Thursday, June 4, 2020

கீழடிக்கு அருகே மணலூரில்.. வித்தியாசமான விலங்கின் பிரமாண்ட எலும்புக்கூடு


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மணலூர் என்ற கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் அடுத்தடுத்து ஆச்சரியப்படத் தக்க பல பொருட்கள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. இன்று,5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  ஒரு வித்தியாசமான விலங்கின், எலும்புக் கூடு அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில்  பெப்ரவரி 19ம் திகதி, 6வது கட்ட அகழாய்வு பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் குழிகள் தோண்டப்பட்ட நிலையில், மணலூரில் அகழாய்வு பணி துவங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது

கொரோனா லாக்டவுன் காரணமாக, மார்ச் 24ம் திகதி முதல், அனைத்து அகழாய்வு பணிகளையும் தொல்லியல்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால், மே 20ம் திகதி மறுபடியும், கீழடி, அகரத்தில் அகழாய்வு பணி ஆரம்பித்தது. மே 23ம் திகதி முதல் முறையாக மணலூரில் ஆய்வுப் பணிகள் ஆரம்பித்தன. மே 27ம் திகதி கொந்தகையில் மறுபடியும், ஆய்வுப் பணி துவங்கியது.

 இதுவரை பிற பகுதிகளில் புதிதாக எதுவும் தென்படவில்லை. ஆனால், மணலூரில் தோண்டப்பட்ட ஒரு குழி பகுதியில், சுடுமண்ணாலான உலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலை உலோகங்கள் மற்றும் அணிகலன்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக இருக்க கூடும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தொடர்ந்து அது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

 இந்த நிலையில்தான், இன்றைய ஆய்வின்போது, மணலூரில், எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது. அது மிகப்பெரியதாக இருந்தது. புதிய வகை தோற்றத்தில் இருப்பதை போல தெரிகிறது. இது என்ன விலங்கு என்பது பற்றி தொல்லியல் துறை இன்று அறிவிக்கவில்லை.

 அதேநேரம், விலங்கின் தன்மை குறித்த ஆய்வுகள் தொடங்கியுள்ளன. வித்தியாசமான விலங்கின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இந்த ஆய்வில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த காலத்தில் வாழ்ந்த மிருகங்கள் குறித்த புரிதல் ஏற்பட இந்த ஆய்வு பலனளிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: