Showing posts with label பரிசு. Show all posts
Showing posts with label பரிசு. Show all posts

Monday, May 25, 2026

பிரெஞ்ச் ஓபன் பரிசுத் தொகை அதிகரிப்பு


 பிரெஞ்சு ஓபன் ஒற்றையர் பிரிவுக்கான பிரதான சுற்றுப் போட்டி, பாரிஸில் வியாழக்கிழமை, மே 21  ஆம் திகதி ஆரம்பமானது. ஏனைய போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும்.  ஜூன் 7 ஆம் திகதி ரோலண்ட் கேரோஸில் நிறைவடைய உள்ளது.

  பிரெஞ்சு ஓபன் போட்டியின் பரிசுத் தொகை 9.5 சதவீதம் உயர்ந்து, மொத்தப் பரிசுத் தொகை 61.7 மில்லியன் யூரோக்களாக (72.69 மில்லியன் அமெரிக்க  டொலராக ) அதிகரித்துள்ளது.

ஆண்கள் , பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் ஒவ்வொருவரும் 2.8 மில்லியன் யூரோக்களைப் பெறுவார்கள்.

ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் நடப்பு ஆடவர் ஒற்றையர் சம்பியன் ஆவார். இருப்பினும், மணிக்கட்டு காயம் காரணமாக அவர் இந்த ஆண்டுப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் கோகோ காஃப் நடப்பு சம்பியனாக உள்ளார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் , ஆர்ஜென்ரீனாவின் ஹொராசியோ செபல்லோஸ் ஆகியோர் பட்டத்தை வென்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் முழுக்க முழுக்க இத்தாலிய ஜோடியான ஜாஸ்மின் பாவோலினி ,சாரா எர்ரானி ஆகியோர் கடந்த ஆண்டு வெற்றியாளர்களாக இருந்தனர். எர்ரானி தனது சக நாட்டவரான ஆண்ட்ரியா வவஸ்ஸோரியுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பட்டத்தையும் கைப்பற்றினார்.

ஆண்கள் , பெண்கள் சக்கர நாற்காலி ஒற்றையர் பிரிவுகளில், கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஆல்ஃபி ஹெவெட்டும், ஜப்பானைச் சேர்ந்த யூயி கமிஜியும் வெற்றி பெற்றனர்.

இஸ்ரேலின் கை சாஸன் சக்கர நாற்காலி குவாட் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார்.

சக்கர நாற்காலி ஆடவர் இரட்டையர் பட்டத்தை பிரிட்டனைச் சேர்ந்த ஆல்ஃபி ஹெவிட், கோர்டன் ரீட் இணை கைப்பற்றியது. அதே சமயம், மகளிர் பிரிவில் ஜப்பானின் யூயி கமிஜி மற்றும் தென்னாப்பிரிக்காவின் கோதட்சோ மான்ட்ஜேன் ஆகியோர் வெற்றியாளர் கோப்பையை வென்றனர்.

சக்கர நாற்காலி குவாட் இரட்டையர் பிரிவில் சாசனும், டச்சுக்காரரான நீல்ஸ் விங்கும் வெற்றி பெற்றனர்.

  

Wednesday, May 13, 2026

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாக சபலென்கா எச்சரிக்கை

பரிசுப் பணத்தில் அதிகப் பங்கைப் பெறுவதற்காக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளைப் புறக்கணிக்கத் தயாராக இருப்பதாக உலக நம்பர் 1 வீராங்கனை அர்னா சபலென்கா செவ்வாயன்று கூறினார்.

"இந்த நிகழ்ச்சி எங்களைச் சார்ந்தது என்று நான் உணர்கிறேன். நாங்கள் இல்லாமல் இந்தப் போட்டியே இருந்திருக்காது, அந்தப் பொழுதுபோக்கும் இருந்திருக்காது," என்று நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற அவர் இத்தாலியன் ஓபனில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நிச்சயமாக எங்களுக்கு அதிக சதவீதம் பணம் வழங்கப்பட வேண்டும் என்று நான் உணர்கிறேன். ஒரு கட்டத்தில் நாங்கள் புறக்கணிப்போம் என்று நினைக்கிறேன். எங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு அதுதான் ஒரே வழி என்று நான் உணர்கிறேன்.

"நாங்கள் வீராங்கனைகள் எளிதாக ஒன்றிணைந்து இதற்காகப் போராட முடியும், ஏனென்றால் சில விஷயங்கள் வீரர்களுக்கு மிகவும் அநியாயமாக இருப்பதாக நான் உணர்கிறேன்." ஒரு கட்டத்தில் இது இந்த நிலைக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட அனைத்து முன்னணி வீரர்களும் நான்கு கிராண்ட்ஸ்லாம் நிர்வாகிகளுக்கும் இரண்டு கடிதங்களில் கையெழுத்திட்டனர். அதில், பரிசுத் தொகையை அதிகரித்தல், ஓய்வூதியம் ,மகப்பேறு சலுகைகளை மேம்படுத்துவதற்காக வீரர் நல நிதியில் பணம் செலுத்துதல், அத்துடன் தங்களைப் பாதிக்கும் முடிவுகளில் தங்களைப் பங்கேற்கச் செய்தல் ஆகியவற்றை அவர்கள் கோரியிருந்தனர்.

போட்டி வருவாயில் 22 சதவீதப் பங்கைப் பெறுவதை அந்தக் கடிதங்கள் இலக்காக நிர்ணயித்தன. இது, ஏடிபி ஆண்கள் சுற்று மற்றும் பெண்கள் டபிள்யூடிஏ சுற்று ஆகியவற்றால் நடத்தப்படும் ஒன்பது ஒருங்கிணைந்த 1000-நிலை நிகழ்வுகளுக்கு இணையாக மேஜர் போட்டிகளைக் கொண்டுவரும்.

இருப்பினும், நான்கு முறை பிரெஞ்சு ஓபன் ஒற்றையர் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், போட்டிகளைப் புறக்கணிப்பது "கொஞ்சம் அதீதமானது" என்று நம்புகிறார்.

கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் அறிவித்த 9.5 சதவீத பரிசுத்தொகை உயர்வு போதுமானதாக இல்லை என்று வீரர்கள் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ரோலண்ட் கரோஸ் 395 மில்லியன் யூரோக்கள் ($463 மில்லியன்) வருவாய் ஈட்டியதாகவும், இது 14 சதவீத அதிகரிப்பு என்றும் அந்த அறிக்கை கூறியது.இருப்பினும், மொத்த பரிசுத்தொகை வெறும் 5.4 சதவீதம் மட்டுமே உயர்ந்ததால், வருவாயில் வீரர்களின் பங்கு 14.3 சதவீதமாகக் குறைந்தது. இந்த ஆண்டு வருவாய் 400 மில்லியன் யூரோக்களைத் தாண்டும் என்றும், வீரர்களின் பங்கு 15 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது. 

Monday, January 1, 2024

அவுஸ்திரேலிய ஓபன் போட்டியின் பரிசுத் தொகை அதிகரிக்கிறது

 மெல்போர்ன் பார்க்கில் நடக்கும் அவுதிரேலிய ஓபன் டென்னிஸ்   போட்டிக்கான பரிசுத் தொகை அவுஸ்திரேலிய $10 மில்லியன் ($6.8 மில்லியன்) உயர்த்த்தப்பட்டுள்ளது.

கிராண்ட்ஸ்லாம் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகையில் இப்போது அவுஸ்திரேலிய $86.5 ($58.4 மில்லியன்) வழங்கப்படும் என்று போட்டி இயக்குநர் கிரேக் டைலே வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

யுஎஸ் ஓபன்  அதன் மொத்த பரிசுத் தொகை மற்றும் வீரர்களின் இழப்பீட்டுத் தொகையை சாதனையாக $65 மில்லியனாக உயர்த்துவதாக அறிவித்தது, இது நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயர்ந்ததாகும்.

"அவுஸ்திரேலியன் ஓபனில் ஒவ்வொரு சுற்றுக்கும் நாங்கள் தகுதிச் சுற்றுகள் மற்றும் ஒற்றையர் மற்றும் இரட்டையர்களின் ஆரம்ப சுற்றுகளில் பெரிய அதிகரிப்புடன் பரிசுத் தொகையை உயர்த்தியுள்ளோம்" என்று டைலி கூறினார்.

மெல்போர்னில், முதல்-சுற்று தகுதி பெறுபவர்கள் 20% அதிகரித்து A$31,250 ஆக (சுமார் $21,000) பெறுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் சாம்பியன்கள் தலா $3.15 மில்லியன் (சுமார் $2.15 மில்லியன்) பெறுவார்கள்.

 அவுஸ்திரேலிய ஓபன் ஜனவரி 14 ஆம் திகதி அரம்பமாகும்.மகளிர் இறுதிப் போட்டி ஜனவரி 27-ஆம் யும் ஆடவர் இறுதிப் போட்டி ஜனவரி 28-ஆம் திகதி நடைபெற உள்ளது.