Wednesday, June 28, 2017

இந்திய அரசியலில் சாதியின் ஆதிக்கம்

  மதசார்பற்ற  நாடு ,சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை  உலகுக்கு எடுத்துக் கூறிய இந்திய அரசியல் சாதி எனும் சாக்கடைக்குள் சிக்கித் தவிக்கிறது. இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. புதிய ஜனாதிபதித் தேர்தலில் சாதியைப் புகுத்தி வாக்குவங்கியைக் கவர்வதற்கு இந்தியாவின் பிரதான கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இந்தியாவின் 15  ஆவது ஜனாதிபதித் தேர்தல் ஜூலை மாதம் 17  ஆம் திகதி நடைபெற  உள்ளது.
காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டு தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்க  ஆட்சியில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சி விரும்புகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி, மத்திய அரசின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகவே இருப்பார். மாநில ஆளுநர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதியினுடையது. ஆனாலும், ஆளும் கட்சியின் ஆலோசனையின்படியே ஜனாதிபதி செயற்படவேண்டும். அவசரநிலை, 356 இல் உள்ள முக்கிய அம்சங்கள் போன்றவற்றில்  ஜனாதிபதி தனது இஷ்டப்படி முடிவெடுக்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலில்  வேட்பாளரை நிறுத்துவதற்கு  பாரதீய ஜனதாவும் காங்கிரஸும் தகுதி உள்ள பலரைப் பரிசீலனை செய்தன. முடிவில் பாரதீய ஜனதாக்கட்சி,  பீகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகரான  மீரா குமாரை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது. காங்கிரஸின் ஆதரவுடன் எதிர்ப்பு இல்லாமல் ஒருமித்த கருத்தில் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய பாரதீய ஜனதா விரும்பியது. சோனியாவைச் சந்தித்து கலந்துரையாடியபோது வேட்பாளரை  அறிவிக்காது ஒப்புதல் தர முயாது எனத் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை செய்யாமல் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக பாரதீய ஜனதா அறிவித்தது. 20   கூட்டணிக்  கட்சிகளுடன் ஆலோசனை செய்து மீரா குமாரை  ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வியப்பு அதிகம். என்றாலும் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்பது  எதிர்க்கட்சிகளின் விருப்பம். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலித் என்ற சொல்லை இந்தியாவின் இரண்டு பிரதான கட்சிகளும் அடகு வைத்துள்ளன. இந்து மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு கிறிஸ்தவ, இஸ்லாம் மக்களிடம் எதிர்ப்பு இருக்கிறது. அந்த எதிர்ப்பை மறைப்பதற்காக தலித் என்ற ஆயுதத்தை அது கையில் எடுத்துள்ளது. இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான தலித்தை எதிர்க்க இன்னொரு தலித்தைக் களம் இறக்கி உள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்உள்ள கான்பூரில் 1945  ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி பிறந்த ராம்நாத் கோவிந்த் கான்பூர் பல்கலைக் கழகத்தில் வணிகவியல், சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். 1994 ஆம் ஆண்டு முதல்  2006 ஆம் ஆண்டு வரை  12 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி  வகித்தவர்.  1977 ஆம் ஆண்டு முதல்  1979  ஆம் ஆண்டு வரை டில்லி ஹைகோட்டில் மத்திய அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  1980 ஆம் ஆண்டு முதல்  1993  ஆம் ஆண்டு வரை சுப்ரீம்கோர்ட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். மாநில அரசின் நிலைக்குழு உறுப்பினர்,டில்லி பார் கவுன்சில் தலைவர், ஐநாவின் இந்தியப்பிரதிநிதி,தலித் மோட்சாவின் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர்.இவரின் மனைவி பெயர் சவீதா.அந் மகனின் பெயர் பிரசாந்த் மகனின் பெயர் ஸ்வாதி.   ஜனாதிபதித் தேர்தலில் ராம்நாத் கோவிந்த்  வெற்றி பெற்றால் ஆர்.கே.நாராயணனுக்குப் பின்னர் இந்தியாவின் இரண்டாவது  தலித் ஜனாதிபதி என்ற பெயர் கிடைக்கும் .
இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள் மீரா குமார். 1945 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார். இவரின்  தாயார் சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டவர். நிர்வாக அனுபவமும் தீவிர அரசியல் ஈடுபாடும் கொண்டவர்.  எம்.ஏ ஆங்கில பட்டதாரி, சட்டம் பயின்றவர். முன்னர் ஐ.எப்.எஸ் அதிகாரி.பிரிட்டன், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியவர். அரசியலில் உள்ள ஈடுபாடு காரணமாக 1985  ஆம் ஆண்டு வேலையை இரஜினாமாச் செய்துவிட்டு 1985 ஆம் ஆண்டு பீகாரில் உள்ள பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  மன்மோகன்சிங்கின் அமைச்சரவையில் 2004 ஆம் ஆண்டு சமூக நீதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.2014 ஆம் ஆண்டு  நீர் வளத்துறை அமைச்சராக தேர்வான  நிலையில் சபாநாயகராகக் கடமையாற்றினார். பாரதீய ஜனதா எதிர்க்கட்சியாக இருந்தபோது மிகச்சாதுரியமாக . நாடாளுமன்றத்தை வழி நடத்தினார். 2010  ஆம் ஆண்டு ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக் கழகம் மீரா குமாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.


பிரதமர் மோடி நான்கு திட்டமிட்டு தலித் எனும் அடையாளத்துடன் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தியுள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கை கவர்வதற்காக மோடி விரித்த வலையில் காங்கிரஸ் சிக்கிவிட்டது. ஆர்.கே.நாராயணன்  ஜனாதிபதியானபோது தலித் என்ற அடையாளம் இடப்படவில்லை. ஜெகஜீவன் ராம்மீதும் தலித் முத்திரை குத்தப்படவில்லை. தலித் வாக்கு வங்கியைக் கவர்வதற்காக ராம்நாத் கோவிந்த்மீது தலித் சாயம் பூசப்பட்டுள்ளது.ராம்நாத் கோவிந்தை எதிர்த்து  தலித் அல்லாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் அந்த மக்களின் நம்பிக்கையை இழந்து விடலாம் என்ற பயம் காங்கிரஸிடம் உள்ளது.

உலகின் பல நாடுகளில் மக்களின்  வாக்களித்து  தமது ஜனாதிபதியைத் தேர்வு செய்வார்கள்.இந்தியா போன்ற ஒருசில நாடுகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வாக்களித்து ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். இப்படியான தேர்தலில் கட்சிகள் மிக முக்கியத்துவம் வகிக்கின்றன. போட்டி பலமாக இருந்தால் சிறுகட்சி உறுப்பினர்களும்  சுயேட்சைகளும் விலை பேசப்படுவார்கள்.இந்திய நாடாளுமன்றத்தில்  மூன்றாவது பெரிய கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, பாரதீய ஜனதாக் கட்சி அரவணைத்துச் செல்கிறது

 இந்திய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களும் , மேல்சபையில்   233 உறுப்பினர்களும் இருக்கின்றனர். மொத்தமாக  776 எம்.பிக்கள் உள்ளனர்.  31 மாநிலங்களில்  4120 சட்டசபை உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு இவர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள். மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களது வாக்கு மதிப்பு கணக்கிடப்படும். நியமன எம்பிக்கள் மூவர் இருக்கின்றனர். அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. பாரதீய ஜனதாவுக்கு  48.10 , காங்கிரஸுக்கு 15.90 , அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  5.38  சதவீத வாக்குகள் உள்ளன.  பாரதீய ஜனதாக் கட்சிக்கு 1804  சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் வாக்கு மதிப்பு 2,39,923  ஆகும்.    நாடாளுமன்றத்தில் 336  உறுப்பினர்களும் ,மேல்சபையில் 70    உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களின் வாக்கு மதிப்பு     5,27,371 ஆகும்.  பாரதீய ஜனதாவுக்கு  மொத்தமாக  5,27,371 வாக்குகள் கைவசம் உள்ளன. 5.49.474   வாக்குகள் பெற்றால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறலாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  59.000  வாக்குகளும் தெலுங்கானவின் 23.200  வாக்குகளும் சுயேட்சைகளும் நடுநிலை வகிப்பவர்களும் தனது வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்ற  நம்பிக்கையில்இருக்கும்  பாரதீய  ஜனதாவெற்றிக் களிப்பில்  இருக்கிறது.
 
 கங்கிரஸ் கூட்டணியுடன் இதர எதிர்க்கட்சிகளும் சேரும் பட்சத்தில்  பாரதீய ஜனதா வைவிட 93,000  வாக்குகள்  குறைவாகக் கிடைக்கும்.சுயேட்சைகளும் நடுநிலை வகிப்பவர்களும் தனது வேட்பாளருக்கு வாக்களித்தால் திருப்பம் ஏற்படும் என  காங்கிரஸ் நினைக்கிறது.  வாக்களிப்பு மூலம் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார். வேட்பாளரின் பெயர் ஒருகட்டத்தில் இருக்கும் வாக்களிப்பவர் தமது விருப்பத்தைக் குறிப்பிடும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அதில்  தமது விருப்பத்தேர்வை ஒன்று,இரண்டு,மூன்று எனக் குறிப்பிட வேண்டும். முதலாவது விருப்பத்தைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் அடுத்த  இரண்டையும் குறிப்பிடலாம் அல்லது குறிப்பிடாமல் விடலாம். வாக்களிப்பு முடிந்ததும் முதலாவது விருப்பம் மட்டும் எண்ணப்படும். வேட்பாளர் ஐம்பது சதவீதத்துக்கு அதிகமாகப் பெறவில்லையானால், கடைசியாக இடம்பிடித்தவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். மீண்டும் எண்ணும் போது  வெளியேற்றப்பட்டவரின் வாக்குச் சீட்டில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவரின் பெயர் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம்  நாடாளுமன்றத்துக்கு உண்டு. நாடாளுமன்றத்தின் எதாவது ஒரு அவையில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஜனாதிபதி மீது புகார் கூறி அவரை நீக்கவேண்டும் என  மனுக்கொடுத்து இரண்டு அவையிலும் விவாதித்து மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

சங்கபரிவாரைச்சேர்ந்த வாஜ்பாய், மோடி ஆகியோர் பிரதமராகிவிட்டனர். ஜனாதிபதி பதவியில் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும் காலம் நெருங்கியுள்ளது.  வாஜ்பாய்க்கு அடுத்த இடத்தில் இருந்த அத்வானியை பின்னுக்குத்தள்ளி மோடி பிரதமரானபோது அத்வானி, ஜனாதிபதியவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அத்வானி,முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவருக்கும் எதிரான பாபர்மசூதி வழக்கு மீண்டும் கிளறப்பட்டதால்  இருவரின் பெயரும் பரிசீலிக்கப்படவில்லை. ரஜினிக்கு வலை வீசப்பட்டது அவர் சிக்கவில்லை. பனாமா வரி ஏய்ப்பு பட்டியலில் பெயர் இருந்ததால் அமிதாப்பச்சனின் பெயர் விடுபட்டது.

பாரதீய ஜனதாவைப் போன்றே காங்கிரஸ் கட்சியும் பலரின் பெயரைப் பரிசீலித்தது. பாரதீய ஜனதா தலித் வேட்பாளரை நிறுத்தியதால் மற்றுழியில்  சிந்திப்பதற்கு காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. மத்திய அரசு சொல்வதை முறைப்படி அறிவிக்கும் பதவிக்கு  இந்திய அரசியல் கட்சிகள் தலித் என்ற வர்ணத்தைப் பூசி வேடிக்கை  காட்டுகின்றன.
வர்மா 

Thursday, June 22, 2017

தமிழக அரசின் தில்லுமுல்லை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு


ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் திக்குத் தெரியாது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின்  இடத்தை நிரப்ப முயற்சிசெய்த சசிகலா சிறையில் இருக்கிறார். சசிகலாவின் உதவியுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்ற முயன்ற தினகரன் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்துவது யார்? தமிழக அரசை இயக்குவது யார் போன்ற கேள்விகளுக்கு இந்திய மத்திய அரசின் பக்கமே அரசியல் நோக்கர்களின் கைகள் நீளுகின்றன.

எவராலும் நெருங்க முடியாத இரும்புப் பெண்மணியான ஜெயலலிதாவின் தலைமையில் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தகுதி இல்லாத பலரும் உரிமை கோருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் சசிகலாவின்  கையில் தலமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.தமிழக முதல்வராவதற்கு சசிகலா ஆசைப்பட்டதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது.சசிகலா அணி பன்னீர் அணி என நிர்வாகிகள் பிரிந்தனர். விசுவாசமான தொண்டர்கள் முடிவெடுக்க முடியாது திணறினர்.இந்த இடை வெளியில் ஜெயலலிதாவின் மருமகள் தீபாவை  சிலர் உசுப்பேற்றி அவரைத் தலைவராக்கினர். சசிகலா சிறைக்குப் போனதும் முதலமைச்சர் எடப்பாடி அந்த அணிக்குத் தலைமை வகித்தார். தினகரன் பிணையில் விடுதலையான பின்னர் அவரின் பின்னால் 32 தமிழக சட்டசபை உறுப்பினர்கள்  சென்றுள்ளதாக செய்தி வெளியாகிறது.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமக்கே சொந்தம் என பன்னீர், எடப்பாடி ஆகிய இருவரும் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அத்தையின் சொத்து தனக்கே என அடம்பிடிக்கும் தீபாவும் அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கு சொந்தம் கொண்டாட முற்படுகிறார். தமிழக மக்களின்  உணர்வுகளைப் புரிந்துகொண்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவிதமான முயற்சியையும்  தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.ஆட்சியைக் காப்பாற்ற எடப்பாடியும் ஆட்சியைக் கைப்பற்ற பன்னீரும் முயற்சி செய்கின்றனர். தமிழக மக்கள் எதிர் நோக்கும் மீதேன் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை, மாட்டுக்கறிப்  போன்றவற்றைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு எதுவிதமான  முற்சியையும் மேற்கொள்ளவில்லை.
சசிகலாவுக்கும் பன்னீருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில்; கூவத்தூர்  கூத்து அரங்கேறியது. அப்போது தமிழக சட்ட சபை உறுப்பினர்களை வளைப்பதற்கான பேரம் ஆரம்பித்தது. பகிரங்கமாக நடைபெற்ற இவற்றை மத்திய அரசு கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது. மாநில அரசின் தவறுகளை உன்னிப்பாக அவதானித்து அறிக்கை அனுப்புவது ஆளுநரின் தலையாய பணி. தமிழகத்துக்கு ஆளுநரை நியமிக்காது இன்னொரு மாநிலத்து ஆளுநருக்கு கூடுதல்  பொறுப்பை வழங்கி உள்ளது மத்திய அரசு. தமிழக அரசு இயங்க முடியாத நிலையில் இருப்பதையே மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு விரும்புகிறது. அதனால்தான் தமிழக அரசின் தில்லுமுல்லுகளை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது.


தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறுண்டு கிடக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம் தனியாக தமிழக அரசைக் கண்டித்து செயற்படுகிறது.   பங்காளிக் காட்சிகளான காங்கிரஸும் முஸ்லிம்  லீக்கும் அதற்குத் துணை போகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கைகோர்த்து தமிழக அரசை எதிர்ப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பின்னடிக்கின்றன. இன்றைய நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக் கணிப்புகள் ஏனைய கட்சிகளை அன்னியப்படுத்தி உள்ளன. தமிழக அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் தமிழகக் கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிபீடம் ஏறுவதை விரும்பவில்லை.

தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து வருகிறது. பங்காளிக் கட்சிகளான காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும்  அதற்குத் துணை நிற்கின்றன.  தமிழக அரசுக்கு  எதிரான  போராட்டங்களை ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். மத்திய அரசு அதனைக் கவனத்தில் எடுக்கவில்லை. மத்திய அரசின் சொல்லைக் கேட்கும் அரசாங்கம் தமிழகத்தில்  இருப்பதையே பாரதீய ஜனதா விரும்புகிறது.பாரதீய ஜனதாக் கட்சியை எதிர்க்கும் சசிகலாவும் தினகரனும் ஓரம் கட்டப்பட்டுவிட்டர்கள். எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்ச்செல்வமும் எதிரும்  புதிருமாக அரசியலில் செயற்பட்டாலும்  பாரதீய ஜனதாக் கட்சியின் கைப்பிள்ளையாகவே இருக்கின்றனர்.
மதுரை தெற்கு தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சின்னத்தில் வெற்றி பெற்ற  சரவணனின் குதிரை பேரம் பற்றிய ஒப்புதல் வாக்குமூலம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானத்தால் அரசியல் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழக அரசும் மத்திய அரசும் அதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. விமானநிலையத்தில் இரண்டுகோடி எனச்சொல்லப்பட்டது. கவர்னர் மாளிகைக்குப் போனபோது  நான்கு கோடியானது. கூவத்தூரில் ஆறு கோடி  தருவதாகச் சொல்லப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அங்கத்தவர்கள் அல்லாத கருணாஸ் போன்றவர்களுக்கு பத்துக் கோடி கொடுத்ததாக சரவணன் கூறியதை மூன் தொலைக்காட்சி இரகசியமாகப் படம் பிடித்தது.  டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அதனைஒளிபரப்பி  குதிரை பேர  விவகாரத்தை வெளிப்படுத்தியது கூவத்தூரில் தடுத்து வைக்கப்பட்டவர்களிடம் பன்னீரின் அணியும் பேரம் பேசியது சரவணன் என  அந்த வீடியோவில் வெளிப்படுத்தி உள்ளார். அந்த வீடியோவில் இருப்பது நான் தான் குரல் என்னுடையதல்ல என சரவணன் காமெடி செய்கிறார்.


கூவத்தூர் குதிரை பேர  விவகாரத்தை சட்டசபையில் பேசுவதற்கு ஸ்டாலின் முயற்சித்தபோது சபாநாயகர் தனபால் அனுமதி வழங்கவில்லை.  ஸ்டாலினை பேசவிடுமாறு திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அதற்குச்செவி சாய்க்காத சபாநாயகர் காவலர்களின் மூலம் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களை வெளியேற்றினார். ஆதாரம் இல்லாமல் உறுப்பினர்கள் மீது  குற்றம்சாட்டக்கூடாது  என சபாநாயகர் தெரிவித்தார். தொலைக்காட்சியில்  ஒளிபரப்பானத்தை  சபாநாயகரும்  பார்த்திருப்பார்.  தமிழக ஆளும் கட்சிக்கு  எதிரானவர் சரவணன் அவரைப் பற்றிய குற்றச்சாட்டை சபாநாயகர் ஏற்க மறுத்தது விநோதமாக உள்ளது. உண்மை வெளிவந்தால் எடப்பாடி அரசுக்கு ஆபத்து என்பதை அவர் உணர்ந்துள்ளார். இரண்டு நாட்கள் போராடிய ஸ்டாலின் முன்றாம் நாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை சிடியில் பதிவு செய்து சபாநாயகரிடம் கொடுக்க முயன்றார். அப்போது அவர் ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் அவரது அறையில் ஸ்டாலின் சிடியை கையளித்தார்.

தமிழக அரசும் மத்திய அரசும்  இணைந்துசெயற்படுவதால் எதிர்க்கட்சியால் ஒன்றும் செய்யமுடியாதுள்ளது.அடுத்த கட்டமாக  ஆளுநரைச் சந்தித்த ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்னொருமுறை இரகசியமாக நடத்த வேண்டும், தமிழக அரசைக் கலைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தில்லுமுல்லுகள் அனைத்தையும் பட்டியலிட்ட ஸ்டாலின் குதிரை பேர விவகாரத்தையும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். எடப்பாடி அரசு நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கோரி நிதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வழக்குத் தொடுத்துள்ளது. இதேவேளை  குதிரைபேர விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என திராவிட முன்னேர்ர் கழகம் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின்  செல்லப்பிள்ளைதான் ஒரு மாநிலத்தின் ஆளுனராக இருப்பார். ஆகையால் ஆகையால் ஸ்டாலினின் கோரிக்கை இருந்த இடத்தை விட்டு அசையாது என்பது உறுதி. ஆளுநரை  ஸ்டாலின் சந்தித்த மறுநாள் தம்பித்துரை ஆளுநரை சந்தித்தார். அந்தச்சந்திப்பின் பின்னர்  தமிழக அரசு கலைக்கப்படமாட்டாது என தம்பித்துரை பேட்டியளித்தார். தமிழக அரசு கலைக்கப்படமாட்டாது என  பாரதீய ஜனதாவின் தமிழகத் தலைவி தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழக அரசு கலைக்கப்பட மாட்டாது என இவர்களின் கூற்று மூலம் உறுதியாகி உள்ளது.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிசெய்யும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு அறுதிப்பெரும்பன்மையை இழந்துள்ளது.    எடப்பாடிக்கு ஆதரவாக  97 உறுப்பினர்கள்தான் இருக்கின்றனர்.  26 உறுப்பினர்கள் தினகரனின் பின்னால் சென்றுவிட்டனர். பன்னீரின் அணியில்    12  உறுப்பினர்கள் உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்  98  உறுப்பினர்கள் இருக்கின்றனர். தமிழக அரசின் தலைவிதி நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது.
வர்மா



Monday, June 12, 2017

தமிழ் மக்கள் நெருக்கடி சரியாகப் பதியப்படவில்லை ஓவியர் மருது



                                                    {யோ.நிமல்ராஜ் - தினக்குரல்}

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை.வெறும் வார்த்தைகளால் அந்த நெருக்கடியை பதிவு செய்வது போதுமானதொன்றல்ல. தமிழர் நெருக்கடி தொடர்பாக வெளித்தோற்றத்தில்  காணப்படும் விடயங்கள் மாத்திரமே இதுவரை பதிவாகியுள்ளன. ஆழ்மட்டத்தில் காணப்படும் பிரச்சனைகள் சரியான முறையில் பதிவாகவில்லையென இந்தியாவின் பிரபல ஓவியரும் பல்துறை விற்பன்னருமான ட்ராஸ்கி மருது கூறினார்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஓவியரும் கலை இயக்குநருமானமருது  வடமராட்சி வதிரி தமிழ் மன்றத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே  இவ்வாறு குறிப்பிட்டார்.


ஆவணப்படுத்தலின் அவசியம் தொடர்பாக இவ்வாறு கூறிய அவர் தனது ஓவியப்பயணம் இலங்கையுடனான தொடர்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில்:
ஓவியப் பயணம்
ஆரம்பத்தில் வீடுகளில் சாறிகள் நெய்யப்படும்போது அவற்றினை மத்திய அரசாங்கம் மாநியங்களை வழங்கி கொள்வனவு செய்யும் அவ்வாறான காலப்பகுதியில் நாம் பல்வேறு வடிவங்களை அதாவது தமிழ்க் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வடிவங்களை அந்த சாறிகளில் பொறிக்கவேண்டிய பணியினை தொடர்ந்திருந்தோம்.

 அதேபோல பல்வேறு நூதனசாலைகளில் காணப்படும் ஓவியங்களை வேறு இடங்களிலும் காட்சிப்படுத்துவதற்காக மீண்டும் வரையவேண்டிய தேவையிருந்தது. அதற்காக என்னைப்போன்ற பலரை அரசாங்கம் பணிக்கமர்த்தியிருந்தது. பல்வேறு இடங்களிலும் காணப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் அவற்றின் பெறுமதி அழிந்துவிடாமல் காப்பதற்காக அதேபோன்ற உருவங்களையும் ஓவியங்களையும் நாம் வடிவமைத்து மக்களிடத்தில் அவற்றைக் கொண்டுசேர்த்தோம்.

இந்தப் பணியைத் தொடர்ந்து 10 ஆண்டுகளின் பின்னர் பத்திரிகைத் துறையில் ஆர்வம் செலுத்தினேன் அது எனது விருப்பமாகவும் இருந்தது. சிறிய பத்திரிகைகள் தேசிய பத்திரிகைகள்,  ஆனந்தவிகடன்,  குமுதம் போன்ற சஞ்சிகைகளில் பணியாற்றுவுதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தக் காலப்பகுதியில் சினிமாவும் ஆர்வம் ,கணினி வருவதற்கு முன்னரான காலப்பகுதியில் தந்திரக் காட்சிகளை உருவாக்குவதில் ஓவியர்களின் பங்கு அதிகமாக காணப்பட்ட காரணத்தினால் அவ்வாறான திரைப்படங்களுக்கு காட்சியமைப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதில் கவனத்தை செலுத்திவந்தேன். இவ்வாறான சினிமா, பத்திரிகை இரண்டும் கலந்ததாக கிட்டத்தட்ட 30 வருடங்கள் அந்தத் துறைகளில் பணியாற்ற முடிந்தது.

தொடர்ந்து சுதந்திர ஊடகவியலாளராக பல்வேறு பத்திரிகைகளுக்கு செயலாற்றியிருந்தேன். 1980 ஆம் ஆண்டில் கணினிகள் வருகைதருவதற்கு ஆரம்பித்த காலப்பகுதியில் அதனைத் தேடி கணினி மூலமான கிரபிக்ஸ் வடிவங்களை அமைப்பதற்கு கற்றுக்கொண்டேன். அதன்பின்னர் சினிமாவில் அதிக ஆர்வத்தினை செலுத்தி அதற்குரிய காட்சியமைப்புக்களை வடிவமைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிகளுக்காக அசையும் காட்சிகளை வடிவமைக்கும் பணி கிடைத்தது. கிட்டத்தட்ட 6 உதவியாளர்களுடன் புதுயுகம் தொலைக்காட்சிகளுக்காக அந்தப் பணிகளை மேற்கொண்டிருந்தேன்.  4 1/2 வருட காலப்பகுதியில் 22 படங்களை புதுயுகம் தொலைக்காட்சி சேவைக்காக நாம் உருவாக்கினோம்   அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறேன்.
இலங்கைக்கான வருகையின் காரணம்

முன்னரும் இலங்கைக்கு வருகை தந்திருந்தேன். தற்பொழுது மட்டக்களப்பில் நடைபெறும் கருத்தரங்கொன்றிற்காக வருகைதந்திருந்தேன். தமிழகத்தில் ஒரு விடயத்திற்காக நீண்டகாலமாகப் போராடி வருகின்றோம். அதாவது சகல கலைகளையும் ஒரே பல்கலைக்கழத்தில் கற்பிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து நாம் போராடி வருகின்றோம்.

இன்னொரு துறையை கற்கின்ற ஒருவர் மற்றக் கலைகள் தொடர்பாகவும் அறிந்துகொள்வதற்கு சாதகமான சூழ்நிலையை இவ்வாறான பல்கலைக்கழம் ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால்,  மட்டக்களப்பில் இவ்வாறான பல்கலைககழகம் உள்ளது. அதனை மேலும் நெறிப்படுத்த வேண்டுமென்று ஆலோசித்துவருகின்றோம். குறிப்பாக வீடியோ, அனிமேஷன், படத்துடனான கதை, சர்வதேச ரீதியில் படத்துடனான கதை பிரபலமான ஒன்று. எழுத்துடனும் ஓவியத்துடனும் இணைந்து கதைகளை கூறிச்செல்லும் முறை. இவ்வாறான மாற்றங்களை இந்தக் கல்வித் திட்டங்களில் உட்புகுத்த வேண்டுமென்று மட்டக்களப்பில் வலியுறுத்தியிருந்தேன். கல்வி கற்கும் மாணவருக்கு சர்வதேச ரீதியில் முன்னேற்றம் அடைந்து தொழில் ரீதியான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தமிழர் நெருக்கடி

 தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி சரியான முறையில் ஆவணங்களில் பதிவாகவில்லை. வெறும் வார்த்தைகளாக அந்த நெருக்கடியினை பதிவு செய்வது போதுமான ஒன்றல்ல. தொடுபரப்பு அல்லது மேற்பரப்பில் காணப்படம் விடயங்கள் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளன. அடிமட்டத்தில் உள்ளே காணப்படும் பிரச்சினைகள் பதிவாகியிருக்கவில்லை.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தமது படைப்புக்கள் மூலமாக எவ்வாறான விடயங்களை கூறவேண்டுமென்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொய்யான விடயங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் கூறிவிடக்கூடாது. எந்தக் கோணத்தில் எவ்வாறான கருதுகோளுடன் கலைஞர்கள் தமது படைப்புக்களை வெளிப்படுத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருக்க வேண்டும். மற்றக் கலைவடிவங்கள் அதற்கு எவ்வாறு துணைபுரியும் என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
 பத்திரிகைகள் அழிந்துவிடும்

எதிர்வரும் காலத்தில் செய்திப் பத்திரிகைகள் அழிந்துவிடும். எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை. இன்று தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். ஆனால் ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.

 பயணிக்கும் போது கூட தனித்தனியா ஒவ்வொரு சாதனங்களில் வெவ்வேறுபட்ட சினிமாக்களையோ நிகழ்ச்சிகளையோ நாம் பார்க்கின்றோம். செய்தித் தாள்களில் இறந்த செய்திகளே (பழைய செய்திகளே) கூடுதலாக காணப்படுகின்றன. சமூக ஊடகங்கள் உடனடியாக ஒரு செய்தியை கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. செய்திப் பத்திரிகைகளில் தயாரிக்கப்பட்ட செய்திகளே கூடுதலாக காணப்படுகின்றது. ஆனால் சமூக ஊடகங்கள் ஒரு தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. உடனுக்குடன் அவை தெளிவுபடுத்தப்படுகின்றன.

 இவ்வாறான நிலையில், ஊடகங்கள் எவ்வாறு பயணிக்கின்றன. தொடர்பாடல் எவ்வாறு காணப்படுகின்றது. என்பதனை ஆராய்ந்து அடுத்த தலைமுறையினரும் இவற்றினை தொடரும் வகையில் பாடத்திட்டங்களில் உள்வாங்கப்படவேண்டும்.
இவ்வாறான நிலையில் அனைத்துக் கலைகளும் இலங்கையில் ஒரு பல்கலைக்கழத்தின் கீழ் கற்பிக்கப்படுகின்றமை மகிழ்ச்சியான விடயம். இதற்காக தமிழகத்தில் 90 ஆம் ஆண்டிலிருந்து பல போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். ஆனால் அது நடைபெறவில்லை. இவ்வாறான கட்டமைப்புடனான கல்வி இலங்கையில் தொடருமாக இருந்தால் இன்னும் ஒரு சில வருடங்களில் இதன்பெறுபேறு அர்த்தம் நிறைந்த விளைவுகளை ஏற்படுத்தும். மட்டக்களப்பிலுள்ள மாணவர்களைப் பார்த்து உரையாடியமை மிகவும் மகிழ்ச்சியான விடயமாகவே நான் கருதிக்கொள்கிறேன்.

கொல்வின் ஆர்.டி சில்வா   என்.எம்.பெரேரா  அரசியல் தஞ்சம்

ஆனால், இலங்கைக்கும் எனது தந்தைக்கும் இடையில் நெருக்கிய உறவு காணப்படுகின்றது. அதுஎவ்வாறெனில் எனது தந்தை 14 ஆவது வயதில் காந்தி ஆச்சிரமத்துக்கு சென்றார். காந்தியுடன் அந்த ஆச்சிரமத்தில் இருந்தார். மத்திய இந்தியாவிலிருக்கும் அந்த ஆச்சிரமத்தில் 16 ஆவது வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போய் எனது தந்தை அங்கு ஒருவருட காலப்பகுதிக்கு தங்கியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் காந்தியும் அங்கிருந்தார்.

பின்னர் அவர் மீண்டும் மதுரைக்கு அழைத்துவரப்பட்டார். இவ்வாறான நிலையில் அரசியல் தஞ்சம் கோரி கொல்வின் ஆர்.டி சில்வாவும், என்.எம்.பெரேராவும் தப்பி இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்கள் அங்கு அஞ்சாதவாசத்தினை மேற்கொண்டிருந்தது மதுரையில். என்னுடைய தந்தையார் தான் மதுரையில் ஒரு வீட்டில் தங்கவைத்திருந்தார்.
அங்கிருந்து சென்னைத் துறைமுகம் , மும்பைத் துறைமுகத்திற்கு சென்று தொழிற்சங்க வேலைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பிவரும்போது பெண்வேடம் போட்டு வருகை தந்திருந்தார்கள். தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள் என்பதனை யாரும் அறிந்திருக்கவில்லை. எனது தகப்பனார் அவர்களுடன் இருந்தார். இதன்காரணமாகவே ட்ராஸ்கி என்ற பெயர் எனக்கு சூட்டப்பட்டிருந்தது.
இதேநேரம், கொல்வின் ஆர்.டி சில்வா  என்.எம்.பெரேரா இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கையை தொடர்ந்தபோது அவர்களில் ஒருவருக்கு திலக் என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே எனது இளைய சகோதரனுக்கு திலக் என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காரணத்தை அன்றைய சந்தர்ப்பத்தில் எம்மால் உணரமுடியவில்லை. இன்று எம்மால் அதனை விளங்கிக் கொள்ள முடிகின்றது. அந்த இருவரின் நினைவாகவே அந்தப்பெயர் தந்தையால் வைக்கப்பட்டது.


யாழ்ப்பாணத்துடனான உறவு

 அதேபோல, யாழ்ப்பாணத்துடனும் எனது குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. ராமசாமி என்பவர் எனது தந்தையாருடன் ஆழமான நீண்டதொடர்பினை கொண்டிருந்தார். எனது தந்தைக்கு முன்னர் ராமசாமி இறந்த செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் அவர்கள் இருவரிடையிலும் காணப்பட்ட நட்புக் காரணமாக அந்த தகவலை எமது தந்தைக்கு நாங்கள் கூறியிருக்கவில்லை. 6 மாதங்களின் பின்னரே அந்தத் தகவலை கூறியிருந்தோம். ஆனால் நீங்கள் எனக்கு கூறவில்லையானாலும் அவரது மரணத்தை என்னால் உணரமுடிந்தது என தந்தை என்னிடம் குறிப்பிட்டிருந்தார்.

ராஸ்கியைப் பற்றிய புத்தகம் ஒன்றினை ராமசாமிதான் எழுதியிருந்தார். தந்தையாரிடமிருந்த தகவல்களின் அடிப்படையில் அந்த நூல் எழுதப்பட்டது. ஆனால், தமிழில் அது வெளியாகியிருக்கவில்லை.

எனது தந்தை இறந்தபோது எஸ்பொ. வருகைதந்திருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரும் நினைவுகூர்ந்திருந்தார். எனது தந்தையாரைப் பற்றி எஸ்.பொ. எழுதியபோது என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா ஆகியோரின் தலைமறைவு வாழ்க்கைக்கு தமிழர்களே உதவியாக குறிப்பிட்டதுடன், பின்னர் அவர்கள் தமிழர்களின் எதிரிகளாக மாறிவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களின் தலைமறைவு வாழ்க்கை தொடர்ந்த நிலையில், அவர்களின் இருப்புக்கு அங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் உட்பட பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையேற்பட்டது.

இவ்வாறான நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலையேற்பட்டபோது எனது தந்தையாரிடம் கூறிவிட்டுச் செல்வதற்காக வீட்டிற்கு வருகைதந்தபோது தந்தையார் வீட்டில் இருக்காத நிலையில் எனது பூட்டியாரிடம் பயணத்தை கூறிவிட்டு சென்றிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்திலும் பொலிஸார் வருகை தந்தபோது பூட்டியார் கூட அவர்களை பாதுகாத்ததாக கூறப்படுகிறது.
மரபு ரீதியான ஓவியங்களும் சமகால ஓவியங்களும்

கேள்வி ; உணர்வு ரீதியான விடயங்களை வெளிப்படுத்த பொருத்தமான முறை சமகால ஓவியங்களா மரபுரீதியிலான ஓவியங்களா?

பதில் :சமகால ஓவியங்கள் எவ்வாறான வடிவத்திலும் காணப்படலாம். ஆனால் அவை உண்மையானதாக இருக்கவேண்டும். சமகால ஓவியத்தினை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். படைப்பாளன் அதனை உணர்ந்து உண்மையாக அந்தப் படைப்பினை வெளிப்படுத்த வேண்டும். ஆனால்இ இந்த சமகாலத்தை ஓவியத்தை படைப்பதாக இருந்தாலும்இ புலமை ரீதியாக அடிப்படை விடயங்களை அறிந்து அதனைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. கல்வியியல் ஒழுக்கம் சகல விடயங்களுக்கும் அவசியமானது. இவை அனைத்திலும் பின்னர்தான் ஓவிய வடிவங்களை எம்மால் மாற்றிக்கொள்ள முடியும்.  உருவத்தைத் தெரியாமல் அருவத்தை வரைய முடியாது.  சும்மா கிறுக்குவது ஓவியமாகிவிடமுடியாது. அதேபோல் பார்வையாளர்களும் பயிற்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். பார்த்தவுடன் சில ஓவியங்களை விளங்கிக் கொள்ள முடியாது. ஆழமாக நோக்கிய பின்னரே ஓவியங்களின் ஆழமான அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியும். கடுமையான பயிற்சியை தவிர்த்து தற்கால ஓவியத்துக்கு சென்றுவிட முடியாது.

அடிப்படை கல்வி ஒழுக்கங்கள் இன்றி சரியான பயிற்சி இல்லாமல் சமகால ஓவியங்களை வரைவதன் மூலம் முழுமையான அர்த்தத்தினை வெளிப்படுத்த முடியாது. ஓவியங்களை அவ்வாறு வரையலாம் ஆனால் ஒரு சில நாட்களில் அந்தப் படைப்பாளர் ஒதுங்கிச் செல்லவேண்டிய நிலையேற்படும்.

தொடர்புகொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவ்வழிமுறைகளை சரியாக கற்றுக்கொண்டு தொடர்பினை ஏற்படுத்தினால்தான் இருவருக்கிடையிலான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
கேள்வி ; கணனி ஓவியங்கள் கிராபிக்ஸ் வளர்ச்சிகாரணமாக எதிர்காலத்தில் கை ஓவியங்கள் மறந்துவிடும் சாத்தியம் உள்ளதா?

பதில் : கணனி ஓவியங்களால் மரபு ரீதியான ஓவியங்கள் அழியவோ மறைய்யஅவோ போவதில்லை. கணனி ஒரு சாதனம் நாம் கூறுவதனை செய்கின்றது.மனிதர்களின் அறிவின் மூலமே அதுவும் செயற்படுகின்றத்கு.கணனிகள் பணிகளை சுருக்குகின்றன. ஆனால் மனித புலமையே அதற்கு பயன்படுகின்றது.எந்த சந்தர்ப்பத்திலும் அது தொடர்ந்து செயற்படுகின்றது. ஆனால் உண்மையான மென்பொருள் என்பது மனிதர்கள் மட்டுமே.


Saturday, June 3, 2017

ரஜினியின் அரசியல் விளையாட்டு

 தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத சக்தியாகத் திகழும் ரஜினிகாந்தின் குரல் அவ்வப்போது அரசியல் அரங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.சினிமா என்ற மாய உலகில் யாருமே எட்டமுடியாத உச்சத்தில் இருக்கும் ரஜினி அரசியலிலும் உச்சத்தை எட்ட வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம்  தமிழக அரசியலும் சினிமாவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன.தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் தமிழக அரசியலிலும் கால்பதித்துள்ளார்கள். அண்ணாத்துரை,கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து தமிழக முதலமைச்சரானவர்கள்.தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்கள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழக சட்ட மன்ற  உறுப்பினராகவும் தெரிவாகி மக்களுக்குச் சேவையாற்றினார்கள்.அரசியல் ஆசையில் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் இடையில் காணாமல் போய்விட்டார்கள்.
திரைப் படங்களில் அரசியல்வாதிகளின் ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து மக்களின் அபிமானத்தைப் பெற்ற ரஜினி அரசியலிலும் அதேபோன்று செய்வர் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். கருணாநிதி அரசியலில்  கால் பாதித்தபோது பெரியாரின் தலைமையில் அண்ணாவின் தம்பியாகச் செயற்பட்டார். அண்ணா மறைந்ததும் முதலமைச்சரானார். கருணாநிதியின் தலைமையில் அரசியலில் அரசியலில் ஜொலித்த எம்.ஜி.ஆர்,திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து முதலமைச்ரானார்.


எம்.ஜி.ஆரி ஜோடியாக சினிமாவில் அறிமுகமான ஜெயலலிதா, அரசியலில் எம்.ஜி.ஆரின் வழியைப் பின்பற்றினார். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அரசியலின் நெளிவு சுழிவுகளை கற்றுக்கொண்ட ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர்  தமிழகத்தின் முதலமைச்சரானார்.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் முதலமைச்சர் கனவுடன் அரசியலுக்கு வரவில்லை.களமும் சூழ்நிலையும் அவர்களை முதலமைச்சராக்கியது. அண்மைக்காலமாக அரசியலுக்கு வருபவர்கள் அனைவரும் முதலமைச்சராவதற்கு ஆசைப்படுகிறார்கள்;. ரஜினியும் இதற்கு விதிவிலக்கல்ல.
கட்சித் தொண்டர்களாக இருந்தவர்கள்தான் அரசியல் தலைவர்களாக உருவெடுத்தார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் இதற்கு நேர் மாறானது. முதலமைச்சர் என்ற அந்தஸ்துடன் அவர் அரசியல் பிரவேசம் செய்ய வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழக அரசியல் கட்சிகளில் ரஜினியின் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவர்கள் அக்கட்சிகளில் இருந்தது வெளியேறிவிடுவார்கள். ரஜினி ரசிகர்களின்  வெளியேற்றம் அக் கட்சிகளின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்குமா என்பதை உடனடியாகக் கணிக்க முடியாது.


ரஜினியின் ரசிகர்களில் அதிகமானோர் அறுபது வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். இன்று ரஜினியை ரசிப்பவர்கள் தேர்தலில் அவருக்காக வேலை ஊக்கத்துடன் செய்வார்களா என்பதை உறுதியாகச்சொல்ல முடியாது. அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கான சகல ஆயத்தங்களையும் செய்தபின்னர்தான் ரஜினி தனது ரசிகர்களைச் சந்தித்தார்.  ரசிகர்களை அவர் முன்பு சந்தித்தபோது அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. கடந்த வாரம் ரசிகர்களைச்சந்தித்த ரஜினி அரசியல் பற்றியும் அரசியல் தலைவர்கள் பற்றியும் பேசி உள்ளார்.

தமிழக அரசியலில் பலமான ஒரு தலைவர் இல்லாத நிலை உள்ளது. இரும்புப்பென்மணி ஜெயலலிதா மறைந்து விட்டார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அரசியல் சாணக்கியர் கருணாநிதியின் குரல் அடங்கி விட்டது. தலைமை இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல தலைவர்களால் வழி நடத்தப்படுகிறது. ஸ்டாலின் மட்டும் அரசியல் களத்தில் பம்பரமகச் சுழல்கிறார். மற்றைய தலைவர்கள் அறிக்கையை வெளியிட்டு விட்டு அமைதியாக இருக்கிறார்கள். இந்த இடை வெளியை நிரப்புவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி   காய் நகர்த்துகிறது. அக் கட்சியால்  வெற்றி பெற முடியவில்லை.
 ரஜினியை வளைப்பதற்கு பாரதீய ஜனதாத்  தலைவர்கள் பல தடவை முயற்சி செய்தனர். ரஜினியின் வீட்டுக்கு பிரதமர் மோடியும் வேறுபல தலைவர்களும் சென்று ரஜினி தமது பக்கம் என்ற மாயையை உருவாக்கப் பார்த்தனர். ரஜினி எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விட பாரதீய ஜனதாக் கட்சியின்  தலைவர்களுடன் ரஜினிக்கு நெருக்கம் அதிகம். தமிழகத்தில் கருணாநிதி, மூப்பனார் ஆகிய இரண்டு தலைவர்கள் மீதும் ரஜினி மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார். அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்த காலம்  சென்ற சோவின் ஆலோசனையையும் ரஜினி வழிநடத்தியது.


திரைப்படங்களில் அரசியல் வசனம் பேசி கைதட்டல் வாங்கிய ரஜினி, பாட்ஷாபட  வெற்றி விழாவில் பகிரங்கமாக அரசியல் பேசி ஜெயலலிதாவின் எதிர்ப்பைச்சம்பாதித்தார். கருணாநிதியும் மூப்பனாரும் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட போது அந்தக் கூட்டணியின் வெற்றிக்காகக் குரல் கொடுத்தார். அந்தத் தேர்தலில் ரஜினி குரல் கொடுத்த கூட்டணி வெற்றி பெற்றது.. அப்போது ரஜினியின் குரலுக்குக் கிடைத்த வெற்றியாகவே அந்த வெற்றி கருதப்பட்டது. ஜெயலலிதாவின் கோபப்பார்வையில் இருந்து கருணாநிதியும் மூப்பனாரும் ரஜினியைக் காப்பாற்றிய உண்மை மழுங்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் ரஜினியின்  குரல் ஒலித்தது..ஆனால்,அந்தக்குரலுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை.

பாபா படம் வெளியானபோது ராமதாஸின் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தியது. அப்போது நடைபெற்ற  இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாடாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்ததால் ரஜினிகாந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களித்தார். அந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி தமிழகத்தின் சகல தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அப்போதும் ரஜினியின் குரல் மதிப்பிழந்தது.தமிழகத்தில் தேர்தல் நடைபெறும்போது அரசியல் தலைவர்களும் வேட்பாளர்களும் ரஜினியைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எல்லா வேட்பாளர்களுடனும் சிரித்தபடி போஸ் கொடுப்பார் .கொள்கை அற்ற அரசியல் ஆதரவளராக ரஜினி நோக்கப்படுகிறார். 

தமிழக அரசியலில் இக்கட்டான நேரத்தில் ரஜினி குரல் கொடுத்ததில்லை. இலங்கைத் தமிழர்கள் பற்றிய ரஜினியின் பார்வை வெளிப்படையானதாக இல்லை. முல்லைப்பெரியாறு, கர்நாடகத்துடனான காவிரி நீரப் பங்கீடு போன்ற பிரச்சினைகளில் ரஜினி  அதிகமாக ஆர்வம் காட்டியதில்லை. சென்னையை வெள்ளம் புரட்டியபோது சினிமாவில் உள்ளவர்கள் களத்தின் நின்று உதவி செய்தார்கள். புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்திய மோடியின் அரசாங்கம் பழைய நோட்டுகளை செல்லாது என அறிவித்தபோது. மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதற்கு ஆதரவு தெரிவித்த ரஜினி  புதிய இந்தியா பிறந்துவிட்டது என அறிவித்தார்.


சினிமாப் பிரபலங்கள் தமது ரசிகர்களுக்கும் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்கிறார்கள். கமல் நற்பணி மன்றம் உடலுறுப்பு தானம் செய்துள்ளது.  நடிகை ஹன்சிகா அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார். .ராகவா லாரன்ஸ் செய்யும் உதவிகள் அளப்பரியது.அகரம் என்ற அறக்கட்டளையின் மூலம் சிவகுமார், சூர்யா கார்த்திக் ஆகியோர் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். விஜய் தனது ரசிகர்களை அவ்வப்போது ஆச்சரியப்படுத்துகிறார். இந்த வரிசையில் ரஜினி என்ன செய்தார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர்களைக் களம் இறக்கி நோட்டம் பார்த்து கட்சியை ஆரம்பிக்கும் திட்டத்தில் ரஜினி இருப்பதாகக்கூறப்படுகிறது. கட்சியின் பெயர் இன்றி ரஜினியின் ஆசிபெற்ற  என்ற அறிமுகத்துடன் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். உள்ளாட்சித் தேர்தலின் முடிவின் பின்னர் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு  வெளியாகும். இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளன.

கருணாநிதிக்கும் மூப்பனாருக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்ததை அரசியல் விபத்து எனக் கூறி பிராயச்சித்தம் தேடி உள்ளார் ரஜினி. அந்தச்சம்பவம் நடைபெற்று இரண்டு தசாப்தங்கள் கடந்தபின்னர் ரஜினிக்கு ஞானம்  பிறந்துள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசியல் பற்றி வெளிப்படையாகப்பேசி  போருக்குத் தயாராகுமாறு ரசிகர்களுக்கு  சமிக்ஞை காட்டியுள்ளார். பணம் சம்பாதிக்கும் ஆசை உள்ளவர்களை சேர்க்கமாட்டேன் என ரஜினி உறுதியளித்துள்ளார். அரசியல் என்றால் பொதுச்சேவை என்ற எண்ணம் ஒருகாலத்தில் இருந்தது. பணம் சம்பாதிப்பதில் குறியாக உள்ளவர்கள்  இன்று அரசியலை ஆக்கிரமித்துள்ளார்கள். உண்மையான சமூக நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளை ரஜினி எப்படித் தெரிவு செய்வர் எனத் தெரியவில்லை.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை சிலர் வரவேற்கிறார்கள். சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். அரசியல் கட்சிகளைச்சேராத நடுநிலையான வாக்களர்களைக் கவர  வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு உள்ளது.  கட்சித் தலைமையால் ஓரங்கட்டப்பட்டவர்கள் ரஜினியின் பக்கம் திரும்பியுள்ளனர்.தமிழருவி மணியன்  ரஜினியைச் சந்தித்ததால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்  மாற்றீடாக‌ மக்கள் நலக் கூட்டணியை  அமைப்பதில் பெரும் பங்காற்றிய  தமிழருவி மணியன், ரஜினியைச் சந்தித்ததால் சில கட்சிகள் ரஜினியுடன் சேர வாய்ப்பு உள்ளது.
பச்சைத் தமிழன் என ரஜினி தன்னை அறிவித்ததால் அவரது அவரது அரசியல் ஆசை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வர்மா