ட்டுக்கோப்பாகவும் விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீசும் ஆற்றல் கொண்டவராகவும் சுயாஷ் சர்மா உருவெடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபயர் 1ல் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு சுழல் சாம்ராட்டாக குருணல் பாண்ட்யா உள்ளார். சுழற் பந்துவீச்சாளர்களுக்கான விதிவிலக்காக பாண்ட்யா உள்ளார். கூக்ளி, லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் ஆகியவற்றிற்கு பதிலாக யார்க்கர், பவுன்சர் என சுழலில் யாருமே வீச முடியாத பந்துவீச்சை வீசி வருகிறார். இவர்கள் மட்டுமின்றி ஷெப்பர்ட் மித வேகப்பந்துவீச்சாளர் ஆவார். லிவிங்ஸ்டனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் அவர் பந்துவீசும் வாய்ப்பும் கிடைக்கும். அவரும் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்.

பஞ்சாப் அணியும் பந்துவீச்சில் அசத்தலாகவே உள்ளது. அந்த அணியில் அர்ஷ்தீப்சிங், ஜேமிசன், விஜயகுமார் வைஷாக், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார், ஓமர்சாய், சாஹல், ஸ்டோய்னிஸ் உள்ளனர். பஞ்சாப் பந்துவீச்சை வழிநடத்தும் பொறுப்பை அர்ஷ்தீப்சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். இடது கை வேகப்பந்துவீச்சாளரான அவர்  திறம்பட பந்துவீசினால் பஞ்சாப்பிற்கு பலமாக அமையும். அவரும் சிறந்த டெத் பவுலர் ஆவார்.

 , பஞ்சாப்பின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஜேமிசன் உள்ளார். ஹேசல்வுட்டைப் போல 6 அடி உயரமுள்ள இவர் மும்பைக்கு எதிராக அசத்தலாக பந்துவீசினார். அவரது அசத்தல் பந்துவீச்சு தொடர்ந்தால் பஞ்சாப்பிற்கு நம்பிக்கை அதிகரிக்கும். முன்னாள் ஆர்சிபி வீரரான விஜயகுமார் வைஷாக் நல்ல வேகப்பந்துவீச்சாளர் ஆவார். அவர் நன்றாக வீசினால் சவால் அளிக்க முடியும். ஓமர்சாய் பஞ்சாப்பிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக குவாலிஃபயர் போட்டியில் வீசினால், அவர் இறுதிப்போட்டியில் அப்படி பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.

பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான இவர்களுடன் பஞ்சாப்பின் சுழலை முன்னாள் பெங்களூர் வீரரான சாஹல் வழிநடத்த உள்ளார். அனுபவம் நிறைந்த சாஹல் சுழலில் மிரட்டினால்  சவாலாக மாறிவிடும். அவருக்கு பக்கபலமாக ப்ரார் உள்ளார். அவருக்கும் ஐபிஎல் தொடரில் ஏராளமாக பந்துவீசிய அனுபவம் உண்டு. இந்த சுழல் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இந்த பிரதான பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி ஸ்டோய்னிஸ் மிதவேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். முஷீர்கானும் சுழலில் அசத்தும் திறன் கொண்டவர்.

இரு அணிகளும் சரிசம பந்துவீச்சு பலத்துடன் காணப்படுவதால்   எந்த அணியின் பந்துவீச்சு மைதானத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த அணி முதல் முறையாக கிண்ணத்தை  முத்தமிடும்.

பெங்களூரு அணியின் ஆட்டம் வேற 'லெவலில்' உள்ளது. தகுதிச்சுற்று-1ல் பஞ்சாப்பை வீழ்த்தி, பைனலுக்குள் நேரடியாக நுழைந்தது. அனுபவ கோலி   இன்றும்  சாதித்தால் , 'ஈ சாலா கப் நம்தே'   என்ற பெங்களூரு ரசிகர்களின் நீண்ட கால கனவு நனவாகலாம். கப்டன் ரஜத் படிதர் 286  ஓட்டங்கள், , பில் சால்ட் 387 ஓட்டங்கள், , 'பினிஷர்' ஜிதேஷ் சர்மா 237 ஓட்டங்கள்,  'அதிரடி' ரொமாரியா ஷெப்பர்டு, மயங்க் அகர்வால் ஆகியோரும் கைகொடுப்பார்கள்.  உடற்தகுதியில் தேறினால் டிம் டேவிட் இடம் பெறுவார்.

   பஞ்சாப் அணி, தகுதிச் சுற்று-1ல் தோற்ற போதும், மும்பைக்கு எதிரான தகுதிச் சுற்று-2ல் அசத்தியது. இதில், கப்டன் ஷ்ரேயஸ் தனி ஒருவனாக 87  ஓட்டங்கள்  விளாசி, அணியை 11 ஆண்டுகளுக்கு பின் பைனலுக்கு அழைத்து சென்றார். இவர் 16  போடிகளில் 603 ஓட்டங்கள், குவித்துள்ளார்.

இவர், இன்றும் நிலைத்து நின்று ஆடினால், கோப்பை வெல்வது உறுதி. ஜோஷ் இங்லிஸ், பிரப்சிம்ரன், பிரியான்ஷ் ஆர்யா, சஷாங்க் சிங், ஸ்டாய்னிஸ் என பேட்டிங் படை வலுவாக உள்ளது.

பிரிமியர் அரங்கில் இரு அணிகளும் 36 முறை மோதின. இதில் தலா 18 வெற்றிகளுடன் சமபலத்தில் உள்ளன.

* இம்முறை 3 முறை மோதின. இதில் பெங்களூரு 2, பஞ்சாப் 1ல் வென்றன.

* ஆமதாபாத் மோடி மைதானத்தில் இரண்டாவது முறையாக மோத உள்ளன. இங்கு ஏற்கனவே நடந்த போட்டியில்  பஞ்சாப் அணி, பெங்களூருவை வீழ்த்தியது.* பைனலில் இரு அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.

 

ஐபிஎல்25,ரி20,பஞ்சாப்,பெங்களூர்,விளையாட்டு

No comments: