Monday, February 17, 2020

பிகில் தந்த திகில்


தென் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விதம் சினிமாவைத் தாண்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும் அடிக்கடி விஜயைச் சீண்டிப் பார்க்கின்றன.   வருமானவரித்துறை அதிகாரிகள் விஜயினுடைய வீட்டில் சோதனை நடத்திய அதேவேளை வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்த அவரை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மல்லையா,  பிரேமானந்தா போன்றோர் வெளிநாடு செல்லும்வரை கண்ணை மூடிக்கொண்டிருந்த இந்திய அரசாங்கம் குற்றவாளியைப் போல விஜயை நடத்தியதை பொதுமக்களும் அரசியல்வாதிகளும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

பிகில் திரைப்படத்துக்கு வாங்கிய பணத்துக்கு வருமான வரி கட்டவில்லை என்று விஜய் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு நாட்கள் துதுவித்துருவி நடத்திய விசாரணையில் அவர் வீட்டில் இருந்து எந்த ஒரு ஆவணமும், பணமும் கைப்பற்றப்படவில்லை. இரண்டு நாட்கள் வெளிப்புறப்படப்பிடிப்பு தடைப்பட்ட பின் தொடர்ந்து நடைபெறுகிறது.  புலி படம் வெளியான போதும் விஜய்யின் வீட்டில் வருமானவருத்துறையின சோதனை செய்தனர். அப்போதும் எதுவும் அகப்படவில்லை.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே விஜயின் படங்கள் பல சிக்கல்களைச் சந்தித்தன. கடந்த சில வருடங்களாக விஜயின் படங்கள் அனைத்தும் மிகுந்த போராட்டத்தின் பின்னரே வெளியாகின. கதைத் திருட்டு அல்லது அரசியல் பழிவாங்கல் ஆகியவற்றின் காரணமாக விஜயின் படங்கள் சோதனைக்குள்ளாகின. தன்னுடைய படங்கள் பிரச்சினைக்குட்பட்டபோது  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். இப்போது முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வத்தைச் சந்தித்தார். அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துகான ஆதரவு நிலைபட்ட விஜய் ஒருகாலத்தில் எடுத்தார். தலைவா பட  பிரச்சினையின் பின்னர் னது முடிவை மாற்றி விட்டார்.

ராகுல் காந்தியை விஜய் சந்தித்தபோது இளைஞர் அணித் தலைவராகிறார், லோக்சபா எம்பியாகிறார் என செய்தி வெளியானது.மோடியின் பார்வையில் இருந்தும் விஜய் தப்பவில்லை. மோடியும் அவரைச் சந்தித்தார். யாருடைய வலையிலும் சிக்காமல் படத்தில் நடிப்பதிலேய கவனத்தைச் செலுத்துகிறார் விஜய். ஆனால், விஜயை முதலமைச்சராக்கியே தீருவேன் என்பதில் அவருடைய தகப்பன் தீவிரமாக இருக்கிறார்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராகவும், டிஜிட்டல் இந்தியாவை எதிர்த்தும் விஜய் வசனம் பேசியதால் தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் விஜய்க் எதிராக அறிக்கை விட்டனர். நெய்வேலியில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பாரதீய ஜனதாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்செய்தனர். தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத கட்சி, தென் இந்தியாவில் செல்வாக்குள்ள நடிகரை எதிர்த்து போராட்டம் செய்வது வியப்பாக உள்ளது. சர்கார் படத்தில் இலவச பொருட்களை உடைத்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விஜயை எதிர்த்தது.

சினிமா மீதான அடக்கு முறை இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. கல்கியின் அலை ஓசை படம் தடை செய்யப்படப்போகிறதென்ற  செய்தி அன்று பரபரப்பாகப் பேசப்பட்டது.  திராவிடக் கழகக் கொள்கைகள் உள்ள பாடல்கள், நாடகங்கள், சினிமாக்கள் அன்றைய காங்கிரஸ் அரசால் தடை செய்யபட்டன.

ரஜினிக்கு எதிராக வருமனவரித்துறை தாக்கல் செய்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. வட்டிக்குப் பணம் கொடுத்ததை ரஜினி ஒப்புக்கொண்டுள்ளார். விஜயையினுடைய வீட்டில் இருந்து எவையும் கைப்பற்றப்படவில்லை ஆனாலும், வருமானவரித்துறை அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது. இது அரசியல் பழிவாங்கலல்ல என பாரதீய ஜனதாக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். உள்ளூராட்சித் தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். இதுவும் அரசின் கண்களை  உறுத்தியுள்ளது.
விஜயின் சினிமாக்குரலை முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனைப் பற்றியெல்லாம் கவலைப் படாத விஜய் படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்துகிறார். மேடையில் விஜய் தொன்றும் நாளை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது சகலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், அதற்கு பண உதவி புரிந்த அன்புச்செழியன் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என்பனவற்றிலும்  வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். அங்கிருந்து ஆவணங்களும் ,பணமும் கைப்பற்றப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  இராமநாதபுர மாவட்டம், பம்மனேந்தல் கிராமத்தைச்சேர்ந்த அன்புச்செழியன்  வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டார். அங்கிருந்து மதுரைக்கு இடம் பெயர்ந்தார். மதுரை அன்பு எனும் பெயரில் பிரபலமானார். சினிமாவில் நுழைந்ததும் பைனான்சியர் அன்புச்செழியனானார். அமைச்சர்களின் பினாமியாக அன்புச்செழியன் இருபதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்ரியும் வருமானவரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திரைப்படம் தயாரிக்கத் தேவையான பணத்தைக் கொடுக்கும் அன்புச்செழியன் அதனை வசூலிக்கும் முறை மோசமானது. மணிரத்தினத்தின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஸ்வரனின் தற்கொலைக்கு அன்புச்செழியந்தான் காரணம் எனக்குற்றம் சாட்டப்பட்டது. அன்ப்ச்செழியனிடம் வட்டிக்குப் பணம் வாங்கியதால் தான் மிரட்டப்பட்டதாக நடிகை ரம்பா  வெளிப்படையாகத் தெரிவித்தார். திரைப்படத் தயாரிப்பாளர் தங்கர்ச்சுவை மிரட்டியதாக 2004 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அன்புச்செழியன் பிணையில் விடுதலையானார்.

2017 ஆம் ஆண்டு      விஜய் சேதுபதியின் அத்தை மகன் தற்கொலை செய்தார்.  அதற்கு அன்புச்செழியன்தான் காரணம் என கடித எழுதி வைத்தார்.  அது தொடர்பாக அன்புச்செழியன் மீதும் அவரது முகாமையாளர் மீதும்  வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. முகாமையாளர் கைது செய்யப்பட்டு பினையில் விடுதலையானார். முன் பிணை பெற்ற அன்புச்செழியன் , அமைச்சர் ராஜுவின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அரசியல் செல்வாக்கு மிக்க அன்புச்செழியனையும் விஜயையும் ஒன்றாக எதர்கு விசாரணை செய்கிறார்கள் என்ற மர்மத்துக்கான விடை எப்போது  கிடைக்குமோ தெரியாது.

No comments: