Friday, July 1, 2022

உயிரைக் கையில் பிடித்தபடி ......

வசதி,வாய்ப்பு அபரிமிதமாக இருந்த காலத்தில் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்த மக்கள் திடீரென  முடக்கப்பட்டு விட்டனர். எரிவாயு,பெற்ரோல்.டீசல்,மண்ணெண்ணெய் என்பனவற்றுக்காக கொழும்பில் வாழ்ந்தவர்கள் வரிசையில் நின்றபோது பரிதாபமாகப் பார்த்தவர்கள் தாமும் ஒருநாள் அப்படி வரிசையில் நிற்போம் என நினைத்திருக்கவில்லை.

போக்கு வரத்து நெருக்கடியால் புகையிரதத்து மேலேயும்,  வெளியேயும்  உயிரைத் துச்சமென நினைத்து பயணம் செய்வதை தொலைக்காட்சியில் பார்த்து பரிதாபப்பட்ட  இலங்கையர்கள் அப்படியான ஒரு சூழ்நிலை தமக்கும் வரும் என கனவிலும் எதிர் பார்த்திருக்க  மாட்டார்கள்.

பஸ்ஸுக்கு மேலேயும், வெளியே  தொங்கிக் கொண்டும் உயிரைப்பற்றிய பயம் இன்றி பயணம் செய்வதைப் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது. 

போக்கு வரத்து பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. வெளி மாவட்டங்களில் வேலை செய்பவர்கள் என்ன செய்வத்கெனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். சுண்டைங்காய் காப்பணம் , சுமை கூலி முக்காப்பணம் என்பது போல  வேலைக்குப் போனால், சம்பLaத்தை விட  போக்கு வரத்து செலவு அதிகம் என்பதால்  வேலைக்குப் போகாமல் வீட்டில் நின்றால் இலாபம் என சிலர் நினைக்கின்றனர்.

 எரிபொருளுக்கான  போராட்டம் தொடர் கதையாக  இருக்கிறது. எரிபொருள் நிலையங்களில்  பொலிஸ், இராணுவ பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. அதனையும் மீறி சில இடங்களில் கலவரம், வன்செயல்கள்  என்பன ஆங்காங்கே தலை தூக்குகின்றன.

 எரிபொருள் விலை ஏற்றம்  மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளது. எரிபொருளைக் கண்ணில் காட்டாமல் அதற்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள்  ஏற்றி வரும் கப்பல் தாமதமாவதால் எரிபொருள்  இல்லாத நிலை ஏற்பட்டுள்றது.  பொருளாதார நெருக்கடியால் தடுமாறும் இலங்கைக்கு இந்தியா முன்னின்று பல உதவிகளைச் செய்கிறது. உணவு, மருந்து, பால்மா   போன்ற அத்தியாவசிப் பொருட்களை இந்தியா  இலங்கைக்கு கொடுத்து உதவுகிறது. 2022 ஜனவரியில் இருந்து தற்போது வரை, இந்திய அரசு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு உதவியாக வழங்கியிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 400,000 மெட்ரிக் தொன் எரிபொருட்களை இலங்கை பெற்றிருந்தது. இன்னும் மேலதிகமாக நான்கு கப்பல் எண்ணெயை  இந்தியாவிடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கிறது,.

  உக்ரைன்  மீது போர் தொடுத்ததால் உலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தியுள்ளன. ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு   இலங்கை அமைச்சர்கள்  இருவர் முயற்சி செய்கின்றனர். எங்கு இருந்தெண்டாலும் இலங்கைக்கு எரிபொருள்  கொண்டுவர வேண்டும் என அரசாங்கம்  நினைக்கிறது.

 எரிபொருள்  இல்லாத  இலங்கை மெது மெதுவாக  இயல்பு நிலையை இழக்கிறது.  மூளைச் சாவடைந்த உயிரினம் போன்ற நிலையில் இலங்கை இருக்கின்றது.   

பெற்றோல், டீசல்  இல்லாததால்  போக்கு வரத்து செய்வதில்  பாரிய சிக்கல் எழுந்துள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்களின் தொகை குறைவடைந்துள்ளது. 

பஸ் கட்டணங்கள்  தாறுமாறாக  ஏறியுள்ளது.  கண்ணுக்கெட்டிய அடுத்த நிறுத்தத்தில் இறங்கும் கட்டணம் 32 ரூபா   என அறிவிக்கப்பட்டது. அந்த அதிர்ச்சி     மாறுவதற்கிடையில் கட்டணத்தில் மாற்றம்  ஏற்பட்டு 42 ரூபா என்கிறார்கள்.  தனி ஒருவர் பயணம் செய்வதற்காக வகை தொகையான வாகனங்கள் வீதிகளில் ஓடித்திரிந்தன. இன்று அவை எல்லாம் மயமாகிவிட்டன.

 கைவிடப்பட்டு மூலையில் முடக்கப்பட்ட அல்லது கட்டித்தூக்கப்பட்ட சைக்கிள்கள் இன்று தூசு  துடைக்கப்பட்டு வீதிகளில் பவனி வருகின்றன.  பொருட்களை ஏற்ரி இறக்க பாவிக்கப்பட்ட மாட்டு வண்டில்கள் மாயமாகி விட்டன.  யாழ்ப்பானத்தில் குதிரை வன்டில்களில் மக்கள் பயணம் செய்வதாக செய்திகள் வருகின்றன. கைவிடப்பட்ட ரிக் ஷாவும் வந்துவிடுமோதெரியாது.

தொழிற்சங்கங்கள் ஆங்காங்கே  போராட்டங்களை நடத்துகின்றன. அதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்கின்றன. காலி முகத்திடலில்  கோட்டா வை வெளியேற்ரும் போராட்டம் தொடர்கிறது.

யுத்த காலத்தில் பெற்றோல்,டீசல் இல்லாமல் வாகனம்  ஓடியவர்களால்  இன்று அப்படி ஓட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அன்று கொன்டமாஅவ்து  மண்ணெண்ணெய் கிடைத்தது. இன்று மண்ணெண்ணெயை கண்ணால் காண முடியவில்லை.

இப்போதைக்கு பிரச்சினையைகள் தீரப்போவதில்லை என  பிரதமர் ரணில் சொல்கிறார்.  ஆரு மாதங்களில்  அனைத்தையும் தீர்த்து வைப்பேன் என புதிய பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க சபதம் செய்துள்ளார்.   இப்படிப்பட்ட முரண்பாடான அறிக்கைகளால் ஆகப்போவது ஒன்றும் இல்லை.     

No comments: