Showing posts with label வில்லியம். Show all posts
Showing posts with label வில்லியம். Show all posts

Thursday, April 21, 2011

அரச திருமணத்தின் எதிர்பார்ப்புகள்


உலகமே எதிர்பார்க்கும் பிரிட்டிஷ் அரச திருமண விழா 29ஆம் திகதி நடைபெறுகிறது. வில்லியம்கதே ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் உலகெங்கும் அதிகளவில் விற்பனையாகின்றன.
சார்ள்ஸ் டயானா திருமணத்தின் பின்னர் மீண்டும் பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் நடைபெறும் இத்திருமணத்துக்காக இங்கிலாந்து களை கட்டியுள்ளது.
வில்லியம் கதே திருமண ஏற்பாடுகள் கனகச்சிதமாக செய்யப்பட்டுள்ள அதேவேளை, அத்திருமணம் பற்றிய மக்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. கதேயின் திருமண ஆடையை யார் வடிவமைப்பார், என்பதில் ஆரம்பித்து கதே எப்போது குழந்தையைப் பெறுவார் என்பது வரை பலர் பந்தயம் கட்டியுள்ளனர்.
கதேயின் திருமண உடை ஐவொரி கலரில் இருக்கும் என்று அதிகமானோர் தெரிவித்துள்ளனர். கதேயின் உடை வெள்ளை நிறம் என்று கூறு பவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். வனிலா, லெமன், கோல்ட், சில்வர், கறுப்பு, மஞ்சள், பச்சை உட்பட 22 நிறங்களைப் பட்டியலிட்டுள்ளனர். இதில் 22ஆவது இடத்தில் சிவப்பு உள்ளது.
கதேயின் உடையை சாரா போட்டன் வடிவமைப்பார் என்று அதிகமானோர் கூறியுள்ளனர். இங்கிலாந்தின் பிரபலமான ஆறு வடிவமைப்பாளர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். கதேயின் திருமண ஆடைவேல் எட்டு அடியிலிருந்து 199 அடி நீளம் இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். எட்டு அடிக்கு குறைவாக இருக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். 32 அடிக்கு அதிகமானதாக இருக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
36 மில்லியனுக்கும் அதிகமானோர் பி.பி.சி. மூலம் திருமணச் செய்தியை அறிவார்கள் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கதே எத்தனை மணிக்கு வருவார் என்ற கேள்விக்கு 11 மணியிலிருந்து 11 மணி 3 நிமிடங்களுக்குள் வருவார் என்று பலர் கூறியுள்ளனர். ஒருசிலர் 11 மணிக்கு முன்னர் வருவதாகக் கூறியுள்ளனர். 11 மணி 8 நிமிடத்துக்கும் 11 மணி 11 நிமிடத்துக்கும் இடையில் வருவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.
திருமணத்தின் பின் ""யூ ஆர் பியூட்டிபுல்'' என்ற பாடலுக்கு நடனமாடுவார்கள் எனப் பலர் கூறியுள்ளனர். ""ஐடோன்ற்''வோன்''ரு மிஸ் ஏ திங் என்ற பாடல் உட்பட 19 பாடல்களைப் பட்டியலிட்டுள்ளனர். திருமணத்தின் பின் நடைபெறும் இரவு விருந்தில் மாட்டிறைச்சியே பிரதான உணவாக இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். கோழியையும் மீனையும் ஒரு சிலர் கூறியுள்ளனர். மிகக் குறைந்தளவானோர் பீஸா என்றனர்.
வில்லியம்கதே ஜோடி தேனிலவுக்கு எங்கே போவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது. 21 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தேனிலவுக்காக கென்யாவுக்குச் செல்வார்கள் என்று அதிகமானோர் தெரிவித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கதேக்கு முதலாவது குழந்தை பிறக்கும் என்று பலர் கூறியுள்ளனர். 2012ஆம் ஆண்டு டிசம்பரில் குழந்தை பிறக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கதே தாயாவார் என்றும் சிலர் கூறியுள்ளனர். முதற் குழந்தை ஆண் என்று 10/11 பேரும் பெண் என்று 10/11 பேரும் கூறியுள்ளனர்.
திருமண நாளில் மகாராணி மஞ்சள் நிறத் தொப்பி அணிவார் என்று பலர் கூறியுள்ளனர். மெல்லிய நீலம், பிங்க், ஒரேஞ், பச்சை, கறுப்பு என 10 நிறத் தொப்பி அணிவார் என்று கருத்துக் கூறியுள்ளனர். இவற்றில் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறிவிட்டன. அதிகமானோர் கூறியது போன்றே ஐவெரி கலரையே கதே அணிவார். யாருமே எதிர்வு கூறாத ஜோர்தானுக்கு தேன்நிலவு கொண்டாட வில்லியமும், கதேயும் செல்ல உள்ளனர்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 22/04/11

Sunday, November 28, 2010

வில்லியமின் நிச்சயதார்த்தத்தில் நினைவு கூரப்பட்ட டயனா

பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் டயானாவின் மகன் வில்லியத்தின் திருமண நிச்சயதார்த்தத்தின் மூலம் டயானா மீண்டும் நினைவு கூரப்பட்டுள்ளார். சார்ள்ஸ்டயானா திருமணம் கடந்த நூற்றாண்டில் மிகப் பிரமாண்டமான திருமணமாக அமைந்தது. பிரிட்டிஷ் மக்களின் மனதில் மட்டுமல்லாது உலகின் பல கோடி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் டயானா. உலகின் எண்ணற்ற படப்பிடிப்பாளர்களுக்குத் தீனி போட்டவர் டயானா. பப்பராசிகளினால் துரத்தப்பட்டு கொடூரமாக உயிரை இழந்தார்.
சார்ள்ஸ் டயானா திருமணம் முறிந்த போது டயானாவின் பக்கமே அதிகமானோர் இருந்தனர். இளவரசர் சார்ள்ஸுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட டயானாடொடி என்ற கோடீஸ்வரரைக் காதலித்த போது அதிகமானோர் அக் காதலை விரும்பவில்லை. டயானாவைக் கைவிட்ட இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமிலாவைக் கரம் பிடித்தார். டயானாவின் இடத்தில் கமீலாவை இருத்திப் பார்க்க அதிகமானோர் விரும்பவில்லை. டயானாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கமீலாவுக்குக் கொடுக்கப்படவில்லை.
கென்யாவில் தனது திருமணம் பற்றி வில்லியம் அறிவித்த போது எவரும் ஆச்சரியப்படவில்லை. கதே மிடில்ரொன் என்னும் யுவதியை வில்லியம் காதலிப்பது உலகறிந்த விடயம். திருமண நிச்சயதார்த்தத்தின் போது தனது தாய் டயானா அணிந்த மோதிரத்தை மிடில்ரொன் கையில் வில்லியம் அணிந்தபோது உலகமே அதிசயமாகப் பார்த்தது.
டயானா அணிந்த மோதிரத்தை தனது எதிர்கால மனைவியின் விரலில் அணிவித்து தாய் டயானாவுக்குரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார் வில்லியம். நீள் வட்டமான நீல நிறமுடைய அந்த மோதிரத்தில் 14 வைரங்கள் உள்ளன.
இங்கிலாந்தின் அடுத்த இளவரசி தனது மனைவி கதே என்பதை வில்லியம் பூடகமாக அறிவித்துள்ளார். டயானாவை நேசிப்பவர்களின் பார்வை கதேயின் பக்கம் திரும்பியுள்ளது. கமீலாவை இளவரசியாக ஏற்றுக் கொள்ளத் தயங்குபவர் கதேயை இளவரசியாக ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டனர் என்பது இங்கிலாந்துப் பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
தனது மனைவி கமீலா ராணியாவதை தான் விரும்புவதாக இளவரசர் சார்ள்ஸ் கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள அதிகளவான மக்கள் இதனை விரும்பவில்லை என்பது பத்திரிகைகளின் கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. இளவரசர் சார்ள்ஸ், டயானாவைக் கைவிட்டதை விரும்பாத இங்கிலாந்து மக்களில் அதிகமானோர் அவர் கமீலாவைக் கரம் பிடித்ததையும் விரும்பவில்லை.
தனது தாய் டயானாவின் மோதிரத்தை கதேக்கு வழங்கியதை இங்கிலாந்து மக்கள் வரவேற்றுள்ளனர். அதேவேளை முறிந்து போன திருமண ஞாபகார்த்த மோதிரத்தை வில்லியம் கதேக்கு வழங்கியதை சிலர் விரும்பவில்லை. ஆனால் டயானாவுக்கு கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம் கதேக்கும் கொடுக்கப்படும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
வில்லியம், கதே திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் டயானா சார்ள்ஸ் திருமணத்தைப் போன்று மிகவும் சிறப்பாக அத் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வில்லியம் கதே திருமணத்தைக் குறி வைத்து இப்பொழுதே வியாபாரம் களை கட்ட ஆரம்பித்து விட்டது. வில்லியம் கதே ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. திருமண நிச்சயதார்த்தத்திலன்று விற்பனைக்கு வந்த இப் பொருட்களை பிரிட்டிஷ் மக்கள் ஆர்வத்துடன் வாங்கினார்கள்.
இங்கிலாந்தில் வெளிவரும் சகல பத்திரிகைகளும் வில்லியம் கதே திருமண நிச்சயதார்த்தம் பற்றிய செய்தியை முன்பக்கத்தில் படங்களுடன் பிரசுரித்தன. திருமணம் நடைபெறும் வரை ஊடகங்களின் பார்வை அரச குடும்பத்தின் மீதுதான் இருக்கும்.
1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி சார்ள்ஸைத் திருமணம் முடிப்பதற்காக தகப்பன் ஏர்ள்ஸ் பென்சரின் கரத்தைப் பிடித்தபடி டயானா நடந்து வந்தபோது அந்தத் திருமண வைபவத்தில் ஆறாவது வரிசையில் தனது சிறிய மகனுடன் அமர்ந்திருந்தார் திருமதி கமீலா பாக்கர். டயானாவின் மகன் வில்லியத்தின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது சார்ள்ஸின் மனைவியாக இருந்தார் கமீலா.
முதலில் யாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறதோ அவருக்குத்தான் தாய் டயானாவின் மோதிரத்தை கொடுக்க வேண்டும் என்று வில்லியமும் ஹரியும் முடிவு செய்திருந்தார்கள். சார்ள்ஸும் கமீலாவும் மறக்க நினைத்த டயானாவை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளார் வில்லியம்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 26/12/10