Monday, December 13, 2021

இரட்டைத் தலைமைக்கு அங்கீகாரம் கொடுத்த தேர்தல்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4‍ம் திகதி  ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒற்றைத் தலைமைக்கு  முடிவுரை எழுதபட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா எனும் ஆளுமைகளின்  கட்டுப்பாட்டில் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பதவி ஆசை பிடித்தவர்களில் இரட்டைத் தலைமைக்கு ஆராத்தி எடுத்து வரவேற்கப்பட்டுள்ளது.

.தி.மு.-வின் தலைமையகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில்,   நடந்த அந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், சிறப்புத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு தொடர்பான தீர்மானம்தான் தற்போது தமிழக அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இதுவரை கழக திட்ட விதிகளில் மாற்றம் மேற்கொள்வதற்கும், விலக்கு அளிப்பதற்கும், கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தச் சட்டதிட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டிருக்கும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் விலக்கு அளிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை... உள்ளிட்ட விஷயங்கள் சிறப்புத் தீர்மானத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்தச் சிறப்புத் தீர்மானமானம் பல்வேறு குழப்பங்களையும், விவாதங்களையும் அரசியல் அரங்கில் உருவாக்கியிருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளராகி, கட்சியின் ஒற்றைத் தலைமையாக மிளிர வேண்டும் என்று நினைத்த எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கப்பட்ட செக்கா, அல்லது சமீபத்தில் கட்சிக்குள் ஆதரவு பெருகிவரும் .பி.எஸ்-ஸின் வளர்ச்சிக்குப் போடப்பட்ட முட்டுக்கட்டையா அல்லது .தி.மு.-வைக் கைப்பற்ற வெளியிலிருந்து பல அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும், சசிகலாவின் வருகையைத் தடுப்பதற்கான ஏற்பாடா எனப் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.

.தி.மு.-வின் ஒற்றைத் தலைமையாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தியது என்னமோ உண்மைதான். முதல்வர் வேட்பாளர் தொடங்கி, எதிர்க்கட்சித் தலைவர், கொறடா நியமனம் வரை அவரின் கைதான் ஓங்கியிருந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி, கொடநாடு விவகாரம் ஆகியவை கட்சியினர் மத்தியில் எடப்பாடிக்குச் சற்று செல்வாக்கைக் குறைத்தது. இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த .பன்னீர்செல்வமும், கட்சித் நிர்வாகிகளைச் சந்திப்பது, மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில், முதல் அதிகாரமிக்க நபராக, தான் இருக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவந்தார். மறுபுறம் சசிகலாவும் சில அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்.

  அவைத்தலைவர் தேர்வில் இந்த முறை எடப்பாடியின் கை ஓங்கவில்லை என்பதே உண்மை. பொன்னையன் போன்ற நபர்களை அவைத்தலைவராக்கி தனக்குச் சாதகமாக சில காரியங்களைச் சாதித்துக்கொள்ள நினைத்த நேரத்தில், பன்னீர் தரப்பு அந்த இடத்துக்கு செங்கோட்டையனைத் தயார் செய்து குடைச்சல் கொடுத்தது. அதன் காரணமாக, இரண்டு பேருக்கும் பொதுவான ஒரு நபராகவும் அன்வர் ராஜாவை நீக்கியதற்குப் பரிகாரமாகவும் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இந்தத் தீர்மானம் நிச்சயமாக சசிகலாவுக்கு வைக்கப்பட்ட செக்தான். பொதுக்குழுவைக் கூட்டியது செல்லாது என அவர் தொடுத்திருக்கும் வழக்கையும் இது முடித்துவைக்கும்.

