Friday, March 28, 2008

ஜோதியின் ராஜினாமாவால் திக்குமுக்காடும் அ.தி.மு.க.


மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தின் சார்பில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே பூகம்பம் வெடித்து கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்பு எல்லாம் பொய்யாகிவிட்டது. அதேவேளையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினுள் பூகம்பம் வெடித்துள்ளது.
அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரே ஒரு வேட்பாளர்தான் வெற்றி பெற முடியும் என்பது வெளிப்படை. உண்மை நிலை இவ்வாறிருக்க அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒரு வேட்பாளரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒரு வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
கூட்டணிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கலந்து பேசித்தான் ஜெயலலிதா இந்த முடிவை அறிவித்தார் என்றே பலரும் நினைத்தார்கள். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு நிராகரித்துவிட்டது.ஜெயலலிதாவின் வேண்டுகோளை மறுக்க முடியாத நிலையில் இரண்டாவது வேட்பாளரை களத்தில் நிறுத்த வைகோ ஒப்புக்கொண்டிருக்கலாம். கட்சியின் செயற்குழுவின் முடிவு என்பது வைகோவின் தனிப்பட்ட முடிவு அல்ல என்பதை ஜெயலலிதாவுக்கு உணர்த்துவதற்காக செயற்குழு கூடி இரண்டாவது வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் முடிவு செய்துள்ளது.
இரண்டாவது வேட்பாளராகப் போட்டியிடுவதில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் முடிவைப் பற்றி ஜெயலலிதா எதுவும் கூறவில்லை. ஜெயலலிதாவின் முடிவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மறுப்புத் தெரிவித்த அதேவேளை ஜெயலலிதாவை பல சந்தர்ப்பங்களில் காப்பாற்றிய வழக்கறிஞர் ஜோதி தன்னைப் வேட்பாளராக அறிவிக்காததால் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர் கொடி தூக்கி உள்ளார்.
1996 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம் தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் மீது அடுக்கடுக்காக வழக்குகள் தொடுக்கப்பட்டன. டான்ஸி நில பேர வழக்கு, பிளஸன் ஸ்டே ஹோட்டல், வருமானத்துக்கு மீறிய சொத்து குவித்தது, லண்டன் ஹோட்டல், ஸ்பிக் நிலக்கரி இறக்குமதி என்று ஜெயலலிதாவையும் சசிகலாவையும் குற்றவாளியாக்கி பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர்கள் மீதும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜெயலலிதாவுக்காக அ.தி.மு.க வழக்கறிஞர்கள் பலர் ஆஜரானார்கள். அவர்களை எல்லாம் ஒழுங்குப்படுத்தி மேற்பார்வையாளராக வாதாடி ஜெயலலிதாவை நிரபராதி என்று நிரூபித்தார் வழக்கறிஞர் ஜோதி. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை விசõரிப்பதற்காக அமைக்கப்பட்ட தனி நீதிமன்றங்களில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டாலும் உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நிரபராதி என்று நிரூபித்தவர் ஜோதி.
2001 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. டான்சி நில பேர வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்ப முடியாது என்று ஒட்டு மொத்த தமிழகமும் கணித்திருந்த வேளையில் அந்த வழக்கில் ஜெயலலிதா நிரபராதி என்று தனது வாதத்திறமையால் நிரூபித்தவர் வழக்கறிஞர் ஜோதி. ஜெயலலிதாவுக்கு எதிரான 13 வழக்குகளில் இருந்து அவர் நிரபராதி என நிரூபித்தார் ஜோதி.
அந்த நன்றிக் கடனுக்காகவே ஜோதியை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் ஜெயலலிதா. இந்த முறையும் தனக்கு ஜெயலலிதா சந்தர்ப்பம் தருவார் என்று ஜோதி எதிர்பார்த்திருந்தார். ஆனால், பாலகங்காவை ஜெயலலிதா அறிவித்ததால் ஜோதி கலங்கிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். பதவியை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் ஜோதிக்கு கிடையாது. தமிழக அரசாங்கத்திலிருந்து தன்னை பாதுகாக்கும் ஒரு ஆயுதமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கருதினார் ஜோதி.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்காமல் தடுத்தாட் கொள்ளும் ஜோதியை ஜெயலலிதாவிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக்கழகத்தின் கனவை ஜெயலலிதா நிறைவேற்றி விட்டார்.
ஜோதிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி அவரைக் கைது செய்ய தமிழக அரசு முயற்சி செய்தது. அவருக்கு எதிரான குற்றங்களைக் கண்டு பிடிக்க தமிழக அரசால் முடியவில்லை.
அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்களுக்கு எதிரான 113 வழக்குகளில் இருந்து ஜோதி தன்னை விடுவித்துக்கொண்டார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுறும் நிலையை அடைந்துள்ளது. அந்த வழக்கில் தலைமை வழக்கறிஞராக வாதாடப் போவது யார் என்ற கேள்விக்கு உரிய பதிலை ஜெயலலிதாவிடமிருந்து தமிழகம் எதிர்பார்க்கிறது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு;23.03.2008

போட்டி போடும் அ.தி.மு.க.


மாநிலங்களவைத் தேர்தலுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டு உறுப்பினர்களை நிறுத்தியதனால் தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
மாநிலங்களவைக்கு தமிழ் நாட்டில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் திகதியுடன் முடிவடைகிறது. புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணி ஐந்து உறுப்பினர்களையும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி ஒரு உறுப்பினரையும் தெரிவு செய்யும் பலத்தைப் பெற்றுள்ளன.
தனது தகுதிக்கு ஏற்ப ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக திராவிட முன்னேற்றக்கழகம் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து முடிவு செய்துள்ளது.
ஒரே ஒரு உறுப்பினரை மட்டும் தெரிவு செய்யும் பலத்தை உடைய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டு உறுப்பினர்களைத் தேர்தலில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்கு மூலமே மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுவர். 34 உறுப்பினர்களின் வாக்கு கள் மூலம் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு 60 உறுப்பினர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஆறு உறுப்பினர்களும் உள்ளனர். ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதில் எதுவித தடையும் இல்லை.
இரண்டாவது உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டுமானால் மேலும் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணிக்கு உதவி செய்யப்போகும் இரண்டு உறுப்பினர்கள் யார் என்றே கேள்வி எழுந்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பாலகங்கா போட்டியிடுகிறார். சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் பாலகங்கா.
அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் பங்காளிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒரு உறுப்பினர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
மாநிலங்களவைத் தேர்தலில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தாது ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் நிறுத்தி அதனை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு விட்டுக்கொடுத்திருந்தால் ஜெயலலிதாவின்மதிப்பு உயர்ந்திருக்கும். போட்டிபோட்டு வெற்றிபெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தை ஜெயலலிதா தள்ளி னார்.
இதற்கு எதிர் மாறாக திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் சேராத இரண்டு உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் உள்ளனர். ஒருவர் விஜயகாந்த், இன்னொருவர் சுயேச்சை உறுப்பினர். இவர்கள் இருவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்களுக்கு வாக்களித்தால் அவர்கள் வெற்றி பெறுவர்.

வைகோவை மாநிலங்களவை உறுப்பின ராக்கி அவருக்குரிய முக்கியத்துவத்தையும் கௌரவத்தையும் ஜெயலலிதா வழங்கி இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை ஜெயலலிதா தவறவிட்டுவிட்டார்.
தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதியான வைகோவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜெயலலிதா தவறிவிட்டார்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவ தில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக்கழக ஆட்சிமன்றக்குழு அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் முடிவை எதிர்த்து முதன் முறையாக தீர்மானம் ஒன்றை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துள்ளது. வெற்றிபெற முடியாது என உறுதியாகத் தெரிந்ததால் போட்டியிடுவதில்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி மன்றக்குழு முடிவெடுத்துள்ளது எனக் கருதப் படுகிறது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானத்தை ஜெயலலிதா வரவேற் பாரா? அல்லது அண்ணாதிரவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரை அறிவிக்குமா? என்பதை அறிய அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.
இதேவேளை முதல்வரின் முடிவினால் அதிருப்தியடைந்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் துடன் இணைந்தால் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக வேட்பாளரும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரும் வெற்றி பெறலாம் என சிலர் கருதினர்.
தனது பங்காளிக் கட்சிகளுக்கு முறை வைத்து சந்தர்ப்பம் வழங்கிவருகிறார் முதல்வர் கருணாநிதி. தனக்கு ஒரே இடம் வேண்டும் இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும் என்று டாக்டர் ராமதாஸ் எச்சரித்தும் அதற்கு அடிபணியாமல் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடம் ஒதுக்கி உள்ளார் முதல்வர்.
டாக்டர் ராமதாஸ் மிரட்டுவதும் முதல்வர் அமைதியாக இருப்பதும் தமிழக அரசியலில் அவ்வப்போது நடைபெறும் காட்சிகள். இந்தமுறை அந்தக் காட்சி மாறி உள்ளது.
டாக்டர் ராமதாஸின் எச்சரிக்கையை முதல்வர் உதாசீனம் செய்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்பதை மறை முகமாக வெளிப்படுத்தி உள்ளார் முதல்வர்.

போட்டி போடும் அ.தி.மு.க.
முதல்வரின் மகள் நாடாளுமன்ற உறுப்பினரானதால் தனது மகனையும் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு ராமதாஸ் முயற்சிக் கிறார் என்ற தகவலை அடியோடு மறுத்தார் டாக்டர் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பேச்சாளரும், முதல்வரை அடிக்கடி விமர்சிப்பவருமான காடுவெட்டி குரு வுக்குத் தான் டாக்டர் ராமதாஸ் போராடுகிறார் என்ற தகவல் தெரிந்துதான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு முதல்வர் இடம் ஒதுக்கவில்லை என்ற கருத்தும் உள்ளது.
இதேவேளை காடுவெட்டி குருவுக்கு எதிராக பலாத்கார புகார் ஒன்று பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சந்தர்ப்பம் வழங்குவதற்காக மாணவி ஒருவரை பலாத்காரம் செய்யமுயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளõர். இந்த இரண்டு சம்பவங்களினாலும் பாட்டாளி மக்கள் கட்சி மீதான மதிப்பு கொஞ்சம் குறைந்துள்ளது.
ஜின்னா, வசந்தி ஸ்டாலின் ஆகிய இருவரையும் திராவிட முன்னேற்றக்கழகம் வேட்பாளராக்கியுள்ளது. வசந்தி மீது ஏகப்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன. அவரை எப்படி முதல்வர் தேர்ந்தெடுத்தார் என்று பத்திரிகைள் விமர்சிக் கின்றன.
சுமார் 15 வங்கிகளில் மூன்று கோடி ரூபா மோசடி செய்தவர் நாடாளுமன்ற உறுப்பினராவதா? என்று பத்திரிகைகள் கேள்வி எழுப்பி உள்ளன. வழக்கில் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளேன். அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என சராசரி அரசியல்வாதிபோல் வசந்தி ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் பதிலை தமிழகம் எதிர்பார்த்துள்ளது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 16.03.2008

குடும்பத்தை இணைக்கும் ஸ்டாலின்; பகையை மேலும் வளர்க்கும் அழகிரி



ஜெயலலிதாவின் பிறந்தநாள் விளம்பரங்கள் தினகரனிலும் முரசொலியிலும் பெரிய அளவில் வெளியானதால் குழம்பிப்போயிருந்த இரண்டு குடும்பங்களும் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் கொஞ்சம் நெருங்கி வந்துள்ளன. ஆனால் இந்த நெருக்கத்தை முதல்வரின் மகனான அழகிரி கொஞ்சமும் ரசிக்கவில்லை.
நகமும் சதையும் போலிருந்த கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் இவ்வளவு தூரம் பிரிந்திருக்கும் என்று எவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
தினகரன் பத்திரிகையில் வெளியான கருத்துக் கணிப்பினால் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் கோபத்திற்கு இலக்கான மதுரையில் உள்ள தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த அந்தப் பகை ஒவ்வொரு பிரச்சினைகளிலும் விஸ்வரூபம் எடுத்து குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
கலைஞர் குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையில் உள்ள பிரிவை மிகச் சரியாகப் பயன்படுத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தங்கள் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பரங்களினால் தினகரன் முரசொலி ஆகிய பத்திரிகைகளுக்கு லாபத்தை அள்ளி வழங்கியது.
மாறன் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய மாட்டார்கள் என்ற நம்பிக்கை கலைஞரிடம் உள்ளது. மாவட்டத்தில் செல்வாக்குள்ள பிரமுகர் ஒருவரை கட்சி தண்டித்தால் அல்லது கேள்வி கேட்டால் அவர் தனது ஆதரவாளர்களுடன் மாற்றுக் கட்சியில் இணைந்து விடுவார். அது பற்றிய விபரங்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பெரிதாக விளம்பரப்படுத்தப்படும்.
மத்திய அமைச்சராக இருந்து பல சாதனைகளைச் செய்த தயாநிதி மாறனின் மீது திராவிட முன்னேற்றக்கழகம் நடவடிக்கை எடுத்தபோது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒதுங்கிவிட்டார். இன்னொரு கட்சியில் அவர் சேர்ந்திருந்தால் அது அவருக்கு மிகப் பெரிய விளம்பரமாக இருந்திருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒரு சிலருக்கு தயாநிதி மாறன் தேவையற்றவராக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு தயாநிதி மாறனின் அணுகுமுறை மிகவும் பிடித்திருந்தது. ராகுல் காந்தியும் தயாநிதி மாறனின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து மாறன் குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்பதில் மு.க. அழகிரி உறுதியாக உள்ளார். ஆனால் அவரது தம்பியான ஸ்டாலினின் எண்ணம் அதற்கு நேர்மாறாக உள்ளது.
குடும்பப் பிரச்சினை ஊடகங்களுக்குத் தீனியாகிறது. அதனால் எந்தப் பிரச்சினைகளையும் பெரிதாக்காது பேசித் தீர்க்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் விருப்பம். ஸ்டாலினின் பிறந்த நாளன்று கலாநிதிமாறன் முதல்வரை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அழகிரி மீண்டும் கோபாவேசமானார்.
மாறன் குடும்பத்துக்கும் அழகிரிக்கும் இடையேயான மோதல் கட்சிக்குள்ளும் ஊடுருவி குடும்பப் பிரிவை உண்டாக்கியது. குடும்பப் பகை காரணமாக கட்சியின் செல்வாக்கு சரியக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். கட்சியைப் பற்றிக் கவலையில்லை. குடும்பப் பகைதான் பிரதானம் என்று அழகிரி கூறுகிறார்.
கட்சிக்கும் குடும்ப உறவுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார் முதல்வர். கழகத்தையும் தலைவரையும் அவமானப்படுத்தியவர்களை அரவணைத்த முதல்வர், மாறனின் பிள்ளைகளை மன்னிக்கத் தயங்குகிறார்.
கலாநிதிமாறன் வீடு தேடி வந்து கதைத்ததனால் பிரச்சினை தீர்த்து விடும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பில் மண் விழுந்துவிட்டது. மாறன் குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற அழகிரியின் வாதம் கலைஞர் வீட்டில் ஓங்கி ஒலிக்கிறது. ஸ்டாலினின் வாதம் அங்கு மெல்லிய குரலில் வெளிப்படுகிறது.
டில்லி சபையின் ஆறு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்து விட்டது. சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு ஐந்து உறுப்பினர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடமும் கிடைக்கும். இந்த நிலையில் தனது கட்சிக்கும் ஒரு இடம் வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு இரு இடங்களும் மாக்ஸிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பு ராமதாஸை திருப்திப்படுத்தவில்லை.
2004 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலின்போது காங்கிரஸுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் தலா ஒரு இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கியது. டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மேலவை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு மத்திய அமைச்சரானார். ஆகையினால் இம்முறை தோழமைக் கட்சியான மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தை வழங்க திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசியலை ஆட்டிப்படைக்கும் தனக்கு வாய்ப்புத்தராது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியுடன் கூறியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அவ்வப்போது தமிழக அரசை உரசிப் பார்ப்பதும் அதற்கு அமைச்சர்களும் முதல்வரும் அறிக்கைவிடுவதும் வாடிக்கையானது. இம்முறை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனரின் விருப்பத்தை ஏற்க முடியாது நியாயமில்லாதது என்று ஆதாரங்களுடன் முதல்வர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மேலவை உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை. தமிழக சட்டசபையில் 18 உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.
ஆகையினால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தோள் கொடுக்கும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டிய இக்கட்டான நிலையில் தமிழக முதல்வர் உள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 60 உறுப்பினர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறு உறுப்பினர்களும் உள்ளனர். இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு மாநில உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளலாம். மாநிலங்களவைத் தேர்தலினால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு;09.03.2008

Friday, March 21, 2008

என்னைத் தெரியுமா?

கல்பனாவைக் கண்டதும் சிரித்துத் தலையாட்டும் அனைவரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.
மிகக் குறுகலான ஒழுங்கை என்றதால் ஆட்டோ மெது மெதுவாகச் சென்றது. கலவரமடைந்த கல்பனா பின்னுக்குப் பார்த்தாள். பின்னால் நின்றவர்கள் ஆட்டோவைக் காட்டி ஏதோ கதைத்தார்கள்.
வீடுகளுக்குள் இருந்தவர்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். ஒரு சிலர் ஆட்டோவைத் தொடர்ந்தார்கள். கல்பனாவின் வீட்டிற்குச் செல்லும் பாதையில் ஆட்டோ திரும்பியதும் கல்பனாவின் இரத்தம் உறைந்தது.
கல்பனாவின் வீட்டைச் சுற்றிப் பல பொலிஸ்காரர்கள் நின்றார்கள். இரண்டு பொலிஸ் ஜீப்கள் வெளியே நின்றன. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென உணர்ந்த கல்பனாவின் கை கால்கள் பதறின.
கல்பனாவின் வீட்டில் பொலிஸார் குவிந்திருந்ததைக் கண்ட ஆட்டோ டிரைவர் கண்ணாடியில் கல்பனாவைப் பார்த்தான். அவனது கண்களில் சந்தேக ஒளி படர்ந்தது.
கல்பனா கடந்த ஐந்து வருடங்களாக வத்தளையில் வாழ்ந்து வருகிறாள். அவளது கணவன் கடந்த வருடந்தான் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றான். இரண்டு குழந்தைகளும் அவளும் மட்டுமே தற்போது அந்த வீட்டில் வசிக்கிறார்கள்.
அந்த சுற்றாடலிலுள்ள அனைவருடனும் கல்பனா மிகவும் நட்பாகப் பழகினாள். மரக்கறி வியாபாரி, மீன் வியாபாரி, சந்தையிலுள்ள ஆட்டோ சாரதிகள் அனைவரும் அவள் மீது மதிப்பு வைத்திருந்தனர்.
முன்னால் பொலிஸ், பின்னால் ஊர் மக்கள் ஒரு சில விநாடிகள் பல யுகம் போல கழிந்தன. ஆட்டோ வாசலில் நின்றதும் கல்பனாவைக் காட்டி “இவதான் வீட்டிலே இருக்கிறா" என டிரைவர் பொலிஸ்காரரிடம் கூறினார்.
குனிந்து கல்பனாவைப் பார்த்த பொலிஸ்காரர் ஆட்டோவை உள்ளே போகும்படி பணித்தார். “வீட்டிலிருந்து ஏதாவது தடை செய்யப்பட்ட பொருள் எடுத்தினமோ தெரியாது. கடவுளே முந்தி இருந்தது யாரென்றும் தெரியாது" என கல்பனாவின் எண்ண அலைகள் ஓடின.
நடுங்கியபடி கல்பனா ஆட்டோவை விட்டு இறங்கியபோது “நீயா இங்கு இருப்பது’’ என பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்களத்தில் கேட்டார். கல்பனா சிங்களத்தில் பதில் சொன்னாள்.
“சிங்களம் தெரியுமா?" என அந்த அதிகாரி மீண்டும் சிங்களத்தில் கேட்டபோது “கொஞ்சம் விளங்கும். கொஞ்சம் தெரியும்" எனத் தடுமாறி தனக்குத் தெரிந்த சிங்களத்தில் கூறினாள். பொலிஸ் அதிகாரி உடனே தமிழில் கதைக்கத் தொடங்கினார்.
“உங்க பெயர் கல்பனா. மாப்பிள்ளை பிரான்ஸிலை. இரண்டு பிள்ளைகள் பம்பலப்பிட்டியில் படிக்கினம். விசா கிடைச்சா பிரான்ஸிற்குப் போவியள் சொந்தக்காரர் வெளிநாட்டிலையும் யாழ்ப்பாணத்திலையும் இருக்கினம். சரிதானே" என்றார்.
கல்பனா ஒன்றும் பேசாமல் மௌனமாக நின்றாள் “இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்" என அதிகாரி கேட்டார்.
“நீங்க பொலிஸ். உங்களுக்கு எல்லாம் தெரியும்" எனத் தயங்கித் தயங்கி கல்பனா பதிலளித்தாள்.
“உங்களுக்குப் பிடிச்ச நடிகர் விஜய். நடிகை சிம்ரன். கடைசியாகப் பார்த்த படம் ஜெமினி. பிடிச்ச பாட்டு ஓ...போடு" எனக் கூறிய அதிகாரி கல்பனாவை உற்றுப் பார்த்தார்.
இதெல்லாம் கூட பொலிஸுக்கு எப்படித் தெரியும் என கல்பனா குழம்பினாள்.
“எனக்கு மட்டுமில்லை உலகத்துக்கே தெரியும்... நீங்கதான் சொன்னீங்க" என பொலிஸ் அதிகாரி கூறினார்.
பொலிஸ் அதிகாரி கூறிய வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் கல்பனா தடுமாறினாள்.
“போன கிழமை றேடியோவில் உங்களைப் பற்றி சகல விபரங்களையும் சொன்னீங்கள்... அதைக் கேட்டிட்டு ஒருத்தன் திருட வந்திட்டான். பக்கத்து வீட்டுக்காரர் போன் பண்ணினதாலை நாங்க வந்து அவனைப் பிடிச்சம்...
“றேடியோவிலை கேட்டிட்டு பல இடங்களிலை அவன் திருடியிருக்கிறான். உங்களைப் பற்றி சகல விபரங்களையும் சந்தோஷமாகச் சொல்லுவீங்க... பிறகு களவு போனாப்போல எங்களிட்டை ஓடி வருவீங்க... அந்திக்கு பொலிஸ்ரேசனுக்கு வாங்க.." எனக் கூறிவிட்டு சக பொலிஸ்காரர்களையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
பொழுதுபோக்கு விபரீதமானதைக் கண்ட கல்பனா இனி இப்படிச் செய்வதில்லை என முடிவெடுத்தாள்.
சூரன் ஏ.ரவிவர்மா.
நன்றி;இடி வாரமலர் 2002
தாயகம் டிசம்பர் 2007

Saturday, March 15, 2008

சந்திக்கு வந்த குடும்பப் பிரச்சினையால் நொந்து போயுள்ள மாறன் குடும்பம்


கலைஞர் குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையே கனன்று கொண்டிருந்த குடும்பப் பகை கேபிள் தொலைக்காட்சியினால் மீண்டும் எரியத் தொடங்கியுள்ளது.
மாறன் குடும்ப வருமானத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது கேபிள் தொலைக்காட்சி சேவை. அதனை சிதைக்கும் நடவடிக்கையில் ஒரு சில முக்கிய புள்ளிகள் காரியங்களைக் கச்சிதமாகச் செய்வதனால் தயாநிதி மாறன் நியாயம் கேட்டு பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளார்.
"சன்' தொலைக்காட்சிக்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட "கலைஞர்' தொலைக்காட்சி புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி சன் தொலைக்காட்சிக்கு கடும் சவால் விடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாறன் குடும்பத்தின் சொத்தõன சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போட்டியாக வட இந்தியாவில் இருந்து ஹாத்வே எனப்படும் இன்னொரு கேபிள் தொலைக்காட்சி சேவையை அறிமுகப்படுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் முயற்சி செய்கிறார்.
தமிழகத்தில் உள்ள கேபிள் தொலைக்காட்சி சேவையாளர்களிடையே உள்ள போட்டியினால் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு பலமுறை முயற்சி செய்தது. தமிழக அரசின் அம் முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியிலேயே முடிந்தன.
கேபிள் தொலைக்காட்சி சேவையாளர்களை வழிக்குக் கொண்டு வர வேண்டுமானால் அரசாங்கம் கேபிள் சேவையை வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது. கேபிள் தொலைக்காட்சி சேவையை அரசாங்கம் ஆரம்பிக்க தயார் நிலையில் உள்ளது.
அரசாங்கத்தின் கேபிள் சேவை ஆரம்பமாவதற்கிடையில் மாறன் குடும்பத்தின் கேபிள் சேவையை சீர்குலைக்கும் நோக்குடன் அவர்களின் முகாமையாளர் கடத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸார் இது தொடர்பாக விசாரித்தபோது கேபிள் சேவை முகவர்கள் கடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சுமங்கலி கேபிள் முகவர்களை பலவந்தமாக ஹாத்வே கேபிள் சேவைக்கு மாற்றும் முயற்சி நடந்ததாக தயாநிதிமாறன் பொலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.
மாறன் குடும்பத்தின் மீதான இந்த நெருக்குதலின் பின்னணியில் முதல்வரின் மகன் அழகிரியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த அமைச்சரும் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இவர்கள் இருவருக்கும் ஹாத்வே கேபிள் சேவையில் பங்கு இருப்பதால்தான் ஹாத்வேயை தமிழகத்தில் நிலை நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது.
கலைஞருக்கும் முரசொலி மாறனுக்கும் இடையில் இருந்த இறுக்கமான குடும்ப உறவு முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர் சின்னõபின்னமாகி விட்டது. குடும்ப உறவு சீரழிவதற்கு முதல்வரின் மகன் அழகிரிதான் காரணம் என்றும் அழகிரியின் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவர் இருப்பதாகவும் மாறன் குடும்பம் சந்தேகப்படுகிறது.
மாறன் குடும்பத்துக்கு எதிராக ஒரு சிலர் இப்பிரச்சினைகளைத் தூண்டி விடுகிறார்கள். ஆனால், இவை எல்லாம் கலைஞருக்குத் தெரியாமல் தான் நடப்பதாக தயாநிதி மாறன் தெரிவிக்கிறார்.
தனது குடும்பத்தின் மீது தொடர்ந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் இந்த வேளையிலும் கலைஞரை முழுமையாக நம்புகிறார் தயாநிதிமாறன். குடும்ப உறவு நீடிக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் விரும்புகிறார். கலைஞர் குடும்பமும் மாறன் குடும்பமும் இணையக் கூடாது என்று விரும்புபவர்கள் கனகச்சிதமாக காய்களை நகர்த்தி இரு குடும்பங்களையும் வெகுதூரத்தில் வைத்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் முரசொலி மாறனின் பங்கு அளப்பரியது. திராவிட முன்னேற்றக் கழக ஏடான முரசொலியை பொறுப்பெடுத்து நடத்தியதால் முரசொலி என்ற பட்டப் பெயர் மாறனின் முன்னால் ஒட்டிக் கொண்டது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி ஏற்பட்ட வேளைகளில் டில்லியில் உரிய இடங்களில் வாதம் செய்து அந்த நெருக்கடிகளை களைந்தவர் முரசொலிமாறன். கலைஞரின் சிந்தனைகள் சிலவற்றுக்கு செயல்வடிவம் கொடுத்து மக்கள்மத்தியில் கலைஞரின் பெயர் விளங்கச் செய்தவர் முரசொலிமாறன்.
முரசொலி மாறன் அமைச்சராக இருந்தபோது தான் சார்ந்த அமைச்சின் மூலமாக இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தியவர் முரசொலி மாறன்.
ஜெயலலிதாவின் ஆட்சியின்போது நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது கொதித்தெழுந்து பொலிஸாருடன் மல்லுக் கட்டியவர் அவர். ஜெயலலிதாவின் உத்தரவினால் கலைஞரை நள்ளிரவில் பொலிஸார் தூக்கிச் சென்றதை உலகுக்குத் தெரியப்படுத்தியது மாறனின் சன் தொலைக்காட்சிதான்.
கலைஞருக்காகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த முரசொலி மாறன் தொண்டர்களுடன் நெருங்கிப் பழகவில்லை தனக்கென்றொரு கூட்டத்தை ஏற்படுத்தவில்லை. அதே போன்று தான் அவரது மகன் தயாநிதி மாறனும் நடந்து கொண்டார்.
உலக அரங்கில் தயாநிதி மாறனுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால், ஆதரவாளர்கள் மத்தியில் அரசியல் நாயகனாக அவர் விளங்கவில்லை. ஆகையினால் அமைச்சர் பதவியைத் துறந்தபோது கூட எதுவித சலசலப்பும் ஏற்படவில்லை.
அரசியல் எதிரிகளை அரவணைத்துச் செல்லும் கலைஞர் தனது இரத்த உரித்தை பரம எதிரியாக நினைப்பது எதற்காக என்று புரியவில்லை.
அடுத்த தேர்லின்போது கூட்டணிக் கட்சிகளில் மாறுதல் ஏற்படலாம். கலைஞருடன் இருப்பவர்கள் சிலர் வெளியேறலாம். வெளியில் இருப்பவர்கள் சிலர் உள்ளே வரலாம். புகழ்ந்தவர்கள் வசை பாடலாம். வசை பாடியவர்கள் புகழலாம். கலைஞரின் இரத்தத்தின் இரத்தமான தயாநிதி மாறனின் நிலை என்னவாகும் என்று எவருக்கும் தெரியாது?
கலைஞர் குடும்பத்தையும் மாறன் குடும்பத்தையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடைபெற்றன. அந்த முயற்சிகள் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டன. இந்நிலையில் கலைஞரின் மனம் மாறும் வரை பொறுமையாக இருக்கிறது மாறன் குடும்பம்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 24.02.2008

கூட்டணிக் கணிப்புகளால் குழம்பியுள்ள தமிழகம்


கூட்டணிக் கணிப்புகளால் குழம்பியுள்ள தமிழகம்

சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநாடு, விஜயகாந்த், காங்கிரஸ் கட்சி பிரமுகர் அருண் குமார் சந்திப்பு ஆகிய இரண்டு சம்பவங்களும் தமிழக அரசியலில் கடந்த வாரம் பரபரப்பாகப் பேசப்பட்டன.
அரசியலில் அவ்வப்போது சில திருப்பங்களை ஏற்படுத்தும் இடமாக மதுரை திகழ்கின்றது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த மூப்பனார் தாய்க் கட்சியான காங்கிரஸுடன் மீண்டும் இணைவதற்கு மதுரை மாநகரையே தேர்ந்தெடுத்தார்.
தேசிய முன்னேற்ற திராவிடர் கழகத்தை மதுரையிலேதான் விஜயகாந்த் ஆரம்பித்தார். மதுரையில் யார் எந்தக் கூட்டத்தைக் கூட்டினாலும் அதற்கு பதிலடி தரும் அழகிரியும் மதுரையில்தான் வாசம் செய்கிறார்.
மிகப் பிரமாண்டமான அரங்கில் தனது கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டை சரத்குமார் நடத்தி முடித்திருக்கிறார். சுமார் ஐந்து இலட்சம் பேர் கூடுவார்கள் என்று சரத்குமார் எதிர்பார்த்தார். அவ்வளவு மக்கள் அங்கு சேரவில்லை. ஆனால் சேர்ந்த மக்கள் கூட்டம் போதும் என்று சரத்குமார் திருப்திப்பட்டுக் கொண்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சரத்குமார் மாறியபோது அவரது அரசியல் பாதையில் இருந்து விலகி நின்ற ராதிகா குத்து விளக்கேற்றி தனது கணவரின் அரசியல் மாநாட்டை தொடக்கி வைத்தார்.
விஜயகாந்தின் பின்னால் அவரது மனைவி பிரேமலதா அரசியல் அரங்கில் காட்சியளிப்பது போன்று சரத்குமாரின் பின்னால் ராதிகாவும் அரசியலில் அடி எடுத்து வைத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக அரசியல் மேடைகளில் முழங்கிய ராதிகாவுக்கு அரசியல் புதிதல்ல. எம்.ஜி. ஆருக்கு இணையாக தனது கணவர் சரத்குமாரைப் புகழ்ந்து தள்ளியது அரசியலுக்கு புதியதாக உள்ளது.
எம்.ஜி. ஆரைச் சுட்ட எம்.ஆர். ராதாவை எம்.ஜி. ஆரின் ரசிகர்கள் இன்னமும் மறக்கவில்லை. இந்த நிலையில் எம்.ஆர். ராதாவின் மகளான ராதிகா, தனது கணவர் சரத்குமார் எம்.ஜி. ஆரின் வாரிசு என்று பேசியதை எம்.ஜி. ஆரின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
நாடார் சமூகத்தின் அரசியல் கட்சி என்ற முத்திரையில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் சரத்குமார் உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். அக்கட்சிகளின் வெற்றியை தீர்மானிப்பதில் சில இடங்களில் அந்தச் சமூக மக்கள் பெரும் பங்காற்றுகின்றனர். அக்கட்சிகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் சரத்குமாரை நம்பி இப்போதைக்கு வெளியேறத் தயாராக இல்லை. ஆகையினால் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியில் புதிய பொறுப்புக்களைக் கொடுத்து அவர்களையும் தனது கட்சியில் இணைக்க வேண்டிய நிலையில் உள்ளார் சரத்குமார்.
காங்கிரஸ் கட்சியுடன் விஜயகாந்த் இணைவாரா என்ற கேள்விக்கு பதில் தெரியாது திகைத்த சிலர் தற்போது அக்கேள்விக்குரிய பதில் கிடைத்து விட்டது என்று குதூகலிக்கத் தொடங்கி விட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்காரரான அருண்குமாரும் விஜயகாந்தும் கடந்த வாரம் ஒரே விமானத்தில் மதுரைக்குச் சென்றது தமிழக அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று விரும்பும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அருண்குமார் விடிவெள்ளியாகத் தெரிகிறார். விஜயகாந்துடன் என்ன பேசினீர்கள் எனக் கேட்டபோது அரசியல் பற்றி பேசினோம் என்று அருண்குமார் பொடி வைத்துக் கூறியதால் ஒரு சிலர் மகிழ்ந்து போயுள்ளனர்.
கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வந்த விஜயகாந்த் தேசியக் கட்சியுடன் கூட்டணி சேரலாமா என்று தனது ஆதரவாளர்களிடம் கேட்டுள்ளார். அவர்களும் வழக்கம் போல் வேண்டாம் என்று கூறி விட்டனர்.
கூட்டணி எல்லாம் கிடையாது தனித்து நின்றே தேர்தலைச் சந்திப்பேன் என்று வீராப்புப் பேசும் விஜயகாந்த் தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர்வதையே விரும்புகிறார்.
தமிழக காங்கிரஸில் உள்ள ஒரு சில தலைவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி சேரவே விரும்புகின்றனர். டில்லித் தலைவர்கள் தமிழக முதல்வர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்தை டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் நிறைவேற்றிய சந்தர்ப்பம் மிகவும் குறைவு. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட்டு விஜயகாந்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டுச் சேர்ந்தால் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழக காங்கிரஸ் வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸுக்கு உயிர் கொடுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நிதி அமைச்சர் சிதம்பரம் எந்தப் பக்கம் சேர்வார் என்பது சிதம்பர ரகசியம்.
காங்கிரஸுடன் தான் கூட்டணி என்று முழங்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாஸின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? 2011 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தமிழக ஆட்சியைப் பிடிக்கும் என்று முழங்குபவர் என்ன செய்வார்? சபதத்தை மறப்பதும் எதிரியுடன் கை கோர்ப்பதும் சகஜம் என்று விஜயகாந்துடன் கை கோர்ப்பாரா?
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறுவதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கலாம். முதலாவது சேது சமுத்திரத் திட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் விடாப் பிடியாக நிற்பது. இரண்டாவது புலிகளுக்கு ஆதரவான கட்சிகளை திராவிட முன்னேற்றக் கழகம் அனுசரித்து போவது.
சேது சமுத்திரத் திட்டத்தில் காங்கிரஸின் கருத்துடன் விஜயகாந்த் இணங்கிப் போகலாம். தமிழீழ விடுதலைப் புலிகளை மிகத் தீவிரமாக ஆதரித்த விஜயகாந்த் அண்மைக் காலமாக அமைதி காப்பது கூட்டணிக்கான அடித்தளமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கூட்டணி பற்றிய ஆரூடங்கள் பல வெளிவந்தாலும் பலமான அரசாங்கம் ஒன்றை தன் மகனின் கையில் கொடுக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து தமிழக முதல்வர் காத்திருக்கிறார்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 17.02.2008

Sunday, March 9, 2008

பிறந்தநாள் விளம்பரங்களால் அதிர்ந்தது தமிழக அரசியல்



ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக அவரது ஆதரவாளர்களினால் வெளியிடப்பட்ட விளம்பரங்களினால் முதல்வரின் குடும்பத்துக்கும் மாறனின் குடும்பத்துக்கும் இடையேயான பகைமை மேலும் வலுப்பெற்றுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரான செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்றும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மிகப் பிரமாண்டமானதாக விளம்பரப்படுத்தப்பட்டது.
மாறன் குடும்பத்தின் நாளிதழ்களான தினகரன், மாலைமுரசு ஆகியவற்றில் ஜெயலலிதாவை வாழ்த்தி பல விளம்பரங்கள் வெளியாகின. ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் போட்டி போட்டு மிகுந்த உற்சாகத்தடன் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.
கலைஞரின் புகழ்பாடிய பத்திரிகைகள் அவரது பரம எதிரியான ஜெயலலிதாவை வாழ்த்தியதை திராவிடக் கழகத்தில் உள்ள எவரும் ரசிக்கவில்லை. கவிதை பாடி தனது மனக் குறையை வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர்.
வைகோ, ஜெயலலிதா ஆகியோரின் செய்திகளை ஒரு காலத்தில் "சன்' தொலைக்காட்சி இருட்டடிப்புச் செய்தது. கலைஞர் குடும்பமும் மாறன் குடும்பமும் பிரிந்த பின்னர் ஜெயலலிதா வைகோ ஆகியோரின் செய்திகளுக்கு சன் தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. மாறன் குடும்பத்து நாளிதழ்கள் ஜெயலலிதாவின் புகழ்பாடத் தொடங்கிவிட்டன.
பத்திரிகைக்கு விளம்பரம் மிக முக்கியமானது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தயாநிதி மாறன் ஒதுக்கப்பட்ட பின்னர் தினகரன், மாலைமுரசு ஆகிய பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பதை தமிழக அரசு குறைத்துக் கொண்டுள்ளது.
பத்திரிகையின் வளர்ச்சிக்காக எந்த விளம்பரத்தையும் தவிர்ப்பது கடினம்.
மாறன் குடும்பத்து பத்திரிகையில் ஜெயலலிதாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எவரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பரங்கள் வெளியானதும் தமிழகத்து அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தயாநிதி மாறன் இணையப் போகிறார் என்ற வதந்தி தமிழகம் எங்கும் பரவத் தொடங்கியது.
ஜெயலலிதாவின் விளம்பரங்களை வெளியிட்டு முதல்வரின் கோபத்தைத் தூண்டிய மாறன் சகோதரர்கள் இப்படி வதந்தி கிளம்பும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் உள்ள சகல பத்திரிகைகளும் ஜெயலலிதாவையும் தயாநிதி மாறனையும் கண்காணிக்கத் தொடங்கின. "நான் கட்சி மாற மாட்டேன். எனது உடலில் திராவிட முன்னேற்றக் கழகக் கொடிதான் போர்த்தப்படும்' என்று தயாநிதி மாறன் அறிக்கை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தயாநிதி மாறனை வெளியேற்றுவதற்கு ஒரு சிலர் மும்முரமாக முனைகின்றனர். இதேவேளை, தயாநிதிமாறனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைப்பதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஆர்வத்துடன் முயற்சி செய்கின்றனர்.
கட்சியில் இருந்து தயாநிதி மாறனை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று சிலர் வரிந்து கட்டிக் கொண்டு காரியமாற்றுகின்றனர். அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது என்று ஒரு சிலர் கூறுகின்றனர். தயாநிதி மாறனை கட்சியில் இருந்து வெளியேற்றாமல் தூரத்தில் வைத்திருக்கவே முதல்வர் விரும்புகிறார். ஆகையினால் தான் தயாநிதி மாறன் விவகாரம் அப்படியே இருக்கிறது.
அரச விளம்பரங்களையும் திராவிட முன்னேற்றக் கழக விளம்பரங்களையும் தந்திருந்தால் ஜெயலலிதாவின் விளம்பரங்களை வெளியிட்டிருக்க மாட்டேன் என்று மாறன் குடும்பம் மறைமுகமாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பதே இன்றைய முக்கிய கேள்வியாக உள்ளது.
அரச விளம்பரங்களையும் திராவிட முன்னேற்றக் கழக விளம்பரங்களையும் மாறன் குடும்பத்து பத்திரிகைகளுக்கு கொடுத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விளம்பரங்களுக்கு தடை போடப்படுமா? என்ற கேள்விக்கான விடை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசும் கலைஞரும் தள்ளப்பட்டுள்ளனர்.
பிறந்த நாள் விளம்பரங்களினால் தமிழக அரசியல் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கையில் திருக்கடையூரில் உள்ள கோயில் ஒன்றும் யாகங்களாலும் ஹோமங்களாலும் பரபரப்பானது.
திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் உடனுறை அமிர்த கண்டேஸ்வரர் கோயிலில் நீண்ட ஆயுள் வேண்டி வழிபாடு செய்வார்கள். 16 வயதில் மரணத்தை எதிர்நோக்கிய மார்க்கண்டேயருக்கு இறைவன் அருள் கொடுத்து என்றும் பதினாறென இளமையும் வழங்கிய திருத்தலம் தான் இது.
திருமணம் முடித்தவர்கள் தமது 60 ஆவது 80 ஆவது வயதில் கணவன் மனைவியாக நீண்ட ஆயுள் தருமாறு வேண்டுதல் செய்வார்கள். திருமணமாகாத ஜெயலலிதா தனது தோழி சகிதம் மாலை மாற்றி யாகம் செய்தது பத்திரிகைகளில் பரபரப்பான செய்தியாகியது.
ஜெயலலிதாவின் பூஜைகள் முடியும்வரை அந்த ஆலயம் அவருடைய விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
மக்களின் ஆதரவினால் முதல்வரான ஜெயலலிதா, தான் இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக ஆண்டவனின் கருணையை நாடியுள்ளார்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு; 02.03.2008

Wednesday, March 5, 2008

ஆட்சியை மாற்ற முயற்சிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்




பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியன அவ்வப்போது தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கி தமது இருப்பை வெளிக்காட்டின. இதுவரை காலமும் தமிழக அரசுடன் முரண்படாது நல்ல பிள்ளையாக இருந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து தமிழக அரசை எதிர்க்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழக அரசுக்கு எதிராக என்ன செய்யலாம் எனத் தவித்துக்கொண்டிருந்த தமிழக காங்கிரஸுக்கு அவல்போல் விடுதலைப் புலிகளின் விவகாரம் கிடைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உணர்வு பூர்வமாகக் குரல்கொடுக்கும் தொல். திருமாவளவனை, முதல்வர் கருணாநிதியிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
தமிழக முதல்வரை எதிர்த்து இளங்கோவன் அவ்வப்போது போர்க்கொடி தூக்குவார். முதல்வர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துக்குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது குறித்த தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பேசியதுடன் வெளிநடப்புச் செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் வெளிநடப்புச் செய்தது.
தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆதரித்தது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், தமிழக சட்ட சபையிலிருந்து காங்கிரஸ் கட்சியின் கைகோர்த்துக் கொண்டு வெளியேறியது.
காங்கிரஸ் கட்சியை ஆசுவாசப்படுத்துவதற்காக, தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார். என்ன நடந்தாலும் சட்டப்படிதான் நடக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்ட முதல்வர் முயற்சித்தார். முதல்வரின் மிரட்டல் திருமாவளவனை உசுப்பேற்றி விட்டது. விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதுடன் நின்றுவிடமாட்டேன். சட்டத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று வீராவேசமாகப் பேசினார்.
வெல்லும் கூட்டணி முக்கியமில்லை, கொள்கைதான் முக்கியம் என்பதை திருமாவளவன் அப்பட்டமாகப் பேசியுள்ளார். திருமாவளவன் என்பது முதல்வருக்கு நன்கு தெரிந்தவிடயம். ஆகையினால், இப்பிரச்சினைகளை வேறு திசையில் மாற்றி விட்டார் முதல்வர்.
ஆட்சி மாற்றத்தை காங்கிரஸ் கட்சி விரும்பினால் அதற்கு நாம் தயார் என்று முதல்வர் சவால் விட்டார். முதல்வரின் சவால் காங்கிரஸுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவனா? வைகோவா? புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்று கேட்டால் வைகோதான் முதலிடத்தில் உள்ளார். வைகோவை பற்றி தனக்குத் தெரிந்தும் வைகோவுடன் கூட்டணி வைத்த தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் திருமாவளவன் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதற்கு ஆட்சியை மாற்ற முனைவதும் ஒரு காரணம் தான் என்ற கருத்தும் உள்ளது.
தமிழக அரசியல் பங்கு கேட்டு களைத்துப்போக தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் தம்மைப் பங்காளியாக்கும் ஒருவரை முதல்வராக்க விரும்புகின்றனர். விஜயகாந்தை முதல்வராக்கி அழகு பார்க்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பின்னுக்குத் தள்ளி முன்னேறிக் கொண்டிருக்கும் விஜயகாந்த்தை ஆதரிக்க வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம் என்று சில தமிழக அரசியல் தலைவர்கள் கணக்குப்போட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் என்னவென்றாலும் பேசட்டும், காங்கிரஸ் கட்சித் தலைவி தமக்கு ஆதரவாக முதல்வர் என்று திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்க்கிறது. திராவிட முன்னேற்றக்கழகத்தை கைவிட்டு விஜயகாந்த்துடன் காங்கிரஸ் கட்சி இணைந்தால் தமிழகக் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரியும். அப்போது ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவார்கள் என்றும் திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்க்கிறது.
பங்காளிகளினால் திராவிட முன்னேற்றக்கழகம் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் குடும்ப அரசியலும் திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆட்டிப்படைக்கிறது.
அழகிரியின் செல்வாக்கு தென்மாநிலங்களில் கொடி கட்டிப் பறக்கிறது. முதல்வர் கருணாநிதிக்கு பிறகு அடுத்த தமிழக முதல்வராகும் கனவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு அழகிரியின் வரவு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
கடந்தவாரம் தனது பிறந்த நாளை வெகுவிமர்சையாகக் கொண்டாடினார் அழகிரி. தமிழக அமைச்சர்களும் ஆளும் திராவிட முன்னேற்றக்கழகத் தொண்டர்களும் அழகிரிக்கு வாழ்த்துக்கூறி அவரை பரவசப்படுத்தினார்கள். ஸ்டாலினின் ஆதரவாளர்கள் சிலர் வெளிப்படையாக அழகிரியை வாழ்த்தி முழுப்பக்க விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளனர். ஸ்டாலினை நம்பிக்கொண்டிருக்கும் சிலர் அழகிரியை வாழ்த்தவில்லை.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ள இவ்வேளையில் அழகிரியின் விஸ்வரூப வளர்ச்சி ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர்களுக்குப் பின்னர் கட்சியை வழிநடத்துபவர் ஸ்டாலின் என்ற எண்ணம் ஒரு சிலரின் மனதில் இருந்து விடுபடுகிறது. ஸ்டாலினின் மென்மையான போக்கை பலர் விரும்பவில்லை. அழகிரியின் அதிரடி நடவடிக்கைகள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக்கழகத்தில் முக்கிய பதவி எதிலும் இல்லாத அழகிரி கட்சியின் செல்வாக்குடன் இருக்கிறார். அவர் கூறுவதை கலைஞர் கேட்கிறார். தனது ஆதரவாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அக்குற்றத்தில் இருந்து அவர்களைப்பாதுகாக்கத் துடிக்கிறார் என்ற கருத்துக்களினால் அழகிரி முன்னிலை வகிக்கிறார்.
கலைஞரின் வழிகாட்டலில் 30 வருடங்கள் அரசியலில் பலதுன்பங்களை அனுபவித்து மெதுவாக முன்னோக்கி வந்து கொண்டிருக்கும் ஸ்டாலினுக்குப் போட்டியாக யாரும் இல்லை என்ற எண்ணம் இதுவரை நிலவிவந்தது.
ஆனால், அழகிரியின் அதிரடி வளர்ச்சி ஸ்டாலினையும் அவரது ஆதரவாõளர்களையும் சற்றுத் தடுமாறச் செய்துள்ளது.
கட்சியில் எந்தப்பதவியையும் பொறுப்பேற்க மாட்டேன் என்று அழகிரி கூறிவருகிறார். ஆனால், அவர் பதவி வகிக்க வேண்டும் என ஆதரவாளர்கள் அழைப்பு விடுகின்றனர்.
திராவிட முன்னேற்றக்கழக உட்கட்சித்தேர்தலின் பின்னர் ஸ்டாலினா? அழகிரியா? என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.
வர்மா
10.02.2008; வீரகேசரி வாரவெளியீடு

Sunday, March 2, 2008

எழுத்தை ஆண்ட சுஜாதா





எழுத்தை ஆண்ட ஒரு சில எழுத்தாளர்களில் சுஜாதாவும் ஒருவர். உலகில் உள்ள மனிதனை ஒரு துறையில் அல்லது இரண்டு மூன்று துறைகளுக்குள் அடக்கிவிடலாம். ஆனால் சுஜாதாவோ உலகில் உள்ள சகல துறைகளிலும் தனி ஆளுமையை வெளிப்படுத்தி உள்ளார்.
அவ்வாறான சிறந்த எழுத்தாளர் கடந்த புதன்கிழமை மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வாசகர் உலகமே கண்ணீர் வடித்தது.
அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணனி, விளையாட்டு, ஆன்மீகம், பொது அறிவு, சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை, நாவல், திரைப்படம், தொலைக்காட்சி, சினிமா, வானொலி, பத்திரிகை என சகல துறைகளிலும் தனது ஆளுமையின் மூலம் இலட்சக்கணக்கான வாசகர்களை கட்டி வைத்த பெருமைக்குரியவர் சுஜாதா.
1935 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி சீனிவாசராகவன் கண்ணம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் ரங்கராஜன் என்னும் சுஜாதா தகப்பன் அடிக்கடி மாற்றம் பெற்றுச் சென்றதனால் ஸ்ரீ ரங்கத்தில் பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்தார் சுஜாதா.
சிறு வயதில் கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். இவரது முதலாவது சிறுகதை சிவாஜி என்ற பத்திரிகையில் 1953 ஆம் ஆண்டு வெளியானது. 1962 ஆம் ஆண்டு குமுதம் சஞ்சிகையில் இடது ஓரத்தில் எனும் சிறுகதை வெளியானது. குமுதல் சஞ்சிகையில் ரா. கி. ரங்கராஜன் என்ற பிரபலமான எழுத்தாளர் வாசகர்களின் இதயத்தில் இருந்ததனால் இன் னொரு ரங்கராஜன் என்ற பெயர் குழப்பத்தை ஏற்படுத்தியது. தன் மனைவியின் பெயரான சுஜாதாவை தன் பெயருக்கு முன்னால் இணைத்தார். கணவனின் பின்னால் வரவேண்டிய மனைவியின் பெயர் ரங்கராஜனின் பெயருக்கு முன்னால் வந்தது. காலப் போக்கில் ரங்கராஜன் மறைந்து சுஜாதா என்ற மூன்றெழுத்து நிலைத்து விட்டது.
சுஜாதாவின் ஆக்கங்கள் வெளிவராத பத்திரிகை, சஞ்சிகைகள் இல்லை என்றே சொல்லலாம். சுஜாதாவின் எளிமையான உரை நடை வாசிக்கும் ஆற்றலைத் தூண்டியது.
ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் வீட்டில் படித்த சுஜாதா அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பின்னர் ஜோசப் கல்லூரியில் பி. எஸ். சி. இயற்பியல் படித்தார். அப்போது அவருடன் கூடப் படித்தவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் பிரபல விஞ்ஞானியுமான அப்துல் கலாம். டில்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த சுஜாதா 1970 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள பரத் எலக்றிகல்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பணிபுரிந்த போது பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
சுஜாதா தலைமையிலான குழுவினரே இந்தியாவில் வாக்களிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தது. வாக்களிப்பு இயந்திரத்தினால் இந்திய தேர்தல் முடிவுகள் ஒரு நாளிலேயே தெரிந்து விடக் கூடியதாக உள்ளது.
தினமணி, கதிர், குமுதம் ஆகிய சஞ்சிகைகளில் சுஜாதாவின் தொடர் கதைகள் வெளியான போது அந்தக் கதைகளுக்காகவே சஞ்சிகைகளின் விற்பனை அதிகரித்தது.
கணேஷ் வசந்த் என்ற பாத்திரங்கள் காலத்தால் அழியாதவை. கணேஷ் வசந்த் தொலைக்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றார்கள்.
சுஜாதாவின் என் இனிய இயந்திரா, ஜுனோ, ஆகிய விஞ்ஞான கதைகள் பல
வாசகர்களை ஈர்த்தன. அறிவியல், விஞ்ஞானம், கணினி பற்றித் தெரிய வேண்டுமானால் ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அவை பற்றி அதிகம் தெரியாதவர்களும் இலகுவாக விளங்கக் கூடிய உரை நடையைத் தந்தவர் சுஜாதா.
சினிமாப் பட கதாநாயகன், கதாநாயகிகளின் கட் அவுட்களைப் பார்த்து ரசித்த தமிழக மக்கள் எழுத்தாளரான சுஜாதாவின் கட்அவுட்டைப் பார்த்து வியக்க வைத்த பெருமை ஆனந்த விகடனுக்குரியது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கனவுத்
தொழிற்சாலை, பிரிவோம் சந்திப்போம் , பாகம் 1, பாகம் 11 ஆகியவற்றுக்கு சுஜாதாவின் கட்அவுட் சென்னை நகரில் மிளிர்ந்தன.
சுஜாதா எழுதிய காயத்திரி எனும் கதை முதன் முதலாக திரைப்படமாக வெளியானது.
ரஜினி, ஜெய்சங்கர் ஆகியோர் அப்படத்தில் நடித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியா என்னும் தொடரும் திரைப்படமாக வெளியாகிப் பெருவெற்றி பெற்றது. கமலின் விக்ரம் படத்துக்கு முதன் முதலில் கதை, வசனம் எழுதினார் சுஜாதா. ஏவுகணைத் தொழில்நுட்பத்தை தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
மணிரத்தினம், ஷங்கர் ஆகியோரின் ஆஸ்தான திரைக்கதாசிரியராக விளங்கினார்
சுஜாதா. முதல்வன், இந்தியன், ஜீன்ஸ், போய்ஸ், இருவர், ஆய்த எழுதி, கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் சுஜாதா.
அவருடைய முதலாவது கதை வெளியான பத்திரிகை சிவாஜி. அவர் கதை வசனம் எழுதி கடைசியாக வெளியான படம் சிவாஜி. ஷங்கரின் ரோபோ படத்தை இயந்திரா எனத் தமிழாக்கினார். இயந்திரா படத்தின் கதை வசனத்தை எழுதி ஷங்கரின் கையில் கொடுத்து விட்டார்.
ஜூனியர் விகடனில்வெளியான ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி பதில் சுஜாதாவின் ஆளுமையை உலகுக்கு பறைசாற்றியது. காலத்தால் அழியாத எழுத்துக்களுடன் சுஜாதா எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்.
ரமணி
வீரகேசரி 02032008

Saturday, March 1, 2008

தமிழக மீனவர்களை பாதுகாப்பது யார்?





இந்தியாவில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ளது கச்சதீவு. கச்சதீவில் நின்று பார்த்தால் இராமேஸ்வரத்தின் கோபுரம் தெரியும். இந்திய ஆளுகைக்கு உட்பட்டிருந்த கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார் அன்றைய பிரதமரான இந்திரா காந்தி.
கச்சதீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்துக்கு இந்தியா யாத்திரிகர்களும் இலங்கை யாத்திரிகர்களும் சென்று வழிபடுவார்கள். புனித அந்தோனியர் ஆலய திருவிழாக் காலத்தில் பண்டமாற்று மூலம் இரு நாட்டு மக்களும் தமக்குத் தேவையான பொருட்களைப் பரிமாறிக் கொள்வார்கள். கச்சதீவை இலங்கைக்கு வழங்கிய பின்னரும் புனித அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இலங்கை இனப்பிரச்சினையினால்தான் புனித அந்தோனியாரின் ஆலய திருவிழாவையும் முடக்கியது.
இந்திய மீனவர்கள் தமது வலையை காய வைக்கும் தங்கும் இடமாக கச்சதீவு இருந்தது. கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தால் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களின் உயிர் இலங்கை கடற்படையினரால் பறிக்கப்படும் என்று இந்திய அரசு அப்போது நினைத்திருக்க வில்லை.
1974 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28ஆம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இந்திய இலங்கை கப்பல்கள் அனுமதி பெறாது எல்லைகளைக் கடப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது. இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் இலங்கை அரசின் அனுமதி பெறாது கச்சதீவுக்குச் செல்லலாம் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி மன்னார் வளைகுடாப் பகுதியின் கடல் எல்லையை வரையறுத்து இலங்கை அரசும் இந்திய அரசும் இன்னொரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இந்திய அரசின் சார்பில் கேவல் சிங்கும் இலங்கை அரசின் சார்பில் டபிள்யூ. டி ஜயசிங்கவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
1983 ஆம் ஆண்டு இலங்கையில் இனப்பிரச்சினை வெடிக்கும்வரை இந்த ஒப்பந்தத்துக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படவில்லை. இலங்கையின் ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியதும் இந்திய தமிழ் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் வேட்டையாடத் தொடங்கினர்.
தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்திலான குழு ஒன்று முடிவுகளை வகுத்திருந்தது. சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி ஐந்து கடல் மைல் தூரம் சென்று மீன் பிடிப்பவர்களைக் கைது செய்வதில்லை என்று இதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தையும் மீறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்வதேச கடல் சட்டவிதிகளுக்கு முரணாக கச்சதீவுப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்திய மீனவர்களை கருத்திற் கொள்ளாது இலங்கை அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையை கண்டித்து இந்திய அரசு தமிழக மீனவர்களை எச்சரிக்கிறது.
இலங்கை அரசு மிதக்க விட்டிருக்கும் கடல் கண்ணிவெடிகளினால் இந்திய மீனவர்களுக்கு மட்டுமல்ல, சேது சமுத்திரத் திட்டத்துக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படும் கடல் கண்ணிவெடிகள் இந்திய கடல் எல்லைக்குள் செல்லும் ஆபத்து உள்ளது. சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது இலங்கை அரசுக்கு பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.
தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கு இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதேவேளை தமிழக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களை தமிழக உளவுப் பிரிவு ஒட்டுக்கேட்கிறது. அவை பதிவு செய்யப்பட்டு உயர்மட்டத் தலைவருக்கு அனுப்பப்படுகிறது என்ற தகவலினால் தமிழகத்தின் பெரும் புள்ளிகள் ஆடிப்போயுள்ளனர்.
தமிழக அரசின் திட்டங்கள் முன்கூட்டியே எதிர்க்கட்சிகளுக்கு கசிவதையும் எதிரணிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்களையும் இனம் காண்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பரவலாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தச் செய்திகளை தமிழக அரசு மறுத்துள்ளது. ஆனால், பிரபல அமைச்சர் ஒருவரின் மகன் பேரம் பேசிய ஒலிப்பதிவு அமைச்சருக்கு போட்டுக் காட்டப்பட்டுள்ளதென செய்தி வெளியாகி உள்ளது. சில சந்தேகங்களை தொலைபேசியில் பத்திரிகையாளர்கள் கேட்கும்போது நேரில் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று அமைச்சர்கள் கூறுவதனால் இந்தச் செய்தி உண்மையோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உளவுப் பிரிவு டி.ஐ.ஜி.சிவனாண்டி அத்துமீறி பல காரியங்களைச் செய்தார். அதிகாரி என்ற தரத்தையும் தாண்டி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டராக மாறினார். அதே போன்றுதான் இப்போது உளவுப்பிரிவு ஐ.ஜீ.யாக இருக்கும் ஜாஃபர்கேட் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீவிரவாதிகளையும் தேச விரோத சக்திகளையும் இனம் காண வேண்டிய உளவுத்துறை அமைச்சர்களையும் பத்திரிகையாளர்களையும் பொலிஸ் அதிகாரிகளையும் உளவு பார்ப்பதால் மனம் விட்டுப் பேச முடியாது பலரும் தவிக்கின்றனர்.

வர்மா

வீரகேசரி வார வெளியீடு, 03.02.2008