Tuesday, March 13, 2018

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி



   

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையேயான   முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாஸ ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது லீக் போட்டியில் இலங்கையை எதிர்த்துவி்ளையாடிய  இந்தியா  வெற்றிபெற்றது. முதல் சுற்றுப் போட்டியில் மூன்று நாடுகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதனால்  இந்தப் போட்டி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் முக்கியமான போட்டியாக அமைந்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது. 153 என்ற வெற்ரி இலக்குடன் விளையாடிய இந்தியா 17.3 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 153 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெற்களால் வெற்றிபெற்றது.

. இந்திய அணியில் ரிஷாப் பான்ட் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் 2 ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட கப்டன் சன்டிமாலுக்கு பதிலாக சுரங்க இடம் பெற்றார். திசரா பெரேரா கப்டன் பொறுப்பை கவனித்தார். மழை காரணமாக ஆட்டம் 95 நிமிடம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஒரு ஓவர் மட்டும் குறைக்கப்பட்டு 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது..

நானயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா களத்தடுப்பைத் தேர்வு செய்தது.   இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலக, குசல் மென்டிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.. 2 ஓவர்களில்   25 ஓட்டங்கள் எடுத்தபோது   அடித்து ஆடிய குணதிலக ஆட்டமிழந்தார். 8 பந்துகளில் ஒரு சிக்ஸர் உட்பட 17 ஓட்டங்கள் எடுத்த குணதிலக, ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் சுரேஷ் ரெய்னாவால் அருமையாக கேட்ச் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.


அடுத்து களம் கண்ட குசல் பெரேரா (3 ) வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் வெளியேறினார்..  குசல் மென்டிஸ் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். தரங்கா (22), கப்டன் திசரா பெரேரா (15 ) ஆகியோர் தன் பங்குக்கு வேகமாகஓட்டங்கள்  சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜீவன் மென்டிஸ் (1  ) வாஷிங்டன் சுந்தர் பந்தில் விக்கெற்றைப் பறிகொடுத்தார்.

அதிரடி காட்டிய குசல் மென்டிஸ் 38 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 55 ஓட்டங்கள் எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் கப்டன் ரோகித் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு இலங்கை அணியின் ஓட்ட வேகத்தை இந்திய அணி கட்டுப்படுத்தியது. நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெற்களை இழந்து  152 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெற்களையும்,, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெற்கலையும்ம், ஜெய்தேவ் உனட்கட், யுஸ்வேந்திர சாஹல், விஜய் சங்கர்  ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினார்கள்.

 19 ஓவர்களில் 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெற்களை  இழந்து 153 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (11), ஷிகர் தவான் (8) ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெயா பந்து வீச்சில் விரைவில் ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் கண்ட லோகேஷ் , ரெய்னா ஜோடி சிறிது நேரம் தாக்குப் பிடித்தது.
15  பந்துகளுக்கு முகம் கொடுத்த ரெய்னா 2 சிக்ஸர் 2 பவுண்டர் அடங்கலாக 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.சிறந்த முறையில் விளையாடும் ரெய்னா மோசமான பந்து வீச்சுகளில் ஆட்டமிழக்கிறார். ராகுல் பெரியளவில் சோபிக்கவில்லை. 18 ஓட்டங்களில் ஹிட் விக்கெற் முறையில் ஆட்டமிழந்தார். ரி20 போட்டியில் இந்திய அணி வீரர் ஒருவர் ஹிட் விக்கெற் முறையில் ஆட்டமிழப்பது இதுவே முதன் முறையாகும்.

அடுத்து ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே (42ஓட்டங்கள், 31 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), தினேஷ் கார்த்திக் (39 ஓட்டங்கள், 25 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) ஆகியோர் கடைசி வரை நிலைத்து நின்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. அகில தனஞ்ஜெய 2 விக்கெற்களையும் நுவான் பிரதீப், ஜீவன்  மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினர்.ஷதுர் தாகூர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பங்களாதேஷ் எதிர்கொள்கிறது.

No comments: