Tuesday, December 26, 2017

ஆர்.கே.நகரில் விசிலடித்த தினகரன்

  
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் தோற்கடித்து சுயேட்சை வேட்பாளரான தினகரன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வியக்க வைத்துள்ளார்.  இரட்டை இலை, உதய சூரியன் ஆகிய இரண்டு சின்னங்களையும் மையப்படுத்தியே தமிழக அரசியல்சுழன்று வருகிறது. இரண்டுசின்னங்களையும் புறந்தள்ளி புதிய சின்னத்துடன் களமிறங்கிய தினகரன் வெற்றி பெற்றது உற்று நோக்கப்படவேண்டிய அம்சமாகும்.

ஆர்.கே. நகர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. அங்கு நடைபெற்ற  தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் வெற்றி வெற்றி பெற்றதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான எதிர்ப்பலையும், பலமான வேட்பாளரும் காரணமாக அமைந்தன. ஆர்.கே. நகர்  இடைத்தேர்தலில் தினகரன் என்ற பிம்பத்துக்கு எதிராக அவரைப் போல ஜொலிக்கும் வேட்பாளரை இரண்டு திராவிடக் கட்சிகளும் களம்இறக்கத் தவறி விட்டன. மதுசூதனனுக்காக அக் கட்சியின் தலைவர்கள் பேசினார்கள். மருதுகணேஷுக்காக  அக்கட்சித் தலைவர்களும் வைகோ, திருமாவளவன், இடதுசாரித் தலைவர்கள் ஆகியோரும் பேசினார்கள். தினகரனுக்காக தினகரன் மட்டும் தான் பேசினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி இரண்டாகப் பிரிந்துள்ளது. பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாக இருந்தாலும் அவர்களுக்குள் பிரிவினை இருக்கிறது. மதுசூதனனை  வேட்பாளராக்குவதற்கு எடப்பாடி அணி  முதலில் சம்மதிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி அப்படியேதான் இருக்கிறது. விடுதலைச்சிறுத்தைகள்,காங்கிரஸ், மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள், இந்திய முஸ்லிம் லீக் ஆகியன   திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு  தெரிவித்தபடியால் மருதுகணேஷின் வெற்றி பிரகாசமாக இருந்தது. இந்தக்  கூட்டல் கழித்தல் எல்லாவற்றையும் பொய்யாக்கி குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றுவிட்டார்.

இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி தோற்பது பெரிய விஷயம் இல்லை. ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்ததை ஆச்சரியத்துடன் பார்க்க வேண்டி இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியில் அவர் வளர்த்த கட்சியின் இரட்டை இலை தோல்வியடைந்ததுதான் ஆச்சரியமானது.

தினகரன் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மத்திய, மாநில அரசுகள் மீதான கோபம். பாரதீய ஜனதாவின் கைப்பொம்மையாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பது. தினகரன் மிக எளிமையாக பேட்டி கொடுப்பது. சிபிஐ ,வருமான வரித்துறையின் சோதனை போன்ற நெருக்கடி என்பன தினகரனைப் பேசும் பொருளாக்கின. ஆர்.கே. நகரில் நவீன முறையில் நடைபெற்ற பணப் பட்டுவாடா பிரதான காரணம்  என எதிர்க் கட்சிகள் குற்றம்  சுமத்துகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற  இருந்த இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பணவிநியோகமே காரணம். அந்த  ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இம்முறையும்  பணவிநியோகம் நடைபெற்றது. ஆதாரங்களுடன்  பிடித்துக் கொடுத்ததும் மேலதிக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. தமக்குப் போதிய அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது.  இதே  அதிகாரங்களை வைத்துக்கொண்டுதான் சேஷன் அரசியல்வாதிகளை  ஆட்டிப்படைத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலின் போது எடப்பாடியும் தினகரனும் ஒரு அணியில் இருந்தனர். அப்போது ஒரு  வாக்காளருக்கு 4௦௦௦ ஆயிரம் ரூபா கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.  இப்போது அவர்களுக்கு 6௦௦௦ ரூபா தினகரனின் ஆட்களால் கொடுக்கப்பட்டது. மொத்தமாகப் 1௦௦௦௦ ரூபா என தினகரன் தரப்பினால் கொடுக்கப்பட்டது. இரட்டை இலையையும் வைத்துக்கொண்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பணத்தை வரி இறைத்தது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் வெற்றி தோல்வி இரண்டையும்  ஸ்டாலின் ஒன்றாகத்தான் பார்க்கிறார். பணத்தை வாரி இறைத்து ஒரு உறுப்பினரைப்  பெறுவதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. பணம் கொடுத்து பெறும் வெற்றியை விட தோற்பது மேல் என்றார். அதுதான் நடந்துள்ளது. திமுக தோற்கவில்லை. தேர்தல் ஆணையம் தோல்வியடைந்து விட்டது எனக் கூறினார். ஆனாலும் தனது கட்சியில் வாக்கு வங்கி  எங்கே  போனது என்பதை அறிய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி கடந்த காலங்களைவிட அதிகளவான வாக்குகளைப் பெற்றுள்ளது. பாரதீய ஜனதா மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நோட்டாவுக்கு  அடுத்த இடத்தில் மத்தியில் ஆளும் தேசியக் கட்சி இருக்கிறது. விஜயகாந்த், ராமதாஸ்,வாசன் ஆகியோரின் கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலைப்  புறக்கணித்தன. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி, நாம் தமிழர் ஆகிய கட்சிகள்பெற்ற வாக்குகளைவிட அதிகளவான வாக்குகளை தினகரன் பெற்றுள்ளார்.  ஜெயலலிதாவை விட அதிகளவான வாக்கு வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.  இடைத் தேர்தலில் இப்படி ஒரு முடிவு வருவதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால்,  பொதுத் தேர்தலில் இதனை எதிர்பார்க்க முடியாது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டார். இந்த வெற்றி அவருக்கு நடைபெற உள்ள பல சோதனைகளின் ஆரம்பமே தவிர முடிவு அல்ல. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் . சின்னத்தையும் கைப்பற்றுவேன்,  மூன்று மாதங்களில் தமிழக ஆட்சி கவுழும் சிலிப்பர் செல்கள் வெளிவருவார்கள்  என சபதமிட்டுள்ளார். தினகரனின் பக்கம் இருந்துவிட்டு ஓடிப்போன நாடாளுமன்ற உறுப்பினர் திரும்ப வந்துவிட்டார். ஜெயலலிதாவை எதிர்த்து தனி ஒருத்தியாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா தினகரனைச்சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவை எதிர்த்த சசிகலாவை தினகரன் சந்தித்ததை ஜெயலலிதாவுக்கு விசுவாசமான சசிகலாவின் குடும்பத்தால் ஜீரணிக்கமுடியவில்லை. மதில் மேல் பூனையாக அல்லாடும் தமீம் அன்சாரி,,கருணாஸ்.தமிழரசு ஆகியோர் தினகரனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தினகரன் வெற்றி பெற்றதும் முதல்  ஆளாக விஷால் வாழ்த்துத் தெரிவித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் ராதாரவி தினகரனை வாழ்த்தியுள்ளார். எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் நடவடிக்கைகள்  பிடிக்காது ஒதுங்கி இருப்பவர்கள் தினகரனின் பக்கம்செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும் இணைந்து நடத்திய கூட்டத்துக்கு சில அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் செல்லவில்லை. அவர்களும் தினகரனின் ஆட்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தினகரனின் வெற்றி தமிழகத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. பன்னீரை வெளியேற்றிவிட்டு முதலமைச்சராவதற்கு தினகரன் முயற்சிப்பார். தினகரனுக்கு உள்ள செல்வாக்கினால் பாரதீய ஜனதாக் கட்சி தினகரனின் கையைப் பிடிக்க முயற்சிக்கலாம். அதற்கு அவர் மறுத்தால், அவருக்கு எதிரான வழக்குகளைத் துரிதப்படுத்தி தினகரனை  சிறைக்கு அனுப்பலாம். பதவியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பாரதீய ஜனதாவிடம் தினகரன் அடி பணியலாம். இவை எல்லாம் தினகரனின் முடிவில்தான் தங்கி உள்ளது. 


