Sunday, June 6, 2010

ராமதாஸின் கனவைகலைத்தெறிந்த கருணாநிதி



திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சூத்திரத்துடன் அரசியல் நடத்திய டாக்டர் ராமதாஸுக்கு அதிர்ச்சி வைத்தியமளித்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் உண்டானது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் உடனடியாகச் சேர்ப்பதற்கு முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என்றே காங்கிரஸ் தலைமை விரும்பியது. தமிழக முதல்வர் கருணாநிதியின் முடிவே தமது முடிவு என்று காங்கிரஸ் தலைமை அமைதியாக இருந்தது.
தமிழக முதல்வர் தம்மை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்தார். அவரின் எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தினால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சேர்வதற்கு தனது கட்சி விரும்புவதாக டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதினார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது வீழ்ந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு, பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் அமோகமாக உயர்ந்திருந்தது. ஆகையினால், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி உடனடியாக இணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை பொடி பொடியாக உடைத்து விட்டார் முதல்வர் கருணாநிதி.
பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கு தயார் எனக் கூறிய திராவிட முன்னேற்றக் கழகம், 2011 ஆம் ஆண்டு வரை காத்திருக்குமாறு காலக்கெடு விதித்துள்ளது. அது மட்டுமல்லாது, பாட்டாளி மக்கள் கட்சி எதிர்பார்க்கும் ராஜ்ய சபா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக 2013 ஆம் ஆண்டு வரை காத்திருக்கும்படி கூறியுள்ளது. கனிமொழி உள்ளிட்ட ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக் காலம் 2013 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், தனது மகன் அன்புமணியை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு டாக்டர் ராமதாஸ் எடுத்த பகீரத முயற்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சி எதிர்பார்க்காத முடிவை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத் ததனால் பாட்டாளி மக்கள் கட்சியில் இரு வேறு கருத்துகள் எழுந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கூட்டணியை விரும்பாதவர்கள் தமது கருத்துகளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் சேரக் கூடாது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது.
தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் முடிவுக்கு வந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு வரை நன்னடத்தைக் காலமாக திராவிட முன்னேற்றக் கழகம் மறைமுகமாக அறிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு வரை திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தலைவர்களையும் காட்டமாக விமர்சிக்க முடியாத நிலையில் சிக்கியுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
பென்னாகரம் இடைத்தேர்தலின் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகக் கடுமையாக விமர்சித்தது பாட்டாளி மக்கள் கட்சி. வேண்டத்தகாத சில சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அதை எல்லாம் மறந்து விடும்படியும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகன் அன்புமணியின் ராஜ்ய சபா பதவிக்காக டாக்டர் ராமதாஸ் அதனை மறந்து விடலாம். ஆனால், முதல்வர் கருணாநிதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் அவற்றை எளிதில் மறக்க மாட்டார்கள்.





அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் அங்கு செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் இணைவதற்கு சகல முயற்சிகளையும் மறைமுகமாக செய்து வந்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஜெயலலிதா சூசகமாக சில உரைகளை ஆற்றியிருந்தார். காங்கிரஸின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாமையினால் விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டு வர சில அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் முயற்சி செய்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணைந்தால், பாட்டாளி மக்கள் கட்சி தனிமைப்பட்டு விடும். ஆகையினால், கருணாநிதியா, ஜெயலலிதாவா என்ற முடிவை விரைவில் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார் டாக்டர் ராமதாஸ்.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றி ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் திட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பரிசீலனையில் உள்ளது. 35 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மூலம் ராஜ்ய சபா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆகையினால் சட்ட சபையில் உறுப்பினர்களை அதிகரிக்கும் முயற்சியை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலின் போது கூட்டணியில் கட்சியிடமிருந்து குறைந்தது 40 தொகுதிகளைப் பெறுவதற்காக பேச்சுவார்த்தையை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்துக்கு கூட்டணிக் கட்சிகளின் ஏனைய தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள்.
தமிழக சட்ட சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற கருத்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் எழுந்துள்ளது. 1991 ஆம் ஆண்டும் 2001 ஆம் ஆண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றது. அதேபோன்று கடைசியில் ஒரு இலக்கம் வரும் 2011 ஆம் ஆண்டும் அண்ணõ திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று விடுமோ என்ற அச்சம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலரிடம் உள்ளது.
கூட்டணிக் கட்சியை ஆதரிப்பதில் முதன்மையான அரசியல் தலைவர் கருணாநிதி என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூவர் ராஜ்ய சபா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபையில் 30 திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் இருந்தபோதும் ஒப்பந்தத்தை மீறக் கூடாது என்பதற்காக 19 உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கும் 25 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பளித்தது. அப்போது அன்புமணியும் சுதர்சன நாச்சியப்பனும் நாடாளுமன்ற உறுப்பினராகினர்.
2006 ஆம் ஆண்டு சட்ட சபையில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2008 ஆம் ஆண்டு சட்ட சபையில் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கும் சந்தர்ப்பம் வழங்கினார் கருணாநிதி. அதேபோன்று இப்போது 18 உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு கருணாநிதி சந்தர்ப்பம் வழங்குவார் என்ற டாக்டர் ராமதாஸின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்திற்குள்ளானது.
கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி தனது கட்சியைச் சேர்ந்த இருவருக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார் ஜெயலலிதா. வைகோ நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், ஜெயலலிதா கூறும் முடிவுகள் அனைத்துக்கும் தலை அசைக்கிறார் வைகோ. அன்புமணியின் எதிர்காலத்துக்காக கட்சியை அடமானம் வைக்கத் துடிக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தாவிய கே.பி. ராமலிங்கம், டி.எம். செல்வ கணபதி ஆகிய இருவரையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தாவத் தயாராக இருப்பவர்களுக்கு சமிக்ஞையாக இது அமைந்துள்ளது. சங்கரன் கோயில் தங்கவேலுவை மூன்றாவது வேட்பாளராக அறிவித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விரித்த வலையாக இது கருதப்படுகின்றது.
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி ஆட்சி அமைப்பதற்கான அடித்தளத்தை இட்டுள்ளார் கருணாநிதி.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 06.06.10

2 comments:

அருள் said...

தமிழக சட்ட மேலவைக்கு 3 இல், 2 பங்கு பெரும்பான்மை வேண்டும், அதற்கு பா.ம.க உதவியது. இந்த மாபெரும் சாதனை பா.ம.க உதவியின்றி நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

தமிழக சட்ட மேலவையோடு ஒப்பிட்டால், நாடாளுமன்ற மேலவை பதவி ஒன்றுமேயில்லை. உதவிக்கு பதிலுதவி என்கிற அடிப்படையில் ஒரு இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க விடம் நட்பையோ, நன்றியுணர்வையோ எதிர்பார்க்க முடியாது என்பதை கருணாநிதி மீண்டும் மெய்ப்பித்துள்ளார்.

அவரது நயவஞ்சகத்தை போற்றுவது ஒருவித வன்னியர் எதிர்ப்பு சிந்தனையின் வெளிப்பாடன்றி வேறல்ல.

வர்மா said...

அருள் said...
தமிழக சட்ட மேலவைக்கு 3 இல், 2 பங்கு பெரும்பான்மை வேண்டும், அதற்கு பா.ம.க உதவியது. இந்த மாபெரும் சாதனை பா.ம.க உதவியின்றி நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா