Tuesday, December 31, 2013

டில்லியில் மையம்கொண்ட புதிய ஆட்சி

ஊழலின் மொத்த உருவமான காங்கிரஸ் கட்சியை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் எனச் சபதமிட்டு அரசியல் அரங்கத்தில் தோன்றிய அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் என்றால் என்ன என்பதை டில்லி சட்ட சபைத் தேர்தலின் மூலம் புரிந்து கொண்டார். தமது கோட்டை என இறுமாந்திருந்த காங்கிரஸை கூட்டித்துடைத்து குப்பைக் கூடையில் போட்டது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி.
நாற்றமெடுக்கும் ஊழலை கூட்டிச் சுத்த மாக்குவதற்காக  துடைப்பத்தை தனது சின்னமாகக் கையில் எடுத்தது ஆம் ஆத்மி கடசி. ஆம் ஆத்மி கட்சி எதிர்பார்த்தது போன்று டில்லியில் காங்கிரஸை ஓரங் கட்டியது.அதேவேளை காங்கிரஸின் ஆதரவுடன் கெஜ்ரிவால் முதல்வரானார்.

 அண் மையில் நடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ்கட்சி பின்னடைவைச் சந்திக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை வகிக்கும், ஆட்சியைக் கைப்பற்றும் என்றே கருத்து கணிப்புகளும் எதிர்வு கூறின.ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்று யாருமே கணிக்கவில்லை.
ஆம் ஆத்மி கட்சியினால் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சிதறடிக்கப்படும்.பாரதீய ஜனதாக்கட்சி சுலபமாக ஆட்சியைப் பிடித்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.70 தொகுதி கள் கொண்ட டில்லி சட்ட சபையில் பாரதீய ஜனதாக்கட்சி 31 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ்கட்சி 8  தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.ஆட்சி அமைப்பதற்கு 36 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். உதிரிக்கட்சியின் ஆதரவைப் பெற்றாலும் யாரும் ஆட்சியமைக்க முடியாத நிலை. பரம எதிரியான காங்கிரஸ் மனது வைத்தால்தான் டில்லியில் ஆட்சிபீடம் ஏறலாம் என்ப தைபாரதீய ஜனதாக் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் உணர்ந்தன.
டில்லியில் ஆட்சிபீடம் ஏறமுடியாது என்பதைத் தெரிந்து கொண்ட பாரதீய ஜனதாக் கட்சி கெளரவமாக ஒதுங்கிக் கொண்டது.ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் முன் வந்தது.காங்கிரஸின் ஆதரவை ஆம் ஆத்மி உடனடியாக ஏற்கவில்லை. தமிழக அரசியல் கட்சிகளைப் போன்று பொதுச்சபை கூடி தலைவர் முடிவெடுப்பார் என்று கூறவில்லை. மக்கள் கருத்தைக்  கேட்பதற்கு காலஅவகாசம் கேட்டது.

காங்கிரஸின் ஆதரவு தேவை இல்லை .மறு தேர்தல் தான் என்று உறுதியாக இருந்த ஆம் ஆத்மி சற்று இறங்கிவந்தது.டில்லியில்  உள்ள  நகரங்களிலும் சேரிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியது  ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மக்களின் கருத்துக்களைக் கேட்டார்கள்.மூன்று இலட்சத்து 24 ஆயிரம்  எஸ். எம்.எஸ்.இரண்டு இலட்சத்து 38 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள்,ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ஈமெயில் மூலம் மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தார்கள். காங்கிரஸின் தயவுடன் ஆட்சிபீடம் ஏறலாம் என்ற மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து ஆட்சியமைக்க  சம்மதித்தது ஆம் ஆத்மி.

டில்லியில் இதுவரைகாலமும்  தனி ஆட்சி தான் நடைபெற்றுவந்தது.இப்போது தான் முதல் முதலாக இன்னொரு கட்சியின் உதவியுடன் ஆட்சி அமைகிறது.ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட ஆம் ஆத்மி எப்படிப்பட்ட ஆட்சியை அமைக்கப் போகிறதென்பதை  அறிவதற்காக வே காங்கிரஸ்கட்சி  ஆதரவு வழங்கி உள்ளது. தலைமையின்  முடிவை டில்லியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்கவில்லை. ஒரு சில இடங்களில் எதிர்ப்பு கோஷங்களும், போராட்டங்களும் நடை பெற்றன. காங்கிரஸின் முடிவுக்கு எதிராகப் போராடும் தொண்டர்கள் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் படங்களை எரித்தார்கள்.தப்பு செய்த தனது கட்சித்தலை வருக்குத் தண்டனை கொடுக்க  அவர்கள் தயாராக இல்லை.

டில்லியில் ஆட்சிபீடம் ஏறும் ஆம் ஆத்மியின் முன்னால்  மிகப் பெரிய சவால் உள்ளது . ஆட்சிபீடம் ஏறும் கட்சிகள் எவையும்  வாக்குறுதியை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. ஆம் ஆத்மியின் தேர்தல் கால வாக்குறுதி மிகவும் கடினமானது.ஆட்சிபீடம் ஏறியதும் மின் கட்டணத்தை 50 சதவீதமாகக் குறைப்போம் என ஆம் ஆத்மி வாக்குறுதியளித்தது.மின் கட்டணத்தை பாதியாகக் குறைக்க என்ன மாயம் செய்யப் போகிறது ஆம் ஆத்மி கட்சி.

டில்லியை மாநில அந்தஸ்தாக உயர்த்து வது, 50 இலட்சம் மக்களுக்கு தினமும் 700 லீற்றர் தண்ணீர், இரண்டு இலட்சம் பொதுக் கழிப்பறை,போக்குவரத்து தரமுயர்த்துவது, ஊழல் செய்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை என்பனவும் ஆம் ஆத்மியின் வாக்குறுதிகளில் அடங்கும்.இவை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத வாக்குறுதிகள். இவற்றை நிறைவேற்றத் தவறினால் பொதுத் தேர்தலில் ஆம் ஆத்மி பின்னடைவைச் சந்திக்கும். தேர்தல்கால வாக்குறுதிகளில் ஒரு  சிலவற்றை யாவது நிறைவேற்றினால்தான் இந்தியப் பொதுத்தேர்தலில் காங்கிரஸும் பாரதீய ஜனதாக்கட்சியும் பின்னடைவைச் சந்திக்கும். இல்லையேல் தான் வெட்டிய குழியில் தானே விழ வேண்டிய நிலை ஆம் ஆத்மிக்கு ஏற்படும். ஊழல் செய்த அரசில்வாதிகள் மீது நடவடிக்கை என்ற ஆம் ஆத்மியின் கோஷத்தை டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இரசிக்கவில்லை.எங்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்து எங்கள் மீது நடவடிக்கையா என்று பொருமுகின்றனர் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலை வர்கள்.

டில்லியில் இளவயதுமுதல்வர் என்ற பெருமையைப் பெறுகிறார் 45 வயதான அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு உறு துணையாக இருக்கும் சிகோடியாவுக்கு 41 வயது. இவர் துணை முதல்வராகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.டில்லியில் துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை. ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்களின் சராசரிவயது நாற்பதாகும். அமைச்சரவை அறிவிக்கப்படும் முன்பே பூசல் வெடித்துள்ளதாகத் தகவல்கள்  கசிந்துள்ளன. டில்லி சட்ட சபைத்தேர்தலில் ஆம் ஆத்மி  கட்சியின் சார் பில் வெற்றி பெற்ற அனைவரும் தலைவரை போன்று நேர்மையானவர்கள் தானா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. காங்கிரஸ் கைவிட்ட காங்கிரஸ்குல்லாவை  ஆம் ஆத்மியினர்கள் தம் தலையில்  சூட்டியுள்ளனர். ஊழ லையும் சுமப்பார்ர்களா  என்பதை காலம்தான் கூற வேண்டும். 
வர்மா 
சுடர் ஒளி 29/12/13

ப.விஷ்ணுவர்த்தினியின் நினைவு நல்லது வேண்டும்

ஜீவநதியின் 28 ஆவது வெளியீடாக ப.விஷ்ணுவர்த்தினியின் நினைவு நல்லது வேண்டும்என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. நினைவு நல்லது வேண்டும் என்ற தலைப்பே வாசிக்கத் தூண்டுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக   உளவியற்றுறை இறுதி வருட  மாணவியான விஷ்ணுவர்த்தினியின் கதைகள் அனைத்தும் படித்து முடித்ததும் உளவியல் சிந்தனையை ஏற்படுத்துகின்றன. மனதில் உறுதி வேண்டும் என்ற இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.

போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள் மட்டுமல்ல,போர் எதற்காக நடைபெறுகிறது என்பதை அறியாத சிறுவர்களும் இப்போரினால்  பாதிக்கப்பட்டுள்ளார்கள்  என்பதையும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வதற்காக  தம்மைச் சிதைத்துக் கொள்வதையும் யதார்த்த பூர்வமாக தனது கதைகளினூடாக வெளிப் படுத்தி உள்ளார்.

உறவினர்கள் இல்லாத வயதான பெண்ணுக்கும் பெற்றோரை இழந்த மூன்று சிறு  பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் உறவுப்போராட்டம் சொந்தமில்லா பந்தங்கள்  என்ற சிறுகதை மூலம்  வெளிப்படுகிறது. பெற்றோர் இல்லாத அவர்களை அந்த   அம்மம்மா நன்றாகப் பராமரிப்பார் என்று நிம்மதிப்பெருமூச்சு விடுகையில் முகாமைவிட்டு வெளியேறும் அம்மம்மாவின் செயல் மனதை உறுத்துகிறது.தனது சீவியத்துக்கே  வருமானம் இல்லாத அப்பெண் இரண்டு குழந்தைகளை முகாமிலே தவிக்கவிட்டு ஒரு குழந்தையை மட்டும் தன்னுடன் கூட்டிச் செல்கிறார்.
மூன்று குழந்தைகளையும் அழைத்துச் சென்று நிர்க்கதியாக இருப்பதைவிட ஒரு குழந்தையை நன்கு பராமரிக்கலாம் என்று அப்பெண் நினைத்ததால் அவளின் முடிவு சரிதான்.இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற அவள் இறைவனிடம் இறைஞ்சும் போது வாசகர்களும் சேர்ந்து விடுவார்கள்என்பது திண்ணம்.
உதயன் வெள்ளிவிழா எழுத்தாக்கப் போட்டியில் மூன்றாம் பரிசுபெற்ற கதை இது. 

கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் வாழும் இளம் பெண்ணின் கதைதான் திருப்பம்.அவளது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்த மறுமணம் செய்து வைக்க தாய் முயற்சிக்கிறாள். தாயின் விருப்பத்தை மறுத்து கணவனின் நினைவாக வாழும்  இளம் பெண்ணின் வாழ்வில்  ஏற்படும் சம்பவங்களை இக்கதை வெளிப்படுத்துகிறது. யுத்தத்தில் இழந்து  முகாமிலிருந்து வெளியேறியவள் கணவனின் ஊறுகாய் வியாபாரத்தை கையில் எடுக்கிறாள்.
இளம் பெண்களையும்  கணவனை இழந்த பெண்களையும் சுற்றிவரும்  வல்லூறுகள் அவளையும் சுற்றி வட்டமிட்டன. அவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு புதுமைப் பெண்ணாக மிளிர்கிறாள் இக் கதையின் நாயகி.
கியூடெக் 2011 பெண்கள்தின சிறு கதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற கதை இது. 

சத்திர சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கும் அங்கு கடமைபுரியும் தாதிக்கும்  இடையேயான போராட்டம் தான் நினைவு நல்லது வேண்டும்.   நோயாளியான தாய்க்கும் மகளுக்கும் சிங்களம் தெரியாது. தாதிக்குத் தமிழ் தெரியாது. எல்லோருடனும் சிரித்து அன்பாக ஆதரவாகப் பழகும் தாதி தங்களை மட்டும் ஏன் முறைக்கிறார் என்பது தெரியாது தாயும் மகளும் தவிக்கின்றனர்.
தாதியின் கணவன் இராணுவத்தில் இணைந்ததாகவும் யுத்தத்தில் அவன் இறந்ததாகவும் அங்கு வேலை செய்யும் தமிழ்ப் பெண் மூலம் தாயும், மகளும் அறிகின்றனர். யுத்தத்தில் சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அந்தத் தாதிக்கு உணர வைக்கின்றனர். புரிந்துணர்வு இல்லாததால் தான் பிரச்சினை என்பதை  இக்கதை உணர்த்துகிறது.  

முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவரை அறிமுகப்படுத்துவதுடன் ஊமைக் காயம் என்ற சிறுகதை ஆரம்பமாகிறது. பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள்தான் முதியோர் இல்லத்தில் இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் கதையைத் தொடர்ந்து படிக்கும்போது பெற்ற  தாயின்  பாசத்தால் பிரான்ஸில் இருந்து தாய் நாட்டுக்கு வந்து அநாதையானவரின் கதை தான் இது என்ற உணர்வு பிறக்கிறது.
சொந்தத்துக்குள்ளேயே அந்தஸ்து பார்க்கும் சமூகம் வெள்ளைக்காரியை மருமகளாக ஏற்றுக்கொள்ளாது. பிரான்ஸில் உள்ள மகனுக்கு ஊரில் பெண் பார்க்கிறாள் தாய். மகன்  பிரான்ஸில் திருமணம் செய்ததை அறிந்து தொடர்பை துண்டிக்கிறாள்.தாயைச் சமாதானப்படுத்த புதுக்குடியிருப்புக்கு திரும்புகிறான் மகன். அப்போது நடந்த யுத்தத்தில் சொந்த பந்தங்களையும் உடைமைகளையும் இழந்து பிரான்ஸுக்கு திரும்ப வழி தெரியாது முதியோர் இல்லத்தில் தஞ்சமடைகிறான்.

அப்பாவின் விருப்பத்துக்காக  தனது சுகத்தைத் துறக்கும் இளைஞனின் கதை மெழுகுவர்த்தி. மகன் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார் தந்தை. பல்கலைக்கழகத்துக்குச் சென்றால் நல்ல விக்கு விற்கலாம் என துணிக்கடை வியாபாரி நினைக்கிறார். கல்வியை வியாபார மாக்கும் தந்தைக்காக தன் காதலைத் துறக்கிறான் மகன்.

அநாதைக் குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்தான் என்பதை  கடவுளின் குழந்தைகள் என்ற கதையின் மூலம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைக்கு தான் அநாதை என்ற எண்ணம் வரக்கூடாது என்பது  பெற்றோரின் விருப்பம்.
ஆனால்,நம் சமூகம் அதற்கு இடம் கொடுப்பதில்லை. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களை அநாதை என்ற உண்மையை வெளிப்படுத்தி பிஞ்சுமனங்களில் நஞ்சை விதைத்து விடுகிறது. பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு இக்கதை உதாரணம்.

வெளிநாட்டுக்குச் சென்றால் வசதியாக வாழலாம் என்பதுதான் பொதுவான அப்பிப் பிராயம். யுத்தத்தில் கணவரையும் சொந்தங்களையும் இழந்த இளம் பெண் மகளின் எதிர்கால வாழ்க்கைக்காக கனடாவில் தஞ்சமடைவதே எந்தையும் தாயும் கதையின் கரு. தாய் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்ற பெண்மணியை யுத்தம் அகதியாக்கி நாட்டை விட்டு வெளியேற வைக்கிறது.

பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க் கையில் ஏற்படும் நட்பு, தியாகம் என்பவற்றை விட்டுக்கொடுப்பு என்ற கதை கூறுகிறது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவனின் குடும்பப் பிரச்சினை, அதனால் அவன் எதிர் நோக்கும் சிக்கல் ஆகியவை மனதை நெருக்கு கின்றன.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை விழித்திரு.சிறுவர் துஷ்பிரயோகம், அதனால் ஏற்படும் பாதக விளைவுகள், பருவமறியாச் சிறுமி ஒருத்தி என்ன நடந்தது என்றே தெரியாது தாயாகும் அவலம், சட்ட விரோத கருக்கலைப்பு என்பவற்றை நாசூக்காக கூறியுள்ளார்.
பெற்றோரை இழந்த அம்மாவுடன்  வாழும் இரண்டாம் வகுப்பு மாணவனின் மன உணர்வு களை வெளிப்படுத்தும் கதை நாதி யில்லாப்  பிறவியிலே. நேர்த்தியை நிறைவேற்ற குமரனின் தகப்பனும், தாயும், தங்கை யும்  கிளிநொச்சிக்குப் போய் சண்டையில் இறக்கிறார்கள். அம்மாவுடன் நின்ற குமரன் உயிர் பழைக்கிறான். குமரனின் நிலையை அறிந்த ஆசிரியை அன்பு காட்டுகிறார். அன்பு அம்மம்மா இறந்ததால் அநாதை இல்லத்தில் சேர்க்கப்படுகிறான் குமரன்.
நெல்லியடி மத்திய மகா வித்தியாலய 90 ஆவது ஆண்டு நிறைவு சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதை இதுவாகும்.

மறப்பேனோடி என்ற சிறுகதையும் மறுமணம் பற்றிய கதைதான்.முள்வேலி முகாமில் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள். காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள். தவிர உண்மைச் சொன்னால்  தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஒரு நாள் பயிற்சி எடுத்து இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்களும் அடங்குவர்.
முகாம் வாழ்க்கை முடிந்து வீடு திரும்பிய பின்னும் குழந்தையுடன் கணவனைத் தேடி அலைகிறாள் அந்த இளம் பெண். கணவனைத் தேடி அலையும் வேளையில் தவற விட்ட பல்கலைக்கழக படிப்பையும் தொடர்கிறாள். நாட்டு நடப்புகளையும் கூறி அவளை மறுமணத்துக்கு சம்மதிக்க வைக்கிறாள் தாய். காணாமல் போன கணவனா புதிய கணவனா என்ற மனக்குழப்பம் ஏற்படுகிறது. அவள் மனதில் இருந்து காணாமல் போன கணவனை அகற்ற முடியவில்லை. இறுதியில் தெளிவு பெற்று மறு மணத்தை நிராகரிக்கிறாள்.

பிள்ளைகளுக்காக தன்னை இழக்கத் தயாராகும் பெண்ணின் கதை விட்டில்கள். இரண்டு கதைகளைத் தவிர ஏனைய கதைகள் அனைத்தும் யுத்தத்துடன் சம்பந்தப்பட்டவை. ஒவ்வொரு கதையிலும் யுத்தத்தின் வடுக்கள் ஆழமாகப்பதியும் வகையில் எழுதியுள்ளார்.
ஆர்ப்பாட்டம் இல்லாத இலகுவான மொழி நடை.சொல்ல வேண்டிய அனைத்தையும் கனக்கச்சிதமாக  வெளிப்படுத்தியுள்ளார். வயதை மீறிய மொழிநடை, இவரது வெற்றிக்கு காரணம்.

சூரன்  
சுடர் ஒளி 19/12/13

Monday, December 30, 2013

ஜீவநதி மார்கழி

கலை இலக்கிய மாத சஞ்சிகையான ஜீவநதி மார்கழி மாத இதழ் மலையகச் சிறப்பிதழாக  வெளியிடப்பட்டுள்ளது. ஜீவநதியின் சிறப்பிதழ்கள் பற்றி ஆசிரியர் தனது பக்கத்தில் விரிவாகக் குறிப்பட்டுள்ளார். பெண்கள் சிறப்பிதழ், சிறுகதை சிறப்பிதழ், கவிதை சிறப்பிதழ், எழுத்தாளர் மாநாட்டுச் சிறப்பிதழ், உளவியல் சிறப்பிதழ், கே.எஸ். சிவகுமாரனின் பவள விழாச் சிறப்பிதழ், இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், அவுஸ்திரேலியச் சிறப்பிதழ், கனடாச் சிறப்பிதழ் வரிசையில் மலர்கிறது மலையகச் சிறப்பிதழ். முன்னைய  சிறப்பிதழ்களின் வெற்றியே இச்சிறப்பிதழ் வெளிவர உந்து சக்தியாக இருந்தது எனலாம
மலையகப் படைப்பாளிகள் அனை வரையும் உள்ளடக்கிய பெரிய தொரு மலையகச் சிறப்பிதழை வெளியிடும் எண்ணம் இருப்பதாக ஆசிரியர் கட்டியம் கூறுகிறார்.

தோழர் இளஞ்செழியன் பற்றிய லெனின் மதிவானம் எழுதிய பதிவு காத்திரமாக உள்ளது.மலையக மக்களின் எழுச்சிக்காவும் அவர்களின் வாக்குரிமைக்காகவும் தோழர்  இளஞ்செழியன் நடத்திய   போராட்டங்களை லெனின் மதிவானம் ஞாபகப்படுத்துகிறார்.சாதி ஒழிப்புக்காக அவர் முன்னின்று நடத்திய சுயமரியாதை சடங்குகளை அறியக் கூடியதாகஉள்ளது. இளஞ்செழியனைப் பற்றிய ஆய்வுகளும்,  மதிப்பீடுகளும் முழுமையானவையாக இல்லை என மதிவானம் குறிப்படுகிறார். அவருடைய கடிதங்கள், நூல்கள், குறிப்புகள், ஆவண மாக்கப்படவில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

காமன் கூத்து பன்முகநோக்கில்  ஓர் ஆய்வு. அ.லெட்சுமனன் இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதி உள்ளார். காமன் கூத்து மலையகத்தில் எப்படி அறிமுகமானது? அதன் வரலாறு, நடிப்பவர், உடை, ஒப்பனை பற்றி   விலாவாரியாக எழுதியுள்ளார்.காமன் கூத்துக்கும், சிலப்பதி காரத்துக்கும் உள்ள தொடர்பு.கிரேக்கம், ரோமானியா ஆகிய நாடுகளில் உள்ள தெய்வங்களுக்கும்  காமனுக்கும் உள்ள தொடர்பு என்பவற்றை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

எஸ் .ராமையா எழுதிய நாட்டார் பாடல்கள் மூலம் அடையாளம் காணப்படும் மலையக மக்கள் என்னும் கட்டுரையின் மூலம் மலையக மக்களின் நாட்டார் பாடல்களை அறியக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில்  41ஆவது இலக்கியச் சந்திப்புக்கான பயணத்தை முன்னிறுத்திய ஒரு நினைவுப் பதிவு. மல்லியப்பு சந்தி திலகரின் இந்தப்பதிவு  விறு விறுப்பாக உள்ளது. மலையகம்,  வன்னி, யாழ்ப்பாணம் என்று முக்கோணத்தில்  தான்பட்ட அவஸ்தைகளை ஆற்றொழுக் காகத்தந்துள்ளார்.பெற்றோரின் தூரநோக்கில் மொழி மாறிப்படித்ததை சுவைப்படுத்தி யுள்ளார்.
வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்  மலரன்பன். சுதர்மமகாராஜன் கேட்ட கேள்விகளுக்கு உண்மையைக் கூறி  மலையக அறிஞர்களின்  மாணவர்களின் போக்கை வெளிப்படுத்தியுள்ளார்.வாசிப்பின் அவசியத்தை விரிவாக்கியுள்ளார்.இலக்கிய உலகில் உயரத்தில் இருந்த மாத்தளை இன்று நலிவுற்றிருப்பதை எண்ணி கவ லைப்படுகிறார். என்றாலும் மீண்டும் பழைய நிலைக்கு வருவோம் என்று நம்பிக்கை யுடன் கூறுகிறார்.

பதுளை சேனாதிராஜா, மு.சிவலிங்கம், அல் அஹுமத், மொழிவரதன், சுதர்மமகா ராஜன், திண்ணனூரான் ஆகியோரின் சிறு கதைகளும் கெ.ஜெ. பபியான், நேரு, கருணாநிதி, மு.கீர்த்தியன், எஸ்.ப. பாலமுருகன், எஸ் திலகவதி, சு.தவச்செல்வன், சண்முகம் சிவகுமார், வே.தினகரன், சுமுரளிதரன், கிசோக்குமார், ஜெயதர்மன் ஆகியோரின் கவிதைகளும் இதில் உள்ளன.
அல் அசோமட் பற்றி சாரல் நாடனும் கவிஞர்.குறிஞ்சித் தென்னவன் பற்றி அந்தனி ஜீவாவும் எழுதியுள்ளனர். 
சூரன்
சுடர் ஒளி

26/12/13

விஜயகாந்துக்கு வலைவீசும் கருணாநிதி


இந்திய நாடாளுமன்றத் தேர்தலை  நடத்துவதற்கான காலம் கனிவதற்கு முன்னர் தொகுதிப்பங்கீடு கூட்டணி என்பன பற்றிய உத்தியோக பூர்வமற்ற பேச்சுக்களைத் தமிழக அரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ளன.என் வழி தனி வழி  என அறிவித்துவிட்டு 40 தொகுதி களுக்குமான வேட்புமனுக்களை கோரியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் வழியை அடியையொற்றி தனிவழி என கருணாநிதியும் அதிரடியாக அறிவித்துள்ளார். இடதுசாரிகள், சரத்குமார் ஆகியோரைப் புறந்தள்ளி விட்டு 40ம் நமக்கே  என்ற கோஷத்துடன் களமிறங்கியுள்ளார் ஜெயலலிதா. 

ஜெயலலிதாவைப் போன்று 40 தொகுதிகளையும் கருணாநிதி கட்டிப் பிடிக்கவில்லை.விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம்லீக், மனித நேயக்கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க கருணாநிதி தயாராக உள்ளார்.காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொண்ட கருணாநிதி  பாரதீய ஜனதாக்கட்சிக்காக ஒரு கதவைத் திறந்து வைத்துள்ளார்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.உத்தியோக பூர்வமான முடிவெடுப்பதற்காக இக் கூட்டம் கூடப்படவில்லை என்றாலும் பொதுத்தேர்தல் சம்பந்தமான சில முக்கிய முடிவுகள்அங்கு எடுக்கப்பட்டன. தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு  டி.ஆர்.பாலு,ராசா, இளங்கோவன்  கனி மொழி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கூட்டணி சம்பந்தமாக கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஸ்டாலின், துரை முருகன், பொன்முடி, வேலு ஆகியோர் அடங்கிய குழு அமைக் கப்பட்டது
.   
காங்ரகிஸுடனான உறவை முற்றாக துண்டித்த பின்னர் பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சிலர் விரும்புகின்றனர்.மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணி  சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்  என்பது அவர்களின் கருத்து. காங்கிரஸுடன்  கூட்டணி இல்லை என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. காங்கிரஸுடனான தொடர்பை  முன்னரே துண்டிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெளியேற்றம் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதியைப் பிடிக்காத ஒரு சில தலைவர்கள் வாய்ச் சவடால் விட்டு அறிக்கை வெளியிடுகின்றனர். தாம் தனிமைப்பட்டுள்ளதாக பா.சிதம்பரம் மனம் நொந்து  தெரிவித்துள்ளார். காங்கிரஸை தமிழக மாநிலக் கட்சிகள் தேடிப்போன காலம் மாறி மாநிலக்கட்சிகளைத் தேடி காங்கிரஸ்  செல்லும்  காலம் வந்துள்ளது.

தமிழக சட்ட மன்றத் தேர்தலின்போது விஜயகாந்தைத் தம் பக்கம் இழுப்பதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் பெரும் முயற்சி செய்தது. திராவிட முன்னேற்றக்கழக ஆட்சிக்காலத்தில் விஜயகாந்தின் திருமண மண்டபம் இடிக்கப்பட்டதனால் கருணா நிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சபதமெடுத்து இரட்டை இலையில் ஒதுங்கினார். அவர் நினைத்தது போன்று கருணாநிதி பதவி இழந்தார்.அதன் பின் நடந்த அரசியல் திருப்பு முனைகளினால் விஜயகாந்த் அவமானப்பட்டார்.பலமான கூட்டணி மூலம் ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டு மென  சூளுரைத்துள்ளார். 
பிரதமர் கனவில் உள்ள ஜெயலலிதாவின்  வெற்றியைத் தடுப்பதற்கான பலமான கூட்டணி அமைக்க வேண்டிய தேவை விஜயகாந்துக்கு உள்ளது.ஒரு சில விட்டுக் கொடுப்புகள்  மூலம் அரசியல் ரீதியான நகர்வுகளைச் செய்தால்தான் சாத்தியமாகும். ஜெயலலிதாவுக்கு எதிரான கட்சித் தலைவர்களை அனுசரித்துச் செயற்பட்டால் தான் விஜயகாந்த்  நினைத்தது நிறை வேறும்.
விஜயகாந்தின் விருப்பத்தை  நிறை வேற்ற இரண்டுபேர் தயாராக இருக்கிறார்கள். அவர்களில்இருவரும் வேறு பாதையில் விஜயகாந்தை அழைத்து செல்ல முனைகின்றனர்.பாரதீய ஜனதாக்கட்சியுடன் விஜயகாந்த் சேர  வேண்டும் என காந்தீய க்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆசைப்படுகிறார்.கருணாநிதியும், விஜயகாந்தும் இணைய வேண்டும் என்று பேராயர் எஸ் ரா. சற் குணம் விரும்புகிறார். பேராயர் எஸ்ரா சற்குணம் விஜயகாந்துடன் மிக நீண்ட காலம் தொடர்பில் இருப்பவர். 

நாளுமன்றத் தேர்தல் கூட்டணி தனது தலைமையிலேயே இருக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புகிறார்.தனது கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுத்தர வேண்டும்,செலவுக்குப் பணம் தர வேண்டும், முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் ஒதுக்க வேண்டும் போன்ற விஜயகாந்தின் நிபந்தனைகளினால் திராவிட முன்னேற்றக்கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும் கலங்கிப் போயுள்ளன.
பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டுக் சேர்ந்தால் விஜயகாந்த் கேட்பதுபோல்  சிலவேளை கூட்டணிக்கு தலைமை வகிக் கலாம்.ஆனால்,கேட்கும் தொகுதிகள் கிடைப்பது கடினம்.திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் கருணாநிதி தலை மையின் கீழேதான் செயற்பட வேண்டும். கருணாநிதியும் விஜயகாந்தும் இணைந்தால் தமிழகத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற் றலாம். பாரதீய ஜனதாக்கட்சியும் இவர்களுடன் சேர்ந்தால் ஜெயலலிதாவின் நிலை சிக்கலாகி விடும்.அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில்  கூட்டணி பற்றிய உறுதியான முடிவை எடுக்க வேண்டும். ஆகையால், அடுத்த  ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழக அரசியல் பரபரப்பாகிவிடும்.

திராவிட முன்னேற்றக்கழகத்துடன் விஜயகாந்த் சேர்வதை  அவருடைய கட்சியைச் சேர்ந்த சிலர் விரும்பவில்லை. பாரதீய ஜனதாக்கட்சியில் விஜயகாந்த் இணைவதை டாக்டர் ராமதாஸ் விரும்பவில்லை. யாருடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்த டாக்டர் ராமதாஸ் பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்து போட்டியிட விரும்புகிறார். ஆகையினால்,விஜயகாந்த் அங்கு செல்வதை அவர் விரும்பவில்லை. பாரதீய ஜனதாக் கட்சியுடன்  சேருவதற்கு தயாராக இருக்கும் வைகோ நடப்பவற்றை உன்னிப்பாக  அவதானித்துக் கொண்டி ருக்கிறார்.
எதிரணி அரசியல் தலைவர்கள்  இரண்டு பேர் சந்தித்தால் தமிழகத்தில் அது பரபரப்பான செய்தியாகிவிடும்.
சோவீட்டுத் திருமணத்தில்  கருணாநிதி குடும்பத்துடன் கலந்துகொண்டதால் புதிய கூட்டணிக்கு அச்சாரம் என்றார்கள். திரைப் பட விழாவில் ஸ்டாலினும் அன்பு மணியும் கலந்து கொணடதால் கூட்டணி பற்றிப்பேசி இருப்பார்கள் என்றார்கள்.கருணாநிதிக்கு சோனியா வாழ்த்து கூறியதால் பழைய உறவு துளிர்க்கிறது என்றார்கள்.சின்னச் சின்னச் செய்திகள் எல்லாம் பரபரப்பான செய்தியாக வெளியாவதால் தமிழக அரசியல்  சூபடிக்கத் தொடங்கிவிட்டது.


வர்மா  
சுடர் ஒளி 26/12/13

பிறேஸிலின் புதிய சீருடை

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் பிறேஸில் அணியின் புதிய சீருடை அண்மையில் அணியின் பயிற்சியாளரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இளம் வீரர் நெய்மர், மத்திய கள இளம் வீரர்லுயிஸ் கஸ்ரோவ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.பிறேஸில்  அணியின் அனுசரணையாளரான நைக் நிறுவனம் இந்த   சீருடையை வடிவமைத்துள்ளது. ஐந்து தடவை உலகக்கிண் ணத்தை வென்ற நாம் ஆறாவது தடவையும் உலகக் கிண்ணத்தை வெல்வோம் என உறுதிமொழி எடுத்தனர்.
பறேஸில் அணிக்காக இரண்டு புதிய சீருடைகளை நைக் அறிமுகப்படுத்தியுள்ளது. 2017 ஆம் ஆண்டு வரை பிறேஸிலுக்கு நைக் அனுசரணை வழங்குகிறது. பிறேஸில் தவிர அமெரிக்கா, சீனா ஆகிய நாட்டு அணிகளுக்கும் நைக் அனுசரணை வழங்குகிறது.
அடிடாஸ் நிறுவனம் 2030 ஆம் ஆண்டு வரை பீஃபாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.ஸ்பெய்ன், ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா, கொலம்பியா ஆகிய நாட்டு உதைபந்தாட்ட அணிகளுக்கு அடிடாஸ் அனுசரணை வழங்குகிறது.உலகக்கிண்ண உதைபந்தாட்டப்  போட்டி காலத்தில் 5 பில்லியன் யூரோவுக்கு உதைபந்தாட்ட பொருட்களை விற்பனை செய்ய ரிவல்,நைக், அடிடாஸ் ஆகியவை திட்டமிட்டுள்ளன.

சுடர் ஒளி
 ரமணி 26/12/13

Saturday, December 28, 2013

“மனப்பூக்கள்” கவிதைத் தொகுதி


“வருடிய இளமைக்காற்று”(2010) “நிழலில்லா தடயங்கள்” (2011) ஆகிய கவிதை நூல்களின் மூலம் வாசகர்களின் மனதில் இடம்படித்த ஜே.ஆர். மயூரனின்” மனப்பூக்கள்எனும் கவிதைத் தொகுதி அண்மையில் மன்னாரில் வெளியிடப்பட்டது.
வாசகர்களுக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் இலகுவான நடையில் கவிதை புனைந் துள்ளார்.இப்புத்தகத்தில் 40 கவிதைகள் உள்ளன. யதார்த்தங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் என்பன இவரது கவிதைகளில் முன்னிலை வகிக்கின்றன. தான் கல்விகற்ற மன்னார் புனித சவேரியர் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு தனது கவிதை புத்தகத்தை சமர்ப்பணம் செய்துள்ளார்.பஸ்மிபாஸில் அஹமட் வரைந்த ஓவியங்கள் கவிதைகளிடையே கதை சொல்கின்றன.

“நிறமிழக்கா ஞாபகம்” எனும் தலைப் பிலான கவிதை பாடசாலை  காலத்தை மனதில் நிழலாட வைக்கிறது.
கணிதப் பாம்பு கக்கிய உணர்வுகளில்
தழும்புகள் பாயும்
ஆங்கில முதலை தின்கிற பசியால்
தூக்கம் கண் சொருகும்கணிதமும் ஆங்கில மும் விருப்பமில்லாப் பாடங்கள் என்பதை அழகாக விபரிக்கிறார்.
“புத்தகப் பொந்துக்குள்
எழுத்துப் பறவைகள் அங்குமிங்குமாய்
சிறகடிக்கும்
சிலநேரம் சிவப்புக் குருவிகள்
எச்சமிடும்புதுமையான கற்பனை

துன்பப்படும் மனிதர்கள் கவலை எல்லை மீறும்போது அழுவார்கள். மனிதனின் துன்பம் கண்டு கடவுள் அழுததுண்டா?”கடவுளும் அழுகிறார்” என்றார் மயூரன்.
“படைத்ததை ஆழ்கவென
வழங்க,
 மனிதன்  ஆழ்கிறான்
கடவுளையும் சேர்த்து 
அறிவுதின்ற இனத்து வேஷ‌ ‌த்தினால்
தினசரி செய்திகள்
அயல் நாட்டின் தலைப்புச் 
செய்தியாக”
எதிர்காலத்தை அறிவதற்காக கைரேகை பார்ப்பார்கள்.”கைரேகை” என்ற கவிதை மூலம் மனிதனின் துன்பதுயரங்களை அழகாக வெளிப் படுத்தியுள்ளார்.

“இளமை கொழுவிய நாளில்
இயந்திரமாய்
சுழற்றினார்கள்
தோல்பையும், பேனாமுனையும்
கொண்டு சென்ற வேளையில் 
ஆயுதங்களை பரிசளித்தார்கள்.”

“உணர்வுத் துகள்கள்” என்ற கவிதையில் மயூரன் கேட்கும் கேள்விகளுக்கான விடையை யார்  தருவார் கள்.
“நாடு விட்டு நாடு
 அகதி கடந்தால் தானே
ஏன் சொந்த  நாட்டுக்குள்
நாங்கள் அகதியெனும் 
முத்திரையோடு ?
விதியின் கம்பத்தில் 
நூலறுந்த மின்குமிழாய் தமிழ் 
கழுத்தறுத்து நிற்பதேன் கூறு?”
இந்தக் கேள்விக்கான பதில்  எங்கிருந்து வரும்?

 “மனச்சிறை” என்ற தலைப்பலான கவிதையில் விலைவாசியால்  திண்டாடுவதை யுத்தம் தந்த பரிசென அழகாக விவரிக்கிறார்.
“யுத்தம்
கொப்பளித்த வடுக்கள்
விலை வாசியின்  குழந்தையால் 
இன்னும் தொடர்கிறது
எங்கள் அகதிப்பயணங்களிலே”

தீபாவளி என்றால் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் களைகட்டும்.தீபாவளி நரகத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற மயூரனின் கற்பனை மூலம் வெளிப்படுகிறது.காதல் உணர்வு எப்படி  இருக்கும் என்பதை இளமையில் இன்பம் என்ற கவிதையின் மூலம் வெளிப்படுத்துகின்றார். நவநாகரிகம் என்ற பெயரில் சில பெண்கள் அணியும் ஆபரணங்கள் மயூரனின் மனதை காயப்படுத்தியுள்ளன. நக்கலான கோபத்துடன் சாட்டையடி கொடுக்கிறார்.
மனப்பூக்கள் என்ற இந்த கவிதைப் புத்தகத்தில் உள்ள 40 கவிதைகளும் சிரமமின்றி இலகுவாகப் படிக்கும் வகையில்  உள்ளன.கவிதைகளைப் போன்றே கவிதை யின் தலைப்புகளும் மனதில் அழுத்தமாகப் பதியும் வகை யில் கவிதை போல் உள்ளன.


சூரன்
ஔடர் ஒளி

15/12/13