Saturday, June 7, 2025

கூட்டணிக்கு கைகொடுக்கும் ஸ்டாலின் கூட்டணியைக் கைவிட்ட எடப்பாடி

ஸ்டாலினின் தலைமையிலான  இந்தியா கூட்டணி தமிழ்கத்தில் மிக வலுவாகக் கால் ஊன்றியுள்ளது. மெகா கூட்டணியை அமைக்கப்போவதாகச் சவால் விட்ட எடப்பாடியைக் கூட்டணிக் கட்சிகளைக் கைகழுவிவிடுகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது நடைபெறும்  கூட்டணிப் பேரங்களில்  மாநிலங்களவை எம்பிப் பதவியும்  முடிவு செய்யப்படும்.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன சொல்லைக்காப்பாற்றும் விதமாக கமலுக்கு எம்பிப் பதவியைத் தூக்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி  பிரேமலதாவுக்குக் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார்.

வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27ம் திகதியுடன் முடிவடைகிறது. புதிதாக 6 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 19ம்  திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதிமுக தரப்பிலிருந்து அன்புமணி, என்.சந்திரசேகரன் ஆகியோரும், திமுக சார்பில் மற்ற 4 பேரும் எம்.பி.யாக தேர்வாகிர் எம்பியாகினர்

 ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அந்த அடிப்படையில், திமுகவுக்கு 4 உறுப்பினர்களும் அதிமுகவுக்கு 2 உறுப்பினர்களும் தேர்வுபெறும் நிலை உள்ளது.

  திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் மு..ஸ்டாலின்   வெளியிட்டார். . திமுக வேட்பாளர்களாக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள்’’ என அறிவித்துள்ளார்.மற்றைய ஒரு இடம் மக்கள் நீதிமைய கட்சியின் தலைவர் கமலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதியின்  பிர்காரம் தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொடுத்த வாக்குறுதியின் படி ஒரு  எம்பி பதவி தரப்பட வேண்டும் என  பிரேமலதா ஞாபகப் படுத்துகிறார். அப்படி ஒரு வாக்குறுதி கொடுக்கப்படவில்லை என எடப்பாடி சத்தியம்செய்யாத குறையாக வாக்குமூலம் கொடுக்கிறார்.

ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில்,  இரு இடங்களுக்கும் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

  தேமுதிகவுக்கு 2026 மாநிலங்களவைத் தேர்தலின்போது சீட் தரப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தரப்படும் என்று முதல் முறையாக அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவிரவாக சுதீஷைக் கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே எடப்பாடி அரிவித்துள்ளார்.

  மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  இரண்டு  நாட்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது தேமுதிகவுக்கான ராஜ்யசபா சீட் விவகாரம் தொடர்பாகவும் கூட ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.   கட்சி முன்னணியினருடனும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்துள்ளார். அப்போது அனைவருமே ஒரு மனதாக தேமுதிகவுக்கு இப்போது சீட் தர வேண்டாம் என்று கூறி விட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்காக நாம் நிறைய இழந்துள்ளோம். ஜி.கே.வாசனுக்கு சீட் தந்தோம். அவரை நம்மை கண்டு கொள்ளவே இல்லை. கடந்த தேர்தலில் பாஜக பக்கம் போய் விட்டார். பாமகவுக்கும் சீட் தந்தோம். அன்புமணி எம்.பி. ஆனார். ஆனால் அவரோ கடைசி நேரத்தில் நமது கழுத்தறுத்து விட்டு பாஜக பக்கம் போய் விட்டார். இப்போது தேமுதிகவுக்கும் அதேபோல கொடுத்தால், அவர்களும் அணி மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு மூத்த தலைவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து தேமுதிக பொருளாளர் சுதீஷை நேரில் அழைத்த எடப்பாடி பழனிச்சாமி, 2026 சட்டசபைத் தேர்தல் முடியட்டும். அதன் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் உங்களுக்கு சீட்  தருகிறோம். இப்போது வாய்ப்பில்லை என்று கூறி விட்டாராம். இதனால்தான் சுதீஷ் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

  அதிமுக சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ இன்பதுரையும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் வழக்கறிஞர் தனபால் ஆகியோர்   போட்டியிடுவர்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ம்பவைத்து ஏமாற்றியதால் மிகுந்த கடுப்பில் இருக்கிறார் பிரேமலதா. இந்த நிலையில்


 தமிழகத்தில் உள்ள இந்தியா கூட்டணியில் இணைய வருமாறு, அதாவது திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வருமாறு தேமுதிக.,விற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை தேமுதிக ஏற்குமா? அப்படியே ஏற்று திமுக கூட்டணியில் இணைந்தால் அது எந்த அளவிற்கு தேமுதிக.,வின் வளர்ச்சி பலன் தரும்?.. அதை விட முக்கியமாக, திமுக கூட்டணியில் முதலில் தேமுதிகவுக்கு இடம் இருக்கா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தேமுதிக தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் தேமுதிக.,விற்கு வருகிற ராஜ்யசபா எம்.பி., சீட் தர முடியாது என அதிமுக தலைமை மறுத்து விட்டதால், அதிமுக தலைமை மற்றும் கூட்டணி மீது தேமுதிக கடுமையான அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் திமுகவைப் புகழ்ந்து பேச ஆரம்பித்திருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்து சிலாகித்து நன்றி கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரை புகழ்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பிரேமலதாவின் அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, திமுக கூட்டணியில் இணைய வருமாறு தேமுதிக.,விற்கு செல்வ பெருந்தகை அழைப்பு விடுத்தார்.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்புதல் இல்லாமல் செல்வப் பெருந்தகை அழைப்பு விடுத்திருக்க மாட்டார்.

எடப்பாடியின் நடவடிக்கையால் அதிருப்தியில் இருக்கும் பிரேமலதா விஜயின் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின. விஜயும்,  பிரேமலதாவும் இணையக்கூடாது என்பதால் செல்வப் பெருந்தகை அழைப்பை விடுத்திருக்கலாம்.

விஜயுடன் யாரும் கூட்டனி வைக்கவில்லை.  விஜய்க்கு சாதகமான மன நிலை இளைஞர்கள் மத்தியில் நிலவுவதாலும் தனக்கான வெற்றி வாய்ப்புகள் எந்த வகையிலும் சிதைந்து போய் விடக் கூடாது என்று கவனம் காட்டுகிறது திமுக.

இதனால்தான்   இதுநாள் வரை பார்க்காமல் இருந்து வந்த தனது அண்ணன் மு..அழகிரியை முதல்வர் மு..ஸ்டாலின் நேரில் போய்ச் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள பலவீனத்தை சரிப்படுத்தி விடலாம் என்று முதல்வர் மு..ஸ்டாலின் கருதுவதாக கூறப்படுகிறது. அதேபோல விஜய் பக்கம் போகும் வாய்ப்புள்ள தேமுதிகவையும் தன் பக்கம் திருப்ப திமுக முயல்வதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சமயத்தில் திமுக., கூட்டணியில் தேமுதிக இணைவது சரியான முடிவாக இருக்கும் என்பது சந்தேகத்திற்குரிய கேள்வி தான். தற்போதுள்ள அரசியல் கள நிலவரம் ஒரு புறம் இருந்தாலும் தேதிமுக தலைவர் விஜயகாந்த் தான் உயிருடன் இருந்தது வரை எந்த காரணத்திற்காகவும் திமுக., கூட்டணியில் இணைவது இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். திமுக ஆட்சி காலத்தில் மேம்பால பணிகளுக்காக தன்னுடைய திருமண மண்டபத்தை இடித்தது முதலே தனிப்பட்ட முறையில் திமுக., மீது விஜயகாந்த் கடுமையான கோபத்தில் இருந்தது அனைவரும் அறிந்ததே. கருணாநிதி எவ்வளவோ முயற்சித்தும் கூட திமுக., கூட்டணியில் இணைய கூடாது என்பதில் விஜயகாந்த் மிக உறுதியாக இருந்தார்.

பிரேமலதாஅவுக்கு முன்புபோல் வாக்கு வங்கி இல்லை. எதிரணியில் பிரேமலதாவின் கட்சி வெற்றி பெறாது. ஆனால் சில வேளை வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம்.

தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில் பிரேமலதா, திமுக கூட்டணியில் இணையும் முடிவை எடுத்தால் அது கண்டிப்பாக கட்சி தொண்டர்களிடமும், விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் தேமுதிக., மீது அதிருப்தியை உருவாக்கும். மற்றொரு புறம் திமுக எதிர்ப்பும் தேமுதிக.,வின் பக்கம் திரும்பும். அப்படி நடந்தால் அது தேமுதிக.,வின் செல்வாக்கையும், ஓட்டு வங்கியையும் மேலும் பலம் இழக்க வைக்கும் என்று கருதப்படுகிறது. அதேசமயம், தேமுதிக கூட்டணிக்குள் வந்தால் அந்தக் கட்சிக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாகும்.

ரமணி

8/6/25 

  

No comments: