Showing posts with label சாதனை. Show all posts
Showing posts with label சாதனை. Show all posts

Friday, July 3, 2026

உலகக் கிண்ணத்தில் ரொனால்டோவின் சாதனைக் கோல்

டொராண்டோ மைதானத்தில்  குரோஷியாவுக்கு எதிரான நொக் அவுட் போட்டியில் விளையாடிய போத்துகல் 2-1 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

 உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் நொக் அவுட்  சுற்றில் கோல் அடித்த மூத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.  இப்போட்டியின் முதல் பாதியில் போர்ச்சுகல் அணி பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்திருந்த போதிலும், கோல் அடிக்கத் தடுமாறியது. மைதானத்தில் குரோஷியா ரசிகர்கள் தொடர்ந்து ரொனால்டோவை கூச்சலிட்டு சீண்டினர். ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் முதல் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார். அதனால் 2018-இல் ரன்னர்அப் , 2022-இல் 3-வது இடத்தைப் பிடித்த குரோஷியா இந்த முறை ரொனால்டோ அணியை வீழ்த்தி விடுமோ? என்ற பரபரப்பு ஏற்பட்டது.   68-வது நிமிடத்தில்  போத்துகல் வீரர் ரெனாடோ வைகாவை, குரோஷியாவின் விலாசிக் ஃபவுல் செய்ததால் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கிறிஸ்டியானோ ரொனால்டோ மிக நேர்த்தியாக கோலாக மாற்றி ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். இதன் மூலம் உலகக் கிண்ண நொக் அவுட்  போட்டியில் முதல் கோல் , மிக மூத்த வீரர் என்ற  இரட்டைச் சாதனையை அவர் படைத்தார்.

 81-வது நிமிடத்தில் ரொனால்டோ வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து கூடுதல் நேரத்தின் 4-வது நிமிடத்தில், மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கிய கோன்சலோ ராமோஸ் தலையால்  கோல் அடித்து   2-1 என போத்துகலை  முன்னிலை பெறச் செய்தார்.

 ஆட்டத்தின் கடைசி வினாடியில் குரோஷியா அணி அடித்த கோல், விஏஆர் (VAR) பரிசோதனைக்குப் பிறகு ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குரோஷியா ரசிகர்கள் மைதானத்திற்குள் குப்பைகளை வீசி எறிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இரு அணிகளும் தத்தமது குழுக்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தன. கிறிஸ்டியானோ ரொனால்டோ (41 வயது மற்றும் 147 நாட்கள்) மற்றும் லூகா மோட்ரிச் (40 வயது மற்றும் 296 நாட்கள்) ஆகியோர் களத்தில் இருந்த நிலையில், 40 வயதுக்கு மேற்பட்ட இரண்டு கள வீரர்கள் உலகக்  கிண்ணப் போட்டியில் நேருக்கு நேர் மோதியதும் இதுவே முதல் முறையாகும்.

 

 

Sunday, June 28, 2026

6 ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடி ஓச்சோவா சாதனை

 உலகக்கிண்ணத்  தொடரின் குரூப் பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில், செக் குடியரசு அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த மெக்சிகோ, லீக் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று அசத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் மெக்சிகோ அணி பல வரலாற்று மைல்கல் சாதனைகளை செய்தது.   78வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களம் இறங்கிய மெக்சிகோ கோல்கீப்பர் கில்லர்மோ ஓச்சோவா, உலகக்  கிண்ண  வரலாற்றில் தனது 6வது உலகக்  கிண்ணத் தொடரில் விளையாடி புதிய சாதனை படைத்தார். 40 வயதான ஓச்சோவா, இதன் மூலம் மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரின் சாதனையைச் சமன் செய்தார்.

மற்றொருபுறம், மெக்சிகோவின் 17 வயது இளம் மிட்பீல்டர் கில்பெர்டோ மோரா, உலகக்  கிண்ணப் போட்டியில் தொடக்க வீரராகக் களம் இறங்கியதன் மூலம், கடந்த 24 ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டியில்  களம் இறங்கிய மிக இளைய வீரர் (17 வயது 101 நாட்கள்) என்ற சாதனையைப் படைத்தார். ஆட்டத்தின் 2வது கோலுக்கு இவரே முக்கியக் காரணமாக இருந்தார்.

 

Wednesday, June 24, 2026

ரொனால்டோ சாதனை அசத்தியது போத்துகல்


   உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போத்துகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

முன்னதாக, காங்கோ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ரொனால்டோ எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாததால் தமக்கான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இவருக்கு நிகரான வீரராக கருதப்படும் மெஸ்ஸி, ஆர்ஜென்ரீனா விளையாடிய முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலும் கோல் அடித்தது ரொனால்டோ மீதான விமர்சனங்களை மேலும் அதிகரித்தது. இருப்பினும், அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்து ரொனால்டோ தனது விமர்சகர்களின் வாயை அடைத்ததோடு புதிய வரலாற்றையும் படைத்தார்.

உஸ்பெகிஸ்தான் , ஆஸ்திரியா ஆகிய நாடுகளுகு எதிராக ரொனால்டோவும், மெஸ்ஸியும்  அடித்த கோல்களின் மூலம், இருவரும் மற்றுமொரு சாதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதாவது, ஒரு வீரரின் முதல் மற்றும் சமீபத்திய உலகக்  கிண்ண கோல்களுக்கு இடையிலான மிக நீண்ட கால இடைவெளியை (சரியாக 20 ஆண்டுகள் மற்றும் 11 நாட்கள்) இவர்கள் எட்டியுள்ளனர். இவ்விரு வீரர்களும் தங்களது முதல் உலகக் கிண்ணத் தொடர் கோலை கடந்த 2006 ஆம் ஆண்டு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை போர்ச்சுகல் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்தால், கால் இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் ஆர்ஜென்ரீனா அணியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அதே சமயம், போத்துகல் இரண்டாம் இடத்தைப் பிடித்தால், இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் நேரடியாக மோதும் வாய்ப்பு உருவாகும்.

காங்கோ அணிக்கு எதிரான ஏமாற்றமளிக்கும் தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு, உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக ரொனால்டோ ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 6-வது நிமிடத்திலேயே ஜோவோ கான்செலோவின் லோ கிராஸ் (low cross) பந்தை கோலாக மாற்றி ரொனால்டோ கணக்கைத் தொடங்கினார். அதன் பின்னர், புருனோ பெர்னாண்டஸ் கொடுத்த த்ரூ-பாஸைப் பெற்று, உஸ்பெகிஸ்தான் கோல்கீப்பர் அப்துவோஹித் நேமடோவை வீழ்த்தி முதல் பாதியிலேயே தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

இந்த ஆட்டத்தின் 90 நிமிடங்களில், கிறிஸ்டியானோ ரொனால்டோ 34 முறை பந்தைத் தொட்டு விளையாடினார். இதில் எதிரணியின் பாக்ஸ் பகுதிக்குள் 10 முறை பந்தைக் கையாண்டதுடன், இலக்கை நோக்கி 7 முறை பந்தை அடித்து, அதில் 5 முறை இலக்கைத் துல்லியமாக எட்டினார். அவரது இந்த சிறப்பான பங்களிப்பிற்காக அவர் ஆட்டநாயகனாகத் (Man of the Match) தேர்வு செய்யப்பட்டார்.

 2026 உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஒரு போட்டியில் இலக்கை நோக்கி அதிகமுறை (5 முறை) பந்தை அடித்த வீரர்களின் பட்டியலில் என்னர் வலென்சியா (vs குராசோ) ,ஜொனாதன் டேவிட்    [vs கட்டார்) ஆகியோருடன் ரொனால்டோவும் இணைந்துள்ளார். இந்த இரண்டு கோல்களின் மூலம், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல்களை அடித்த யூசிபியோவின் (Eusebio) சாதனையை ரொனால்டோ முறியடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை அரங்கில் இவரது கோல்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்ததுடன், அவரது தொழில்முறை வாழ்க்கையின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 975 ஆக அதிகரித்துள்ளது.

 

கலக்கியது கானா தடுமாறியது இங்கிலாந்து


  உலகக்  கிண்ண  குரூப் L போட்டியில்  கானாவை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து  0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. 

  நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. ஆனால், கானாவுக்கு எதிரான லீக் ஆட்டம் அவர்களுக்கு எளிதாக அமையவில்லை. உலகக் கிண்ணத்தின்   கடினமான யதார்த்தத்தை இங்கிலாந்து அணிக்கு உணர்த்திய ஒரு கடுமையான சோதனையாகவே இந்தப் போட்டி அமைந்தது. முந்தைய ஆட்டத்தில் குரோஷியா அணி இங்கிலாந்தின் மீது அழுத்தத்தை செலுத்த தீவிரமாக முயன்றது. இது இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக அமைந்து எளிதாக கோல் அடிக்க வழிவகுத்தது. ஆனால் கானா அணியோ முற்றிலும் மாறுபட்ட வியூகத்தைக் கையாண்டது. அவர்கள் பின்வாங்கி தற்காப்பதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தினர். பயிற்சியாளர் தாமஸ் துஷெலின் இங்கிலாந்து அணி நீண்ட நேரம் பந்தை தன் வசம் வைத்திருக்க கானா அனுமதித்தாலும், கோல் பகுதிக்குள் அவர்களை ஊடுருவ விடாமல் மிகச் சிறப்பாக தடுத்தது  இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றி கோனாவின் கோல் அரணை உடைக்கும் ஆட்டம் இங்கிலாந்து வீரர்களிடம் தென்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்களால் கோல் அடிக்க முடியல்லை. 

  உலகத் தரவரிசையில் 64-வது இடத்தில் உள்ள கானா அணி, முன்னணி அணியான குரோஷியாவை விட இங்கிலாந்திற்கு மிரள வைக்கும் சவாலை அளித்தது. இந்த வலுவான தற்காப்பு வியூகத்தை முறியடிப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் இங்கிலாந்திடம் இல்லாததே இந்த ஏமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என   விமர்சகர்கள் கருதுகின்றனர். 

இரண்டு போட்டிகளில் இருந்து இங்கிலாந்தும் கானாவும் தற்போது தலா நான்கு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இங்கிலாந்து 'L' பிரிவில் முன்னிலை வகிக்கிறது. 

 

200 போட்டிகளில் விளையாடி வரலாறு படைத்த மோட்ரிச்


 

கனடாவின் டொராண்டோவில் உள்ள டொராண்டோ ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2026   உலகக் கிண்ண  'எல்' பிரிவு போட்டியில்,   பனாமாவை எதிர்த்து விளையாடிய குரோஷியா பனாமாவை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  குரோஷிய நடுக்கள வீரர் லூகா மோட்ரிச், 200  ஆவது சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வரலாற்றில் நான்காவது ஆண்   வீரர் ஆனார்.  

மாற்று வீரரான ஆன்டே புடிமிர் 54-வது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார். இதன் மூலம், குரூப் L-ல் குரோஷியா இந்தப் போட்டியில் தனது முதல் மூன்று புள்ளிகளைப் பெற்றதுடன், இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகும் புள்ளி எதுவும் பெறாத பனாமாவையும் போட்டியிலிருந்து வெளியேற்றியது.

2006 ஆம் ஆண்டு ஜேர்மனியில் தனது உலகக்  கிண்ணப் போட்டியில் அறிமுகமான      மோட்ரிச் [40] , 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய   கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ,குவைத்தின் பாதர் அல்-முத்தாவா ஆகியோருடன் இணைகிறார்.  

57-வது நிமிடத்தில், பனாமாவின் கார்னர் கிக்கிலிருந்து ஒரு எதிர் தாக்குதலைத் தொடங்கி, மரியோ பாசலிச்சை கோலை நோக்கி அனுப்பியதன் மூலம், குரோஷியாவின் முன்னிலையை இரட்டிப்பாக்க மோட்ரிச் உதவினார். ஆனால், அந்த நடுக்கள வீரரின் ஷாட் தடுக்கப்பட்டது. 43,036 ரசிகர்களின் முன்னிலையில், 81-வது நிமிடத்தில் மோட்ரிச் மாற்று வீரராக வெளியேற்றப்பட்டார். அவருக்கு எழுந்து நின்று கரவொலி எழுப்பப்பட்டது.

குரோஷியாவின் இந்த வெற்றியானது  சுமார் நாற்பது லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டின் மிகச் சிறந்த தொடர் வெற்றிகளில் ஒன்றைத் தொடரச் செய்கிறது. 1998-ல் தனது முதல் உலகக் கிண்ணப்  போட்டிக்குப் பிறகு, குரோஷியா 2018-ல் ஒருமுறை இரண்டாம் இடத்தையும், 1998 ,2022 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

 

 

Tuesday, June 9, 2026

புதிய சாதனைகளுடன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார் ஸ்வெரெவ்


 


பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில், இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலியை ஐந்து செட்கள் கொண்ட பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தி , அலெக்சாண்டர் ஸ்வெரெவ் இறுதியாக தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் .

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில், இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலியை ஐந்து செட்கள் கொண்ட பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தி , அலெக்சாண்டர் ஸ்வெரெவ்   தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் .

பிலிப் சாட்ரியர் மைதானத்தில் நான்கு மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில், இரண்டாம் நிலை வீரரான அவர் 6-1, 4-6, 6-4, 6-7 (5/7), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 1996  அவுஸ்திரேலிய ஓபனில் போரிஸ் பெக்கருக்குப் பிறகு ஒரு முக்கியப் போட்டியை வென்ற முதல் ஜேர்மானிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

 பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம் ஸ்வெரெவ் படைத்த சாதனைகளின் பட்டியல்

1 - ஓபன் சகாப்தத்தில் பிரெஞ்சு ஓபனை வென்ற முதல் ஜேர்மானிய ஆண் வீரர் ஸ்வெரெவ் ஆவார்.

2 - 1988-ல் நான்கு போட்டிகளிலும் 128 வீரர்கள் கொண்ட சுற்று அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, தாமஸ் ஜோஹன்சனுக்குப் (2002 அவுஸ்திரேலிய ஓபன்) பிறகு, ஏடிபி முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரு எதிராளியைத் தோற்கடிக்காமல் தனது முதல் ஸ்லாம் பட்டத்தை வென்ற இரண்டாவது வீரர் ஸ்வெரெவ் ஆவார்.

3 - பெக்கர் (6 முறை) , ஸ்டிச் (1991 விம்பிள்டன்) ஆகியோருக்குப் பிறகு, ஓபன் எராவில் மூன்றாவது ஜேர்மன் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் சாம்பியன்.

3 - டொமினிக் தீம் (1993; 2020 யுஎஸ் ஓபன் வென்றவர்) , டானில் மெட்வெடேவ் (1996; 2021 யுஎஸ் ஓபன் வென்றவர்) ஆகியோருடன் இணைந்து, 1990களில் பிறந்த வீரர்களில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது வீரர்.

4 - 1988 முதல், ஆண்ட்ரே அகஸ்ஸி, ஆண்டி முர்ரே , நோவாக் ஜோகோவிச் ஆகியோருக்குப் பிறகு, அலெக்சாண்டர் ஸ்வெரெவ் தற்போது நான்கு ஏடிபி பெரிய பட்ட நிலைகளிலும் (கிராண்ட் ஸ்லாம், மாஸ்டர்ஸ் 1000, ஏடிபி டூர் ஃபைனல்ஸ் மற்றும் ஒலிம்பிக்ஸ்) வெற்றி பெற்ற நான்காவது வீரர் ஆவார்.

25 - ஓபன் சகாப்தத்தில், ஸ்வெரேவை (25) விட ஏடிபி-நிலையில் அதிக தொழில்முறை பட்டங்களை வென்ற இரண்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர் – இவான் லெண்டல் (41) ,தாமஸ் மஸ்டர் (29).

30 - கடந்த 30 ஆண்டுகளில் ஒரு மேஜர் பட்டத்தை வென்ற முதல் ஜேர்மானிய ஆண் வீரர் ஸ்வெரெவ் ஆவார் (1996 ஆஸ்திரேலிய ஓபனில் போரிஸ் பெக்கர்).

41 - ஸ்வெரெவ் தனது 41வது ஆடவர் ஒற்றையர் பிரதான சுற்றில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் – ஓபன் சகாப்தத்தில், கோரன் இவானிசெவிச் (48, விம்பிள்டன் 2001) மட்டுமே இதைவிட அதிக காலம் எடுத்துக்கொண்டுள்ளார்.

125 - தனது முதல் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பாதையில், ஸ்வெரெவ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தனது 125வது ஆண்கள் ஒற்றையர் ஆட்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இது ஓபன் சகாப்தத்தில் வேறு எந்த வீரரும் பெற்றிராத அதிகபட்ச வெற்றியாகும்.