Showing posts with label ராசா. Show all posts
Showing posts with label ராசா. Show all posts

Wednesday, January 12, 2011

ராசாவுக்கு எதிராகஅழகிரி போர்க்கொடி

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. எமது கூட்டணியைப் பிரிக்க பலர் சதி செய்கின்றனர். கூட்டணிக்கு மதிப்புக் கொடுத்து நாம் செயற்படுகிறோம். கூட்டணிக்குள் குழப்பம் இல்லை' என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் கிளிப் பிள்ளைபோல் திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட்டணிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக விஜயம் அம்பலப்படுத்தியுள்ளது.
பிரதமர் மாநிலத்துக்கு விஜயம் செய்யும் போது முதலமைச்சர் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்பது மரபு. அந்த மரபை உடைத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி. அறிவியல் மாநாட்டை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்துக்கு வரப்போகிறார் என்ற செய்தி வெளியானதும் தமிழக அரசியல் பரபரப்பாகி விட்டது. பிரதமரின் தமிழக விஜயம் கூட்டணி பற்றிய பிரச்சினைக்குத் தீர்வைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தமிழகத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக அரசினால் அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றைத் திறந்து வைப்பார் என்று தமிழக செய்திக் குறிப்புத் தெரிவித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வர மாட்டார். அப்படி வந்தாலும் பூங்காவைத் திறந்து வைக்க மாட்டார் என்ற செய்தி பரவியது. அதேபோன்றே பிரதமர் பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
நாட்டின் பிரதமரை வரவேற்பதற்கு விமான நிலையத்துக்குச் செல்லாத முதல்வர் கருணாநிதி, வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்தச் செயல் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தயவில் தமிழக அரசை ஓட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அவமானப்படுத்தியதாகவே காங்கிரஸ் கருதுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி என்று அடித்துக் கூறும் முதல்வரின் இந்தச் செய்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் பிணக்கு இருந்தாலும் பிரதமருக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.
பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்பதற்கு விமான நிலையம் செல்லாத முதல்வர் கருணாநிதி இரவு ராஜ்பவனில் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இரவு பிரதமரைச் சந்திப்பதற்கு முதல்வர் செல்லவில்லை. மறுநாள் காலையில் தான் ராஜ்பவன் சென்று பிரதமரைச் சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரதான கட்சிகள் கூட்டணி சேர்வது பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கும் வேளையில் முதல்வரின் இந்த நடவடிக்கைகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கூட்டணிக்குப் பங்கம் ஏற்பட்டு விடு÷மா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் பாரதீய ஜனதா கட்சியுடன் தான் கூட்டணி சேர வேண்டிய நிலை ஏற்படும். காங்கிரஸ் கட்சியை விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் தமிழகத்தின் சிறிய அரசியல் கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்வதற்கு ஆர்வம் காட்ட மாட்டா. ஜெயலலிதா, விஜயகாந்த், சீமான் போன்றவர்கள் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் மிக மோசமாகத் தாக்கிப் பேசுகிறார்கள். விஜய், அஜித் போன்ற நடிகர்களும் முதல்வர் கருணாநிதிக்கு எதிராகக் களமிறங்கலாம் என்ற நிலைப்பாடு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான உறவை திராவிட முன்னேற்றக் கழகம் முறிப்பதற்குத் தயõராகி விட்டது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சம்பவங்களை அரங்கேறிய அதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய தலைவர்களுள் ஒருவரான டி. ஆர். பாலு, டில்லியில் சோனியா காந்தியைச் சந்தித்தார். அரசியல் அரங்கில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்த சம்பவங்களை ஊடகங்கள் அளவுக்கு மீறிப் பெரிதுபடுத்தியதால் தம் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுவதற்காகவே டி. ஆர். பாலு, சோனியா காந்தியைச் சந்தித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் பகிரங்கமான இவ்வேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒரு சிலருக்கு எதிராக அழகிரி போர்க் கொடி தூக்கியுள்ளார். கட்சிக்குள் பெரிய பதவி ஒன்றை எதிர்பார்த்திருக்க அழகிரிக்கு தென்மண்டலப் பொறுப்பாளர் பதவி வழங்கி திருப்திப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம். கட்சிக்குள் இருந்து அடிக்கடி போர்க் கொடி தூக்கும் அழகிரியை நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் அடங்கி விடுவார் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்தது. நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சரான பின்னர் அமைச்சுப் பொறுப்புக்களில் அதிக கவனம் செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அமைச்சரõன பின்னரும் தமிழகத்தை விட மனமில்லாத அழகிரி அடிக்கடி போர்க் கொடி தூக்கி வந்தார். இந்த நிலையில் தென் மண்டல பொறுப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெக்ரம் ஊழலில் சிக்கியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராசாவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும். தன்னைப் பற்றி அவதூறாக தொலைபேசியில் உரையாடிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமொழி ஏற்பாடு செய்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ரத்துச் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தென் மண்டலப் பொறுப்பாளர் பதவியை அழகிரி இராஜினாமாச் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என்று அடித்துக் கூறும் முதல்வர் கருணாநிதியால் அழகிரியின் முதலாவது கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. சென்னை சங்கமம் நிகழ்ச்சி நாட்டுப் புறக் கலைஞர்களை ஊக்குவிப்பதால் அவர்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதற்கு கலைஞர் கருணாநிதி விரும்ப மாட்டார். அழகிரியின் இரண்டு கோரிக்கைகளை முதல்வர் இப்போதைக்கு நிறைவேற்ற மாட்டார். இதேவேளை அழகிரி தனது அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்து விட்டதாகத் தகவல் பரவியது. திராவிட முன்னேற்றக் கழகமும், அழகிரியும் இவற்றை மறுக்கவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சிலர் ராசாவை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கருதுகிறார்கள். அழகிரியின் இந்தக் கோரிக்கைக்கு அவர்கள் பூரண ஆதரவு வழங்குவார்கள். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ராசாவைக் கைவிட்டால் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு ஸ்பெக்ரம் விவகாரம் வலுச்சேர்க்கும் என்றுதான் ராசாவை கட்சியில் வைத்திருப்பதா கைவிடுவதா எனத் தெரியாது தடுமாறுகிறார் முதல்வர் கருணாநிதி.
தமிழக எதிர்க்கட்சிகளுக்கு பதில் கூற வேண்டிய சந்தர்ப்பத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்பதற்கு தமிழக முதல்வர் விமான நிலையத்துக்குச் செல்லாத சம்பவமும் அழகிரியின் கோரிக்கைகளும் முதல்வர் கருணாநிதிக்குப் பெரும் தலையிடியாக உள்ளன.வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 09/01/11

Wednesday, January 5, 2011

கூட்டணிக் கனவில்அரசியல் கட்சிகள்

தமிழக அரசின் சாதனைகள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் எனும் அஸ்திரத்தினால் மறைக்கப்பட்டதால் கலங்கிப் போயுள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
விஜயகாந்தின் கூட்டணி சேர காங்கிரஸாரும் ஜெயலலிதாவும் விரும்புகின்றனர். கூட்டணி பற்றி விஜயகாந் அறிவித்ததும் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.
தமிழக எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை ஸ்பெக்ட்ரம் என்ற மந்திரச் சொல் செய்து முடித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் எனலாம். தமிழக மக்களின் மனதை மாற்றவில்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் என்ற சொல் தமிழக அரசியலை மட்டுமல்லாது இந்திய அரசியலையே அதிரச் செய்துள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியதை இந்திய தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் கன கச்சிதமாகச் செய்து முடித்துள்ளன.
தமிழக அரசின் சாதனைகள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் என்ற ஒரே ஒரு அஸ்திரத்தின் மூலம் மறைக்கப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு இந்திய மத்திய அரசுதான் பொறுப்புக் கூற வேண்டும். இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசைத் தவிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டும் குற்றவாளியாக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி நிற்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளன தமிழக எதிர்க்கட்சிகள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு காங்கிரஸ் கட்சி வெளியேறினால் இதனுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்தும் ஜெயலலிதாவும் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழுப் பொறுப்பையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலையில் சுமத்தியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் விநியோகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இந்தியாவில் இதுவரை நடைபெற்ற ஊழல்களில் மிகப் பிரமாண்டமான ஊழல் இதுதான் என்று ஊடகங்கள் வர்ணிக்கின்ற ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான கூட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் விவகாரம் தான் விசாரணை நடைபெறுகிறது என்று மக்களுக்கு விளக்கும் கூட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் ஆங்காங்கே நடத்தி வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த விளக்கத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்பதை தமிழக சட்டமன்றத் தேர்தலின்போதுதான் அறிய முடியும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி ஒதுங்கியே நிற்கிறது. இந்திய மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அதற்கு ராசாதான் முழுப் பொறுப்பு என்பதுபோல் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்பாடு உள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்
தவறு எதுவும் நடைபெறவில்லை என்று அடித்துக் கூறினால் ராசா குற்றமற்றவர் என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்று தமிழக காங்கிரஸ் சிந்திக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒற்றுமையாக்குவதற்கு ராகுல் காந்தி மிகுந்த பிரயாசைப்படுகிறார். இவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்குரிய சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. வாசன், இளங்கோவன், சிதம்பரன், தங்கபாலு போன்ற மூத்த தலைவர்கள் தமக்கென்று ஒரு கூட்டத்துடன் செயற்படுகின்றனர். இவர்களுடைய செயற்பாடுகள் இளைஞர் காங்கிரஸையும் பற்றிக் கொண்டுள்ளது. ராகுல் காந்தி அண்மையில் தமிழகத்துக்கு விஜயம் செய்த போது அவரைச் சந்திப்பதற்கு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதேவேளை தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் இளைஞர் காங்கிரஸுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துச் செல்கிறது. காங்கிரஸின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்று
ராகுல் காந்தி கூறியதனால் தமக்குரிய இடத் தைப் பெறுவதற்கு இளைஞர் காங்கிரஸ் முயற்சி செய்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி
சேரக் கூடாது என்று இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டால் தமக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற பயம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்களின் கோஷ்டிப் பூசல் வெளிவரும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது புதிய கூட்டணிகள் உருவாகுவது தவிர்க்க முடியாது. விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸாரும், ஜெயலலிதாவும் விரும்புகின்றனர். கூட்டணி அமைத்துக் கொடுக்காது அரசியலில் வலம் வந்த விஜயகாந்த் கூட்டணி சேரும் விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி கூட்டணி பற்றி விஜயகாந் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன் பின்னர் தமிழக அரசியல் சூடுபிடிக்கத்
தொடங்கிவிடும்.
கருணாநிதியுடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந் விரும்ப மாட்டார். கருணாநிதியின் குடும்பத்தின் மீதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தனது மதிப்பைக் குறைப்பதற்கு விஜயகாந்த் விரும்பமாட்டார்.
விஜயகாந் கூட்டணி சேரும் கட்சியில் இணைவதற்கு ஏனைய அரசியற் கட்சிகள் முண்டியடிக்கும் சூழ்நிலை உருவாகும். கருணாநிதியுடன் அல்லது ஜெயலலிதாவுடன் இணைவதனால் விஜயகாந்துக்கு பிரயோசனம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் நேரடியாக தான் இணைவதையே விஜயகாந் விரும்புகிறார். தமிழக சட்டசபைக்கான தேர்தலுக்கான தற்காலிக இணைப்பாக இல்லாமல் மத்திய அரசை அமைக்கும் நிரந்தர இணைப்பையே விஜயகாந் எதிர்பார்க்கிறார்.
தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் கோலோச்சிய வைகோவும் டாக்டர் ராமதாஸும் நொந்து நொடிந்து போயுள்ளனர். வைகோவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் பலர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க தயாராகிறார் வைகோ. வைகோவின் பின்னால் பிரமாண்டமான கூட்டம் கூடிய
காலம் போய் ஜெயலலிதா செல்லும் இடம் எல்லாம் வைகோ செல்லும் காலம் உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் அரங்கில் காய்களை நகர்த்தி வெற்றிக் கனி பறித்த டாக்டர் ராமதாஸைத் தேடுவோர் யாருமில்லை. தனது சட்சிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்துள்ள டாக்டர் ராமதாஸ் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்துவதற்குரிய வியூகங்களை எதிர்க்கட்சி வகுக்கத் தொடங்கி உள்ளன. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக விஜய் அரசியலில் இறங்கப் போவதாக பூச்சாண்டி காட்டப்படுகிறது. விஜய் வழமை போல் மௌனமாக இருக்கிறார். அரசியலுக்கு வருகிறார் அஜித் என்ற செய்தி பரபரப்பாக பரவுகிறது.
விஜயும், அஜித்தும் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. எம்மைப் புறக்கணித்த தமிழக அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு விஜயும் அஜித்தும் ஜெயலலிதாவுடன் கைகோர்க்கப் போவதாக செய்தி கசிந்துள்ளது.
வீழ்ந்து விட்ட தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. பொங்கல் திருநாளுக்காகப் புதிய இலவசத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இலவசமாக ஸ்பெக்ட்ரமா வெற்றி பெறும் என்பது தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது தெரிந்துவிடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 02/01/11

Tuesday, December 28, 2010

தி.மு.க.வைக் கைவிடதயாராகிறது காங்கிரஸ்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறார் ராகுல் காந்தி. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. தமிழக அரசின் இலவசத் திட்டங்கள், சலுகைகள் என்பன மக்களின் மனதில் நன்கு ஊன்றிப் போயுள்ளது. ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெளியேறினால் பாதிப்பு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்தன என்ற முதல்வர் கருணாநிதியின் புள்ளி விபரம் அவர்களை சிந்திக்கத் தூண்டியது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்பெக்ரம் விவகாரம் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் என்ற பெருமை ஸ்பெக்ரம் விவகாரத்துக்குக் கிடைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ராசா தப்புச் செய்யவில்லை என்று முதல்வர் கருணாநிதி அடித்துக் கூறுகிறார். ஸ்பெக்ரம் விவகாரத்தினால் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவான தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறுகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பனிப்போர் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படாமையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது காங்கிரஸ் தலைவர்கள் பலர் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர். அவர்கள் சீறும் போது காங்கிரஸ் தலைமை அவர்களை அடக்கி வைத்திருந்தது காங்கிரஸ் தலைமை. இன்று தலைமையைத் தட்டிக் கேட்கும் துணிவு தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு பிறந்துள்ளது.
காங்கிரஸ் தலைமைப் பீடத்திலும் தமிழகக் காங்கிரஸிலும் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களும் உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் தமது கருத்துக்களை பகிரங்கமாக வெளிவிடுவதில்லை. இளங்கோவன் போன்ற ஒரு சிலர் மட்டும் அவ்வப் போது துணிவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்தனர். ஸ்பெக்ரம் விவகாரத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுத் தலைவர்கள் வெளிப்படையாகத் தமது கருத்துக்களைக் கூறத் தொடங்கி விட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் வாரி வழங்கிய இலவசங்களும், சலுகைகளும் ஸ்பெக்ரம் என்ற மிகப் பிரமாண்டமான ஊழலின் முன்னால் அடிபட்டுப் போகும் நிலை உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து விடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு எதிரான கருத்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் பகிரங்கமாகக் கூறவில்லை. ராசாவைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. ராசாவைக் காப்பாற்றுவதற்காக தலித் என்ற ஆயுதத்தை முதல்வர் கருணாநிதி கையில் எடுத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமிழந்து விடும். காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு ஜெயலலிதா மிகவும் ஆர்வமாக உள்ளார். ஜெயலலிதாவின் மீது மதிப்பு வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்களும் அதற்கு முழு முயற்சி செய்து வருகின்றனர்.
ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் போன்றவர்கள் பகிரங்கமாக இதனைத் தெரிவித்துவருகின்றனர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறும் கட்சிகள் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறும் கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதும் வாடிக்கையான சம்பவம். இந்த வழமையை மாற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி விரும்புகிறார். காங்கிரஸின் முதுகில் ஏனைய கட்சிகள் தொடர்ந்தும் சவாரி செய்ய இடமளிக்கக் கூடாது. காங்கிரஸுடன் மற்றக் கட்சிகள் சேர வேண்டும் என்பதே ராகுலின் குறிக்கோள்.
ராகுல்காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஸ்பெக்ரம் விவகாரம் ஒரு காரணியாக அமைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் இணைந்தால் காங்கிரஸ் கட்சியின் தனித்துவம் இல்லாமல் போய் விடும். காங்கிரஸ் கட்சி மதிப்புடனும் மரியாதையுடனும் இருக்க வேண்டுமானால் காங்கிரஸின் தலைமையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளில் உள்ள பலர்மீது. ஊழல் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு சிலர் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்றுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊழல் கட்சி தான் என்பதை நிரூபிக்கும். ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் பதவி வகிக்க முடியாது. ஊழலை ஊக்குவிப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இடமளிக்காது என்று காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி கூறியுள்ளார். சோனியாவின் இந்தக் கூற்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எச்சரிக்கை மணியாக அடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகக், கூட்டணியில் இருந்து வெளியேறினால் விஜயகாந்துடன் கூட்டணி சேரும் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் செல்வாக்கு மிக்க ஊழல் இல்லாத கட்சி தலைவராக விஜயகாந்த் உள்ளார் என்ற கருத்து உள்ளது.
இளைஞர் காங்கிரஸில் உள்ளவர்கள் அடுத்த தமிழக முதல்வர் என்று இளைஞர்களை உசுப்பி விட்டுள்ளார் ராகுல் காந்தி. தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பல பிரிவுகள் உள்ளன. வாசன், இளங்கோவன், சிதம்பரம் போன்ற தலைவர்களின் பின்னால் பலர் அணி வகுத்து உள்ளனர். ஒரு தலைமையின் கீழ் தமிழக காங்கிரஸ் செயற்பட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். ராகுல் காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற தமிழக இளைஞர் காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால் அதற்குள்ளும் சில கோஷ்டிப் பூசல்கள் உள்ளன.
ஸ்பெக்ரம் விவகாரம் ஜெயலலிதாவை உற்சாகமடைய வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் முக்கிய எதிர்பார்ப்பு. காங்கிரஸ் கட்சியின் வெளியேற்றம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதிப் பலத்தைக் குறைத்து விடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கும் விஜய் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டப் போவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு விஜய் விரும்பினார். அவரைக் கட்சியில் சேர்ப்பதற்கான சமிக்ஞையை காங்கிரஸ் வெளியிடாததால் அரசியல் ஆர்வத்தை அடக்கி வைத்திருந்தார். இப்போது விஜய் அரசியலில் இறங்கும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
விஜயின் வரவை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் போக்குக் காட்டி விட்டு காங்கிரஸ் கட்சியில் விஜய் சேரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திராவிடக் கட்சிகளில் இணைந்தால் ஊழலைப் பற்றிப் பிரசாரம் செய்ய முடியாது. ஸ்பெக்ரமின் முன்னால் போஸ் ஊழல் காணாமல் போய் விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தும் பலமடைந்து வரும் வேளையில் ராசாவுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. ராசாவை கட்சியில் இருந்து நீக்கினால் துணிவுடன் பிரசாரம் செய்யலாம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் ராசாவை பலிக்கடா ஆக்குவதிலேயே தங்கியுள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 26/12/10

Tuesday, December 14, 2010

ராசாவைக் கைவிட விரும்பாத கருணாநிதிsகூட்டணியை உதறமுடியாது தவிக்கும் காங்கிரஸ்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னால் அமைச்சர் ராசாவின் டெல்லி வீட்டிலும் அலுவலகத்திலும் சி. பி. ஐ. நடத்திய அதிரடிச் சோதனையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் விழலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2ஜி அலைவரிசை ஒதுக்கிய விவகாரத்தில் அன்றைய தொலைத் தொடர்புகள் அமைச்சர் ராசாவின் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஊழல் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாயின. ஸ்பெக்ரம் ஊழல் விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்ற போது அமைச்சர் ராசா இராஜினõமாச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ராசாவின் இராஜினாமாவின் பின்னர் பிரச்சினை ஓய்ந்து விடும் என்று காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்பார்த்தன. எதிர்க்கட்சிகளின் விடாப்பிடியால் ராசா மீதான ஊழல் விவகாரத்தை சமாளிக்க முடியாது காங்கிரஸும், திராவிட முன்னேற்றக் கழகமும் தடுமாறுகின்றன. எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற முடக்கம் காங்கிரஸ் கட்சியை நிலை தடுமாற வைத்துள்ளது. ராசாவின் பிரச்சினையால் காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவு பாதிப்படையுமோ என்று இரண்டு கட்சிகளும் சிந்திக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் அதனை வெளியே காட்டாது இரண்டு கட்சிகளும் அடக்கி வாசிக்கின்றன.
ஸ்பெக்ரம் அலை ஒதுக்கீட்டின் மூலம் 1.76 இலட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒரு ஊழல் நடைபெறவேயில்லை என்று அடித்துக் கூறிய முதல்வர் கருணாநிதி தனி ஒருவரால் எப்படி இவ்வளவு ஊழல் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். ராசா ஊழல் செய்யவில்லை என்று முதல்வர் கூறுகிறாரா அல்லது ஊழலில் மற்றவர்களுக்கும் பங்கு இருப்பதாகக் கூறுகின்றாரா என்று தெரியவில்லை.
ஸ்பெக்ரம் ஒதுக்கீட்டில் முக்கிய தரகராகச் செயற்பட்டு வந்த நீரா ராடியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்பெக்ரம் ஒதுக்கீடு முறைப்படி இல்லாமல் தரகர்கள் மூலம் நடைபெற்றது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ஊடகங்கள் பல தகவல்களை பகிரங்கப்படுத்தின. ஊடகங்களில் வெளியான பல தகவல்கள் முக்கியஸ்தர்கள் சிலரை அசௌகரியப்படுத்தியுள்ளன. பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடாவுக்கும் நீரா ராடியாவுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் தனது தனி மனித உரிமையை மீறியதாக நீதிமன்றத்தை நாடியுள்ளார் டாடா.
ஸ்பெக்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற ரகசிய பேரங்கள் பகிரங்கமானதால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் கலங்கிப் போயுள்ளனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் கதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நீரா ராடியாவுடன் உரையாடும் குரல் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோருடையது தானா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவர்களிடம் விசாரணை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல்வாதிகளில் பலர் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றனர். சிலர் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் எதிரியான ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டார். கருணாநிதி குடும்பத்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. தயாளு அம்மாளும், கனிமொழியும் விசாரிக்கப்பட்டால் ஜெயலலிதாவுக்கு அது சாதகமாகி விடும். ஜெயலலிதாவின் ஊழல் பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் வாய் திறக்க முடியாத நிலை தோன்றி விடும்.
தமிழகத்தின் கோடீஸ்வரர்களில் கருணாநிதியும் ஒருவர் என்ற குற்றச்சாட்டு அவரது அரசியல் எதிரிகளினால் சுமத்தப்பட்டது. கருணாநிதி குடும்பத்தின் செல்வச் செழிப்பு அக்குற்றச்சாட்டு உண்மையில் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. தனது சொத்து விபரத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டன தலைவரைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களும் ஏனைய தலைவர்களும் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.
நடிகர் விஜயை அரசியல் நீரோட்டத்தில் தள்ளி விடுவதற்காக முயற்சிகள் ஒருபுறம் நடைபெறுகின்றன. ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்தார்.கட்சி ஒன்று ஆரம்பிக்கப் போகிறார். ஜெயலலிதாவுடன் இணையப் போகிறார் என்ற செய்தி கடந்த வாரம் முழுவதும் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக வெளியாகின. திருச்சி மாநாட்டில் விஜய், அஜித் ஆகியோருக்கு ஆதரவாக ஜெயலலிதா பேசியதால் இந்த ஊகம் கிளம்பியுள்ளது.
விஜய் அண்மையில் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. விஜய் நடித்து வெளியான தோல்விப் படங்களை விநியோகம் செய்தது சன்பிக்ஸர்ஸ், சன்பிக்ஸர்ஸின் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான படமும் படு தோல்வி அடைந்தது. தோல்வியடைந்த கவலையில் இருந்து மீள்வதற்காக விஜய் மிகுந்த பிரயத்தனப்படுகிறார். அவரை அரசியல் குளத்தில் விழுத்துவதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர். விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களில் சிலர் விரும்புகின்றனர். அவர் செய்யும் நல்ல காரியங்களின் பின்னணியில் அரசியல் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் இன்னமும் உரிய இலக்கை அடையவில்லை. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்த் மிளிர்கிறார். தனித்து நின்று அவரால் வெற்றி பெற முடியவில்லை. சட்ட சபைத் தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். அவருடைய செல்வாக்கை நம்பி தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் கட்டுப்பணத்தையும் இழந்தனர்.
விஜயகாந்தின் அரசியல் தோல்வி சினிமா நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசத்துக்கு முக்கிய பாடமாக அமைய வேண்டும். சினிமா நடிகர்களின் அரசியல் தோல்வியைக் கண்ட பின்னராவது விஜய் ரசிகர்கள் உணர்ந்திருக்க வேண்டும். அதனைத் தெரிந்து கொண்டும் தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய் என்று அவரது ரசிகர்கள் கோஷமிடுகின்றனர். விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகச் கட்டுரைகள் பிரசுரமா கின்றன.
அரசியல் ஊகங்களுக்கு முன்னர் புள்ளி வைக்க விஜய் விரும்பவில்லை. தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளை உன்னிப்பாக அவதானித்து வரும் விஜய் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. விஜய் அரசியலில் குதித்தால் தமிழக அரசியலில் எதிர்பார்க்கும் பாதிப்பு எதுவும் தோன்றப் போவதில்லை.
தமிழகத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்புகள் நடிகர் விஜய்க்கு அதிகம் செல்வாக்கு இருப்பதை வெளிக்காட்டியுள்ளன. ரஜினியை விட அதிக செல்வாக்குமிக்கவர் விஜய் என்பது கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. அரசியல்வாதி விஜய்க்கு செல்வாக்கு இருக்கிறதா என்ற கருத்துக் கணிப்பு நடைபெறவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி விட்டன. விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா இல்லையா என்ற விபரம் தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கும் போது தெரிந்து விடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு12/12/10

Wednesday, November 24, 2010

அணி மாற விரும்புகிறது காங்கிரஸ்தனிவழி போகத் தயாராகிறது தி.மு.க.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இருந்த பனிப்போர் அமைச்சர் ராசாவின் இராஜினாமாவுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிகள் அனைத்தும் அதன் கூட்டணிக் கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மதிப்புக் கொடுத்து வந்துள்ளன. கூட்டணி அமைத்த பின்னர் குடைச்சல் கொடுக்காது நல்ல பிள்ளையாக வலம் வரும் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசின் துணையுடன் தனது காரியங்கள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றி வந்தது.
மத்திய அரசு அமையும் போது எத்தனை அமைச்சர்கள், எந்தத் துறை அமைச்சர்கள் என்று பேரம் பேசி அமைச்சுப் பதவிகளைப் பெற்று வந்தது திராவிட முன்னேற்றக் கழகம். பெரும்பான்மை இன்றி தமிழகத்தில் ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகத்தை இணைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. அமைச்சர் ராசாவின் பொறுப்பில் இருந்த ஸ்பெக்ரம் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அத்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து
விட்டன.
ஸ்பெக்ரம் விற்பனையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிய போது மத்திய அரசும் தமிழக அரசும் அதைப் பூசி மெழுகி மறைக்க முயன்றன. ஸ்பெக்ரம் ஏலம் எல்லாம் முறைப்படிதான் நடைபெற்றது. நீதிமன்றத்தில் எல்லாவற்றையும் ஒப்படைத்து குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன் என்று அமைச்சர் ராசா சவால் விட்டார். ஸ்பெக்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. பொறுப்பெடுத்து விசாரணை செய்து வருகிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெறுகிறது. அமைச்சர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பட்டும் படாமலும் கூறி வந்தது. எதற்கும் மசியாது ராசாவை அமைச்சராக அழகு பார்த்தார் தமிழக முதல்வர் கருணாநிதி. எதிர்க்கட்சிகளின் கேள்விகளை நாடாளுமன்ற இரு அவைகளின் முடக்கம் சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப பல முனைகளில் நெருக்குதல் ஏற்பட்ட போது ராசா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார்.
வருமானவரித் துறை, மத்திய அமுலாக்கப் பிரிவு என்பனவும் தமது விசாரணைகளை முடுக்கிவிட்டன. இவை தவிர நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பகிரங்கப்படுத்தப்பட்டன. ராசா இராஜினாமாச் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கும் என்பதை காலம் கடந்து கருணாநிதி உணர்ந்து கொண்டார்.
இந்தியாவின் மிக முக்கியமான அமைச்சுப் பதவிகளில், தொலைத்தொடர்பு அமைச்சும் ஒன்று. தயாநிதிமாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. கருணாநிதி குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது தயாநிதிமாறனிடம் இருந்த தொலைத் தொடர்புத் துறை பிடுங்கப்பட்டு ராசாவிடம் வழங்கப்பட்டது. குடும்பப் பிரச்சினை சுமுகமாகி மீண்டும் காங்கிரஸ் ஆட்சிபீடம் ஏறியபோது தொலைத் தொடர்புத் துறையை தயாநிதிமாறனிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவர் பதவி வகித்த போது ஏற்பட்ட முன்னேற்றம் ராசா அமைச்சரானதும் தேக்கமடைந்தது. ஆனால் அந்த அமைச்சுப் பதவி மீண்டும் ராசாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்குமிடையே ஏற்பட்ட பல முறுகல்களை சோனியாவும், மன்மோகன் சிங்கும் மிகவும் பக்குவமாகத் தீர்த்து வைத்தார்கள். ராசாவின் விவகாரம் அவர்களின் கையையும் மீறிச் சென்றுவிட்டது. பலமுறை விசாரணைகள் ராசாவை முடக்கியுள்ளன. ராசா தொடர்ந்தும் அமைச்சராக இருக்க வேண்டும் என்று விரும்பிய திராவிட முன்னேற்றக் கழகம் இப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு மிகுந்த பிரயாசைப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போயின.
ஸ்பெக்ரம் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதனால் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது அரச தரப்பு வழக்கறிஞர் தடுமாறினார். ராசாவின் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முன்பு ராசா இராஜினாமாச் செய்து விட்டார். அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஊழல் விவகாரம் புதியதல்ல. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மிக பல ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டு அவை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. அவற்றை மாற்ற தலைவர்கள் தாம் கறைபடியாதவர்கள் போல் அறிக்கை விடுகின்றனர்.
சசிதரூ, அசோக் சவான், கல்பாடி ஆகியோர் அண்மையில் ஊழலில் சிக்கி பதவி துறந்தவர்கள். அவர்களை முன் உதாரணம் காட்டித்தான் ராசா இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சியின் நெருக்கடி காரணமாக ராசா இராஜினாமாச் செய்தார். தொலைத் தொடர்புத் துறை அமைச்சுப் பதவியில் இருந்து ராசா இராஜினாமாச் செய்தாலும் அந்த அமைச்சுப் பதவி தமது கட்சியில் உள்ள ஒருவருக்குத்தான் கிடைக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்தது. ஆனால் கபில் சிபிலை காங்கிரஸை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக்கியது காங்கிரஸ் கட்சி. ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவரான கபில் சிபிலை அமைச்சராக்கி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது காங்கிரஸ்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை முறித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி சேரப் போகிறது என்ற தகவல் பரபரப்பாக வெளியான போது திராவிட முன்னேற்றக் கழகம் அதனை அசட்டை செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தரப் போவதாக ஜெயலலிதா அறிவித்த பின்னர் சுதாகரித்துக் கொண்ட கருணாநிதி ராசாவின் இராஜினாமாவுக்கு ஒப்புதலளித்தார்.
அமைச்சுப் பதவியில் இருந்து ராசா இராஜினாமா செய்ய மாட்டார் என்று உறுதியாகக் கூறி வந்த கருணாநிதி முக்கியமான ஒரு முடிவை எடுத்த பின்புதான் ராசாவின் இராஜினாமாவுக்கு ஒப்புதலளித்தார். ராசா தவறு செய்யவில்லை என்று கருணாநிதியும், கனிமொழியும் மட்டும்தான் குரல் கொடுத்து வருகின்றனர். ஏனையோர் அமைதி காக்கின்றனர். தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது புதிய கூட்டணிகள் உதயமாவதற்கான அறிகுறி இப்போதே தோன்றியுள்ளது. ராசாவின் விவகாரம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான விரிசலை அதிகரித்துள்ளது. தமிழக சட்ட சபைத் தொகுதிப் பங்கீட்டின் போது இரு கட்சிக்குமிடையேயான விரிசல் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
தமிழக ஆட்சியில் பங்கு பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் தொகுதிப் பங்கீட்டில் பேரம் பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. தமிழக ஆட்சியில் பங்கு கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. ஆட்சியில் பங்கு தருபவர்களுடன் தான் கூட்டணி என்ற முடிவில் உள்ளது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியை நம்பி கூட்டணி சேர்வதற்கு தமிழகக் கட்சிகள் எவையும் தயாராக இல்லை. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினாலும் பரவாயில்லை. அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேரக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 21/12/10