Thursday, September 28, 2017

ஒருநாள் போட்டித் தொடரை வென்றது இங்கிலாந்து

இரண்டாவது சதம் அடித்த  எவின் லெவிஸ்


இங்கிலாந்துக்குச் சென்றுள்ள  மேற்குஇந்தியத் தீவுகள்  கிரிக்கெட் அணி   மூன்று டெஸ்ட், ஒரு ரி-20 போட்டிகளில் விளையாடியது.  டெஸ்டில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும்,ரி20 யில்  மேற்கு இந்தியத்தீவும்  வெற்றி பெற்றன ஐந்து ஒருநாள் போட்டிகளில் இரண்டு நாட்டு அணிகளும் விளையாடி வருகின்றன. .நேற்றுஓவல் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஆறு ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முன்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளில் ஒரு போட்டி  மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து  தொடரைக் கைப்பற்றியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. மேற்கு இந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்களான     கிரிஸ் கெயிலும், எவின் லெவிசும் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 11 ஓட்டங்களிலும், மார்லன் சாமுவேல்ஸ் 1 ஓட்டத்துடனும் வெளியேறினர்.அப்போது    மேற்கு இந்தியா, 6.1 ஓவர்களில்  3 விக்கெற்களை இழந்து  33 ஓட்டங்கள்  எடுத்திருந்தது. அதன்பின்னர் எவின் லெவிசுடன் ஜேசன் முகமது ஜோடி சேர்ந்தார். ஜேசன் முகமது 46 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள்  சேர்த்தது.

காயம் காரணமாக வெளியேற்றப்படும்  எவின் லெவிஸ்



அடுத்து களம் இறங்கிய எவின் லெவிஸ் - ஜேசன் ஹோல்டர் ஜோடி அதிரடியில் இறங்கியது. இவர்கள் இருவரும் இணைந்து மேற்கு இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தின. சிறப்பாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 77 ஓட்டங்களில்ல் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் அதிரடியாக விளையாடிய எவின் லெவிஸ் காயமடைந்ததால் மைதானத்தில் இருந்து  வெளியேறினார். 130 பந்துகளுக்கு முகம் கொடுத்த எவின் லெவிஸ்  17 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கலாக  176 ஓட்டங்கள்  குவித்தார்.  

மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெற் இழப்பிற்கு 356 ஓட்டங்கள் எடுத்தது.  ரோவ்மன் பவல் 28 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.   357 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய  இலக்குடன்    இங்கிலாந்து அணி களமிறங்கியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ராய் 84 ஓட்டங்கள்  எடுத்து அல்ஸாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ஓட்டங்கள் சேர்த்து தொடக்க நல்ல தொடக்கத்தை கொடுத்தது. ஜானி பேர்ஸ்டோ 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

  ஜோ ரூட் 14 ஓட்டங்களிலும், இயான் மார்கன் 19  ஓட்டங்களிலும்,  சாம் பில்லிங்ஸ் 2 ஓட்டங்களிலும், ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜோஸ் பட்லருடன், மோயின் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ஓட்டங்கள்  சேர்த்தது.

இங்கிலாந்து அணியின் 35.1 ஓவரில் 5 விக்கெற் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் நடுவர்கள் ஆட்டத்தை முடித்துவைத்தனர். இங்கிலாந்து அணி டீ.எல். விதிப்படி 6 ஓட்ட  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஐந்து விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் விழ்த்தினார். 176 ரன்கள் எடுத்த மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் எவின் லெவிஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments: