Monday, April 3, 2017

நட்சத்திர வீரர்கள் இல்லாத ஐ.பி.எல்

கிரிக்கெற் ரசிகர்களின்  ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் 10 ஆவது .பி.எல் திருவிழா 5 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகிறது.ஹைதரபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இரவு 8  மணிக்கு நடைபெறும்  முதலாவது போட்டியில் ஹைதரபாத்  சன்ரைஸ் ,பெங்களூர் ரோயல்சலஞ்  ஆகிய அணிகள் மோத  உள்ளன. மேமாதம்  21  ஆம் திகதி இதே மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறும்.


தாய் நாட்டு கிரிக்கெற் அணியின் வெற்றிக்காக தேசியக்கொடி பிடித்து  வெறித்தனமாக கோஷம் போட்ட ரசிகர்கள் இந்திய நகரைப் பிரதிபலிக்கும் அணியின் வெற்றிக்காக குரல் கொடுக்கத் தயாராகிவிட்டனர். தனது அணியின் வெற்றிக்காக எதிர்த்து விளையாடிய அணி வீரருடன் மூர்க்கமாக மல்லுக்கட்டியவர்கள் அந்த அணி வீரருடன் ஒன்றிணைந்து விளையாடத் தயாராகிவிட்டனர். இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்றது. அப்போது இந்திய வீரர்களும் அவுஸ்திரேலிய வீரர்களும் விளையாட்டுணர்வை மறந்து மைதானத்தில் மோதிக்கொண்டனர். வரத்தைப் பிரயோகம் எல்லை மீறியது.  நண்பன் இல்லை எதிரிதான் என்ற பிரகடனம் செய்யப்பட்டது. அவுஸ்திரேலியப் பத்திரிகைகள் இந்திய அணித்தலைவர் கொஹ்லியை வசைபாடின.  அவற்றை எல்லாம் மறந்து போனமாதம் நாங்கள் எதிரிகள். இந்த மாதம் நாம் நண்பர்கள் என்பதை வெளிப்படுத்த வீரர்கள் தயாராகிவிட்டார்கள்.
 கிரிக்கெற்றின் உச்சம் தொட்ட வீரர்களுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுக்கும் போட்டி ஐ.பி.எல். வளர்ந்து வரும் இளம் வீரரை திடீரென அதிர்ஷ்ட சலியக்குவது ஐ.பி.எல் தான்.அனுபவம் வாய்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்காது மூக்கறுப்பது ஐ.பி.எல்லின் விஷேட தகமை.  தமக்குத் தேவையான வீரர்களை  ஏலத்தில் எடுத்து கோடிக்கணக்கில் பணத்தை  வாரி இறைத்த  அணிகளின் உரிமையாளர்களுக்கு வீரர்களின் உடல் நிலை அதிர்ச்சியளித்துள்ளது.


உடல் தகுதி இன்மை, காயம் போன்ற காரணங்களால் ஐ.பி.எல்லின் நட்சத்திர வீரர்கள் விளையாடாததால்  ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்திய வீரர்கள் தொடர்ந்து 13  டஸ்ட் போட்டிகளில் விளையாடியதால் இந்திய வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வெளிநாட்டு வீரர்களும் ஐ.பி.எல்லின் இருந்து விலகி உள்ளனர். ஆரம்பப் போட்டிகளில் விளையாட முடியாத வீரர்கள் சிலர்  கடைசிபோட்டிகளில் விளையாடும் நம்பிக்கையில் உள்ளனர். ஒரு சில வீரர்கள் ஐ.பி.எல்லில் விளையாடுவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி நான்காவது  டெஸ்ட்டில் விளையாடவில்லை. பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணித் தலைவரான   கோஹ்லிக்கு  காயம் இன்னமும் குணமடையாததால் அவர்  விளையாடமாட்டார். இந்தியாவின் இன்னொரு வீரரான லோகேஷ் ராகுல் காயம் காரணமாக ஐ.பி.எல்லில் இருந்து விலகி உள்ளார். ஹோக்லியின் இடத்தை  டிவில்லியஸ் நிரப்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. காயம் காரணமாக தென்.ஆபிரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் அவர் விளையாடவில்லை.  92 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய டிவில்லியஸ் இரண்டு சதம் 20 அரைச்சதம் உட்பட  2586   ஓட்டங்கள் அடித்துள்ளார்.ஹோக்லி, டிவில்லியஸ் ஆகிய இருவரும் இல்லாததால் பெங்களூர் அணியின் கப்டனாகும் வாய்ப்பு வட்சனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதரபாத் சன்ரைஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முஷ்டாபிர் ரஹ்மான் இல்லாதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவு.கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சன்ரைஸ் சம்பியனாவதற்கு முஷ்டாபிர் ரஹ்மானின் பந்து வீச்சும் ஒரு காரணம். மிச்சேலும் அஸ்வினும்  இல்லாதது ரைசிங் புனேக்கு பெரும் பதிப்பு. ஆறு அல்லது எட்டு வாரங்கள் அஸ்வின் ஓய்வில் இருக்க வேண்டும் என  வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

டெல்லி டேடெவிர்ஸ் அணியின் வீரர்களான குயின்ச்டன் டிகாக் ,டுமினி ஆகிய இருவரும் ஐ.பி.எல்லில் விளையாடமாட்டோம் என அறிவித்துள்ளனர். ஆரம்பப் போட்டிகளில் மத்தியூஸ் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவு. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாத முரளி விஜய், மாட்டின் குப்தில் ஆகிய இருவரும் ஐ.பி.எல்லில் இருந்து வெளியேறியதால் பஞ்சாப் சிக்கலில் உள்ளது. கடை நேரத்தில் நட்சத்திர வீரர்கள் காயமடைந்து வெளியேறியதால் அவர்களின் இடத்தை நிரப்பக்கூடிய வீரர்களைப் ப புதிதாகச் சேர்க்க முடியாததால் இருப்பவர்களை வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.

கொல்கட்டாவின் வீரரான அந்தரே ரஸ்ஸலின் நிலை பரிதாபமாக உள்ளது. உக்க மருந்து  பாவித்தமையால் இரண்டு வருடத்தடை காரணமாக ஐ.பி.எல்லில் அவர் விளையாட முடியாது. இந்திய அணியின் கப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறிய டோனியை ஐ.பி.எல்லில் கப்டனாகப் பார்க்கலாம் என்ற  அவரது ரசிகர்களின் ஆசையில் மண்  விழுந்துள்ளது.
வர்மா

No comments: