Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Tuesday, December 3, 2024

பத்திரிகைத் துறையில் சிறந்த ஆளுமை


 இலங்கையில் இன்று அச்சு ஊடகத் துறை பல்வேறு  சவால்களுக்கு மத்தியில் தன்னை நிலைநிறுத்த கடும் பிரயத்தனப்பட்டு வருகையில் இத் துறையில் அவ்வப்போது பலர் கோலோச்சி வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  வாசகர்கள் மத்தியில் என்றுமே தங்களின் ஆளுமையால் சிறப்பான இடத்தை பலர் பிடித்துள்ளனர்.அவர்களில் ஒருவராகவே வடமராட்சி வதிரியின் மைந்தன் சூரன்.ஏ. ரவிவர்மா (ரமணி) தனது பணியை தொடர்கிறார்.    

1997 ஏப்பிரல் 6 ஆம் திகதி ‘தினக்குரல்’ பத்திரிகை கொழும்பில் ஆரம்பமான ஓரிரு தினங்களில் உதவி ஆசிரியராக இணைந்த இவர்  பல வருடங்களாக தினக்குரலில் சேவையாற்றி செய்தித் தொகுப்பு, கட்டுரை எழுதுதல், குறிப்பாக புதன் வசந்தம் பகுதியில் விளையாட்டு,சினிமா உட்பட பல்வேறு  கட்டுரைகளை எழுதி பத்திரிகையை பலப்படுத்தினார்.
இந்த நிலையில் இவரது  ஆற்றலால் ‘இடி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரானார். அதனைத் தொடர்ந்து சுடரொளிப் பத்திரிகையிலும் அரிய சேவையாற்றினார். அதன் பின்னர் வீரகேசரியில் இணைந்து செய்தித் தொகுப்பு, கட்டுரை எழுதுதல்  ஆகியவற்றில் தனித்துவத்துடன் மிளிர்ந்தார். ‘மெற்றோ நியூஸ்’, ‘மித்திரன்’, ‘வீரகேசரி வார மலர்’ ஆகியவற்றில் பல கட்டுரைகளைத் திறம்பட எழுதினார்.
அங்கிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட பத்திரிகைத் துறையிலிருந்த ஆர்வம் காரணமாக பல பத்திரிகைகள், இணையத் தளங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் உட்பட வெவ்வேறு துறைகளிலும் பல சிறப்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். அரசியல், விளையாட்டு,சினிமா ஆகியவற்றில் இவர் கொண்டிருக்கும் மிகுந்த ஆர்வம் காரணமாக அத்துறைகளில் இவர் எழுதும் கட்டுரைகள் மிகக் கவனிப்பிற்கும் பாராட்டுக்கும் உள்ளாகியுள்ளது.தற்போது சினிமா தொடர்புடையதாக இவரது இந்நூல் வெளிவருகிறது.
மிகவும் நேர்மையான ஒரு பத்திரிகையாளரான இவர், பத்திரிகா தர்மத்திற்காக எப்போதும் பாடுபட்டவர். இப்பொழுதும் தனது வயது மூப்பினையும் பொருட்படுத்தாது இருபத்து நான்கு மணிநேரமும் பத்திரிகைத் துறையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். தற்போது ‘தீம்புனல்’ மின் இதழின் பிரதம ஆசிரியராக இருக்கும் இவரால் வாசகர்களின் எண்ணங்களுக்கேற்ப பல்துறை இதழாக அது பரிமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

த.சிவகணேசன்
செய்தி ஆசிரியர்  
தினக்குரல் 

Friday, November 29, 2024

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி” – அணிந்துரை


 ஈழத்து இலக்கிய உலகில் ஊடகப் பரப்பில் இருந்து கொண்டு இலக்கியம்

சமைத்தோரில் பரவலான எழுத்துகளை வெளிப்படுத்திய வகையில் ரவிவர்மா தனித்துவமானவர். வடமராட்சி மண்ணின் மைந்தன் அவரின் தொடர்பு இந்த இணைய உலகில் தான் கிடைத்தது.

ரவிவர்மாவின் எழுத்துகளை வலைப்பூக்கள் வழியாகப் படித்த போதும், “வடக்கே போகும் மெயில் என்ற அவரது சிறுகதைத் தொகுதியைப் படித்த போதும், என் பால்யகாலத்தில் ஊடகராக இயங்கிக் கொண்டு எழுத்தாளராகப் பரிணமித்த நெல்லை.க.பேரன் தான் நினைவுக்கு வந்தார்.

தான் கொண்ட களத்துக்கேற்ப எழுத்தைக் கொடுக்கும் பட்டறவு ரவிவர்மாவிடம் உண்டு. அதனால் தான் அவரின் பிரதேச வழக்கியல் சார்ந்த மொழி நடையோடு சிறுகதைகளை எழுதியவர், திரைக்கு வராத சங்கதி வழியாக ஒரு பொதுத்தமிழைக் கையாண்டிருக்கிறார். இதனால் ஈழத்தவருக்கு மட்டுமன்றி தமிழகத்தவரும் இலகுவில் இவரின் மொழி நடையோடு இயல்பான வாசிப்பனுபவத்தைப் பெற முடியும்.

ஈழத்து எழுத்துலகில் உலக சினிமா அளவுக்கு இந்திய சினிமா அதுவும் குறிப்பாகத் தமிழ் சினிமா குறித்த சங்கதிகள் பேசப்படுவது அரிது எனலாம். அதை ஒரு தீண்டத்தகாத சமாச்சாரமாகவும் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் நூற்றாண்டு தொடப்போகும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆச்சரியமானதும், சாதனைக்குரியதுமான பக்கங்கள் பலவுண்டு. அத்தோடு இலக்கியத்தரமான படைப்புகளைக் காட்சி ஊடகம் வழி பரந்து விரிந்த பாமர உலகுக்குக் கொண்டு சென்ற வகையில் தமிழ் சினிமாவின் ஆச்சரியப் பக்கங்கள் பலவுண்டு.

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி யில் அவர் கொடுத்த கட்டுரைகளைப் படித்தாலேயே போதும், முன் சொன்னதன் நியாயம் புரியும். சினிமாக் கட்டுரைகளில் ஆய்வு, வரலாற்றுத் தன்மை இவற்றில் மிக ஆழமான பின்புலத்தோடு இருந்தாலொழிய சினிமாக் கட்டுரைகளில் ரவிவர்மா கையாண்டிருக்கும் தொடர்ச்சித்தன்மையும், ஒன்றிலிருந்து இன்னொன்றைத் தொடர்புபடுத்தி எழுதும் வல்லமையும் இலகுவில் கிடைக்காது.

இந்தக் கட்டுரைகளில் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் நடந்த சங்கதிகளைத் தற்காலத்தோடும், கடந்த் தசாப்தத்தோடும் இணைத்து எழுதும் பண்பும், அவற்றின் மெய்த்தன்மையும் ரவிவர்மாவின் எழுத்துகளின் பலம் எனலாம்.

ஏற்கனவே ஏவிஎம் நிறுவனம் குறித்த நூல்களை அந்த நிறுவனம்சார்ந்தவர்களாலேயே எழுதப்பட்டதைப் படித்த வகையில் சொல்கிறேன், “ஏவிஎம் படத்தலைப்பில் வாழும் நடிகர்கள் என்ற கட்டுரையைப் படித்த போது அந்த நூல்களில் கூட இடம்பெறாத செய்திகளும், அப்படியே இடம்பெற்ற செய்திகளையும் தகுந்த முடிச்சுப் போட்டுக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர். 

படக்கதைகள் உருமாறிய வரலாறுகளையும், படத் தலைப்புகள் தலைமுறை கடந்து பயன்படுத்தப்பட்ட பாங்கையும் இணைத்து கட்டுரைகள் கொடுத்திருக்கிறார்.

புகைப்படக் கலைஞர் மனசு வைத்தால் கூட நல்ல கலைஞர்களை அறிமுகப்படுத்தமுடியும் என்பதையும் ஒரு கட்டுரை சொல்லி வைக்கின்றது.

இலட்சிய நடிகருடன் ஜோடி சேர மறுத்த பானுமதி கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால் பானுமதியின் கர்வமான தோற்றம் தான் தோன்றி மறையும், ஆனால் அதன் பின்னால் நெகிழ வைக்கும் பின்னணியைக் கொடுக்கிறார். சினிமாவில் கூட யதார்த்தம் பேணிய முன்னோர்கள் என்பதை அது உணர்த்துகிறது.

கவிஞர் முத்துலிங்கத்துக்காக எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிக் கொடுத்த பாட்டைப் பற்றி அவரே சுவைபடக் கூறினாலும் இங்கே அதைப் பற்றி எழுதும் ரவிவர்மா அதன் நீட்சியாக முத்துலிங்கம் குறித்த தகவல்களை இன்றைய சந்ததிக்கும் சொல்லி வைக்கிறார்.

தோல்வியை வெற்றியாக்கும் சூக்குமம் கைவரப்பெற்ற படைப்பாளிகளும் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். அவற்றை வெற்றிபெற்ற படங்களுக்குப் பின்னால் சொல்லியும் இருக்கிறார்கள். எழுத்தாளரும் தன்னுடைய கட்டுரைப் பதிவில் இத்தகு உதாரணங்களோடு எழுதிச் செல்கிறார்.

தமிழ்த் திரையுலகின் பழைய வரலாறுகளை மட்டுமன்றி கடந்த தசாப்தத்தில் புதிய அலையைப் படைத்த செல்வராகவன் குறித்த பின்னணியும் உண்டு. இன்று இசைஞானி இளையராஜா, கலைஞானி கமல்ஹாசன் என்ற பட்டங்களோடு அடையாளப்படுபவர்களின் ராசியை கலைஞர் வழங்கிய காலத்தால் அழியாத பட்டங்கள் வழிப் பதிவு செய்கிறார்.

இயக்குநர் பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி, தன் தந்தை திடீரென்று இறந்த போது கடன்காரர் தொல்லையால் குடும்பம் அவஸ்தைப்பட்ட சூழலில் தன் அண்ணனும், தானும் சேர்ந்து போய் அழுது கொண்டே எம்.ஜி.ஆரைச் சந்தித்து அவர் உதவிய வரலாற்றைச் சொல்லி இருக்கிறார்.இங்கோ பந்துலுவோடு எம்.ஜி.ஆருக்கு இருந்த பந்தத்தைக் காட்டி நிற்கின்றார் ரவிவர்மா.

ஒரு காலத்தில் திரைப்பட நாயகிகள் தற்கொலை செய்து கொள்ளும் வரலாறு போய், இன்று சின்னத்திரைக் கலைஞர்கள் தற்கொலை செய்யும் அவலத்தையும் காட்டுகிறார்.

கண்ணகி சிலைக்கு மாதிரி உருவமாக அமைந்த நடிகை விஜயகுமாரி குறித்துப் பதிவு செய்யும் போது அவரின் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் கொடுக்கிறார். 

நடிகர் விஜயகுமார் சினிமாவுக்கு வந்த கதையே ஒரு சினிமா ஆக்கக் கூடிய சுவாரஸ்யம் நிறைந்தது. அந்த சுவாரஸ்யம் ரவிவர்மாவில் எழுத்தில் மின்னுகிறது.  

சந்திரபாபு குறித்த கட்டுரையைப் படிக்கும் போது அதை நீட்டி முழு வரலாற்று நூலாக்கக் கூடிய பண்பு அமைந்திருக்கின்றது.

இன்று உறுதிப்படுத்தப்படாத பொய்ச் செய்திகளோடும், பரபரப்பு அறிக்கைகளோடும் இணைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திரை இலக்கியத்தை மெய்த்தன்மை பொருந்திய வரலாற்றுச் சங்கதிகளோடு கொடுத்த ரவிவர்மாவுக்கு இந்த வேளை மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

Sunday, September 2, 2018

வடக்கே போகும் மெயில் நூல் நயப்பு


சூரன் .ரவிவர்மாவின் 16 சிறுகதைகளை உள்ளடக்கியதாக இந்த சிறுகதைத் தொகுதி அமைந்திருக்கிறது. இலங்கை ரயில் சேவைகளில் வடக்கே பயணிக்கும் யாழ்தேவி ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் சேவையாக இருந்து வந்தது. போர் தீவிரமடைந்து இரு தசாப்தங்களாக இந்த சேவை முடங்கிப் போயிருந்த போதிலும் கூட யாழ் தேவியை மக்கள் மறக்கவில்லை. “வடக்கே போகும் மெயில்என்ற தலைப்பு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த நூல் வெளிவந்த போதும் என்னை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.
ஈழத்தில் ஒரு சமூக விடுதலைப் போராளியாக வாழ்ந்து காட்டி இன்றைய தலைமுறைக்கும் தனது விளைச்சலை விட்டுச் சென்ற சூரன் அவர்களின் பேரன் ரவிவர்மா அவர்கள். அடிப்படையில் ஊடகவியலாளராக இருந்த போதும் ஈழத்தில் வெளி வந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதிய சிறுகதைகளே இத்தொகுதியில் திரட்டப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளர் கற்பனாவாதியாக, எழுத்தாளனாக
ஒருங்கே கைவரப் பெற்றவர்கள் என்றால் மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களையும், இராணுவத்தின் ஷெல் தன் குடும்பத்தையே
தின்ற எழுத்தாளர் சக பத்திரிகையாளர் நெல்லை .பேரனையும், ரவிவர்மாவின் உறவினர் மற்றும் ஊடகவியலாளராகவும் பத்திரிகையாளராகவும் இயங்கிய அமரர் ராஜஶ்ரீகாந்தன் ஆகியோரையும் தான்
நினைவில் கொண்டு வர முடிகிறது. இவர்களோடு ரவிவர்மாவின் சிறுகதைகளை இப்போது தான் வாசிக்கக் கிட்டியது.
வடக்கே போகும் மெயில்என்ற சிறுகதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளில் ஒன்று. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் அந்த ரயில் பயண நினைவுகள் தான் எவ்வளவு இனிமை அதே நேரம் அதன் இன்னொரு பக்கம் அவலமானது. சிங்களக் காடையரால் ரயிலில் பயணித்த அப்பாவிப் பயணிகள் கொல்லப்பட்ட வரலாறுகளும், இனத்துவேஷங்கள் சங்கமித்த களமாகவும் இந்தப் பயணம் இனப் பிரச்சனையைத் தண்டவாளத்தில் ஓட்டிக் காட்டும் ஒரு குறு நாடக மேடை. ரவி வர்மா எழுதிய சிறுகதையும் இவ்வாறானதொரு போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தோடு ஏனைய சிறுகதைகளின் அடி நாதத்தில் இந்த இனப் பிரச்சனையே மையம் கொண்டிருக்கிறது. ஆகவே தலைப்புகளும் களங்களும் வெவ்வேறாயினும் எல்லாச் சிறுகதைகளுமே வாசகனைவடக்கே செல்லும் மெயில்இருத்தியே பயணிக்கின்றன.
ஈழத்து எழுத்தாளர்களில் ஒரு வகையினர் பிரதேச வழக்குகளைத் தீவிரமாகக் கையாண்டு எழுதுகையில் இன்னொரு சாரார் பொதுத் தமிழில் எழுதத் தலைப்படுவர். வெகுஜனப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவ்வாறான பொதுத் தமிழைக் கையாளும் சிறுகதைகளே அதிகம். இதன் வழியாகப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சொல்ல வந்த சேதி போய்ச் சேரும் சிறப்புண்டு. ரவிவர்மா தன் மொழியாடலில் உரையாடல் பகுதிகளில் ஈழத்துப் பேச்சுத் தமிழையும் கதையோட்டத்துக்குப் பொதுத் தமிழையும் கையாண்டிருக்கிறார்.
சைக்கிள் களவு போன கதையை வேடிக்கையாகபோனால் போகட்டும்சிறுகதை வழியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். யாழ்ப்பாண வாழ்வியலில் சைக்கிள் ஒரு பிரதான ஊர்தி அதே சமயம் சைக்கிள் களவில் இருந்து தப்பியவரும் அரிது. “பொன்னுக்கிழவிகதை படித்த போது ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதை ஒன்றைப் படித்த அனுபவம். ஈழநாடு வார இதழ் போன்று ஈழத்துப் பத்திரிகை உலகில் தினக்குரலின் பாய்ச்சல் வேகமானது. இவ்விரண்டு பத்திரிகைகளிலும் தன் கதைகளை எழுதியிருக்கிறார். அத்தோடு ஈழத்தின் மூத்த சஞ்சிகைமல்லிகைஇலும் இவர் பங்களிப்பு வந்திருக்கிறது. அது போல் இன்றும் தசாப்தம் கடந்து வெளிவரும்ஞானம்சஞ்சிகையிலும் எழுதிய சிறுகதையும் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
வானொலியில் பாட்டுக் கேட்கும் போது நம்மையறியாமலேயே நம் குடும்ப விபரங்களைப் பகிர்வதன் ஆபத்தைஎன்னைத் தெரியுமா?” சிறுகதை வழியாகக் காட்டியிருக்கிறார்.
செல்லாக்காசுநாயகன் கணேச மூர்த்தியின் கதை ஏதோ நிஜத்தில் கண்டு கேட்டது போல இருந்தது.
திக்குத் தெரியாதசிறுகதை எந்தத் திசையில் செல்லப் போகிறது என்ற ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத அதன் முடிவு முறுவலை எழுப்பியது.
உருவகக் கதை பாணியில்குலதெய்வம்என்ற சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த உத்தியில் எழுபதுகளில் செங்கை ஆழியான் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நம் ஈழத்து எழுத்தாளர்கள் அதிகம் தொடாதது.
புலம்பெயர் வாழ்வியலைத் தொட்டு எழுதியதிரைகடல் ஓடியும்கதை இன்றைய யதார்த்த உலகில் சுய நலம் தோய்ந்த உறவுகளைக் காட்டும் ஒரு கண்ணாடி.
இடப் பெயர்வின் அவலத்தை முதன் முதலில் சந்தித்தவர்கள் வடமராட்சி மக்கள். அவர்களின் கதைகளின் வழியே உண்மையின் சாட்சியங்கள் தான் கிட்டும். அப்படியொரு உணர்வை எழுப்பியதுஎன்று மறையும்என்ற சிறுகதை. இந்தச் சிறுகதையும், தொகுதியின் நிறைவில் உள்ளவிடியலைத் தேடிசிறுகதையும் மிகவும் ஆழமான பார்வையோடு எழுதப்ப்பட்டிருப்பவை. இவை இரண்டுமே ரவிவர்மா என்ற எழுத்தாளர் இன்னும் பல ஈழத்துப் போரியல் வாழ்வைக் களமாகக் கொண்ட சிறுகதைகளைக் கொடுக்க வல்லவர் என்ற நம்பிக்கையை அதிகம் விளைவிப்பவை.
ஒரு நல்ல சிறுகதையொன்றைப் படித்து முடித்ததும் அந்தக் கதைக்களமும், கதை மாந்தர்களும் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விடும் உணர்வைப் பிரதிபலித்தால் அதன் வெற்றியென்று கொள்ளப்படும்.
அந்த வகையில் ஈழத்தவரின் வாழ்வியல் பண்பாடுகள், அனுபவங்களை அந்தந்தக் காலகட்டத்தினூடே எடுத்துச் சென்று கதைகளின் வழி நிகழ்த்திக் காட்டியதன் வழியாக சூரன் .ரவிவர்மா நல்ல சிறுகதை ஆசிரியராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

கானா பிரபா

27.08.2018