Thursday, December 21, 2017

பாரதீய ஜனதாவின் இரும்புக்கோட்டையில் சவால் விட்ட காங்கிரஸ்

இமாசலப் பிரதேசம், குஜராத் ஆகிய இரண்டு சட்டசபைத் தேர்தல்களிலும்     பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸிடம் இருந்த இமாசலப் பிரதேசத்தை பாரதீய ஜனதா கைப்பற்றியுள்ளது. குஜராத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. வெற்றி பெற்றதை பாரதீய ஜனதாவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.  இமாசலப்பிரதேசம் பறிபோனதைப் பற்றி காங்கிரஸ் அதிகம் கவலைப்படவில்லை.குஜராத்தில்,  பாரதீய ஜனதா மயிரிழையில் தப்பியதை நம்பிக்கையுடன் நோக்குகிறது. பாரதீய ஜனதாவின் இமாசலப்பிரதேச முதல்வர் வேட்பாளர் பிரேம்குமார் துமல் தோல்வியடைந்தது அக்கட்சிக்கு பின்னடைவாக உள்ளது. முதல்வரைத்  தேடவேண்டிய நிலையில் பாரதீய ஜனதா இருக்கிறது. 

குஜராத்தில் முதல் கட்ட வாக்களிப்பில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் கட்ட வாக்களிப்பில் பாரதீய ஜனதா முன்னிலை பெற்றது. மோடி அமித்ஷா என்ற இரண்டு பெரும் ஆளுமைகளின் மாநிலமான குஜராத்தில் பெற்ற வெற்றி பாரதீய ஜனதாவுக்கு போதுமானதாக இல்லை. 2012 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்போடும்போது பாரதீய ஜனதாவின் வாக்கு வீதமும் உறுப்பினர் தொகையும் குறைவடைந்துள்ளது. கிராமப்புறங்களில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. நகரங்களில் பாரதீய ஜனதா செல்வாக்குடன் இருக்கிறது.
குஜராத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 22 வருட காலம்  குஜராத்தை ஆட்சி  செய்த பாரதீய ஜனதா அங்கு செய்த அபிவிருத்திகளை முன் நிறுத்தி வாக்குக் கேட்கவில்லை. ராகுல் இந்து இல்லை, மன்மோகன் பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்து சதி  செய்கிறார், குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் முஸ்லிம் முதலமைச்சராவார்  போன்ற கீழ்த்தரமாக மோடி, பிரசாரம் செய்தார்.

காங்கிரஸின் பிரசாரம் பாரதீய ஜனதாவின் கொள்கைகளால் இந்தியாவும் குஜராத்தும் சந்தித்த  பின்னடைவுகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டது. பணமதிப்பீட்டு இழப்பு ஜிஎஸ்ரி வரிவிதிப்பு என்பனவற்றைப் பற்றி காங்கிரஸ் விரிவாகப் பிரசாரம் செய்தது. என்றாலும் கடைசி நேர ஜிஎஸ்ரி வரியில் மத்திய அரசு மற்றம் செய்ததால் குஜராத் வாக்காளர்கள் மனம்  மாறிவிட்டனர்.  விவசாயிகளும் வர்த்தகர்களும் தமக்கு ஆதரவளிப்பார்கள்  என காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் இருந்தது. மோடியின் கடைசி நேர பிரசாரத்தால் வர்த்தகர்கள் பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளனர். மோடியின் மாநிலம் என்பதால் அவரது தந்திரம் குஜராத்தில் பலித்தது. கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மோடி என்ற பெயர் முன்னிலை பெற்று வெற்றியைத் தேடித்தந்தது. குஜராத் தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்த மோடி என்ற சொல் அடுத்த பொதுத் தேர்தலில் வலுவிழந்துவிடும்.

மோடியின் மாவட்டமான மேன்சலாவில்  ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளில் மட்டும் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. மோடியின்  தொகுதியிலும் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.இது பரதீய ஜனதாவுக்குப் பலத்த அடியாகும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் வெளியேறியதே தோல்வியின் பிரதான காரணியாகும். 2017, 2012  ஆம் ஆண்டுகளில் காங்கிரஸுடன் இணைந்து  தேர்தலைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் 2017,  ஆம் ஆண்டு மூன்று தொகுதிகளிலும் , 2012   ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தோல்வியடைந்ததால் 72  தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. . இதனால் காங்கிரஸுக்கு சேர வேண்டிய வாக்குகள் சிதறிவிட்டது.

குஜராத்தில் பல தொகுதிகளில் 200 முதல்  20௦௦ வாக்கு வித்தியாசத்தி தான் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 16 தொகுதிகளில் பாரதீய  ஜனதா வெற்றி பெற்றுள்ளது. பாரதீய ஜனதா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 33 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸின் பக்கம் இருக்கின்றனர். குஜராத் மாநிலத்தில்  ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான போராட்டங்கள் எதிலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை. குஜராத்தில் வலுவாகக் கால் ஊன்ற வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டுத் தேர்தலில்   115  தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய  ஜனதா இப்போது 99  தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு 61  தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இப்போது 77   .தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்தின் முதல்வரான விஜய் ரூபவானிக்கு எதிராகக் களம் இறங்கிய ஜிக்னேஷ் மேத்வானி, ஹர்த்திக் பட்டேல், அல்பேஷ் தாக்கூர் ஆகிய மூவருடனும் இணைந்தது காங்கிரசுக்கு இராஜதந்திர ரீதியில் பலமாக உள்ளது. தவிர குஜராத்தில் இருக்கும்முக்கிய இளம் தலைவர்களையும் ராகுல் தனது பக்கம்  இழுத்துள்ளார். குஜராத்தில் செல்வாக்குச் செலுத்துபவர்களுடன் நெருக்கமாக இணைந்தால் அங்கு காங்கிரஸ் வலுவாகக் கால் ஊன்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். பாரதீய  ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் அண்மையில்  நடைபெற்ற ஆறு சட்ட மன்றத் தேர்தல்களில் வெற்றி  பெற்றது. கடந்த காலத்  தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் பாரதீய  ஜனதா பெற்ற வாக்குகளின் சத வீதம் குறைவடைந்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு கர்நாடகா,மத்தியப்பிரதேசம்,சட்டீஸ்கர், ராஜஸ்தான், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து,மிசோராம் ஆகிய எட்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன, அங்கெல்லாம் காங்கிரஸ் மிகவும் பலமானதாக இருக்கிறது. பெரிய மாநிலங்களான மத்தியப்பிரதேசம்,சட்டீஸ்கர். ராஜஸ்தான் ஆகியவற்றில் பாரதீய ஜனதாவும் கர்நாடகத்தில் காங்கிரஸும் ஆட்சி செய்கின்றன. அங்கு ஆளும் கட்சிகள் மக்களின் எதிர்ப்பலைகளை எதிர் நோக்க வேண்டிய  நிலை உள்ளது.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை. விவசாயிகளின் பிரச்சினை, வேலை இல்லாத இளைஞர்களின் எதிர்பார்ப்பு  என்பன விஸ்வரூபமாக முன்னிற்கின்றன. இவர்களுக்கான சரியான தீர்வைக் கொடுப்பவர்கள்தான் அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியும்.


Monday, December 18, 2017

கெளரவப்பிரச்சினயான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

தமிழக அரசியல் அரங்கில் ஆர்.கே.நகர் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. முதலமைச்சரின் தொகுதி என்ற மிடுக்குடன் இருந்த ஆர்.கே.நகர், இலஞ்சம் தலை விரித்தாடும் தொகுதியாக மாறியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்காளர்களுப் .பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. மீண்டும் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அரசியல் கட்சிகள் தமது பலத்தைக் காட்ட களம்  இறங்கியுள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரும்புக் கோட்டையான ஆர்.கே. நகரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும்  உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட  ஸ்டாலினுக்கு ஆர்.கே. நகர் வெற்றி அத்தியாவசியமானது. கருணாநிதி ,ஜெயலலிதா ஆகிய இரண்டு அரசியல் ஆளுமைகளும் இல்லாத இடைத்தேர்தல். திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல் தலைவர் ஸ்டாலின் வழிநடத்துகிறார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகப் பிளவு பட்டுள்ளது, தினகரன் தனி ஒருவனாக நின்று அனைவரையும் எதிர்த்துப் பிரசாரம் செய்கிறார். எடபடியும் பன்னீரும் ஒன்றாக நின்று தேர்தல் பரப்புரை செய்கின்றனர். இரண்டு அணிகளும் இனைந்தன. மனங்கள் இணையவில்லை என்று அவர்களே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான ஆர்.கே. நகரைக் கைப்பற்றித் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என ஸ்டாலின் கங்கணம் கட்டியுள்ளார். ஜெயலலிதாவின் தொகுதியைத் தக்க வைக்க வேண்டிய கடமைப்பாடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உள்ளது. கழகமும் சின்னமும் அங்கே இருந்தாலும் தொண்டர்கள் எனக்குப் பின்னால் நிற்கிறார்கள் என அடித்துச்சொல்கிறார் தினகரன்.

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பளராக  ஆர்.கே. நகரைச்சேர்ந்த மருதுகணேஷ், களம்  இறங்கி உள்ளார்.  ஆர்.கே. நகரில் இரண்டு முறை வெற்றி பெற்ற மதுசூதனன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பலறக்கப் போட்டியிடுகிறார். சுயேட்சை வேட்பாளராக தினகரன், வளம் வருகிறார்.நாம் தமிழர் கட்சியும் பாரதீய ஜனதாவும் தமது கட்சியின் வேட்பாளர்களைக் களம் இறக்கி உள்ளனர். நான்கு தினகரன், மூன்று மதுசூதனன், மூன்று ரமேஸ், இரண்டு பிரேம்குமார் ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார்கள். சின்னத்தைப் பார்க்காது பெயரைப்பார்த்து வாக்களித்தால் பிரதான வேட்பாளர்களின் வாக்குகள் குறைய வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பன்னீரும் எடப்பாடியும் எதிரும் புதிருமாக இருந்தனர். பன்னீர் அணியின்வேட்பளராக மதுசூதனனும் எடப்பாடியின் அணி வேட்பாளராக தினகரனும் போட்டியிட்டனர். இன்று பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாக நின்று தினகரனை எதிர்த்துப் பிரசாரம் செய்கின்றனர். தமிழகத்தில் த்சம்ச்து கட்சியும் இருக்கிறது என்பதனை வெளிக்காட்டுவதற்காக பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தியுள்ளது. கடந்த முறை வேட்புமனுத் தாக்கல் செய்த கங்கை அமரன் இம்முறை பினவங்கி விட்டார். ஆகையால் இன்னொரு கட்சியில் இருந்து தாவியவரை பாரதீய ஜனதா வேட்பாளராக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியும் தம் பங்குக்கு ஒருவரை நிறுத்தியுள்ளது.

ஜெயலலிதா இருந்தபோது பிரபலமான எந்த ஒரு கட்சியுடனும்  கூட்டணி சேரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் ஒன்றாக இருந்தன. வைகோ,விஜயகாந்த்,திருமாவளவன்,இடதுசாரிகள் ஆகியோர் இணைந்து போட்டியிட்டனர். ஆர்.கே. நகர்  இடைத்தேர்தலில் விஜயகாந்தைத் தவிர அமர்றைய அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையிலான போட்டியாக இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தினகரனுக்கும் இடையிலான போட்டியாக ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் மாறி விட்டது. வெற்றி பெறவிட்டலும் இரண்டாம் இடம் யாருக்கு என்ற கெளரவப் பிரச்சினையாக பிரசாரம் செய்யப்படுகிறது.  கடந்த முறை வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தைப் பெறுவதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடினார் தினகரன். அதில் தலையிட முடியாது என நீதிமன்றம்  மறுத்துவிட்டது. தொப்பி சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு அதிகளவு பணம் கொடுக்கப்பட்டதால் 29 சுயேட்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தைத் தமக்கு வழங்கக்கோரினர். இவர்களுடன் இரண்டு கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. கட்சியில் கோரிக்கைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதியால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு தொப்பி வழங்கப்பட்டது.

  தினகரனின் விருப்பமாக  விசில்,கிரிக்கெற் மட்டை என்பன இருந்தன. தினகரனின் விருப்பத்தை  நிறைவேற்றக்கூடாது என்பதற்காக அவருக்கு குக்கர் சின்னமாக வழங்கப்பட்டது. மக்கள் மனதில் மிக இலகுவாக பதியக்கூடியகுக்கரால் தினகரன் மகிழ்ச்சியடைந்துள்ளார். பன்னீரும் எடப்பாடியும் இரட்டை  இலையை நம்பி பிரசாரம் செய்கின்றனர். புதிய சின்னமான குக்கரை பிரபலயப் படுத்துவதில் தினகரன் முந்திவிட்டார்.

வாக்காளருக்குப் பணம்  கொடுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரை திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் ஆதரத்துடன் பிடித்து உரிய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.  தினகரனின் ஆதரவாளர்கள் பணம் கொடுத்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். இப்படியான தில்லு முல்லுகளைக் கண்டு பிடிப்பதற்காக கூடுதலான பொலிஸார், பறக்கும் படை,துணை இராணுவம் என்பன கலத்துள் ரோந்து வருகின்றன. பணம் கொடுப்பவர்கள் யாரும் அவர்களின் கண்ணில் சிக்கவில்லை. ஆதாரத்துடன்  பிடித்துக் கொடுத்தாலும் ஆளும் கட்சியைச் சேந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது.  இரண்டாவது முறையும் இடைத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டால் அது மிகப்ப பெரிய அவமானமாகும். கொடுக்கிற பணத்தை வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஆர்.கே. நகர் வாக்காளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. வாங்கிய சொற்ப பணத்துக்காக தமது வாக்கை விற்பப்போகிறார்களா என்பதை அறிவதற்கு தேர்தல் முடிவுவரை காத்திருக்க வேண்டும்.  நடக்கப்போவது இடைத் தேத்தல் என்றாலும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பம் என்றே கருத வேண்டி உள்ளது.     

Thursday, December 14, 2017

புயலைக் கிளப்பிய விஷாலின் அரசியல் விளையாட்டு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் தயாராகிய வேளையில்  சுயேட்சை வேட்பாளராக நடிகர் விஷால் குதித்தது  அனைவரையும்  ஆச்சரியப்பட வைத்தது. தமிழக அரசியலில் இருந்து சினிமாவைப் பிரிக்க முடியாது. தமிழக அரசியலைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா ஆகிய நால்வரும் சினிமாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

சினிமாவுடன் தொடர்புடைய  பலர் அரசியல்வாதியாகவும் இருக்கின்றனர். அரசியல்வாதிகள் சிலர் சினிமாத் தயாரிப்பாளர்களாகவும் விநியோகஸ்தர்களாகவும் செயற்படுகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். தீவீர அரசியலில்  இறங்கப் போவதாக பந்தா காட்டிவிட்டு ரஜினி அமைதியாகிவிடுவார். விஜயிடமும் அரசியல் ஆசை இருக்கிறது. அவருடைய தகப்பன் பலமுறை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். கமல் தனது அரசியல் கருத்துக்களை டிவிட்டரில் தெறிக்க விடுகிறார். கமலும் ரஜினியும் அரசியலில் குதிக்க நாள் பார்த்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென விஷால் அரசியல்வாதியானார்.

விஜயின் படம் வெளியாகும் போது பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாவதில்லை.விஜயின் படம் வெளியாகும் அதே தினத்தில் தனது படத்தை அடம் பிடித்து வெளியிடுபவர் விஷால்.இளைய தளபதி விஜய்க்குப் போட்டியாக புரட்சித் தளபதி என தனது பெயருக்கு முன்னால் போட்டு அழகு பார்த்தவர் விஷால். எதிர்ப்பு வலுவடைந்ததால் புரட்சித் தளபதியைக் கைவிட்டார்.

விஷாலுக்குப் பின்னால் இருபவரை அறிவதற்கு திரை உலகமும் அரசியல் களமும் ஆர்வமாக இருந்தன. டுவிட்டரில் அரசியல் நடத்தும் கமலின் பிரதிநிதியாக விஷால் களம் இறங்கியதாக கருதப்பட்டது. நடிகர் சங்கத்தில் தலைவராகவும் செயலாளராகவும்  இருந்த சரத்குமாரையும் ராதாரவியையும் வெளியேற்றி புதிய நிர்வாகத்தை அமைத்ததில் விஷாலுக்கு முக்கிய பங்கு உள்ளது. அப்போது விஷாலுக்கு ஆதரவாக கமல் இருந்தார். நடிகர் சங்கத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தையும் விஷாலுடைய குழு கைப்பற்றியது. நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் குதித்ததாக ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டது.

கமல்,ரஜினி, விஜய் ஆகியோருக்கு இருப்பது போன்ற தீவீர வெறிகொண்ட ரசிகர் பட்டாளம் விஷாலுக்கு இல்லை. எம்.ஜி ஆரை முதலமைச்சராக்கியது அவரது ரசிகர்கள் தான். அதன் பின்னர்தான் ரசிகர்கள் தொண்டர்களாகினர். அதன் பின்னர் அப்படி ஒரு நிலைமை எந்த ஒரு நடிகருக்கும் ஏற்படவில்லை. விஷாலின் அரசியல் பிரவேசத்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பதறியது. தினகரனின் தூண்டுதலால் அரசியலில் களம் புகுந்த விஷாலால்  தமது வாக்கு வங்கி சிதறிவிடும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அச்சம் அடைந்தனர்.

ஜெயலலிதாவின் மரணத்தின் பிற்பாடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி சிதறிவிட்டது. பன்னீர் குழு ,எடப்பாடி குழு என பிரிந்ததனால் தொண்டர்கள் திகைத்தனர். இப்போது அவர்கள் இணைந்தாலும் தினகரனின் போராட்டம் அவர்களுக்கு பெரும் சோதனையாக இருக்கிறது. ஆர்.கே.நகரில் உள்ள மக்களில் 20 சத விகிதத்தினர் தெலுங்கு பேசும் மக்கள்.அவர்களில் அதிகமானோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள்.  அவர்களின் வாக்குகளைக் கவருவதற்காக தினகரனின் திட்டத்தின் படி விஷால் அரசியல் அவதாரம் எடுத்ததாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டினர்.

சினிமா என்ற மாயை விஷாலை முன்னிலைப்படுத்தியது. விஷால் தன்னை அரசியல்வாதியாகவே நினைத்துக் கொண்டார். கமராஜர்,அண்ணா,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செய்தபின்னர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போதுதான் சினிமாவில் வரும் தேர்தலுக்கும் நிஜமான தேர்த;லுக்கும் உள்ள வித்தியாசத்தை விஷால் அறிந்துகொண்டார். வரிசையில் நின்று டோக்கன் வாங்கவேண்டும் என வேட்பு மனுத்  தாக்கல் செய்யக் காத்திருந்தவர்கள் தெரிவித்தார்கள். டோக்கன் வாங்கி 4௦ ஆவது ஆளாக தேர்தல் அதிகரிவிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் விஷால்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வேட்பு மனுவில் அந்தத் தொகுதியில் வசிக்கும் 10 பேர் முன் மொழிந்து  கையெழுத்திட வேண்டும் என்பது விதி விஷாலை முன் மொழிந்தவர்களில் சாந்தி, தீபன் ஆகிய இருவரும் அது தமது கையெழுத்து அல்ல எனத் தெரிவித்ததால் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. நம்பிக்கையான 10 பேரைத் தேடிக்கண்டு பிடிக்க முடியாதவர் என்று விஷாலின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதிர்ச்சியடைந்த விஷால் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  மிரட்டியதால் தான் அவர்கள் இருவரும் அப்படிச்சொன்னர்கள் என தொலைபேசி ஆதாரத்துடன் விளக்கமளித்தார்.

சாந்தி, தீபன் ஆகிய இருவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள்.  .விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் கையெழுத்திட்டார்களா என்ற சந்தேகத்துக்கு  விடை தெரியவில்லை.  தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம்  விஷால் கெஞ்சி மன்றாடினார். இரவு 9 மணியளவில் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சந்தோஷமடைந்த விஷால் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்கள் முன் வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துவிட்டு வீட்டுக்குச்சென்று விட்டார்.  இரவு 11 மணிக்கு விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

விஷாலின் வேட்பு மனுவை நிரகரித்த தேர்தல் அதிகாரி, விஷால் வேண்டியதால் அதனை ஏற்றுக்கொண்டார். பின்னர் அதனை ஏன் நிராகரித்தார் என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது. முடிவெடுக்கும் முழு அதிகாரம் தேர்தல் அதிகாரியிடம் உள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை விஷாலின் கோரிக்கைக்கு இணங்க ஏற்றுக்கொண்டார். பின்னர் யருடைய நெருக்குதலால் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தார் என்பது மர்மமாகவே இருக்கிறது. தேர்தல் அதிகாரியின் நடவடிக்கையில் அனைவருக்கும் சந்தேகம் உள்ளது

தமிழக தலமைத் தேர்தல் அதிகாரி லக்கானியிடம்  விஷால் முறையிட்டார். கையெழுத்திடவில்லை என தெரிவித்த  இருவரும் நேரில் வந்து விளக்கமளித்தால் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என கால  அவகாசம் கொடுத்தார்.  தேர்தலில் தான் போட்டியிடுவதைவிட அவர்களின் பாதுகாப்பு முக்கியம் என விஷால் தெரிவித்தார். சினிமாவில் ஏழைகளுக்கு உதவும் கதாநாயகன் நிஜத்தில் பின்வாங்கிவிட்டார். ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியின்  நடவடிக்கை அநீதியானது என்பதை உணர்ந்த தமிழகத் ,தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி அவரை  நீக்கி விட்டு பிரவீன் நாயரை, ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரியாக நியமித்தார். எட்டு மாதங்களுக்கு முன்னர் இதே ஆர்.கே. நகரில் தேர்தல் அதிகரியகக் கடமை புரிந்தவர் பிரவீன் நாயர். தொகுதியில் நடந்த பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியாததால் அன்றைய இடைத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டது.

  விஷாலில்  அரசியல் பிரவேசம் தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் பிரச்சினையை  உருவாக்கியது. தயாரிப்பாளர் சங்கம் அரசியல் சார்பானது அல்ல. இடைத் தேர்தலில் போட்டியிடும் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என சேரன்  போர்க்கொடி தூக்கி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார். விஷாலுக்கு எதிரானவர்கள் அனைவரும் சேரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன்   இராஜினாமாச் செய்தார். நடிகர் சங்கத்தில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சரத்குமார், ராதாரவி ஆகியோரை வெளியேற்றி விட்டு நாம் பதவி  ஏற்றோம். நடிகர் சங்க செயலாளரான விஷால், தேர்தலில் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார். விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் சேரனின் போராட்டம் கைவிடப்பட்டது. பொன்வண்ணன் தனது இராஜினாமாவை  வாபஸ் வாங்கி மீண்டும் பதவியில் தொடருவதாக அறிவித்தார். இவை தற்காலிக முடிவா அல்லது நிரந்தரமான முடிவா  என்பதை விஷாலின் அடுத்தகட்ட நடவடிக்கைதான் முடிவு செய்யும்.

நான், அரசியல்வாதியாகத் தேர்தலில் போட்டியிடவில்லை.  மக்களுக்குச்சேவை செய்ய சுயேட்சையாகப் போட்டியிடுகிறேன் என்ற விஷாலின் விளக்கம் குழப்பமாக இருக்கிறது. கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர் அரசியல்வாதி.  சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடுபவர் அரசியல்வாதி இல்லை என்ற விஷாலின் கருத்தை அரசியலைப் பற்றித் தெரியாதவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியலைப் பற்றிய தெளிவு எதுவும் இல்லாமலே விஷால் அரசியலில் இறங்கியுள்ளார். அரசியல்வாதி ஒருவர்  வேட்புமனுவைத்  தாக்கல் செய்யும்போது அவருடைய கட்சியைச்சேர்ந்த இன்னொருவர்  வேட்புமனுத் தாக்கல் செய்வார். அவருடைய வேட்புமனு ஏற்கப்பட்டால் மற்றவர் தனது  வேட்புமனுவை வாபஸ் பெறுவார். மாறாக நிராகரிக்கப்பட்டால், தனக்குப் பதிலாக வேட்புமனுத் தாக்கல் செய்தவரை அவர் ஆதரிப்பார். இதனைத் தெரிந்து கொள்ளாத விஷால்,  வேட்புமனுத் தாக்கல் செய்வதிலே தோல்வியடைந்தார்.

ஆர்.கே. நகரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கப்போவதாக அறிவித்த விஷால் அதைப்பற்றிய விபரம் எதனையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. விஷாலின் அரசியல் களேபரத்தால் ஆர்.கே. நகற், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் சுழன்றடித்த புயல் ஓய்ந்துவிட்டது. அது  சுறாவளியாக மாறுமா அல்லது அமையுமா என்பதை விஷால்தான் முடிவு செய்ய வேண்டும்.


Thursday, November 30, 2017

இரட்டை இலையும் இடைத்தேர்தலும்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இரத்தத்தில் ஊறிய சின்னம். மக்கள் திலகமான எம்.ஜி.ஆர் மக்கள் தலைவனானதும் தன்னை நம்பிய தொண்டர்களுக்கு அடையாளம் காட்டிய சின்னம். வலது கையைத் தூக்கி இரண்டு விரல்களை விரித்து எம்.ஜி.ஆர் காட்டும்போது அது இரட்டை இலையின் அடையாளம் என்பதைத் தொண்டர்கள் புரிந்து கொண்டனர். எம்.ஜி.ஆரின் அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த இரட்டை இலைச்சின்னம். தமிழக அரசியல் வரலாற்றில் இரண்டு முறை முடக்கப்பட்டது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜெயலலிதாதான்  பின்னணியில் இருந்தார்  என்பதுதான் விதியின் விளையாட்டு.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அவரின் மனைவி ஜானகி அணி ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தபோது இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்தபின்னர் சசிகலா அணி ஓ.பன்னீர்ச்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, சிறைக்குச்செல்ல முன்பு தனது பிரதிநிதியாக டி.டி.தினகரனை நியமித்தார்.
சசிகலாவின் பெயர் மறைந்து தினகரன் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தினகரன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி பேசாமடைந்தையானார்.எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அடையாளம் கட்டிய இரட்டை இரட்டை இலைச்சின்னம் வெற்றி தரும் என தினகரன் நம்பினார்.

தினகரனின் நம்பிக்கைக்கு பன்னீர் முட்டுக்கட்டை போட்டார். எடப்படியின் அணியில் இருந்த முக்கியஸ்தர்கள் சிலர் பன்னீரின் பக்கம் சாய்ந்தனர். பன்னீர் அணியின் கோரிக்கையால் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. வாக்களர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் கிடைத்ததால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  இரட்டை இலையின் மகாத்மியத்தைப்  புரிந்துகொண்ட எடப்பாடி அணி, பன்னீர்  அணியுடன் இணங்கிப்போக விரும்பியது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை அறிய விசாரணைக் கமிஷன், சசிகலாவையும் மன்னார்குடி குடும்பத்தையும் ஒதுக்கி வைத்தல் ஆகியவற்றுக்கு எடப்பாடி பச்சைக்கொடி காட்டினார்.

எடப்படியின் தலைமையில் இருந்தவர்கள் தினகரனின் தலைமையில் பிரிந்து சென்றார்கள். இரட்டை இலைச்சின்னத்தைத் தமக்குத் தரவேண்டும் என கொரிய பன்னீர் தரப்பு உரிய ஆவணங்களை தேர்தல்  தலைமை அலுவலகத்துக்குக்  கொடுத்தது. ஏட்டிக்குப் போட்டியாக எடப்படியும் தினகரனும் ஆவணங்களுடன் தேர்தல் தலைமை அலுவலகத்தை நாடினார்கள். இவர்களுக்கிடையில் தீபாவும் இரட்டை இலைக்கு உரிமை கோரி ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

எடப்பாடி,பன்னீர்,தினகரன் ஆகிய மூவரின் தலைமையிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்திருந்தது. ஒன்றரைக்கோடி தொண்டர்களும் தமது பக்கம் என்றே மூவரும் பிரசாரம் செய்தார்கள். எடப்பாடியின் தலைமையிலான தமிழக அரசைத் தூக்கி ஏறிய வேண்டும் என பன்னீரும் தினகரனும் தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்களின் விருப்பத்தைக் கணக்கில் எடுக்காது, தமிழக அரசைக் காப்பாற்றுவதில் மத்திய அரசு கண்ணும்  கருத்துமாக இருந்தது.

எடப்பாடியையும் பன்னீரையும்  ஒற்றுமையாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு குறியாக இருந்தது. அவர்கள் இருவரும் பிரிந்திருந்தால் அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாக இருக்கும் என பாரதீய ஜனதா கருதியது. மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே இருவரும் இணைத்து வைக்கப்பட்டார்கள். பிரிந்தவர்கள்  இணைந்தார்கள். கட்சியின் மிக முக்கியமான பொறுப்பான பொதுச்செயலாளர் பதவி இல்லாமல் ஆக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஒருங்கினப்புக்குழு அமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்ச்செல்வம்  ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதாவும் இரட்டை இலையும் இல்லாத தேர்தலை எதிர்கொள்ள அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் தயங்கியது. எட்டு மாதங்களின் பின்னர் இரட்டை இலைச்சின்னமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பெயரும் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. அவைத் தலைவர் மதுசூதனனின் அணிக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டது. எடப்படியும் பன்னீரும் இணைந்தாலும் அறுதிப் பெரும்பனமைக்குரிய பலம் அவர்களிடம் இல்லை. ஆனால்,அதிகளவான  உறுப்பினர்களும், நிர்வாகிகளும் அவர்கள் பக்கம் இருப்பதால் சின்னமும் பெயரும் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

இரட்டை இலைச்சின்னத்தையும் கழகப் பெயரையும் பயன் படுத்த அனுமதி வழங்கப்பட்ட மறுநாள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால், இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரச இயந்திரங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கைப்பாவை என்ற குற்றச்சாட்டுக்கு உரிய பதில்  இதுவரை கிடைக்கவில்லை.

இரட்டை இலைச்சின்னம் கிடைத்ததால் வெற்றி பெறலாம் என எடப்பாடியும் பன்னீரும் நினைக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது இல்லை. ஜெயலலிதா சொல்வதை அன்று அனைவரும் வேதவாக்காக ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்றைய அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் சொல்லை நிர்வாகிகள் தட்டிக் கழிக்கிறார்கள்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்  போட்டியிடுவதற்கு முன்னர் மனுத் தாக்கல் செய்த மருது கணேஷையே திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் அறிவித்துள்ளது. எட்டு மாதங்களுக்கு முன்னர் எடப்பாடி அணியில் தினகரனும் பன்னீர் தரப்பில் மதுசூதனனும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். தினகரன் இல்லாததால் மதுசூதனன் வேட்பளராக அறிவிக்கப்படுவார்  என்றே அனைவரும் பார்த்தனர். ஆனால், விரும்பு மனுத் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது இப்படி ஒரு நிலைமை ஏற்படவில்லை. அவர் அறிவிப்பவர்தான் வேட்பாளர். விருப்பு மனு என்ற  நடைமுறையை அவர் பின்பற்றவில்லை. மதுசூதனன் போட்டியிடுவதை எடப்பாடி அணி விரும்பவில்லை என்பதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

மதுசூதனன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா, முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா உட்பட 20 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்தனர். மூன்று நாள் இழுபறிக்குப் பின்னர் வேட்பளராக மதுசூதனன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு முன்னரே வேட்பாளர் தெரிவில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பலத்த போட்டி நடைபெற்றது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை துளிர்ப்பதும் முடங்குவதும் நீதிமன்றத்தின் கையில் உள்ளது. தங்களுடைய புகாருக்கு விளக்கம் தெரிவிக்காமல் எடப்பாடி பன்னீர் தரப்புக்கு இரட்டை இலையைக் கொடுத்தது தவறு என தினகரன்  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தினகரன் இப்படி ஒரு காரியம் செய்வர் என்பதை உணர்ந்த பன்னீர் தரப்பு முன்கூட்டியே  நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இரட்டை இஅலையெக் கேட்டு யாராவது முறையிட்டால்  எங்களைக் கேட்காமல் முடிவு எடுக்கக் கூடாது என மனுத் தாக்கல் செய்துள்ளது.  

இரட்டை இலைக்காகவே  எடப்பாடியும் பன்னீரும் இணைந்தனர். பிரிந்த அணிகள் இணைந்தன. ஆனால், மனங்கள் இணையவில்லை என்ற உண்மையை டிவிட்டர் வெளிப்படுத்தியுள்ளது. எடப்பாடி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கு பன்னீர் தரப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதே போன்ற பல உள் குத்துகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அவை அனைத்தும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. சோதனையில் பன்னீர் தரப்பு வெற்றி பெற்று விட்டது. இந்த வெற்றி நிரந்தரமா இல்லையா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்.

வர்மா 

Thursday, November 23, 2017

அரசியல் ஆயுதமான ஒப்பரேஷன் கிளீன் மணி

    
 சசிகலாவின் குடும்பம்
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் குடும்பத்தினர்,  உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளிலும்  அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் பெரும் எடுப்பிலான சோதனையை நடத்தியுள்ளனர். தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் சுமார் 190 இடங்களில்  2000  அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரியவருகிறது. இது போன்ற மிகப்பெரியதொரு சோதனை இந்தியாவிலேயே இதுவரை நடைபெறவில்லை. திருமணத்துக்குச் செல்வதற்காக 200 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.  
ஜெயா தொலைக்காட்சி அலுவலகம்,மிடாஸ் மதுபான ஆலை,  கொடநாடு,சிறுதாவூர் பங்களா  உட்பட பல அலுவலகங்களில் தீவிர சோதனைநடைபெற்றது.மகாதேவன்,விவேக்,கிருஷ்ணப்பிரியா,வெங்கடேசன்,திவாகரன்,விவேகானந்தன்,டாக்டர்வெங்கடேசன்,டாக்டர்சிவகுமார்,கலியப்பெருமாள் பாஸ்கரன்,பரணி கார்த்திக் , புகழேந்தி உட்பட பலரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டுத் தேடினர்.
மன்னார்குடியைச் சேர்ந்த சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்த சசிகலா,  அரசியல்வாதியான நடராஜனைத் திருமணம் செய்தார். கணவருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்த சசிகலா, வீடியோ  கடை ஒன்றை நடத்தினார். நடராஜனின் அரசியல் தொடர்புகளினால் அரசியல் கட்சிகளின்  கூட்டங்களை வீடியோ எடுக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.  ஜெயலலிதாவுடனான நெருக்கம் உடன் பிறவா சகோதரிவரை வளர்ந்தது. தனி ஆளான ஜெயலலிதாவின் பக்கத்துணையாக சசிகலா இருந்தார்.  சசிகலா என்ற ஒற்றைப் பெண்மணியின் பின்னால் அவருடைய மன்னர் குடி குடும்பம் பெரு வளர்ச்சி பெற்றது. 
 
 
சினிமாவிலும் அரசியலிலும் ஜெயலலிதா சம்பாதித்தற்கு மிக அதிகமான சொத்துக்களுக்கு அதிபதியானது மன்னார்குடி  குடும்பம் ஜெயலலிதாவின் சொத்துக்களில் அதிகமானவை பினாமியின் பெயரிலேயே உள்ளன. வருமானம் தரும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என்பனவற்றை மிரட்டிப்பறிப்பதில் சசிகலாவின் உறவினர்கள் தேர்ச்சி பெற்றனர்.பரம்பரை பரம்பரையாக தொழில் செய்பவர்களின் சொத்தை விட அதிகமான சொத்துக்களை மன்னார்குடி இளவல்கள் கொண்டிருந்தனர். இவற்றை எல்லாம் களம் தாழ்த்தித் தெரிந்துகொண்டதால்  சசிகலாவுடன் மன்னார்குடி குடும்பத்தை விரட்டினார் ஜெயலலிதா. பின்னர் சசிகலாவை மட்டும் மன்னித்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.  அந்த மன்னிப்புத்தான் அவருக்கு எதிரானதாக மாறியது.
வருமானவரி அதிகாரிகளின் சோதனையின் போது 1௦௦௦ கோடிக்கும் அதிகமான முறைகேடுகள், போலி நிறுவனங்கள், போலியான் கணக்கு வழக்குகள் என்பன தெரியவந்துள்ளது. வள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் யாராவது  செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. வைரங்கள், அனுமதிப் பத்திரம் இல்லாத துப்பாக்கிகள் , நகைகள்,   முக்கியமான ஆவணங்கள் அன்பான கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதனையும் உறுதி செய்யவில்லை. ஜெயலலிதாவின் வீட்டில் நள்ளிரவு  சோதனை நடத்தப்பட்டது. சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படும் என செய்திகள்வெளியாகி உள்ளன. முக்கியமான பல ஆவணங்கள் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டு விட்டதாகவும், அவற்றைத் தேடி வருமானவரித்துறை அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச்  செல்லப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 விவேக்

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதனை எதிர்த்து சிலர் கோஷம் போட்டார்கள். தினகரன்,திவாகரன்,விவேக் ஆகியோர் மிரட்டலான பாணியில் பேட்டியளித்தார்கள்.  இந்தச்சோதனை அரசியல்  பழிவாங்கல் என தினகரனும் திவகரனும் அறிவித்தனர். அதிகாரிகள் தமது கடமையைச்செய்தார்கள் என்று விவேக் தெரிவித்தார்.  சசிகலாவை முழுமையாகப்  பாவித்துவித்த ஜெயலலிதா, அவரைக்கைவிட்டு விட்டார் என திவாகரன் குற்றம் சாட்டுகிறார். அதனை தினகரன் மறுக்கிறார். எனது வீட்டில் சோதனை  நடைபெறவில்லை. எனது நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது எனக் கூறி தினகரன் தப்பிக்கிறார். ஜெயலலிதாவின் மருத்துவ சிடியை சில இடங்களில் அதிகாரிகள் விசாரித்ததாக திவாகரன் குற்றம் சாட்டுகிறார்.  அதனை புகழேந்தி மறுக்கிறார். மன்னார்குடிக் குடும்பத்தில் உள்ள சில பிரச்சினைகள் சந்திக்கு வந்துள்ளன.
தமிழக  அரசைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்துவதற்கு மத்தியில் ஆட்சிசெய்யும் பாரதீய ஜனதா விரும்புகிறது. தினகரன் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். அவரை  அடக்குவதற்காகவே இதன் ஒப்பரேஷன் என சிலர் வியாக்கியானம் செய்கிறார்கள். இதே போன்ற அதிரடிச்சோதனைகள் முன்னரும் தமிழகத்தில் நடைபெற்றன. அந்த விசாரணைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று தமிழக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 கிருஷ்ணகுமாரி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது 570 கோடி ரூபாவுடன் கைப்பற்றப்பட்ட கொன்டனர்களின் விசாரணை, 89 கோடி ரூபா வழங்கிய ஆவணம்,  நந்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி, முன்னாள் தலைமைச்செயலாளர் ரம் மோகன் ராம்,மணல் மாபியா சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர்,குட்கா குடோன் ஆகிய இடங்களில் சோதனை செய்து பணம்,நகை, ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. அந்த விசாரணைகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் மூடு மந்திரமாக உள்ளன. தினகரன் தரப்பு அடங்கிவிட்டால் இந்த விசாரணைகள் எல்லாம் மூடி மறைக்கப்படும்.


  

Wednesday, November 15, 2017

இத்தாலி தோல்வியடைந்ததால் பப்போன் விடை பெற்றார்



உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பிளே-ஆப்சுற்று ஆட்டத்தில் சுவீடனிடம் தோல்வி கண்டு வாய்ப்பை இழந்ததால் இத்தாலி அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான ஜியானுலிகி பப்போன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இத்தாலியில் மிலன் நகரில் நேற்று முன்தினம் நடந்த 2-வது பிளே-ஆப் ஆட்டத்தில் இத்தாலி அணி கோல் எதுவுமின்றி சுவீடனும் டிரா கண்டது. முதல் ஆட்டத்தில் சுவீடன் அணி வெற்றி பெற்று இருந்தால் உலக போட்டிக்கு முன்னேறியது. இத்தாலி அணி உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனதால் இத்தாலி அணி வீரர்கள் மிகுந்த மனவேதனையுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். 39 வயதான கேப்டனும், கோல்கீப்பருமான ஜியானுலிகி பப்போன் சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுவதாக கண்ணீர் மல்க உடனடியாக அறிவித்தார்.

உலகின் தலைசிறந்த கோல்கீப்பர்களில் ஒருவரான பப்போன், எதிரணியினரின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவதில் கில்லாடி. 1997-ம் ஆண்டில் ரஷியாவுக்கு எதிரான சர்வதேச போட்டியில் இத்தாலி அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த பப்போன் அது முதல் 175 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 1998, 2002, 2006, 2010, 2014-ம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை போட்டிகளில் இத்தாலி அணியில் பப்போன் இடம் பெற்றார். 1998-ம் ஆண்டில் மட்டும் அவர் களம் இறங்கவில்லை. 2006-ம் ஆண்டில் இத்தாலி அணி உலக கோப்பையை வென்ற போது அந்த போட்டி தொடரில் அவர் மொத்தம் 2 கோல்களை மட்டுமே தடுக்க தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளாக 175 சர்வதேச போட்டியில் ஆடி இருக்கும் பப்போன் 79 போட்டிகளில் இத்தாலி அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அதிக சர்வதேச போட்டியில் விளையாடிய இத்தாலி வீரர் என்ற பெருமைக்குரிய பப்போன், உலக அளவில் அதிக சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்களில் 4-வது இடத்தில் உள்ளார்.

ஓய்வு குறித்து பப்போன் பேசுகையில், ‘இத்தாலி கால்பந்து உலகத்துக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். எனது அதிகாரப்பூர்வமான கடைசி சர்வதேச போட்டியில் அணி வெற்றி பெறாமல் போனதையும், உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனதையும் தலைகுனிவாக கருதுகிறேன். இந்த தோல்வியை எல்லோரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் பலிகடா ஆக்கக்கூடாது. கடந்த காலங்களிலும் நமது அணி தோல்வியில் இருந்து மீண்டு வலுவான நிலையை எட்டி இருக்கிறது. இத்தாலி அணியில் திறமையும், அர்ப்பணிப்பும் அதிகம் இருப்பதால் நல்ல எதிர்காலம் இருக்கிறதுஎன்று தெரிவித்தார்.

பப்போனை தொடர்ந்து இத்தாலி அணியை சேர்ந்த ஆந்த்ரே பாராக்லி, டானிலே டி ரோஸ் ஆகிய வீரர்களும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளனர். இத்தாலி அணியின் மானேஜர் ஜியாம்பிரோ வென்டுரா கருத்து தெரிவிக்கையில், ‘நான் ராஜினாமா செய்யவில்லை. இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவரிடம் பேசிய பிறகு தான் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய முடியும்என்றார்.

 கணக்கில் சுவீடனிடம் தோல்வி கண்டு இருந்ததால் அந்த அணி அடுத்த ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிர்ச்சிகரமாக இழந்தது. 1958-ம் ஆண்டுக்கு பிறகு  இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் போனது இதுவே முதல்முறையாகும். 60 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பறிகொடுத்து இருக்கும் இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு அதிக தடவை (18 முறை) தகுதி பெற்ற அணிகள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. பிரேசில் அணி எல்லா போட்டிகளுக்கும் தகுதி பெற்று முதலிடத்திலும், ஜெர்மனி அணி 19 முறை தகுதி கண்டு 2-வது இடத்திலும் உள்ளன.

இத்தாலி அணி 4 முறை (1934, 1938, 1982, 2006) உலக கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது. இரண்டு முறை (1970, 1994) 2-வது இடத்தை பிடித்து இருக்கிறது. ஐரோப்பிய கண்டத்தில் நெதர்லாந்துக்கு அடுத்தபடியாக வலுவான இத்தாலி அணி தகுதி இழந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் போனதால் அந்த நாட்டு வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். இதற்காக இத்தாலி கால்பந்து சம்மேளனம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.