Friday, September 29, 2017

கோஹ்லியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அவுஸ்திரேலியா

 100 ஆவது போட்டியில் 100 அடித்த வார்னர்


இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளில் வெற்றிபெற்று பத்தாவது போட்டியின் வெற்றியை சாதனையுடன் கொண்டாட இந்திய அணித் தலைவர் கோஹ்லி காத்திருந்தார். தொடர்ச்சியாக 11  போட்டிகளில் தோல்வியடைந்து,     இரண்டு போட்டிகளில் முடிவு  எட்டப்படாமையால் ஒரே ஒரு வெற்றிக்காக அவுஸ்திரேலிய அணித் தலைவர்  காத்திருந்தார். ஆகையால் பெங்களூரில் நடந்த போட்டி கோஹ்லிக்கும் ஸ்மித்துக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்தது. அதிரடியாக விளையாடிய அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 5  விக்கெற்களை இழந்து 334 ஓட்டங்கள் எடுத்தது. 335 என்ற இமாலய இலக்கி நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா  50 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 313 ஓட்டங்கள் 313 எடுத்தது. அவுஸ்திரேலியா 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

 ஒருநாள் தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் இந்திய அணியில் குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அக்‌ஷர் பட்டேல், முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அவுஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெலும் கடந்த போட்டியில் காயமடைந்த ஆஷ்டன் அகரும்விளையடவில்லை அவர்களுக்கு பதிலாக மேத்யூ வேட், ஆடம் ஜம்பா ஆகியோர் இடம் பிடித்தனர்.

94இல் ஆட்டமிழந்து சதத்தைத் தவற விட்ட ஆரோன் பிஞ்ச்

 


  டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் போட்டியை ஆரம்பித்தனர்.  துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளத்தைஇருவரும் சரியான முறையில் பயன்படுத்தி ஓட்டங்களைக் குவித்தனர். 35 ஆவது ஓவர் வரை  இவர்களைப் பிரிக்க முடியாது இந்திய வீரர்கள் தடுமாறினார்.

இந்தியாவின் சுழல், வேகம் எதுவுமே இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. 15.4 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டினர். 31.2 ஓவர்களில் 200 ஓட்டங்களைக் கடந்தார்கள். இவர்கள் இருவரும் இணைந்து 231  ஓட்டங்கள் எடுத்தனர்.இந்த மைதானத்தில் 200 ஓட்டங்களுக்கு மேல் அடித்த முதல் ஜோடி இதுதான். அரைசதத்திற்கு பிறகு டேவிட் வார்னரின்  வேகம் சூடுபிடித்தது. சாஹலின் சுழலில் இரு சிக்சர்களை பறக்க விட்டார். இந்திய பந்து வீச்சை சிதறடித்த அவர் பவுண்டரி அடித்து தனது 14வது சதத்தை நிறைவு செய்தார். வார்னருக்கு இது 100வது ஒரு நாள் போட்டியாகும். 100வது ஆட்டத்தில் சதம் விளாசிய முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்த இந்தக் கூட்டணியை ஒரு வழியாக   சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் பிரித்தார்.  231  ஓட்டங்களை எடுத்தபோது டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். 119 பந்துகளுக்கு முகம் கொடுத்த டேவிட் வார்னர் 12 பவுண்டரி 12 சிக்ஸர் அடங்கலாக 124 ஓட்டங்கள் எடுத்தார்.  இந்தியாவுக்கு எதிராக முதலாவது  விக்கெட்டுக்கு அவுஸ்திரேலிய ஜோடி எடுத்த அதிகபட்சம்   இது தான். 1986ம் ஆண்டு ஜெப்மார்ஷ்- டேவிட் பூன் எடுத்த 212 ஓட்டங்களே அதிகபட்சமாக இருந்தது.

வார்னரைத் தொடர்ந்து சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பிஞ்ச் 94  ஓட்டங்களில்  ஆட்டம் இழந்ததால் சத்தத்தைத் தவறவிட்டார். 96 பந்துகளை எதிர்கொண்ட ஆரோன் பிஞ்ச்  10 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கலாக  94 ஓட்டங்கள் எடுத்து அடுத்த ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.  கப்டன் ஸ்டிவன் ஸ்மித் மூன்று ஓட்டங்களுடன் வெளியேறினார்.


 ரன் அவுட்டாகும் ரோகித்





அவுஸ்திரேலியா 375 ஓட்டங்கள் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.   . ஆனால் 5 ஓட்டங்களில் இடைவெளியில் 3 வீரர்கள் ஆட்டமிழந்ததால்ஓட்ட எண்ணிக்கை குறைந்தது. அடுத்த 7 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.ஆனால், கடைசி நேரத்தில் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்பின் அதிரடி இந்தியாவைக் கலங்கடித்தது. 30 பந்துகளைச் சந்தித்த ஹேன்ட்ஸ்கோம்ப், 3 பவுண்டரி. ஒரு சிக்ஸர் அடங்கலாக 43 ஓட்டங்கள் எடுத்தார் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்த அவுஸ்திரேலியா 334 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கு   335  என்ற மெகா இலக்கை  நோக்கி களம் புகுந்த இந்திய அணி வீரர்களான  ரஹானேயும் ரோகித் சர்மாவும் அருமையான தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். தொடர்ந்து 3வது அரைசதம் அடித்த ரஹானே 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்..

 ரஹானே வெளியேற கப்டன் விராட் கோஹ்லி புகுந்தார். அவ்வப்போது பந்தை சிக்ஸருக்கு தூக்கியடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய ரோகித் சர்மா, 65 ஓட்டங்களில் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். சிறிது நேரத்தில் கப்டன் விராட் கோஹ்லியும் 21 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதன் பிறகு ஹர்திக் பாண்ட்யா  41 ஓட்டங்கள், கேதர் ஜாதவ் 67 ஓட்டங்கள்,  மனிஷ் பாண்டே 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசிக்கட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட டோனி 13 ஓட்டங்கள் மட்டும் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெற்களை இழந்த இந்தியா 313  ஓட்டங்கள் எடுத்தது.  அவுஸ்திரேலியா 21 ஓட்ட  வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் அபாரகளத்தடுப்பு  இந்திய வீரர்களுக்கு  கடும் நெருக்கயைக் கொடுத்தது. தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தப்  போட்டியில்  தோல்வியடைந்ததால்,, கோஹ்லியின் தலைமையில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியாவின் வெற்றிப் பயணம் முடிவடைந்தது. 2003ம் ஆண்டுக்கு பிறகு பெங்களூருவில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இது தான். அதே சமயம் வெளிநாட்டு மண்ணில் விளையாடிய  13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றியைக் காணாத   அவுஸ்திரேலியாவின்  வரலாறு முடிவுக்கு வந்தது.. 


இத்தொடரின் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற ஒக்ரோபர் முதலாம் திகதி  நாக்பூரில் நடக்கிறது

Thursday, September 28, 2017

ஒருநாள் போட்டித் தொடரை வென்றது இங்கிலாந்து

இரண்டாவது சதம் அடித்த  எவின் லெவிஸ்


இங்கிலாந்துக்குச் சென்றுள்ள  மேற்குஇந்தியத் தீவுகள்  கிரிக்கெட் அணி   மூன்று டெஸ்ட், ஒரு ரி-20 போட்டிகளில் விளையாடியது.  டெஸ்டில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும்,ரி20 யில்  மேற்கு இந்தியத்தீவும்  வெற்றி பெற்றன ஐந்து ஒருநாள் போட்டிகளில் இரண்டு நாட்டு அணிகளும் விளையாடி வருகின்றன. .நேற்றுஓவல் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஆறு ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முன்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளில் ஒரு போட்டி  மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து  தொடரைக் கைப்பற்றியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. மேற்கு இந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்களான     கிரிஸ் கெயிலும், எவின் லெவிசும் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 11 ஓட்டங்களிலும், மார்லன் சாமுவேல்ஸ் 1 ஓட்டத்துடனும் வெளியேறினர்.அப்போது    மேற்கு இந்தியா, 6.1 ஓவர்களில்  3 விக்கெற்களை இழந்து  33 ஓட்டங்கள்  எடுத்திருந்தது. அதன்பின்னர் எவின் லெவிசுடன் ஜேசன் முகமது ஜோடி சேர்ந்தார். ஜேசன் முகமது 46 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள்  சேர்த்தது.

காயம் காரணமாக வெளியேற்றப்படும்  எவின் லெவிஸ்



அடுத்து களம் இறங்கிய எவின் லெவிஸ் - ஜேசன் ஹோல்டர் ஜோடி அதிரடியில் இறங்கியது. இவர்கள் இருவரும் இணைந்து மேற்கு இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தின. சிறப்பாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 77 ஓட்டங்களில்ல் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் அதிரடியாக விளையாடிய எவின் லெவிஸ் காயமடைந்ததால் மைதானத்தில் இருந்து  வெளியேறினார். 130 பந்துகளுக்கு முகம் கொடுத்த எவின் லெவிஸ்  17 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கலாக  176 ஓட்டங்கள்  குவித்தார்.  

மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெற் இழப்பிற்கு 356 ஓட்டங்கள் எடுத்தது.  ரோவ்மன் பவல் 28 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.   357 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய  இலக்குடன்    இங்கிலாந்து அணி களமிறங்கியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ராய் 84 ஓட்டங்கள்  எடுத்து அல்ஸாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ஓட்டங்கள் சேர்த்து தொடக்க நல்ல தொடக்கத்தை கொடுத்தது. ஜானி பேர்ஸ்டோ 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

  ஜோ ரூட் 14 ஓட்டங்களிலும், இயான் மார்கன் 19  ஓட்டங்களிலும்,  சாம் பில்லிங்ஸ் 2 ஓட்டங்களிலும், ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜோஸ் பட்லருடன், மோயின் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ஓட்டங்கள்  சேர்த்தது.

இங்கிலாந்து அணியின் 35.1 ஓவரில் 5 விக்கெற் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் நடுவர்கள் ஆட்டத்தை முடித்துவைத்தனர். இங்கிலாந்து அணி டீ.எல். விதிப்படி 6 ஓட்ட  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஐந்து விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் விழ்த்தினார். 176 ரன்கள் எடுத்த மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் எவின் லெவிஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.