அதேபோல, சசிகலாவை ஆதரித்துப் பேசினால் மூத்த தலைவர்களாக இருந்தாலும் என்ன நடக்கும் என்பதை அன்வர் ராஜா நீக்கம் மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். .தி.மு.-வின் பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் இருந்ததோ, பொதுச்செயலாளர் தேர்வு எப்படி நடந்ததோ அதை அப்படியே ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட் கட்சித் தேர்தல் என  சட்டப்படி  நடைபெற்றாலும் வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றவர்கள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஓமப்பொடி பிரசாத் சிங் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக விண்ணப்ப படிவம் கேட்டிருந்தார். அவருக்கு விண்ணப்ப படிவம் கொடுக்க மறுக்கப்பட்டது. இதையடுத்து உள்கட்சி தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக நடப்பதாக பேட்டி அளித்தார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் சிலர் ஓமப்பொடி பிரசாத்தை தாக்கி வெளியே விரட்டியடித்தனர். இவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருந்து வருவது தெரியவந்துள்ளது. எம்ஜிஆர் காலத்து தொண்டருக்கே இந்த நிலையா என மற்ற தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தேர்தல் என்றாலே அது ஜனநாயக முறையில் போட்டி போட வேண்டும். ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் மட்டுமே அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் என்றால் எதற்காக தேர்தலை அறிவித்தார்கள். ஏற்கெனவே இவர்கள்தானே தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். பிறகு எதற்காக தேர்தலை அறிவித்து பிறர் போட்டியிடுவதை தடுக்கிறார்கள்? 

கடைசி வரை நாங்கள் கொடியை பிடித்துக் கொண்டு மட்டுமே இருக்க வேண்டுமா? சாமானியர்களையும் தலைவர்களாக்கி, தேர்தலில் சீட்டு கொடுத்து அழகு பார்த்தவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், அவர்கள் வழியில் வந்தவர்கள் என கூறிக் கொண்டு போட்டியே இல்லாத சூழலை உருவாக்கினால் எப்படி? அதிலும் எம்ஜிஆர் காலத்து நிர்வாகிகளுக்கே இந்த நிலை என்றால் அண்மையில் வந்தவர்களுக்கு என்னவாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

எம்ஜிஆர் காலத்திலிருந்து முக்கிய பொறுப்பில் இருந்த அன்வர்ராஜா நீக்கத்தால் தொண்டர்கள் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த எம்ஜிஆர் காலத்து தொண்டரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இது போல் எம்ஜிஆரின் தொண்டர்களையே மதிக்காததால் கட்சியில் பலர் அதி பின்னடைவாகியுள்ளது. தேர்தல் என்றால் போட்டி என்பது இருக்க வேண்டும். ஏற்கெனவே தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு தற்போது தேர்தலை நடத்துகிறார்கள். அப்படியிருக்க தங்கள் இருவரை தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுப்பதாக எம்ஜிஆர் காலத்து தொண்டர் குற்றம்சாட்டுகிறார். ஏற்கெனவே அதிமுக கரைந்து வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் தொண்டர்கள் வேறு கட்சிக்கு தாவ வழிவகுக்கும் என்பதை அதிமுக தலைமை  இன்னமும்  உணரவில்லை.

ரஜினிகாந்தை சசிக்லா சந்தித்தது அரசியலாகப் பார்க்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ண்டனை அனுபவித்த சசிகலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். அதனையடுத்து, தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தீவிர பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனையடுத்து, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் .தி.மு. தோல்வியடைந்த நிலையில் மீண்டும் .தி.மு.கவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து .தி.மு. தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். .தி.மு.கவை மீட்பேன் என்று கூறிவருகிறார். இந்தநிலையில், போயஸ் தோட்டத்திலுள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்துக்கு சென்று அவரையும் அவரது மனைவி லதாவை சந்தித்து பேசியுள்ளார் சசிகலா. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சசிகலா தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், சசிகலா    ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்கள். ரஜினிகாந்த் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்பொழுது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனை பற்றியும் கேட்டு அறிந்தார்.

மேலும் ரஜினிகாந்தின் அவர்கள் கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் சசிகலா தெரிவித்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவை ஒரு காலத்தில்  எதிர்த்தவர் ரஜினிகாந்த். பாபா பட வெளியீட்டுக்கு அரசியல் ரீதியான எதிர்ப்பு எழுந்த போது ஜெயலலிதாவின் கட்சிக்கு வாக்குப் போட்டதாகத் தெரிவித்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உட் கட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகள்  இன்னமும் நிலுவையில் உள்ளன. எடப்பாடிக்கும், பன்னீருக்கும் எதிரான வழக்குகளும்  அவர்களைப் பயமுறுத்துகின்றன. இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேன்டியா நிலையில் இரட்டைத் தலைமை உள்ளது.

No comments: