Friday, December 24, 2021

அண்ணா திராவிட முன்னேற்றக் கழ‌கத்தால் பலமடையும் பாரதீய ஜனதா

தமிழக அரசியலில்   தாமரை  மலராது என  கூறியவர்களின் வாயை அடைத்து சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றது பாரதீய ஜனதாக் கட்சி.

மேய்ப்பன் இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மேய்ப்பனாக இருக்கிறது பாரதீய ஜனதாக் கட்சி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தலைமைத்துவப் போட்டியில் சிக்கிச் சீரழிகிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில் இருந்த  விஜயகாந்தும்,  டாக்டர் ராமதாஸும் கூட்டனியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். பாரதீய ஜனதாக் கட்சி மட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இலாப நஷ்டக் கணக்குகள்  பார்த்த்த்தான் கூட்டணியில் கட்சிகள்  இணைவது வாடிக்கை. தேர்தல் கால கூட்டணி அதன் பின்னர் காணாமல் போய்விடுவதும் உண்டு.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழ‌கக் கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறிவிட்டது. வாசனின் கட்சி ஒட்டும் உற‌வும் இல்லாமல் இருக்கிறது. பாரதீய ஜனதாக் கட்சி மட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இறுக்கமாக உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழக‌க் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள்  ஒற்றுமையுடன் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் தேர்தல்கால இலாப நஷ்டக் கணக்குகள்தான்.

காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட அளவில் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது.தேசியளவில் காங்கிரஸ் மிகவும் பலவீனமாக உள்ளது. சிறுபான்மை வாக்குகள் கொஞ்சம் இருக்கக்கூடும். எனினும் எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் காங்கிரஸைக் கழற்றிவிடாமல் கூட்டணியில் தக்கவைத்துக் கொள்கிறார் ஸ்டாலின்.  காங்கிரஸ் கூட இருப்பது சிறு லாபத்தையாவது கொடுக்கும். இது  ஏனைய‌ கட்சிகளுக்கும் பொருந்தும். 

கூட்டணிக் கட்சிகளால் திராவிட முன்னேற்றக் கழகத்துகு ஓரளவுக்கு லாபம் என்றாலும், கூட்டணிக் கட்சிகளுக்குத்தான்  அதிக லாபம். ஒருவேளை இந்தக்கட்சிக்கு இந்தத் தொகுதியில், இந்த வார்டில் சீட் கொடுத்தால் நிச்சயம் தோற்கும் என்கிற ரிப்போர்ட் வந்தால், கண்டிப்பாக நஷ்டம் என்று தெரிந்தும் அக்காரியத்தை ஸ்டாலின் செய்ய மாட்டார். சீட் கொடுக்காமல் ஒதுக்குவாரே தவிர, முழுமையாக கூட்டணியை விட்டு விலக்கிவிட மாட்டார். 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக்  கூட்டணியில் பாரதீய ஜனதா இருப்பதால்  அ.தி.மு.க-வுக்கு ஆரம்பத்தில் இருந்தே நஷ்டம்தான் ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைந்ததில் இருந்து, கட்சியை தனது கட்டுப்பாட்டில்வைத்திருக்கிறது பாரதீய ஜனதாக் கட்சி.

 2001‍ல் திராவிட முன்னேற்றக் கூட்டணியின் உதவியால்   தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக நுழைந்தது  பாரதீய ஜனதாக் கட்சி. 20 ஆண்டுகள் கழித்து இப்போது  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவால் பாரதீய ஜனதாக் கட்சி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் காலூண்றவே முடியாது,  என்று சொல்லப்பட்ட ஒரு கட்சிக்கு நான்கு எம்.எல்.ஏ-க்கள் கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். இதுதான் பாரதீய ஜனதாவுக்கான இலாபம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என்ற டெக்னிக் தொழில் துறையில் கூட சிலருக்குத்தான் தெரியும். அரசியலில் அந்த டெக்னிக்கை லாவகமாகக் கையாண்டு வருகிறது பாரதீய ஜனதா. இரண்டு  கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி பா.ஜ.க-வுக்குக் கிடைக்கவில்லை என்கிறபோதும், அவர்களின் எண்ணமே அடுத்து வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான். 

தமிழகத்தில், 2019 எம்.பி தேர்தலிலும், தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வியைத் தழுவினாலும் 2021 சட்டமன்றத் தேர்தலில்  எதிர்பாரத வெற்றியப் பெற்றது பராதீய ஜனதாக் கட்சிபோட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளைக் கூட அ.தி.மு.க-வை கவனிக்க வைத்துவிடுகிறதாம் பா.ஜ.க. மேலும், தற்போது பா.ம.க-வும் கூட்டணியில் இல்லாததால், 2024 எம்.பி தேர்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெறுவதற்கு பா.ஜ.க முயற்சிக்கும். ஆதலால், இந்தக் கூட்டணி தொடர்வது முற்றிலும் பா.ஜ.க-வுக்குத்தான் லாபம். 

அதுவே அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, பா.ஜ.க-வுடனானக் கூட்டணியால் சிறுபான்மையினரின் நம்பிக்கையையும், வாக்கு சதவிகிதத்தையும், தொகுதிகளையும் இழந்து நிற்கிறது அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி டெல்லி பா.ஜ.க-வின் சொல்லைக் கேட்டுத்தான் நடக்கிறது அ.தி.மு.க. அதனால், தொடர்ந்து பா.ஜ.க என்கிற சுமையினால், நஷ்டம் ஏற்பட்டு வருகிறதே என கூட்டணியை விட்டு கழற்றிவிடவும் வாய்ப்பில்லை. தமிழக பா.ஜ.க அவர்களாகவும் கழன்றுக்கொள்ளாது. இப்படியே நிலை நீடித்தால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், 2024 எம்.பி தேர்தலிலும் கூட்டணி தொடருமேயானால், வெற்றிக்கு பாதிப்பு என்று தெரிந்தும் கூட புலிவாலைப் பிடித்த கதையாக அ.தி.மு.க திணறுகிறது. அதனால், அ.தி.மு.க-வுக்கு இது பெருத்த நஷ்டமே.

இரட்டைத் தலைமைப் பிரச்சினையால் அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் குழப்பம் ஏற்பட்டு வரும் நிலையில்  சசிகலாவை சேர்த்தால் கட்சி வலுவடையும் என தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆலோசனை சொல்லும் துணிவு யாருகும் ஏற்பட்டிருக்காது.

தப்பு செய்தவர்களை மன்னித்து கட்சியில் சேர்க்கலாம்  என்பது ஓ.பன்னீர்ச்செல்வத்தின் நிலைப்பாடு.  எடப்பாடி அதற்கு நேர்மாறான முடிவில் இருக்கிறார். பனீர்ச்செல்வத்துக்கு ஆதரவாக அண்ணாமலை கொடுக்கும் குரல் யாருக்கானது என்பது அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.

லேடியா டாடியா என நேருக்கு நேர் கேட்டவர் ஜெயலலிதா.   பாரதீய ஜனதாவின் குரலாக அண்ணாமலை ஒலிப்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்  தலைவர்கள் விரும்பவுல்லை. பாரதீய ஜனதாவில் சசிகலாவைச்  சேர்க்கலாம் என பதிலளித்துள்ளனர். 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் குழப்பங்களும்,பிரச்சினைகளு, தலைமைத்துவப் போட்டியும் ஏற்படுவதால் பாரதீய ஜனதாக் கட்சிக்கு  இலாபம் அதிகம்.

No comments: