Monday, January 31, 2011

இரகசியமாகக் கூட்டணிப் பேச்சு

தமிழக சட்டசபைக்கான தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணிக் கனவில் மிதக்க தமிழக முதல்வர் கருணாநிதி தனது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சூசகமாக அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அவர் விரும்புகிறார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவரது ஓய்வை தள்ளிப் போகச் செய்கிறது. தலைவர் கருணாநிதியா? முதல்வர் கருணாநிதியா? என்று கேட்டால் முதல்வர் கருணாநிதி என்றுதான் அதிகமானவர் கூறுவார்கள் என்று அண்மையில் நடைபெற்ற திருமண வைபவத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
பெரியார், அண்ணா காலத்தில் அரசியலில் நுழைந்தவர்களில் இன்றும் அதீத செல்வாக்குடன் விளங்குபவர் கருணாநிதி. தொண்டனாக கட்சியில் இணைந்து போராட்டங்களின் மூலம் கட்சியின் மதிப்பைப் பெற்று தொண்டர்களின் ஆதரவுடன் தலைவராகியவர். ஓய்வு வெறும் வயதையும் கடந்து ஓய்வில்லாமல் பணியாற்றும் தனக்கு ஓய்வு வேண்டும் என்று பல தடவை அவர் சூசகமாக அறிவித்தும் அவர் விரும்பும் ஓய்வு அவருக்குக் கிடைக்கவில்லை. தமிழக அரசியலில் மிகவும் நெருக்கடியான காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கைகோர்ப்பதற்குத் தயாராக உள்ளனர். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்தால் மிகப் பெரிய சவாலை கருணாநிதி எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். எதிர்க்கட்சிகள் பலமடையும். இவ்வேளையில் தனது ஓய்வு பற்றி கருணாநிதி அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் பலமடைந்த வேளையில் தமிழகம் எங்கும் சூறாவளிப் பிரசாரம் செய்ய வேண்டும். ஆகையால் தேர்தலில் போட்டியிடுவதை முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளையும் ஒரு சேரக் கவனிப்பதற்கு விரும்புகிறார் கருணாநிதி. இதேவேளை கட்சியின் பொறுப்பை தன் வசம் வைத்துக் கொண்டு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை மகன் ஸ்டாலினிடம் கொடுக்கும் திட்டமும் அவரிடம் உள்ளது. தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பதை திரõவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். தமிழகத்துக்கு அதனை வெளிப்படையாக அறிவிப்பதற்கான களமாக தமிழக சட்ட சபைத் தேர்தல் களத்தைத் தேர்வு செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி. தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாது கட்சியைத் தலைமையேற்று வழி நடத்த விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தொண்டர்களும் இதற்கு உடன்பட மாட்டார்கள். கருணாநிதி தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும். வெற்றி பெற வேண்டும். மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகும். இறுதியில் கட்சித் தலைவர்களினதும் தொண்டர்களினதும் விருப்பத்துக்கு இசைய வேண்டிய நிலைமை முதல்வர் கருணாநிதிக்கு ஏற்படும்.
திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமது கூட்டணி பற்றிய விபரத்தை உத்தியோகபூர்வமாக இன்னமும் அறிவிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இணையப் போகும் கட்சிகள் எவை? இவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை போன்ற விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, இடதுசாரிகள் உட்பட 18 கட்சிகள் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஜெயலலிதாவின் அதிர்ஷ்ட இலக்கம் ஒன்பது. ஆகையினால் 18 கட்சிகள் என்ற கூட்டணி இலக்கம் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.
ஜெயலலிதாவுடன் விஜயகாந்தும் தனித் தனியாகப் போட்டியிட்டால் கருணாநிதியை வீழ்த்த முடியாது என்பதே காலம் கடந்து இருவரும் உணர்ந்துள்ளனர். 70 முதல் 80 தொகுதிகள் வரை விஜயகாந்த் எதிர்பார்க்கிறார். அவ்வளவு அதிகமான தொகுதிகளைக் கொடுக்க ஜெயலலிதா தயாராக இல்லை. கடந்த நாடாளுமன்ற, தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவின் படுதோல்விக்கு விஜயகாந்தான் காரணம். ஆகையினால் அதிக தொகுதிகளை விஜயகாந்த் எதிர்பார்க்கிறார். தமிழக சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜெயலலிதா முதல்வராவார். ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றால் அந்தத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் எதிர்பார்க்கிறார்.
ஜெயலலிதா, விஜயகாந்த் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறி நிலையிலேயே உள்ளது. பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. கருணாநிதியை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இருவரும் தயாராகி விட்டனர். தேர்தல் காலத்தில் கூட்டணித் தலைவர்களை ஜெயலலிதா உதாசீனம் செய்ததும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அவமானப்படுத்தியதும் கடந்த கால வரலாறு. அந்த வரலாறுகளை கூட்டணிக்கு எதிரானவர்கள் அவ்வப் போது நினைவுபடுத்துகின்றனர்.
ஜெயலலிதா கேட்காமலே அவருக்காக பிரசாரம் செய்ய விஜய் ரசிகர்கள் தயாராகி விட்டனர். விஜய் நடித்த காவலன் படம் வெற்றி பெறுவதற்கு போடப்பட்ட முட்டுக்கட்டைகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததே தவிர அதனைக் களைவதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை. சினிமாக் கலைஞர்களுக்கு உதவி செய்யும் தமிழக முதல்வர் கருணாநிதி, விஜய் படும்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். விஜயின் அரசியல் பிரவேசத்தில் முதல்வர் கருணாநிதி வழிவகுத்துக் கொடுத்துள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார் ஜெயலலிதா. சுமார் 600 மீனவர்கள் கடலில் கொல்லப்பட்டனர். இலங்கைக் கடற்படை மீது ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படும் போது கண்டன அறிக்கைகளையும், கடிதங்களையும் எழுதுவதுடன் தன் பணி முடிந்து விட்டதாகத் தமிழக முதல்வர் கருணாநிதி நினைக்கிறார். கொல்லப்பட்ட மீனவரின் வீட்டுக்கு சென்ற, ஜெயலலிதா ஒரு இலட்சம் ரூபா உதவித் தொகையைக் கொடுத்து பிள்ளைகளின் படிப்புச் செலவையும் கழகம் பொறுப்பேற்கும் என்று அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் இலங்கை அரசு வெற்றி பெறுவதற்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் அளப்பரிய உதவிகளைச் செய்துள்ளன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் மீனவர் பிரச்சினையை பெரிதாக்குவதற்கு ஜெயலலிதா முன்வந்துள்ளார். நான் ஆட்சியில் இருந்தால் மீனவர்கள் இப்படிப்பட்ட அவல நிலையைச் சந்திக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா. பாக்கு நீரிணையில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது திரõவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பாரிய சவாலைக் கொடுக்க உள்ளது.
வர்மாசூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு 30/01/11

Thursday, January 27, 2011

விருதுபெற்றமேஸி

சர்வதேச உதைபந்தாட்டக் கூட்டமைப்பின் (பிஃபா) சார்பில் வழங்கப்படும் ஆண்டின் பலன் டி' ஓர் (Fifa's Ballon d' or) சிறந்த வீரருக்கான விருதைத் தொடர்ச்சியாக இரண்டாவது முறை பெற்றுள்ளõர் ஆர்ஜென்ரீனா வீரரான லியோனல் மேஸி. கடந்த ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேஸி நிறைவேற்றவில்லை. பாஸிலோனா அணிக்காக அவர் சிறந்த முறையில் விளையாடியதே இவ் விருது கிடைக்கக் காரணமாகும்.
மேஸி (ஆர்ஜென்ரீனா), ஷேவி (ஸ்பெயின்) இனியன்டா (ஸ்பெய்ன்) ஆகிய மூவரின் பெயர் ஆண்டின் சிறந்த வீரருக்காக அறிவிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் பர்ஸிலோனா அணி வீரர்கள் என்பதனால் ஒரு சிலர் இதில் செல்வாக்கு ஆதீக்கம் செலுத்தியதாகக் கருத்து தெரிவித்தனர். பத்திரிகையாளர்கள், தேசிய அணியின் பயிற்சியாளர்கள், அணித் தலைவர்கள் ஆகியோரின் வாக்கெடுப்பு மூலமே சிறந்த வீரர் தெரிவு செய்யப்படுவார்கள்.
லியனல் மேஸி 22.65 சதவீத வாக்குகளைப் பெற்று 2010 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். இனியன்டா 17.36 சதவீத வாக்குகளையும் ஷேவி 16.48 சதவீத வாக்குகளையும் பெற்றனர். பெக்கம், கிறிஸ்ரியானி கரானால்டோ, ரொனால்டோ, ரொனால்டினோ, ரூனி மேஸி ஆகியோருக்கு உலகெங்கும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் கைகளில் பந்து கிøடத்து விட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். எதிரணி வீரர்களுக்குத் திண்டாட்டம்.
1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி மேஸி பிறந்தார். 1995 ஆம் ஆண்டு நியூவெல்ஸ் ஓல்ட் போய்ஸ் அணியில் இணைந்தார். 2000 ஆம் ஆண்டு 13 ஆவது வயதில் பர்சிலோனா அணியில் இணைந்தார். 2003 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி 16 ஆவது வயதில் சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் முதன் முதலில் விளையாடினார். 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி முதன் முதலாக மட் பர்ஸிலோனா அணிக்காக என்பனியோல் அணியை 17 ஆவது வயதில் எதிர்த்து களமிறங்கினார்.
2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இளையோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் ஹொலன்டில் விளையாடினார். அப்போட்டியில் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆர்ஜென்டீன அணிக்காக சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் இடைவேளைக்குப் பின் களமிறங்கி இரண்டு நிமிடங்களில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 2005 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு மேஸிக்கு குடியுரிமை வழங்கியது. 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்ரீனா அணியின் வயது குறைந்த வீரராகக் களமிறங்கினார். சேர்பியா அன்ட் மொன்ராக்கோ அணிக்கு எதிராக ஆறு கோல்கள் அடித்தார். 6 0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேஸி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய ஐந்தாவது வயது குறைந்தவராவார்.
2007 ஆம் ஆண்டு கோபா அமெரிக்க கிண்ண இறுதிப் போட்டியில் பிரேஸிலை எதிர்த்து விளையாடிய ஆர்ஜன்ரீனா தோல்வி அடைந்தது. சிறந்த இளம் வீரராக மேஸி தேர்வு செய்யப்பட்டார்.
2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 2 ஆம் திகதி பீஃபாவின் பலன் டி' ஓர் வீரராக பிரேஸில் காகா தெரிவு செய்யப்பட்டார். போர்த்துகல் வீரர் கிறிஸ்ரியானி ரொனால்டோ இரண்டாம் இடத்தையும் மேஸி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி பீஃபாவின் சிறந்த உதைபந்தாட்ட வீரராக காகா தெரிவு செய்யப்பட்டார். மெஸி இரண்டாவது இடத்தைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட அணி சார்பில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டனர். 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் பீஜிங்கில் நடைபெற்ற நைஜீரியாவுக்கு எதிரான ஒலிம்பிக் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்ரீனா சாம்பியனானது.
2008 டிசெம்பர் 2 ஆம் திகதி பலன் டி' ஓர் வாக்களிப்பில் இரண்டாமிடம் பெற்றார். போர்த்துகல் வீரர் கிறிஸ் ரியானி ரொனால்டோ முதலிடம் பெற்று வெற்றி பெற்றார். 2009 டிசெம்பர் 1 ஆம் திகதி பலன் டி' ஓர் விருதைப் பெற்றார். 2010 மே மாதம் பிரிமியர் போட்டிகளில் ரொனால்டோ அடித்த 34 கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
2011 ஜனவரி 10 பலன் டி' ஓர் விருதை பெற்றார்.
அல்படோ டி ஸ்ரீபனோ, ஜோஹன் கிரிப், பெக்கன் பெரர், கெவின் கீகன், மைக்கல் பிளட்டின், மார்தேவான் பஸ்ரின், கார்லா ஹென்ய ரம்மெனிகி, ரொனால்டோ ஆகியோர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 28/01/11

Wednesday, January 26, 2011

கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும், விஜயகாந்துடன் இணைந்து போட்டியிட வேண்டும், ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்தனர். விஜயகாந்தும் ஜெயலலிதாவும் நெருங்கி வருவதனால் சகல பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டணியைப் பலப்படுத்த வேண்டிய இக் கட்டான நிலைக்கு இரண்டு கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ஓரணியில் நிற்பது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. இக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் சேர்வதற்கு துடிக்கிறது. மறுபுறத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிக் கட்சிகள் ஆகிய உள்ளன. விஜயகாந்தின் வருகையைப் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறது இக் கூட்டணி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத் தேர்தலில் போட்டியிட்டபோது எந்தக் கட்சிகளைச் சேர்ப்பது ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட பங்கீடு என்பனவற்றை கருணாநிதியே கையாண்டார். சோனியா காந்தியும் ஏனைய டெல்லி, தலைவர்களும் இந்த விடயத்தில் தலையிடாது கருணாநிதிக்கு பூரண சுதந்திரம் கொடுத்தனர். ஆனால், தமிழகத் தேர்தலின் போது அப்படி ஒரு நிலை ஏற்படுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் தமிழக அரியாசனத்தில் அமர்த்தி விட்டுத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த காலம் மலை ஏறிவிட்டது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் அதிகதொகுதிகளைக் கொடுத்து ஆட்சியிலும் பங்கு கொடுக்க திராவிட முன்னேற்றக் கழக தயாராக இல்லை. காங்கிரஸ் கடசிக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியே உள்ளே கொண்டு வரும் முனைப்பில் உள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டணி பற்றி தமிழகக் காங்கிரஸின் தலைவர்கள் ஆளுக்கொரு கருத்தைக் கூறிவருகின்றனர். சோனியா காந்தியுடன் விரிவாகக் கதைத்து உறுதியாக முடிவெடுப்பதற்கு கருணாநிதி தயாராகி விட்டார்.
உள்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்காக அடுத்த மாதம் டெல்லி செல்லும் முதல்வர் கருணாநிதி சோனியாகாந்தி மன்மோகன்சிங் ஆகியோரைச் சந்தித்து கூட்டணிபற்றிய முதல் கட்டப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகச் சட்டமன்றத்தேர்தலின் போது சோனியா, மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோர் திராவிடமுன்னேற்றக்கழக மேடைகளில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி விரும்புகிறார்.
தமிழகத்துக்குப் பல தடவை விஜயம் செய்த ராகுல் காந்தி ஒருமுறை கூட தமிழகமுதல்வரைச் சந்திக்கவில்லை. தமிழக விஜயங்களின் போது முதல்வர் கருணாநிதியையும் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களையும் சந்திப்பதை திட்டமிட்டே தவிர்த்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு நிலை இன்னமும் தொடரக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. டில்லி விஜயத்தின் போது ராகுல் காந்தியுடனான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன் உரிமை எடுக்கப்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நிலவிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது போல் தெரிகிறது. கட்சிக்குள் உள்ளவர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கிய ஆழகிரி அடங்கி விட்டார்போல் தெரிகிறது. ராசாவை வெளியேற்றவேண்டும், கட்சிக்குள் தனக்கு முக்கியபதவி வேண்டும் என்று அழகிரி வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் வெளியாகின. அப்போதெல்லாம் அமைதியாக இருந்த அழகரி இப்போது வாய்மலர்ந்து அப்படிப்பட்ட கோரிக்கைகள் எதனையும் தான் முன்வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படமுயற்சிக்கும் இவ்வேளையில் காங்கிரஸில் திராவிட முன்னேற்றக்கழகமும் தமக் கிடையேயுள்ள முரண்பாடுகளை பெரிதாக்க விரும்பவில்லை. கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளையும் அவை விவாதிக்க விரும்பவில்லை. அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் அடிக்கடி போர்க்குரல் எழுப்பும் அழகிரியும் அமைதியாகி விட்டார் கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தினால் எதிர்க்கட்சிகளுக்கு அல்வா கிடைத்தது போலாகிவிடும் என்பதை அழகிரி உணர்ந் துள்ளார். கழகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்தால் ஜெயலலிதாவின் விஸ்வரூபம் எப்படி இருக்கும் என்பது சகலரும் அறிந்த ஒன்று.
கருணாநிதி மாறன் குடும்பங்களில் அரசியல் வாழ்வு மட்டுமல்ல வியாபார நிலையங்களில் அனைத்திலும் கை வைத்து விடுவார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடமிருந்து தப்புவதற்கு ஒரேவழி ஆட்சியைத் தக்கவைப்பதுதான். அதற்கான விலையைக் கொடுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது.
சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்லாத மோசமான கலாசாரம் ஒன்று தமிழகத்தில் உள்ளது. கருணாநிதி முதல்வராக இருக்கும்போது சட்டசபைக்குச் செல்வதில்லை என்று ஜெயலலிதா சத்தியப்பிரமாணம் செய்தது போல் நடந்து கொள்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி சட்டசபைக்குச் செல்லவில்லை. இதே உரிமையை விஜயகாந்தும் பின்பற்றுகிறார்.
ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சட்டசபைக்குச் சென்று ஒருவருடத்துக்கு மேலாகி விட்டது. சட்டசபைக்கு தொடர்ந்து செல்லாத உறுப்பினர்களின் பதவியைப் பறிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு. ஜெயலலிதா விஜயகாந்த் ஆகியோர் பதவிகளைப் பறித்தால் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் பிரமாண்டமான போராட்டங்களை நடத்தி அதனை தமக்குச் சாதகமாக்கி விடும் எனப் பயந்த திராவிடமுன்னேற்றக் கழகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சிகள் அதனைத் தமது தேர்தல் பிரசாரத்தின்போது சாதகமாகப் பயன்படுத்துவர் என்பதால் அவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதுள்ளது தமிழக அரசாங்கம்.
தமிழகம் எங்கும் சூறாவளியாக சூழன்று அரசாங்கத்தை எதிர்த்து கூட்டம் நடத்தும் ஜெயலலிதா, விஜயகாந்த் மேடைகளில் அனல்பறக்கப் பேசுகிறார். ஆனால், தமிழக சட்டசபைக்குச் சென்று அரசாங்கம் விடும் தவறுகளைக் கேட்பதற்கு தயங்குகிறார்கள். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சட்டசபைக்குச் செல்லாததினால் தம் சொந்தமக் களின் எதிர்பார்ப்பை பொய்யாக்குகிறார்கள்.
இந்திய அமைச்சரவை மாற்றத்தின் போது இராஜினாமாச் செய்த ராசாவுக்குப் பதிலாக டி.ஆர். பாலு அமைச்சராக்கப்படலாம் என்ற செய்தி பிரபல்யமாக வெளியானது. புதிய அமைச்சரவையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடம் வழங்கப்படவில்லை. திராவிட முன்னேற்றக்கழகம் இதணைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை.
அமைச்சர் பதவி பெற்றால் தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதால், அமைச்சுப் பதவி பெறுவதில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக ஆர்வம் காட்டவில்லை.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 23/01/11

Thursday, January 20, 2011

இந்தியா வெற்றி பெற்றது.

களமிறங்கினார். இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் மூன்றாவது போட்டி பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணித் தலைவர் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். முதல் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய பந்து வீச்சாளர்களான சஹீர்கான், முனாப் பட்டேல் ஆகியோரின் அனல் பறந்த பந்துவீச்சில் தென்னாபிரிக்க வீரர்கள் தடுமாறினர். சஹீரின்பந்தில் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் அம்லா. ஹர்பஜனின் பந்தை கோக்லியிடம் பிடி கொடுத்த இங்ரம் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். யூசுப் பதானின் பந்தை தூக்கி அடித்த டிவிலியர்ஸ் 16 ஓட்டங்களுடன் சஹீர்கானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் ஸ்மித் ஹர்பஜனின் சுழலில் சிக்கி 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
23.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த தென்ஆபிரிக்கா 90 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்த போது ஐந்தாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து டுமினி, பிளசிஸ் இணை 110 ஓட்டங்கள் சேர்த்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. அறிமுக வீரரான பிளசிஸ் முதலாவது அரைச் சதமடித்தார். 60 ஓட்டங்கள் எடுத்த பிளசிஸ் முனாப்பட்டேலின் வேகத்தில் வீழ்ந்தார். 52 ஓட்டங்கள் எடுத்த டுமினியை சஹீர்கான் வெளியேற்றினார். அடுத்து வந்த வீரர்கள் ஏமாற்ற தென் ஆபிரிக்கா 220 ஓட்டங்கள் எடுத்தது.
சஹீர்கான் மூன்று விக்கெட்டுகளையும் முனாப்பட்டேல், ஹர்பஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பியுசவ்லா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
221 என்ற சுலபமான இலக்கை எட்டிய இந்தியா ஆரம்பத்தில் தடுமாறியது. ஸ்டைனின் பந்தை அவரிடமே பிடி கொடுக்க ஒரு ஓட்டத்துடன் வெளியேறினர் முரளி,விஜய். கோஹ்லி அடுத்தடுத்து பவுண்டரிஸ் அடித்த போதும் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 23, டோனி 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா. எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ரெய்னா, யூசுப்பதான் ஜோடி இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டியது. போத்தா வீசிய ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்து உற்சாகமூட்டினார் யூசுப்தான். 37 ஓட்டங்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். 59 ஓட்டங்களில் யூசுப்பதான் ஆட்டமிழக்க இந்தியா ரசிகர்கள் சோகமாகினர்.
ஹர்பஜன், சஹீர்கான் ஜோடி இந்தியாவின் வெற்றிக்காகப் போராடியது. 14 ஓட்டங்களில் சஹீர்கான் ஆட்டமிழந்தார். பர்னல், மார்கல் ஆகியோரின் ஓவரில் தலா ஒரு சிக்ஸர் அடித்து நம்பிக்கையூட்டினார். ஹர்பஜன். போத்தாவின் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் நெஹ்ரா.
மோர்கல் மூன்று, ஸ்ரைன் 2, பேஜா, டிசபேபட்,டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். யூசுப் பதான் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
சூரன்.ஏ.ரவிவர்மா

Tuesday, January 18, 2011

கருணாநிதிக்கு எதிராகதேர்தலில் குதிக்கிறார் சீமான்

விஜயகாந்த், சீமான் ஆகிய இருவரினாலும் தமிழக அரசியல் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பார் என்று அவரது மனைவி பிரேமலதா கூறியதால் இந்திய அரசியல் வாதிகளின் பார்வை அனைத்தும் சேலத்தை நோக்கியே இருந்தன. ஆளும் கட்சிப் பிரமுகர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் விஜயகாந்தின் அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கினர். தமிழக சட்ட சபைக்கான தேர்தல் கூட்டணி பற்றி எதுவும் கூறாத விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வழமையான பல்லவியையே பாடினார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் மிகவும் நெருங்கி விட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணையப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். விஜயகாந்தின் கூட்டணி பற்றிய அறிவிப்பு தாமதமாவதால் பலமான கூட்டணியுடன் இணைவதற்கு ஆர்வமாக இருக்கும் சிறிய கட்சிகள் முடிவு எடுக்க முடியாது தவிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழகத்தின் கணிசமான வாக்கு வங்கியைப் பங்கு போட்டுள்ளது. தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி அடைந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி பெருமளவு சரிவடையவில்லை. விஜயகாந்துடன் இணைந்தால் வாக்கு வங்கி இன்னமும் அதிகரிக்கும் என்று அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகம் நினைக்கிறது.
சேலத்தில் கூடிய பிரமாண்டமான மக்கள் கூட்டத்தைக் கண்டு சகல தரப்பினரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
விஜயகாந்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கும் ஜெயலலிதாவும் இக் கூட்டத்தைப் பார்த்து இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்திருப்பார். தனித்துத் தனித்து நின்றால் கருணாநிதியைத் தோற்கடிக்க முடியாது என்பதைக் காலம் கடந்து ஜெயலலிதாவும் கருணாநிதியும் உணர்ந்து கொண்டுள்ளனர். விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை ஒன்று இதனை சூசகமாகத் தெரிவித்துள்ளது.
சேலம் மாநாட்டை வாழ்த்தியும், கருணாநிதியின் அரசியலைப் பழித்தும் பத்திரிகையில் விளம்பரங்கள் பிரசுரமாகின. ஒரே ஒரு விளம்பரம் மட்டும் கொடநாடு ராணியே என்று ஆரம்பித்து, கொட நாட்டுக்கு விரட்டியடிக்கும் வரை தூங்காது எங்கள் விழி என்று இருந்தது. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் நெருங்கி வருவதாக செய்திகள் கசியும் வேளையில் ஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்தின் ஆதரவாளர் விளம்பரம் வெளியிட்டதைப் பார்த்த விஜயகாந்தின் கண்கள் மேலும் சிவந்தன. கட்சித் தலைமை விசாரணை செய்ததில் அந்தப் பெயரில் உள்ள எவரும் அந்த விளம்பரத்தைக் கொடுக்கவில்லை. விஜயகாந்தும் ஜெயலலிதாவும் இணைவதை விரும்பாத சிலரின் சமயோசித விளம்பரம் என்ற உண்மை வெளியானது.
கொட நாட்டுக்கு விரட்டுவோம் என்ற விளம்பரத்துக்கும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என்ற தீய நோக்கத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்று விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம் ஜெயலலிதாவுடன் தான் நெருங்குவதாகச் சூட்சுமமாகத் தெரிவித்துள்ள அதேவேளை காங்கிரஸ் கட்சிக்கும் தனது முடிவை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் விஜயகாந்த். தமிழகத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் கூட்டுக்குள் அடைபட்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் வெளியே வந்து விடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு பலம் வாய்ந்த எதிர்க்கட்சி இல்லை. கலைஞர் கருணாநிதியை தேர்தலில் தோல்வியடையச் செய்யும் பலம் வாய்ந்த வேட்பாளரை எதிர்க்கட்சிகள் இதுவரை நிறுத்தவில்லை. அண்ணாதுரை, காமராஜர், ஜெயலலிதா, வைகோ போன்ற தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள். போட்டியிட்ட தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற ஒரே ஒரு கட்சித் தலைவராகத் திகழ்கிறார் கலைஞர் கருணாநிதி. அவரைத் தேர்தலில் தோல்வியடையச் செய்ய களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குனர் சீமான்.
கலைஞரின் பிரசாரம் தமிழகத்துக்கு ஒரு வரப்பிரசாதம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளிப் பிரசாரம் செய்வதில் வல்லவர். தனது தொகுதியைப் பற்றிக் கவலைப்படாது எதிர்க்கட்சிகளின் செல்வாக்குள்ள தொகுதிகளில் கூடுதல் பிரசாரம் செய்வார். அவரை எதிர்ப்பதற்குப் பலம் வாய்ந்த ஒருவரை நிறுத்தினால் அவர் தொகுதியை விட்டு வெளியே செல்லத் தயங்குவார் என்ற எண்ணத்தில் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் இயக்குனர் சீமானைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சீமானும் வைகோவும் கலந்து பேசி முடிவெடுத்து விட்டார்கள் போல் தெரிகிறது. வைகோவுடனான சந்திப்பின் பின்னர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் பொது வேட்பாளராகக் களமிறங்கப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். தனது இயக்கத்தின் சார்பிலேயே போட்டியிடப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். ஜெயலலிதா, வைகோ, இடதுசாரித் தலைவர்கள், இதற்குப் பூரண ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த பாரதீய ஜனதாக் கட்சி இதுபற்றி இன்னமும் வாய் திறக்கவில்லை. சீமானுக்கு ஆதரவாக கூட்டத்துடன் இணைந்து செயற்பட பாரதீய ஜனதாக் கட்சி விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகமா அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா என்ற முடிவு எடுக்காது மறைந்திருக்கும் டாக்டர் ராமதாஸ் இப்போதைக்கு முடிவு எதனையும் கூற மாட்டார். விஜயகாந்துடனான இணைப்பு இல்லையென்றால் போக்கிடம் எதுவும் இல்லாது திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. யாராலும் அசைக்க முடியாத கருணாநிதியை அசைத்துப் பார்க்கப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அரசியல் ஜாம்பவான்கள் எல்லோரையும் வீழ்த்தி வெற்றி வீரனாய் பவனி வரும் வேளையில் அவரை எதிர்த்து களமிறங்குகிறார் சீமான்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 16/01/11

வட்சனின் அதிரடியால்வென்றது அவுஸ்திரேலியா

இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையே மெல்போர்னில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் சகலதுறை வீரர் வட்சனின் அதிரடியினால் அவுஸ்திரேலியா ஆறு விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணித் தலைவர் ஸ்டிராஸ், ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்தினர். 12.1 ஓவர்களில் இவர்கள் இருவரும் இணைந்து 90 ஓட்டங்கள் எடுத்தனர். 42 ஓட்டங்கள் எடுத்த டேவிஸ், ஹஸியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ட்ராட் 6, இயன் பெல் 23, மேர்கன் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஸ்டிராட்ஸ் 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் விக்கட்டுக்கள் வரிசையாக விழுந்து கொண்டிருக்கையில் பீட்டர்ஸன் களத்தில் நின்று நம்பிக்கையளித்தார். 78 ஓட்டங்களில் பீட்டர்ஸன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணியின் வேகம் முடிவுக்கு வந்தது.
பிரட் லீ, டேவிட் ஹஸி, ஜோன்ஸன், ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் பொலிஞ்சர் ஒரு விக்கட்டினையும் வீழ்த்தினர்.
295 என்ற ஓட்ட எண்ணிக்கையுடன களமிறங்கிய அவுஸ்திரேலியா 49.1 ஒவர்களில் நான்கு விக்கட்டுக்களை இழந்து 297 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷேன் வட்சன், பிராட் ஹடின் ஜோடியின் ஆரம்பத் துடுப்பாட்டம் அவுஸ்திரேலிய அணியின் வெற்றியை இலகுவாக்கியது. 19.4 ஓவர்கள் விளையாடிய இவர்கள் 110 ஓட்டங்கள் எடுத்தனர். 39 ஓட்டங்களில் ஹாடின் ஆட்டமிழந்தார். கிளார்க் 39, ஸ்மித் 5, ஹஸி 21 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றினர்.
45 பந்துகளில் 53 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் வட்சனுடன் இணைந்தார் கமரூன் வைட். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அவுஸ்திரேலியாவின் வெற்றியைஉறுதி செய்தனர். கமரூன் வைட் 25 ஒட்டங்கள் எடுத்தார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷோன் வட்சன் ஆட்டமிழக்காது 161 ஓட்டங்கள் எடுத்தார்.
150 பந்துகளுக்கு முகம் கொடுத்து சிறப்பாக நான்கு சிக்ஸர் 12 பௌண்டரிகள் அடங்கலாக 161 ஓட்டங்கள் எடுத்த வொட்சன் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 18/01/11

Monday, January 17, 2011

ஒரு ஓட்டத்தால் வென்றது இந்திய அணி

இந்திய தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையே ஜொஹன்னஸ்÷பர்க்கில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 190 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான விஜயும் சச்சினும் மிக மெதுவாக ஓட்டங்களைச் சேர்த்தனர்.
முரளி 16, டெண்டுல்கர் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கோஹ்லி 22 ஓட்டங்களுடன் வெளியேறினார். யுவராஜ் சிங்கும் டோனியும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை உய ர்த்தினர். ஒருநாள் அரங்கில் 45 ஆவது அரைச்சதம் கடந்த. யுவராஜ் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஐந்தாவது அரைச் சதம் கடந்தார். டோனியும் யுவராஜ் இருவரும் 83 ஓட்டங்கள் அடித்தனர். 53 ஓட்டங்களில் யுவராஜ்சிங் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரெய்னா 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
டோனி 38 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்த வந்த இந்திய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
ஐந்து ஓவர்கள் கொண்ட பவர் பிளேயில் 14 ஓட்டங்கள் மட்டும் எடுத்த இந்தியா நான்கு விக்கட்டுக்களை இழந்தது. டிசோச பேடி 4 விக்கெட்டுக்களை யும் ஸ்டைன், மோர்க்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
191 என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க வீரர் அம்லா ஏமாற்றினார். இவர் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஸ்மித் 77 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்களின் போராட்டம் வீணாகியது. தென் ஆபிரிக்கா 43 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்கள் எடுத்தது.
சஹீர்கான் இரண்டு விக்கட்டுகளையும் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ரோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர். 29 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கட்டுகளை வீழ்த்திய முனாப் பட்டேல் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 16/01/11

Thursday, January 13, 2011

டிவிலியஸ், டுமினி அதிரடியில்வென்றது தென்னாபிரிக்க அணி

தென்னாபிரிக்காவுக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட்போட்டிகளில் விளையாடி 11 என்ற வெற்றி அடிப்படையில் டெஸ்ட் தொடரைச் சமப்படுத்தியது. ரி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.
இந்தியா, தென்னாபிரிக்கா ஆகியவற்றுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை டேர்பனில் நடைபெற்றபோது டிவிலியர்ஸ் அம்லா ஆகியோரின் அதிரடித்துடுப்பாட்டத்தின் மூலம் தென் அபிரிக்க அணி 135 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
நாணயச் சூழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்கள் எடுத்தது.
ஸ்மித்தும், அம்லாவும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். 11 ஓட்டங்கள் எடுத்த ஸ்மித் களத்தைவிட்டு வெளியேறினார். அடுத்து வந்த இக்ராம் ஐந்து ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அம்லாவுடன், டிவிலியர்ஸ் இணைந்தார்.
இந்த ஜோடியும் அதிகநேரம் நீடிக்கவில்லை. 36 பந்துகளில் எட்டு பவுன்டரிகள் அடங்கலாக 50 ஓவர்கள் எடுத்த அம்லா வெளியேறினார்.
மூன்று விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்கள் எடுத்திருந்தவேளை இணை ந்த டிவிலியஸ், டுமினி ஜோடி இந்தியப் பந்து வீச்சாளர்களைச் சோதித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 131 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
டிவிலியஸ் ஒரு நாள் அரங்கில் 25 ஆவது அரைச்சதம் அடித்தார்.அவருடன் இணைந்து அதிரடி காட்டிய டுமினி 10 ஆவது அரைச்சதத்தைக் கடந்தார். 76 ஓட்டங்களில் டிவிலியர்ஸ் ஆட்டமிழந்தார். 69 பந்துகளைச் சந்தித்த இவர் ஏழு பவுண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த மில்லர் ஒன்பது ஓட்டங்களை மட்டும் எடுத்தார். 89 பந்துக்களுக்கு முகம்கொடுத்து ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கலாக 73 ஓட்டங்கள் எடுத்து டுமினி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். போதா 23, ஸ்ரெயின் 7, பனெல் 21 ஓட்டங்கள் எடுத்தனர்.
தென்னாபிரிக்காவின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் ஏழு வீரர்கள் பந்து வீசினர். சஹிர்கான், முனாப்பட்டேல், ரோகித்சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
290 என்ற வெற்றி இலக்குடன் களமிளங்கிய இந்தியா 35.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
விஜய், டெண்டுல்கர் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா சர்ச்சையான தீர்ப்பினால் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த யுவராஜ் இரண்டு ஓட்டங்களை மட்டும் எடுத்தார். கோக்லி, டோனி ஜோடி நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடியது. 25 ஓட்டங்கள் எடுத்த டோனி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தபோது இந்தியாவின் நம்பிக்கை தகர்ந்தது. 54 ஓட்டங்கள் எடுத்த கோக்கிலியும் ஆட்டமிழந்தார். ஹர்பஜன் சிங் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய ரெய்னா 32 ஓட்டங்களுடன் அடங்கினார்.
ஸ்ரெய்ன், மோர்கன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பன்னெல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 31 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டிகோட்சபே ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் தென் ஆபிரிக்கா ஒரு வெற்றியைப் பெற்றது. இரண்டாவது போட்டி நாளை சனிக்கிழமை ஜோஹன்னஸ்பேர்க்கில் நடைபெறும்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 14/01/11

Wednesday, January 12, 2011

ராசாவுக்கு எதிராகஅழகிரி போர்க்கொடி

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. எமது கூட்டணியைப் பிரிக்க பலர் சதி செய்கின்றனர். கூட்டணிக்கு மதிப்புக் கொடுத்து நாம் செயற்படுகிறோம். கூட்டணிக்குள் குழப்பம் இல்லை' என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் கிளிப் பிள்ளைபோல் திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட்டணிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக விஜயம் அம்பலப்படுத்தியுள்ளது.
பிரதமர் மாநிலத்துக்கு விஜயம் செய்யும் போது முதலமைச்சர் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்பது மரபு. அந்த மரபை உடைத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி. அறிவியல் மாநாட்டை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்துக்கு வரப்போகிறார் என்ற செய்தி வெளியானதும் தமிழக அரசியல் பரபரப்பாகி விட்டது. பிரதமரின் தமிழக விஜயம் கூட்டணி பற்றிய பிரச்சினைக்குத் தீர்வைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தமிழகத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக அரசினால் அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றைத் திறந்து வைப்பார் என்று தமிழக செய்திக் குறிப்புத் தெரிவித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வர மாட்டார். அப்படி வந்தாலும் பூங்காவைத் திறந்து வைக்க மாட்டார் என்ற செய்தி பரவியது. அதேபோன்றே பிரதமர் பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
நாட்டின் பிரதமரை வரவேற்பதற்கு விமான நிலையத்துக்குச் செல்லாத முதல்வர் கருணாநிதி, வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்தச் செயல் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தயவில் தமிழக அரசை ஓட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அவமானப்படுத்தியதாகவே காங்கிரஸ் கருதுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி என்று அடித்துக் கூறும் முதல்வரின் இந்தச் செய்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் பிணக்கு இருந்தாலும் பிரதமருக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.
பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்பதற்கு விமான நிலையம் செல்லாத முதல்வர் கருணாநிதி இரவு ராஜ்பவனில் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இரவு பிரதமரைச் சந்திப்பதற்கு முதல்வர் செல்லவில்லை. மறுநாள் காலையில் தான் ராஜ்பவன் சென்று பிரதமரைச் சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரதான கட்சிகள் கூட்டணி சேர்வது பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கும் வேளையில் முதல்வரின் இந்த நடவடிக்கைகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கூட்டணிக்குப் பங்கம் ஏற்பட்டு விடு÷மா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் பாரதீய ஜனதா கட்சியுடன் தான் கூட்டணி சேர வேண்டிய நிலை ஏற்படும். காங்கிரஸ் கட்சியை விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் தமிழகத்தின் சிறிய அரசியல் கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்வதற்கு ஆர்வம் காட்ட மாட்டா. ஜெயலலிதா, விஜயகாந்த், சீமான் போன்றவர்கள் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் மிக மோசமாகத் தாக்கிப் பேசுகிறார்கள். விஜய், அஜித் போன்ற நடிகர்களும் முதல்வர் கருணாநிதிக்கு எதிராகக் களமிறங்கலாம் என்ற நிலைப்பாடு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான உறவை திராவிட முன்னேற்றக் கழகம் முறிப்பதற்குத் தயõராகி விட்டது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சம்பவங்களை அரங்கேறிய அதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய தலைவர்களுள் ஒருவரான டி. ஆர். பாலு, டில்லியில் சோனியா காந்தியைச் சந்தித்தார். அரசியல் அரங்கில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்த சம்பவங்களை ஊடகங்கள் அளவுக்கு மீறிப் பெரிதுபடுத்தியதால் தம் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுவதற்காகவே டி. ஆர். பாலு, சோனியா காந்தியைச் சந்தித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் பகிரங்கமான இவ்வேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒரு சிலருக்கு எதிராக அழகிரி போர்க் கொடி தூக்கியுள்ளார். கட்சிக்குள் பெரிய பதவி ஒன்றை எதிர்பார்த்திருக்க அழகிரிக்கு தென்மண்டலப் பொறுப்பாளர் பதவி வழங்கி திருப்திப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம். கட்சிக்குள் இருந்து அடிக்கடி போர்க் கொடி தூக்கும் அழகிரியை நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் அடங்கி விடுவார் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்தது. நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சரான பின்னர் அமைச்சுப் பொறுப்புக்களில் அதிக கவனம் செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அமைச்சரõன பின்னரும் தமிழகத்தை விட மனமில்லாத அழகிரி அடிக்கடி போர்க் கொடி தூக்கி வந்தார். இந்த நிலையில் தென் மண்டல பொறுப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெக்ரம் ஊழலில் சிக்கியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராசாவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும். தன்னைப் பற்றி அவதூறாக தொலைபேசியில் உரையாடிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமொழி ஏற்பாடு செய்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ரத்துச் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தென் மண்டலப் பொறுப்பாளர் பதவியை அழகிரி இராஜினாமாச் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என்று அடித்துக் கூறும் முதல்வர் கருணாநிதியால் அழகிரியின் முதலாவது கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. சென்னை சங்கமம் நிகழ்ச்சி நாட்டுப் புறக் கலைஞர்களை ஊக்குவிப்பதால் அவர்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதற்கு கலைஞர் கருணாநிதி விரும்ப மாட்டார். அழகிரியின் இரண்டு கோரிக்கைகளை முதல்வர் இப்போதைக்கு நிறைவேற்ற மாட்டார். இதேவேளை அழகிரி தனது அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்து விட்டதாகத் தகவல் பரவியது. திராவிட முன்னேற்றக் கழகமும், அழகிரியும் இவற்றை மறுக்கவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சிலர் ராசாவை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கருதுகிறார்கள். அழகிரியின் இந்தக் கோரிக்கைக்கு அவர்கள் பூரண ஆதரவு வழங்குவார்கள். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ராசாவைக் கைவிட்டால் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு ஸ்பெக்ரம் விவகாரம் வலுச்சேர்க்கும் என்றுதான் ராசாவை கட்சியில் வைத்திருப்பதா கைவிடுவதா எனத் தெரியாது தடுமாறுகிறார் முதல்வர் கருணாநிதி.
தமிழக எதிர்க்கட்சிகளுக்கு பதில் கூற வேண்டிய சந்தர்ப்பத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்பதற்கு தமிழக முதல்வர் விமான நிலையத்துக்குச் செல்லாத சம்பவமும் அழகிரியின் கோரிக்கைகளும் முதல்வர் கருணாநிதிக்குப் பெரும் தலையிடியாக உள்ளன.வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 09/01/11

Wednesday, January 5, 2011

கூட்டணிக் கனவில்அரசியல் கட்சிகள்

தமிழக அரசின் சாதனைகள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் எனும் அஸ்திரத்தினால் மறைக்கப்பட்டதால் கலங்கிப் போயுள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
விஜயகாந்தின் கூட்டணி சேர காங்கிரஸாரும் ஜெயலலிதாவும் விரும்புகின்றனர். கூட்டணி பற்றி விஜயகாந் அறிவித்ததும் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.
தமிழக எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை ஸ்பெக்ட்ரம் என்ற மந்திரச் சொல் செய்து முடித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் எனலாம். தமிழக மக்களின் மனதை மாற்றவில்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் என்ற சொல் தமிழக அரசியலை மட்டுமல்லாது இந்திய அரசியலையே அதிரச் செய்துள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியதை இந்திய தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் கன கச்சிதமாகச் செய்து முடித்துள்ளன.
தமிழக அரசின் சாதனைகள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் என்ற ஒரே ஒரு அஸ்திரத்தின் மூலம் மறைக்கப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு இந்திய மத்திய அரசுதான் பொறுப்புக் கூற வேண்டும். இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசைத் தவிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டும் குற்றவாளியாக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி நிற்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளன தமிழக எதிர்க்கட்சிகள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு காங்கிரஸ் கட்சி வெளியேறினால் இதனுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்தும் ஜெயலலிதாவும் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழுப் பொறுப்பையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலையில் சுமத்தியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் விநியோகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இந்தியாவில் இதுவரை நடைபெற்ற ஊழல்களில் மிகப் பிரமாண்டமான ஊழல் இதுதான் என்று ஊடகங்கள் வர்ணிக்கின்ற ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான கூட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் விவகாரம் தான் விசாரணை நடைபெறுகிறது என்று மக்களுக்கு விளக்கும் கூட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் ஆங்காங்கே நடத்தி வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த விளக்கத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்பதை தமிழக சட்டமன்றத் தேர்தலின்போதுதான் அறிய முடியும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி ஒதுங்கியே நிற்கிறது. இந்திய மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அதற்கு ராசாதான் முழுப் பொறுப்பு என்பதுபோல் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்பாடு உள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்
தவறு எதுவும் நடைபெறவில்லை என்று அடித்துக் கூறினால் ராசா குற்றமற்றவர் என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்று தமிழக காங்கிரஸ் சிந்திக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒற்றுமையாக்குவதற்கு ராகுல் காந்தி மிகுந்த பிரயாசைப்படுகிறார். இவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்குரிய சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. வாசன், இளங்கோவன், சிதம்பரன், தங்கபாலு போன்ற மூத்த தலைவர்கள் தமக்கென்று ஒரு கூட்டத்துடன் செயற்படுகின்றனர். இவர்களுடைய செயற்பாடுகள் இளைஞர் காங்கிரஸையும் பற்றிக் கொண்டுள்ளது. ராகுல் காந்தி அண்மையில் தமிழகத்துக்கு விஜயம் செய்த போது அவரைச் சந்திப்பதற்கு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதேவேளை தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் இளைஞர் காங்கிரஸுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துச் செல்கிறது. காங்கிரஸின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்று
ராகுல் காந்தி கூறியதனால் தமக்குரிய இடத் தைப் பெறுவதற்கு இளைஞர் காங்கிரஸ் முயற்சி செய்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி
சேரக் கூடாது என்று இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டால் தமக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற பயம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்களின் கோஷ்டிப் பூசல் வெளிவரும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது புதிய கூட்டணிகள் உருவாகுவது தவிர்க்க முடியாது. விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸாரும், ஜெயலலிதாவும் விரும்புகின்றனர். கூட்டணி அமைத்துக் கொடுக்காது அரசியலில் வலம் வந்த விஜயகாந்த் கூட்டணி சேரும் விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி கூட்டணி பற்றி விஜயகாந் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன் பின்னர் தமிழக அரசியல் சூடுபிடிக்கத்
தொடங்கிவிடும்.
கருணாநிதியுடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந் விரும்ப மாட்டார். கருணாநிதியின் குடும்பத்தின் மீதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தனது மதிப்பைக் குறைப்பதற்கு விஜயகாந்த் விரும்பமாட்டார்.
விஜயகாந் கூட்டணி சேரும் கட்சியில் இணைவதற்கு ஏனைய அரசியற் கட்சிகள் முண்டியடிக்கும் சூழ்நிலை உருவாகும். கருணாநிதியுடன் அல்லது ஜெயலலிதாவுடன் இணைவதனால் விஜயகாந்துக்கு பிரயோசனம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் நேரடியாக தான் இணைவதையே விஜயகாந் விரும்புகிறார். தமிழக சட்டசபைக்கான தேர்தலுக்கான தற்காலிக இணைப்பாக இல்லாமல் மத்திய அரசை அமைக்கும் நிரந்தர இணைப்பையே விஜயகாந் எதிர்பார்க்கிறார்.
தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் கோலோச்சிய வைகோவும் டாக்டர் ராமதாஸும் நொந்து நொடிந்து போயுள்ளனர். வைகோவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் பலர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க தயாராகிறார் வைகோ. வைகோவின் பின்னால் பிரமாண்டமான கூட்டம் கூடிய
காலம் போய் ஜெயலலிதா செல்லும் இடம் எல்லாம் வைகோ செல்லும் காலம் உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் அரங்கில் காய்களை நகர்த்தி வெற்றிக் கனி பறித்த டாக்டர் ராமதாஸைத் தேடுவோர் யாருமில்லை. தனது சட்சிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்துள்ள டாக்டர் ராமதாஸ் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்துவதற்குரிய வியூகங்களை எதிர்க்கட்சி வகுக்கத் தொடங்கி உள்ளன. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக விஜய் அரசியலில் இறங்கப் போவதாக பூச்சாண்டி காட்டப்படுகிறது. விஜய் வழமை போல் மௌனமாக இருக்கிறார். அரசியலுக்கு வருகிறார் அஜித் என்ற செய்தி பரபரப்பாக பரவுகிறது.
விஜயும், அஜித்தும் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. எம்மைப் புறக்கணித்த தமிழக அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு விஜயும் அஜித்தும் ஜெயலலிதாவுடன் கைகோர்க்கப் போவதாக செய்தி கசிந்துள்ளது.
வீழ்ந்து விட்ட தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. பொங்கல் திருநாளுக்காகப் புதிய இலவசத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இலவசமாக ஸ்பெக்ட்ரமா வெற்றி பெறும் என்பது தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது தெரிந்துவிடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 02/01/11