Sunday, July 6, 2014

அனைத்து மாந்தரையும்காந்தமெனக் கவர்ந்துவிடும் ராஜசீறீகாந்தன்

  
ஐந்து வருடகாலமே (1997-2002) தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராகவிருந்த ராஜசீறீகாந்தன் தமது 56ஆவது வயதிலே (20.04.2004) எம்மைவிட்டுப் பிரிந்தார். இந்த ஐந்து வருட காலப்பகுதியிலே அவர் சாதித்தவை மிகப்பல.
வடமராட்சியின் வதிரிக் கிராமத்திலே ராஜரட்ணம் சீவரட்ணம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனாக 30.06.1948 ல் ராஜசீறீகாந்தன் பிறந்தார். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரிஇ பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரிஇ சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக கல்லூரி ஆகியவற்றில் கல்விபயின்றார் 28.08.1979 ஆண்டு டாக்டர் மாசிலாமணி மகேஸ்வரி தம்பதிகளின் மகள் லீலாவதியை மணந்தார். அபர்ணாஇ அனோஜா ஆகிய இருவரும் இவர்களின் அருமைப் புதல்விகளாவர். அபர்ணா ஆசிரியையாகவும் அனோஜா ஊடகவியலாளராகவும் பிரகாசித்தனர். (இவர்களில் அபர்ணா அண்மையில் காலமானார்)
ஒருகணப்பொழுது பழக்கமுடையோரையும் தமது இனிய வார்த்தைகளினாலும் பண்பான நடத்தையினாலும் கவர்ந்துவிடும் வல்லமை கொண்டவராக காந்தன் விளங்கினார். ஒப்புரவு ஒழுகும் பாங்கினால் அவர் அனைவரின் மனங்களையும் கவர்ந்திழுக்கும் காந்தமானார். காட்சிக்கு எளியனாகவும் கடுஞ்சொல் பேசாத பெருந்தகையாளனாகவும் அவர் திகழ்ந்தார். நான் எனது என்ற குறுகிய எல்லைகளைத் தாண்டி நாம் என்ற உலகுதழுவிய நோக்குடையவராக அவர் செயற்பட்டார். ராஜசீறீகாந்தன் சிறந்த ஒர் ஆக்க இலக்கியப்படைபாளராகவும் ஆற்றல் மிக்க ஊடகவியலாளராகவும் வல்லமை கொண்ட மொழிபெயர்ப்பாளராகவும் உறுதியான கொள்கைப் பற்றாளராகவும் முற்போக்குச் சிந்தனை கொண்டவராகவும் நல்ல பண்பாளராகவும் திடமான சமுகப்பற்றாளராகவும் திகழ்வதற்கு அவருடைய இத்தகைய குணாம்சங்களே காரணமாகின.
இதனால்தான் அவர் கட்சிபேதமற்ற வகையிலே பிரதேச இன மத வரையறைகளைக் கடந்த நிலையிலே அரசியல் வாதிகளின் நண்பனாகத் திகழ்ந்தார். சகல தமிழ்இ முஸ்லிம் அரசியல்வாதிகளிலிருந்து அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வரை அவரது நட்பு வட்டத்துள் சிக்குண்டிருந்தனர். ராஜசீறீகாந்தனின் மறைவுபற்றி அறிந்தும்  அன்றைய  ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மிக உருக்கமான இரங்கல் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
படிப்பறிவற்ற ஏழைத் தொழிலாளர்கள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வரை காந்தனின் நெருங்கிய சகாக்களாக விளங்கினர். கலை இலக்கியப்படைபாளர்களும் விமர்சகர்களும் அவருடன் மிகுந்த ஆர்வமுடன் உறவு கொண்டனர். தனது நண்பர்களுக்காகவும்  சகாக்களுக்காகவும் தன்வசமுள்ள எதனையும் இழப்பதற்கு தயங்காத மனோவல்லமையைக் கொண்டவராக அவர் விளங்கினார் காந்தன் சகல துறைகளிலும் முற்போக்கான சிந்தனையும் செயற்பாடும் உள்ளவராக விளங்கினார். குறிப்பாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அவர் துடிப்புமிக்க முன்னணி உறுப்பினராக விளங்கினார். சங்கத்தின் செயலாளரான பிரேம்ஜி ஞான சுந்தரனுடன் கொண்ட அத்யந்த நட்புறவுகாரணமாக சங்க நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டார். இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியுடன் மிக நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார். இதனால் சோவியத்ரஷ்யாவின் நொவெஸ்தி செய்திச் சேவையில் இணைந்து பணியாற்றும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. சோவியத்நாடு மற்றும் ஏனைய சோவியத் வெளியீடுகளுக்கான ஆசிரியர் குழுவில் இணைந்து அவர் பணியாற்றினார்.
ஆற்றல்களையும் திறன்களையும் தேடிப் பிடித்து அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் முனைப்புடன் காந்தன் செயற்பட்டார்மிக அற்பத்தனமான காரணங்களின் அடிப்படையில் தமிழ் இலக்கிய உலகினின்றும் ஒதுக்கிவைக்கப்பட்ட ஆங்கில இலக்கிய மேதையான அழகு சுப்பிரமணியத்தை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் காந்தனே. சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்று இலங்கை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகத் தொழில் புரிந்த அழகு சுப்பிரமணியம் யாழ்பாணம் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். அவரது படைப்பாற்றல் குடத்துள் விளக்காக முடங்கிக்கிடப்பதனை அறிந்து காந்தன் அவரது குடும்பத்துடன் தொடர்பு கொண்டார்.
அழகு சுப்பிரமணியம் எழுதிய அனைத்து ஆங்கில சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார். அவற்றில் சிலவற்றைத் தொகுத்து நீதிபதியின் மகன் என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல் இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினைப் பெற்றது. இந்த நூல் காந்தனின் அதிஅற்புதமான மொழிபெயர்ப்புத்திறனுக்கு கட்டியம் கூறிநிற்கிறது. இதேவேளை  அழகு சுப்பிரமணியத்தின் மிஸ்டர் மூன் என்ற ஆங்கில நாவலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
காந்தனின் படைப்பாற்றலுக்கு உரைகல்லாக திகழ்வது அவர் எழுதி எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தினால் 1994ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கால சாளரம் எனும் சிறுகதை தொகுப்பு நூலாகும். இந்த நூலும் இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினைப் பெற்றது. இந்த நூலின் பதிப்புரையில் பிரேம்ஜி ஞான சுந்தரன் இவருடைய படைப்புக்கள் அனைத்திலும் உட்சரடாகவும் ஆத்ம அடிநாதமாகவும் இருப்பது ஒரே ஓரு இயல்புதான். அது அப்பழுக்கற்ற மானிதம்இ அடிமுடிவரை வியாபித்துச் செறியும் மனித நேயம்... இது இந்த அவலங்களிலிருந்து நிஸ்டூரங்களிலிருந்து மானுடத்தை விடுவிப்பதற்கான பாதையும் செல்நெறியையும் கோடிட்டுக் காட்டி நிற்கிறது எனக் குறிப்பிடுவர்.
காந்தன் மலையக தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பணி மகத்தானதாகும். மலையக இலக்கிய கர்த்தாக்கள் கே.கணேஸ் முதற்கொண்டு அனைத்து எழுத்தாளர்களுடனும் அவர் நெருங்கிய உறவைப் பேணினார். மலையக தமிழ் இலக்கியம் பற்றி அதீத ஆர்வம் கொண்டிருந்த துரைவி எனும் துரைவிஸ்வநாதனின் இரு கரங்களாகத் திகழ்ந்தவர்கள் காந்தனும் தெளிவத்தை ஜோசப்பும் மல்லிகை டொமினிக் ஜீவாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் அவர் துரைவி பதிப்பகத்தை ஆரம்பித்தார். இப்பதிப்பகத்தினூடாக உழைக்கப் பிறந்தவர்கள்இ மலையகச் சிறுகதைகள்இ பாலாயி ஆகிய நூல்களை அவர் பதிப்பித்தார். மாத்தளை சோமுஇ மாத்தளை கார்திகேசு ஆகியோர் இப்பணியில் வழிகாட்டிகளாக விளங்கினர்.
காந்தன் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்தவேளை மலையக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தினகரனூடாக சிறுகதைப்போட்டி ஒன்றினை துரைவி ஒழுங்கமைத்தார். இதற்காக ஒருலட்சம் ரூபாவை அவர் பரிசுதொகையாக வழங்கினார். அதேவேளை மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான குறிஞ்சித் தென்னவன் அவர்களுக்கு உதவும் பொருட்டு தினகரனூடாக நிதி சேகரித்து ஒருலட்சம் ரூபாவுக்கு அதிகமான தொகையை காந்தன் திரட்டினார்.
காந்தனின் அகத்தில் அவரது சமூகம் பற்றிய உணர்வு ஒரு பெருந்தீயாக சுடர்விட்டுக்கொண்டிருந்தது. அது மூளாத்தீயாக அவரினுள்ளே கனன்று கொண்டிருந்தது. குமுறும் எரிமலையாக நெஞ்சிலே அதனை அவர் சுமந்தபடி வாழ்ந்திருக்கின்றார்.
வருணாசிரம கொடுமுடியாகத்திகழ்ந்த யாழ்பாணத்து ஆறுமுக நாவலரைவிட வதிரி தேவரையாளி சைவப்பெரியார் சூரனை மேன்மையானவராக அவர் இனங்காண்கின்றார். தேவரையாளி சமூகத்தில் தோன்றிய சூரன் தேவரையாளி சைவவித்தியாசாலையின் தாபகராகவும் அதனை வளர்த்தெடுப்பதில் முன்னின்று உழைத்தவராகவும் இனங் காண்கின்றார். அந்தப் பாடசாலையே வடமராட்சியின் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் கல்வி சமூக பொருளாதார எழுச்சியின் அடிக்கட்டுமானமாகவும் இனங்காண்கின்றார்.
அத்தகைய சூரன் ஐம்பது ஆண்டுகளின் முன்னர் எழுதிய அவரது குறிப்புகளை (அவரது சரிதவியல்) தொகுத்து சூரன் சுயசரிதை என்ற நூலைப் பதிப்பித்தார். இந்த நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி முன்வந்து மிகப் பெறுமதியான முன்னுரை ஒன்றை வழங்கியுள்ளார். இந்த நூலைப் பதிப்பதில்  காந்தனின் குடும்பம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. இந்த நூலுக்கு 2004.03.11 ஆம் திகதியன்று பதிப்புரை எழுதிய காந்தன் அந்த நூல் வெளிவருவதன் முன்னரே இயற்கை எய்தியமை மிகப்பெரும் சோகமே. அதுமட்டுமன்றி தேவரையாளி இந்துக்கல்லூரியில் பெரியார் சூரன் அவர்களுக்கு சிலை நிறுவவேண்டு மென்ற கருத்தை மனமுவந்து வரவேற்று அந்த முயற்சிக்காகத் தனது +ரண ஒத்துழைப்பை வழங்கி அதனை நிறைவேற்றி வைத்தார்.

காந்தன் தினகரனில் பிரதம ஆசிரியராக பணியாற்றிய காலம் தினகரனின் மறுமலர்ச்சிக் காலம் என உறுதியாகக் கூறலாம் என்பர் கவிஞர் மேமன்கவி. இந்தக் காலப்பகுதி அரச தமிழ் ஊடகத்துறையின் பொற்காலம் என்பார் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியின் முஸ்லிம் சேவைப்பணிப்பாளாராக விளங்கிய கபீல். இக்காலப்பகுதியில் காந்தன் தினகரனில் பிரதம ஆசிரியராகவும் வீ.என்.மதியழகன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியின் முஸ்லிம் சேவைப்பணிப்பாளராக கபீலும் தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திப்பிரிவின் பணிப்பாளராக சி.வன்னியகுலமும் செயற்பட்டோம். அக்காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் மிகக் கொடிய யுத்தம் இடம்பெற்றதால் மக்களின் அன்றாட வாழ்க்கையே சீர்குலைந்து போனது.
வடக்குஇ கிழக்கின் நிலைமைகளை நேரில் விபரிப்பதற்காக அரச தமிழ் ஊடகப் பணிப்பாளர்கள் ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இன விவகாரங்கள் சம்பந்தமான உயர்மட்ட ஊடகக் கமிட்டியின் உறுப்பினராக விளங்கிய பிரேம்ஜி ஞான சுந்தரன் தலைமையில் சந்திப்போம். அமைச்சர்களும் அமைச்சு செயலாளர்களும் கலந்து கொள்ளும் அந்த சந்திப்பின் போது தலைகள் உருளாமல் இருப்பதற்காக யாவரும் அமைதிகாப்பர். காந்தன் மட்டும் தனது கருத்துக்களை அச்சமின்றி ஆணித்தரமாக அங்கு எடுத்துரைப்பார். அரசாங்கத்தை காரசாரமாக விமர்சிக்கும்  விடயங்களைக்கூட அவர் எவ்விததயக்கமுமின்றி முன்வைப்பார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக  அவர் ஒலித்தார். ஒரு உண்மையான ஊடகவியலாளனின் விஸ்வரூபங்கண்டு நாங்கள் மலைத்து நிற்போம். அத்துணை மன ஓர்மம் கொண்டவராக அவர் விளங்கினார். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் காந்தன். அவர் காலமாகியதன் பின்னர் அவருடனான நட்பின் அடையாளமாக ராஜசீறீகாந்தன் நினைவுகள் என்ற அரிய நூல் ஒன்றினை முருகப+பதி வெளியிட்டிருந்தார். அவுஸ்திரேலியாவில் இருந்தபடி அவர் இந்த நூலினை தை 2005 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார். கலைஞனுக்கும் ஊடகவியலாளனுக்கும் காலமும் இடமும் கட்டுப்பாடும் ஏது? அவன் என்றுமே மக்கள் மனதில் நிலைத்திருப்பவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுவது போல ராஜசீறீகாந்தனின் நினைவு ஈழத்து இலக்கிய வரலாற்றினுள் இடம் பெறவேண்டிய ஒன்றாகும்

சி.வன்னியகுலம் 

30.06.2014இல் இடம்பெறவுள்ள  அமரர்  ராஜசீறீகாந்தனின் அறுபத்தாறாவது  ஜனன தினத்தினை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.  

தினக்குரல் 29062014



No comments: