Saturday, June 7, 2008

மதில்மேல் பூனையாக காத்திருக்கும் பா.ம.க.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடுத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி நேரடியாக பதிலளிக்க தொடங்கிவிட்டார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸின் அறிக்கைகளுக்கு முதல்வர் கருணாநிதி சூடாகப் பதிலளிப்பதால் தமிழக அரசியலும் சூடாகத் தொடங்கிவிட்டது.



தமிழகத்தை முன்னேற்றுவதற்காக தமிழக அரசு பல திட்டங்களை அறிவித்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்ப்புக் காரணமாக அவற்றை கைவிட நேர்ந்தது. சென்னையில் அமையவிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதேவேளை சிறப்புப் பொருளாதார மண்டலங்களை தடுப்பதற்காக போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ள இடங்கள் பொதுமக்களுக்குச் சொந்தமான இடமல்ல. சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விவசாய நிலங்கள் சுவீகரிக்கப் படவில்லை என்று முதல்வர் கருணாநிதி பொறுமையாகப் பதிலளித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிவிப்புக்களை வரவேற்பதைத் தவிர்த்து அவற்றில் குற்றம் காண்பதிலேயே பாட்டாளி மக்கள் கட்சி கண்ணும் கருத்துமாக உள்ளது. அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி புரியும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தொல்லை கொடுப்பதிலேயே பாட்டாளி மக்கள் கட்சி குறியாக உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறும் நாளை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்குரிய காலம் இது அல்ல என்பதை உணர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்குள் இருந்து குழப்பத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
பொருளாதார ரீதியில் தமிழகத்தை முன்னேற்றுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அறிவிக்கும் திட்டங்களுக்கு டாக்டர் ராமதாஸ் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறார். தமிழகத்தை பொருளாதார ரீதியில் வளர்ப்பதற்கு தாம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தடையாக இருப்பதை மக்கள் மத்தியில் பரப்புவதில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தமிழகத்தை ஆட்சி செய்வதற்குரிய பெரும்பான்மை பலத்தை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்ய முடியும்.
கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறினால் எதிர்க்கட்சிகள் வலுவடைந்துவிடும் என்பதனால் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுமையுடன் பதிலளித்து வருகிறது.

18 சட்ட சபை உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசை ஆட்டிப் படைக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்ப்பை திராவிட முன்னேற்றக் கழகம் பெரிதாக எடுக்கவில்லை. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறக் கூடாது என்பதிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் கவனம் செலுத்துகின்றது.

தமிழக அரசாங்கத்தை தீர்மானிக்கும் கட்சி என்ற முத்திரையுடன் வலம் வந்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது தள்ளாடுகிறது. விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பலத்த அடியாக உள்ளது. விஜயகாந்தின் அசுர வளர்ச்சி பாட்டாளி மக்கள் கட்சியின் மதிப்பைக் குøறத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி மறைமுகமாகக் கூறிய போதும் அதனை வரவேற்க வேண்டிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அலட்டிக் கொள்ளாமல் உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் செல்வாக்கு சரிந்துள்ளதை அறிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பார்வை காங்கிரஸ் கட்சியின் மீதே உள்ளது.

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறும் நாளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியை அனுசரித்துப் போவதிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் அதிக அக்கறை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான நெருக்கடியையும் கொடுக்காது அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
ஒ÷கனக்கல் குடிநீர்ப் பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டம், பிரியங்கா, நளினி சந்திப்பு ஆகிய பிரச்சினைகளில் முற்று முழுதாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திராவிட முன்னேற்றக் கழகம் செயற்பட்டு வருகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் காங்கிரஸும் விஜயகாந்தும் செல்லக்கூடாது என திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. ஆனால் விஜயகாந்தும் காங்கிரஸ் கட்சியும் இணையவே வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர்.

காங்கிரஸும் விஜயகாந்தும் இணைந்தால் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேருவதைத் தவிர வேறு வழி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை. காங்கிரஸ் தலைவி சோனியாவும் பிரதமர் மன்மோகன்சிங்கும் முதல்வர் கருணாநிதியின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற சந்தர்ப்பம் இல்லை.

முதல்வர் பொறுப்பை ஸ்டாலின் ஏற்பதற்கு மறைமுக ஒத்திகை கடந்த வாரம் சட்ட சபையில் அரங்கேறியது. வாய் மூலக் கேள்விகளுக்கு முதல்வரின் சார்பாக அமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். கேள்விகளுக்கு தர்க்க ரீதியாக ஸ்டாலின் பதிலளிக்கிறாரா என்பதைப் பரீட்சிப்பதற்காகவே முதல்வர் அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கினார் என்று எண்ணத் தோன்றுகிறது.

அமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்கும்போது ஒரு தகவல் விடுபட்டது. அப்போது துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து தவறைத் திருத்தினார் முதல்வர். டைட்டல் பார்க் பற்றிய தகவல்களை அமைச்சர் ஸ்டாலின் குறிப்பிடும்போது வாய்மொழியாக சில தகவல்களைக் கூறி மகனை உசார்படுத்தினார் முதல்வர் கருணாநிதி. அமைச்சர் ஸ்டாலின் பதிலளிப்பதைப் பார்ப்பதற்காக கனிமொழி, ஸ்டாலினின் மனைவி, மகன், நண்பர்கள் ஆகியோர் சட்ட சபையில் பார்வையாளர் மண்டபத்தில் இருந்தனர்.

ஸ்டாலினின் உரையை சகல கட்சி உறுப்பினர்களும் அமைதியாகச் செவிமடுத்தனர். பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மிகவும் அமைதியாக அமைச்சர் ஸ்டாலினின் உரையை செவிமடுத்தனர். முதல்வரின் துறைகளை கையாள்வதற்கான முன்னோட்டத்தில் அமைச்சர் ஸ்டாலின் தேர்ச்சி பெற்றுவிட்டார்.
முதல்வர் பதவியில் இருந்து தான் வெளியேறி மகன் ஸ்டாலினிடம் முதல்வர் பதவியை ஒப்படைப்பதற்கு கருணாநிதி தயாராக இருக்கிறார். ஸ்டாலின் முதல்வராவார் என்று பல ஆரூடங்கள் வெளியாகியுள்ளன.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் மூத்த அரசியல்வாதிகள் சிலர் இன்னமும் பச்சைக் கொடி காட்டாததால் ஸ்டாலின் முதல்வராகும் நிகழ்ச்சி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

முதல்வரின் பொறுப்பில் உள்ள அமைச்சுகளின் மாநிலக் கோரிக்கைகளுக்கு மகன் ஸ்டாலினை பதிலளிக்க ஏற்பாடு செய்து சட்டசபையில் அவரின் நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளிப்பதையும் ஸ்டாலினுக்கு எதிரானவர்கள் உணர்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை முதல்வர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். முதல்வரின் எதிர்பார்ப்பை ஸ்டாலின் பூர்த்தி செய்துவிட்டார்.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு; 11.05.2008

இரண்டு வருட ஆட்சியில் தமிழக அரசு சாதித்து என்ன?

பெரும்பான்மை இல்லாது தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பீடமேறிய திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு வருடங்களைப் பூர்த்தி செய்து விட்டது. தமிழக அரசின் இரண்டு வருட சாதனைகள் மிகப் பிரமாண்டமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசின் சாதனைகளை சாடி வருகிறது. தமிழக அரசு மக்களுக்கான சாதனை எதனையும் செய்யவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.



இரண்டு ரூபாவுக்கு ஒரு கிலோ அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச காஸ் அடுப்பு, நியாய விலையில் பருப்பு போன்ற கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட சபைத் தேர்தலில் அதிகளவான ஆசனங்களை பெற்றது. ஆனாலும் ஆட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கிடைக்கவில்லை. தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப்பீடமேறியது.

தமிழக காங்கிரஸ் கட்சி அவ்வப்போது தமிழக அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தது. மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமை முதல்வர் கருணாநிதியின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதால் தமிழகத் தலைவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. தமிழக அமைச்சராவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலமுறை முயற்சித்தனர். காங்கிரஸின் தலைமைப் பீடம் அதற்கு இடம் கொடுக்காமையினால் தமிழகத் தலைவர்களின் அமைச்சர்களை கலைந்து விட்டது.
தமிழக அரசை மிகவும் முனைப்புடன் தாக்கும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவைகூட பாட்டாளி மக்கள் கட்சியை போன்று தமிழக அரசை விமர்சிக்கவில்லை.
இரண்டு ரூபாவுக்கு ஒரு கிலோ அரிசி, இலவச கொடுப்பனவு என்பனவற்றை உடனடியாக கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் பலமுறை பகிரங்கமாக அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்புகள் எதனையும் தமிழக அரசு கணக்கில் எடுக்கவில்லை.

தமிழக அரசின் சாதனைப் பட்டியல்கள் எதிர்க்கட்சியினை திகைக்க வைத்துள்ளன. எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியவற்றை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி மிகவும் சிறப்பாக திட்டமிட்டு செய்து வருகிறது.
2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிப் பீடமேறும் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்வு கூறி வருகிறார். அதனை நோக்கமாகக் கொண்டே தமிழக அரசின் சாதனைகளை அவர் சாடுகிறார் என்ற கருத்து உள்ளது. தமிழக அரசுக்கு எதிராக ராமதாஸ்தான் முதலில் போர்க் கொடி உயர்த்துகிறார். வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் இது அதிகரிக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நெருக்கடி கொடுத்துவரும் இவ்வேளையில் தமிழக அமைச்சரான பூங்கோதை தனது உறவினருக்காக பரிந்து பேசியதால் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஊழலில் சிக்கி வழக்கை எதிர்நோக்கி இருக்கும் தனது உறவினரைக் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்த பூங்கோதை தனது பதவியை பறிகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இல்லாத அமைச்சர்களை தூக்கி எறிந்து விட்டு புதியவர்களை அமைச்சராக்குவதற்கு முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார் என்று தகவல் கசிந்து வரும் வேளையில் பூங்கோதையின் பிரச்சினை வெளியானது.

பூங்கோதைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சுப்பிரமணியன் சுவாமி அறிக்கை விட்டதும் பூங்கோதை ராஜினாமா செய்து விட்டார். பூங்கோதையின் வேண்டுகோள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. எதிரணியினரின் செல்வாக்கு அரச அலுவலகங்களில் பிரகாசமாக இருப்பதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
பூங்கோதையின் பிரச்சினையை மையமாக வைத்து தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சித்த எதிர்க்கட்சிகளின் எண்ணத்துக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. பூங்கோதையின் நடவடிக்கைக்கு தண்டனை கொடுத்தமையினால் தமிழக அரசு இப்போதைக்கு தப்பி விட்டது.

இதேவேளை அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் விஜயகாந்த் தடுமாறுகிறார். விஜயகாந்தை தமது பக்கம் இழுப்பதற்கு பல கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. பாரதீய ஜனதாக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவர்களுடனும் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்தின் கட்சியில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி ஆட்சி அமைக்கும் பலமுள்ள கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் எண்ணம். பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜயகாந்தை கழற்றி விட்டு விடும்.

காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் முரண்டு பிடித்து வரும் வேளையில் காங்கிரஸுடன் சேர்வதற்கு விஜயகாந்த் தரப்பு ஆர்வம் காட்டவில்லை. இந்தியப் பொதுத் தேர்தலுக்கு இன்னமும் 10 மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸுக்கும் கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையிலான பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட காங்கிரஸ் கட்சி ஆர்வமாக உள்ளது. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் ஆதரவை வாபஸ் வாங்கி விடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் மிரட்டுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் மிரட்டலுக்கு காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் பணிந்தது. இப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பையும் மீறி கையெழுத்திட காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது.

பொதுத் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகளை காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் காலைவாரினால் பொதுத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் ஆட்சி ஆட்டம் காணும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகளை விலக்கினால் தமிழகத்திலும் தேர்தல் நடைபெறும். அப்போது ஸ்டாலினை முதல்வராக்குவதற்காக பலமான கூட்டணியை உருவாக்கும் நிலைக்கு முதல்வர் தள்ளப்படுவார். அவ்வேளையில் இலவசங்களும் சலுகைகளும் கைகொடுக்குமா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அமைச்சர்களின் அத்துமீறல், மாவட்ட செயலாளர்களின் கைவரிசை என்பன தமிழக அரசுக்கு எதிராக உள்ளன.

என்னதான் பிரச்சினை என்றாலும் அசராது கரும மாற்றும் தமிழக முதல்வர் மிகுதியாக உள்ள மூன்று ஆண்டுகளைச் சமாளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வரின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை அறிய தமிழகம் ஆவலுடன் காத்திருக்கிறது.
பெரும்பான்மை இல்லாது இரண்டு வருடங்கள் நிறைவு செய்தது பெரும் சாதனைதன?

வர்மா; வீரகேசரி வார வெளியீடு;18.05.2008

வாரிசுகளுக்கு வழிவிடுகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி

கர்நாடக சட்ட சபைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ந்து போயுள்ளது. தென் இந்தியாவில் முதன் முதலாக பாரதீய ஜனதாக் கட்சி பெரு வெற்றி பெற்றுள்ளது.
ஒனேக்கல் குடிநீர்ப் பிரச்சினை பற்றி எரிந்த போது ஒனேக்கலுக்குச் சென்று தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கொடுக்கமாட்டேன் என்று வாக்குறுதியளித்த எடியூரப்பா கர்நாடக
முதல்வராகியுள்ளார்.



ஒனேக்கல் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு ஆரம்பித்தபோது கர்நாடகத்தில் உள்ளவர்கள் கிளர்ந்து எழுந்தார்கள். கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்செயல் தமிழகத்துக்கும் பரவியதால் தமிழகத்தில் உள்ள கர்நாடக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒனேக்கலை மையமாக வைத்து வன்செயல் வெடித்ததால் கர்நாடகத் தேர்தல் முடியும்வரை ஒனேக்கல் குடிநீர்த் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பால் கர்நாடகத்தில் உருவாகிய பதற்றம் ஒரு முடிவுக்கு வந்தது.
ஒனேக்கல் குடிநீர் பிரச்சினையால் கர்நாடகத்தில் தோல்வி கிடைத்து விடுமோ என்று காங்கிரஸ் கட்சி பயந்திருந்தது. காங்கிரஸ் கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காகவே தமிழக முதல்வர் ஒனேக்கல் குடிநீர்த் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார் என்ற கருத்தும் எழுந்தது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் பேச்சுவார்த்தையின் மூலம் ஒனேக்கல் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று தமிழக முதல்வர் நினைத்திருந்தார். கர்நாடகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றதால் அந்த எண்ணம் தடைப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றதனால் தமிழகத்தில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கர்நாடகத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
ஒனேக்கல் குடிநீர்த் திட்டத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழக பாரதீய ஜனதாத் தலைவர்களோ, தமிழகத்துக்கு உரிமையான நீரை, கர்நாடக அரசு விட்டுக் கொடுக்கும் என்று அடித்துக் கூறுகிறார்கள்.

மத்தியிலும் தமிழகத்திலும் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் இணைந்து ஆட்சி புரிகின்றன. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. ஆனால் தமிழகத்துக்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்கு கர்நாடக அரசு தடையாக இருந்தது.
தற்போது கர்நாடகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி பீடம் ஏறியதால் ஒனேக்கல் பிரச்சினைக்கு யாரிடமும் அனுமதி கேட்காது அதனை நடை முறைப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது தமிழக அரசுக்கு ஒரு வகையில் சாதகமாக உள்ளது.

இதேவேளை ஜூன் மாதம் 3ஆம் திகதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்த முதல்வர் கருணாநிதி இப்போது பச்சைக் கொடி காட்டி விட்டார். கட்சிக்குள்ளும் குடும்பத்திலும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளினால் மனமுடைந்த முதல்வர் ஓய்வுக்குப் பின்னர் உற்சாகமாகிவிட்டார்.

முதல்வரின் மனதில் இருந்த பல பாரங்கள் இறங்கி விட்டன. பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தீர்க்க முடியாமல் இருந்த பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழி வகைகளை தயாரித்துவிட்டார். நாளை திங்கட்கிழமை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு கூடுகிறது. மிக முக்கியமான பல முடிவுகள் பொதுக் குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். அரசியல் சூழ்நிலையும் கட்சிக்குள் இருக்கும் வேறுபாடுகளும் அவரது முடிவை பின்தள்ளுகின்றன. முதல்வர் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டால் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஸ்டாலினிடம் வழங்குவதற்கு ஏதுவாக ஸ்டாலினை துணை முதல்வராக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரிகிறது.

முதல்வர் கருணாநிதியை போன்ற ஆளுமையும் சிந்தனையும் ஸ்டாலினிடம் இல்லை. ஆனால் முதல்வரின் எண்ணத்தை ஈடேற்றும் வல்லமை ஸ்டாலினிடம் உள்ளது.
ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் அழகிரிக்கு ஒன்றும் இல்லையா என்று அழகிரியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இதுவரை காலமும் பொறுப்பான பதவி ஒன்றையும் வகிக்காத அழகிரிக்கும் பெரிய பதவி காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.

இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறும் தமிழக முதல்வர் வாரிசுகளுக்கு வழிவிட தயாராகிறாதி

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு;01.06.2008

தமிழக முதல்வரை பாதித்து அவரின் உடலா? மனமா?

என்ன பிரச்சினையானாலும் அசராது அதனை சமாளிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கால் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகையினால் தான் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.


முதல்வரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது உண்மைதான். அதேவேளை அவர் மனதளவிலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார். ""கூட இருந்தே குழிபறிக்கும் தோழமைக் கட்சியினர்'' என்று முதல்வர் தனது மனதில் இருந்த பாரத்தை பகிரங்கப்படுத்தினார்.
முதல்வரிடம் இருந்து இப்படிப்பட்ட ஒரு வார்த்தை வெளிவரும் என்பதை எதிர்பார்க்காத டாக்டர் ராமதாஸ{ம் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத் தினர். ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு கருணாநிதி முயற்சிப்பதும் மூத்த தலைவர்கள் சிலர் ஸ்டாலின் முதல்வராக வருவதை விரும்பாததும், பாட்டாளி மக்கள் கட்சியின் நெருக்குதலும் முதல்வரை மனதளவில் பாதிக்கச் செய்து விட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியது முதல் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான உரசலும் ஆரம்பித்து விட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம் நிம்மதியாக ஆட்சி செய்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நடவடிக்கையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மௌனமாக ரசித்துக் கொண்டிருக்கிறது.

திரõவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து அறிக்கை வெளியிடும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவை ஆதரித்து அவ்வப் போது அறிக்கை விடுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெகு தூரம் விலகி நிற்கும் பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நெருங்குவதாக டாக்டர் ராமதாஸ் மறைமுகமாக உணர்த்தினார். டாக்டர் ராமதாஸின் இத்தகைய நடவடிக்கைகளை ஜெயலலிதா கண்டும் காணாமலும் இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டும் பாட்டாளி மக்கள் கட்சியைப் பற்றி மிகவும் தெளிவாகத் தெரிந்து கொண்டமையினால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இருந்தாலும் சரி தான் வெளியேறினாலும் சரி அதனால் நன்மையும், பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதை முதல்வர் கருணாநிதி நன்றாகத் தெரிந்து வைத்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் பல சமிக்ஞைகளை வெளிப்படுத்தியும் ஜெயலலிதா அவரைக் கணக்கில் எடுக்கவில்லை. முதல்வரும், ஜெயலலிதாவும் தன்னை எவ்வளவு தூரத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை டாக்டர் ராமதாஸ{ம் நன்கு தெரிந்து வைத்துள்ளார்.
அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டியையே முதல்வர் விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி, விஜயகாந்த் என மும்முனைப் போட்டி ஏற்பட்டால் இலகுவாக வெற்றி பெறலாம் என்று முதல்வர் நினைக்கிறார்.

ஆனால் ஜெயலலிதாவின் எண்ணம் வேறு மாதிரியாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி ஏன் பிரிவதை ஜெயலலிதா விரும்புகிறார்? காங்கிரஸ{ம் விஜயகாந்த்தும் ஜெயலலிதாவுடன் இணையக் கூடாது என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒரு சிலர் விரும்புகின்றனர். அதற்கான பேச்சுவார்த்தைகளையும் இவர்கள் நடத்தி முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாக்டர் ராமதாஸின் அறிக்கை போரை ரசிக்கும் மன நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை. டாக்டர் ராமதாஸின் அறிக்கைக்குப் பதில் அறிக்கை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தெரிவிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் முதல்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும் உடன் பிறப்புக்கள் ஒரு கணம் அதிர்ந்து விட்டனர். முதல்வரின் உடல் நிலை பற்றி அறிவதற்காக அமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளும் வைத்தியசாலைக்கு விரைந்தனர்.
ஓய்வு எடுக்க வேண்டிய அவசியத்தை முதல்வர் உணர்ந்துள்ளார். தனக்கு ஓய்வு வேண்டும் என்பதை மறைமுகமாக அரசியல் உலகுக்கு எடுத்தியம்பி உள்ளார் முதல்வர். கூட இருந்தே குழி பறிக்கும் அரசியலில் தனது மகனை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு தந்தை என்ற முறையில் முதல்வருக்கு இருக்கிறது.

இந்தக் களேபரத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று அவர் அறிவித்துள்ளார். தலைவரின் பிறந்த நாளை பெரும் எடுப்பில் கொண்டாட வேண்டும் என்று பேராசிரியர் அன்பழகன் அறைகூவல் விடுத்துள்ளார். உற்சாகமான பிறந்த நாள் விழா முதல்வரின் மனதை குளிர்விக்கும் என்பது உண்மையே.

பேராசிரியர் அன்பழகனை முதல்வர் பதவியில் அமர்த்தி ஸ்டாலினுக்கு பயிற்சி கொடுக்கப்படுமா அல்லது ஸ்டாலினை முதல்வராக்கி விட்டு கலைஞர் கருணாநிதி தனது ஓய்வை அறிவிப்பாரõ என்பதை அறிவதற்கு ஆவலாக தமிழக அரசியல் ஆவலாக உள்ளது. எனினும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரை கலைஞர் கருணாநிதி முடிவு எதனையும் வெளியிட மாட்டார்.

வர்மர் வீரகேசரி வார வெளியீடு;25.05.2008