Wednesday, September 22, 2010

கூட்டணிக்கு விஜயகாந்த் கடைவிரிக்கிறார்தனிவழி போகத் தயாராகின்றார் ராமதாஸ்



தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னமும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரம் போன்றே பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. சிறிய கட்சிகள் தமது இடத்தை உறுதி செய்து கொள்வதற்காக பெரிய கட்சிகளுடன் இணையத் தொடங்கி விட்டன.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள உறவை முறிக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கங்கணம் கட்டியுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் வெளிப்படையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வெளிப்படையாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் கீழ் உள்ள காங்கிரஸ் கட்சி விரைவில் வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் என்றதொரு நம்பிக்கையை ஊட்டி வருகிறார் ஜெயலலிதா.
எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வது என்ற கருத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடையே இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. முதல்வர் கருணாநிதிக்குச் சார்பாகவும் ஜெயலலிதாவுக்குச் சாதகமாகவும் கருத்து முன்வைக்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி விடுமோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் பேச்சு தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. இந்தச் சந்தேகங்கள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆஷாத்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணிக்குப் பங்கம் ஏற்படும் விதத்தில் யாரும் கருத்துக் கூறக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார் குலாம் நபி ஆஷாத். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எவ்வளவு தான் கூப்பாடு போட்டாலும் கூட்டணி பற்றிய முடிவை எடுக்கும் அதிகாரம் சோனியா காந்தியிடம் உள்ளது என்பதை தமிழக முதல்வர் நன்கு அறிவார். காங்கிரஸ் தலைமை முதல்வர் கருணாநிதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. ஆகையினால் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இப்போதைக்கு ஏற்படாது.
ஜெயலலிதா நடத்தும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் வெள்ளம் திராவிட முன்னேற்றக் கழக அரசை தடுமாற வைத்துள்ளது. இது தானாகச் சேர்ந்த கூட்டமல்ல. அழைத்து வரப்பட்ட கூட்டம் என்று தமிழக முதல்வர் கருத்துக் கூறும் வகையில் ஜெயலலிதாவின் உரையை கேட்பதற்கு மக்கள் கூடுகின்றனர். ஜெயலலிதாவின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் விவாதிப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார் முதல்வர் கருணாநிதி.
மக்களுடன்தான் கூட்டணி என்று முழங்கி வந்த விஜயகாந்த் தனது தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத் தேர்தலில் தனி ஒரு கட்சியால் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நன்கு உணர்ந்துள்ளனர். கூட்டணி இல்லாது அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதை காலம் கடந்து விஜயகாந்த் உணர்ந்து கொண்டார். விஜயகாந்தின் கூட்டணி பற்றிய அறிவிப்பு தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் விஜயகாந்துடன் கூட்டணி சேர சிறிய கட்சிகள் எவையும் இதுவரை முன்வரவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழம் ஆகியவற்றுடன் பேரம் பேசி குழப்பம் ஏற்பட்டால் மட்டுமே விஜயகாந்துடன் சேர்வதற்கு சிறிய கட்சிகள் தயாராக இருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையில் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை சிறிய கட்சிகளிடம் உள்ளது. விஜயகாந்தின் தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. ஆனால் தம்மை ஒதுக்கிய கட்சிகளைத் தோல்வியடையச் செய்யலாம் என்ற எண்ணம் சிறிய கட்சிகளிடம் உள்ளது. கூட்டணி இல்லை என்று அடித்துக் கூறிவந்த விஜயகாந்த் அரசியல் நிலைமையை உணர்ந்த கூட்டணிக் கடையை விரித்து விட்டார். அவருடன் பேரம் பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை.
கூட்டணிக்காகத் தூது போய் காத்திருந்து அவமானப்பட்ட டாக்டர் ராமதாஸ் தனி வழி போகப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். திராவிடக் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் விளங்கியது பட்டாளி மக்கள் கட்சி. பாட்டாளி மக்கள் கட்சியை வெளியில் விட்டால் தமக்கு தோல்வி என்பதை உணர்ந்த திராவிடக் கட்சிகள் டாக்டர் ராமதாஸின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அவர் கேட்கும் தொகுதிகளைக் கொடுத்தன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி படு தோல்வியடைந்ததன் பின் அதன் நிலை அடியோடு மாறி விட்டது. தோல்வியிலும் துவண்டு போகாத பாட்டாளி மக்கள் கட்சி பெண்ணாகரம் இடைத் தேர்தலில் தனது செல்வாக்கை வெளிப்படுத்தியது. பெண்ணாகரம் இடைத் தேர்தலில் தனது கட்சி பெற்ற வாக்குகள் புதிய பாதையை வகுத்துத் தரும் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் எழுச்சியால் முதல்வர் கருணாநிதி மயங்கி விடவில்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து ரோசத்துடன் வெளியேறி, மீண்டும் கூட்டணிக்காக காத்திருந்த டாக்டர் ராமதாஸை முதல்வர் கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே தனி வழி செல்லத் தீர்மானித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
வன்னியர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட வன்னியர் சங்கம் 1990 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்து அரசியலில் புகுந்தது. தமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்தினர் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பேராதரவு வழங்கினார்கள். இந்த ஆதரவு தமிழக சட்ட சபையில் இருந்து மத்திய அரசின் அமைச்சரவை வரை பாட்டாளி மக்கள் கட்சியை உயர்த்தியது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள 100 தொகுதிகளை இனம் கண்டு அவற்றில் 60 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். அவற்றில் குறைந்தது 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று இழந்து போன கட்சியின் செல்வாக்கை மீண்டும் பெற்று விடத் துடிக்கிறார் டாக்டர் ராமதாஸ். பெண்ணாகரம் இடைத் தேர்தலில் எப்படிப் பிரசாரம் செய்தோமோ அதேபோல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
பெண்ணாகரம் இடைத் தேர்தலில் வேலை செய்தது போன்று 60 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய முடியாது என்பது டாக்டர் ராமதாஸுக்கு நன்கு தெரியும். இலவசங்களும், அன்பளிப்புகளும், பணப் பெட்டிகளும் வாக்காளர்களைத் தேடிச் செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இவற்றின் மத்தியில் வெற்றி என்பது எட்டாக் கனி என்பதை சாதாரண கட்சித் தொண்டனும் தெரிந்து வைத்துள்ளான். தமிழகத்தின் பெரிய கட்சிகள் தன்னை அழைத்துப் பேரம் பேச வேண்டும் என்பதற்காகவே டாக்டர் ராமதாஸ் இந்தத் திட்டத்தை தீட்டியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் வன்னியர் சமூகம் என்ற போர்வையினால் தன்னை மூடிக்கொண்டுள்ளார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 19/09/10

விஜயகாந்தை எதிர்பார்த்துகாத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி



விஜயகாந்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இதுவரை இரகசியமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை தமிழக முதலமைச்சராக்கி அழகுபார்த்த காங்கிரஸ் கட்சி விஜயகாந்தை முதல்வராக்குவதற்கு முயற்சி செய்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று அறிக்கை விடுகிறார்கள். ப.சிதம்பரம், தங்கபாலு, வாசன், இளங்கோவன் ஆகிய பலமிக்க தலைவர்கள் தமக்குப் பின்னால் பலரைச் சேர்த்து வைத்துள்ளனர்.இந்தப் பின்னணி எதுவும் இல்லாத தமிழக காங்கிரஸை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடன் தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. பெரும் கோஷ்டி மோதல்களுக்கு மத்தியில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் தேர்தலில் யுவராஜ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தின் இளைஞர் காங்கிரஸ் பயிற்சிப்பட்டறையின் போது ராகுல் காந்தி விஜயம் செய்து இளைஞர்களை ஊக்குவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் ஆதிக்கம் இல்லாத இளைஞர் காங்கிரஸ் தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்பினார். அதிலும் தமது செல்வாக்கைக் காட்ட தமிழகத் தலைவர்கள் முயற்சி செய்தனர். இறுதியில் வாசனின் விருப்புக்குரிய யுவராஜ் இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரான யுவராஜ், விஜயகாந்தை இரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்தி வெளியானது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கரிஸ் தலைவர்கள் வாய் கிழியப் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கான முயற்சிகள் எதனையும் அவர்கள் செய்யவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான திட்டத்துடன் களமிறங்கியுள்ளார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் ஆசீர்வாதம் பெற்ற யுவராஜ், விஜயகாந்தைச் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் உத்தரவின்றி இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும். கருணாநிதியின் குடும்பத்தை தலையெடுக்க விடக் கூடாது என்று ஜெயலலிதா அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் அதற்குரிய செயற் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும். கருணாநிதியின் குடும்பத்தைத் தலையெடுக்க விடக் கூடாது என்ற திட்டங்களுடன் செயற்படுகிறார் ராகுல் காந்தி.
யுவராஜ், விஜயகாந்த் ஆகியோர் சந்தித்தது பற்றி பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்தி வெளியானபோது இருவரும் இதனை மறுத்து அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸின் ஆதரவில் உள்ள தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்கும் விஜயகாந்தை, யுவராஜ் சந்தித்ததற்கான நம்பக் கூடிய காரணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.
தமிழகத்தை ஆட்சி செய்யக் கூடிய பலம் திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் மட்டுமே உள்ளது. இந்தியத் தேசியக் கட்சியான காங்கிரஸினதும் தமிழகத்தின் சிறிய கட்சிகளின் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நன்றாக உணர்ந்துள்ளனர். ஆகையினால் காங்கிரஸ் கட்சியைக் கைவிட தமிழக முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. காங்கிரஸுடன் கூட்டுச் சேர்வதற்கு என்று ஜெயலலிதா துடிக்கிறார்.
இந்தியத் தேசியக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் வலு விழந்த நிலையில் உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்குத் தமிழகத்தின் சிறிய கட்சிகள் கூட விரும்பவில்லை. தமிழகத்தின் சிறிய கட்சிகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதற்கே தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் முண்டியடிக்கின்றன. காங்ககிரஸுடன் விஜயகாந்த் இணைந்தால் தமிழகத்தின் சில கட்சிகள் அந்தக் கூட்டணியில் சேர்வதற்கு முண்டியடிக்கும் நிலை ஏற்படலாம்.
காங்கிரஸுடனான விஜயகாந்த் நடத்திய பேச்சுவார்த்தை விஜயகாந்துக்குத் திருப்தியளிக்கவில்லைப் போல் தெரிகிறது. 30, 40 தொகுதிகளுக்கு கூட்டணி சேரத் தயாராக இல்லை என்று விஜயகாந்த் பகிரங்க அறிக்கை விட்டிருப்பது அவர் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதாகத் தோன்றுகிறது. காங்கிரஸின் தயவில் ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்தும் விஜயகாந்தின் தயவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் வியூகம் அமைத்துள்ளன.
விஜயகாந்தின் பக்கம் ராகுல் காந்தி சாய்ந்திருப்பதை நன்றாக அறிந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி, காங்கிரஸுடனான கூட்டணி உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸின் கூட்டணியைத் தீர்மானிப்பது சோனியா காந்தி தான் என்பது வெளிப்படையானது. சோனியா காந்தி இன்னமும் விஜயகாந்தின் மீது முழு நம்பிக்கை வைக்கவில்லை. ஆகையினால் கூட்டணிக்குள் இப்போதைக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதை முதல்வர் கருணா
நிதி தெளிவாகத் தெரிந் துள்ளார். விஜயகாந்தின் பக்கம் காங்கிரஸைக் கொண்டு செல்வதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியை எதிர்பார்த்
துக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸைப் பிரிக்க வேண்டும் என நினைக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேரத் துடிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்வதை விரும்பவில்லை. கூட்டணி பற்றி விஜயகாந்த் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.
வர்மா,
வீரகேசரிவாரவெளியீடு 12/09/10

புதிய கூட்டணிக்குஅச்சாரமிடும்தலைவர்கள்



தமிழக அரசியல் தலைவர்களை ஒரே இடத்தில் காண்பது அபூர்வம். தமிழகத்தின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அரசியல் கட்சித்தலைவர்கள் ஒன்றõக அமர்ந்து உரையாடியது சகலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தேசிய முற்போக்கு திராவிடக் கட்சித் தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் தங்கபாலு, வாசன், இளங்கோவன் திருநாவுக்கரசர் ஆகியோர் ஒன்றாக இருந்தமை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் கடுமையாக எதிர்ப்பவர் இளங்கோவன், மக்களுடன் தான் கூட்டணி என்று கூறி பின்னர் தனது தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்று கூறும் விஜயகாந்த், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் எதிராக அரசியல் நடத்துபவர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் முதலமைச்சர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர். மூப்பனாரின் மகன் வாசன். முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையிலான கூட்டணிக் கட்சியின் பிரதான பங்காளராகிய தொல். திருமாவளவன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உரையாடியமை புதிய கூட்டணியின் ஆரம்பமோ என்று பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கபாலு, திருநாவுக்கரசர், இளங்கோவன், விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோர் மூப்பனாரின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர்கள். யாருடன் யார் கூட்டணி சேர்வார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் சொல்லி வரும் வேளையில் இவர்களின் சந்திப்பு புதிய ஆரூடத்துக்கு வழி கோலியுள்ளது.
விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது வரவேற்ற திருமாவளவன், கூட்டணிக்குத் தயார் என்று விஜயகாந்த் கூறியபோது, பச்சைக் கொடி காட்டியவர். விஜயகாந்தின் பிறந்த நாளன்று அதிரடியாக விஜயகாந்தைச் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த வயிற்றெரிச்சலைக் கிளப்பியவர் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியை எதிர்ப்பவர் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கூட்டணியுடனான கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர் தங்க பாலு, எதிரும் புதிருமாக இந்த அரசியல் தலைவர்கள் ஒன்றாக அஞ்சலி செலுத்தியது. தற்செயலானதா அல்லது திட்டமிட்டு சந்தித்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மறைந்த அரசியல் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லும் தலைவர்கள் தமது அரசியல் எதிரி அங்கு வரும் நேரத்தைத் தவிர்த்தே செல்வது வழமையானது. இரண்டு தலைவர்கள் சந்திக்கும் பேõது அவர்களது ஆதரவாளர்கள் மோதும் சந்தர்ப்பமும் எழுவதுண்டு. ஆனால் மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தும் வைபவத்தில் எல்லாம் நேர்மாறாக நடந்துள்ளது.
ரஜினிகாந்தின் வீட்டுத் திருமணத்தை தமிழக ஊடகங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா உட்பட தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களின் வீட்டிற்கு மனைவியுடன் சென்று திருமணப் பத்திரிகையை வழங்கி வருகிறார் ரஜினிகாந்த். சினிமாவில் செல்வாக்கு மிக்க ரஜினிகாந்தின் குரல் அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதேபோல பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ரஜினிகாந்தை எதிர்க்கும் கட்சிகள். இக்கட்சிகளின் தொண்டர்களும் ரஜினிகாந்தின் ரசிகர்களும் பலமுறை முட்டி மோதியுள்ளனர். ரஜினிகாந்தின் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இக் கட்சிகளின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள்கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் வீட்டிற்கு மனைவியுடன் சென்று திருமணப் பத்திரிகையை வழங்கியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் வீட்டில் நடைபெறும் திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கூட்டணி பற்றிய பரபரப்பு உருவாகும் வாய்ப்பு உள்ளது.
பலமுள்ள கட்சி கூட்டணி சேர்வது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பலமான கூட்டணியில் இணைந்து தமிழக அரசியலில் வளர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி தனது செல்வாக்கினால் மத்திய அரசியலில் பலமான அமைச்சுப் பதவியைக் கேட்டுப் பெறும் வகையில் வளர்ச்சியடைந்தது. தற்போது பாட்டாளி மக்கள் கட்சியை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் புறந்தள்ளியுள்ளனர். காங்கிரஸின் தயவில் மீண்டும் தமிழகத்தில் கூட்டணி சேரலாம் என்ற கனவுடன் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியை காங்கிரஸும் கைவிட்டு விட்டது.
பலமான கட்சிகளுடன் கூட்டணி சேரத் துடித்த பாட்டாளி மக்கள் கட்சி தனது நிலையை நன்கு உணர்ந்து கொண்டதனால் கூட்டணிக்குத் தலைமையேற்க முயற்சி செய்கிறது. வன்னியர் என்ற சமூகத்தினுள் அடங்கி உள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் இணைவதற்கு ஏனைய சாதிக் கட்சிகளும் அமைப்புகளும் தயாராக இல்லை என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கனவில் மிதக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. தமிழக அரசின் கடந்த செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகளை கையில் வைத்துக் கொண்டு அமைச்சர்களைப் பாடாய்ப் படுத்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இப்போது விட்ட தவறுகள் தேர்தலின்போது பூதாகரமாக வெடித்து தோல்வியை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் பழையவர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களுக்கு இடம் கொடுக்க விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. புதியவர்களும் ஆட்சி பீடம் ஏறுவதையே ஸ்டாலினும் விரும்புகிறார். ஸ்டாலினை முதல்வராக்க, கருணாநிதி விரும்புகிறார். முதலமைச்சர் வேட்பாளராக கருணாநிதி போட்டியிடுவதை சோனியா விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவைத் துண்டிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். பலரின் விருப்பு வெறுப்புக்களுடன் கூட்டணி சேர கட்சித் தலைவர்கள் ஆவலாக உள்ளனர்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 05/09/10