Friday, July 8, 2016

புனிதமான பணியில் கறுப்பு ஆசிரியர்கள்

\மாணவனின் உயர்விலே  பெற்றோரைவிட அதிக அக்கறை கட்டுபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தமது பெற்றோரைவிட அதிகளவு   நேரத்தை ஆசிரியர்களுடன் பகிந்து கொள்கிறார்கள். மாதா,பிதா,குரு, தெய்வம் என்பார்கள்.   குருவுக்குப் பின்னர் தான் தெய்வத்தை வணங்க வேண்டும் என வரையறை செய்துள்ளனர். குரு சிஷ்ய வழமை இருந்தபோது குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமாக இருந்தது. கால ஓட்டத்தின்  மாற்றத்தால் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையிலான தொடர்புகள் விரிவடைந்து விட்டன.

பாடசாலைக்கு அப்பால் பொது இடங்களிலும் ஆசிரியருக்கு மரியாதையை கொடுத்த காலம் முன்னர் இருந்தது என்று சொல்ல வேண்டிய காலத்தில் வாழ்கிறோம். இன்றைய சில மாணவர்கள் பாடசாலையில் ஆசிரியருக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில்லை. ஒருசில ஆசிரியர்கள் புனிதமான ஆசிரியத் தொழிலுக்கு இழுக்கை ஏற்படுத்துகின்றனர்.  சிறுமியை  சீரழித்த முதியவர்.  மூதாட்டியை காமப்பசிக்கு இரையாக்கிய  இளைஞன்.  போன்ற செய்திகள் சில வருடங்களுக்கு முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியாகின. ஆனால்,இன்று பாலியல் வல்லுறவு பற்றிய செய்தி வராத நாளே இல்லை. பரபரப்புக்காக சில  பத்திரிகைகள் அதனை மிகைப்படுத்தி செய்தியாக்குகின்றன.

மாணவிகளுக்கு நல்ல வழி கட்ட வேண்டிய ஆசிரியர்கள் சிலர்  தமது பாலியல் வீரத்தை மாணவிகளிடம் கட்டியதால் தமிழ் சமூகமே தலை குனிந்து நிற்கிறது. அவற்றை முடி மறைக்க சில  ஆசிரியைகள் துணை போனது பெண் இனத்துக்கே அவமானம்.   பாலியல் குற்றம் செய்தவர்களையும் அவர்களுக்கு உடந்தையானவர்களையும் கைது செய்வதற்கு போராட்டம் நடத்த வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது.  குற்றம் செய்வதைப் பற்றி சிந்திக்க பயந்தவர்கள் இன்று சர்வ சாதாரணமாக  குற்றத்தை செய்துவிட்டு அதனை எப்படி மறைக்கலாம் என திட்டமிடுகின்றனர்.

மனம், அவமானம் ஆகியவற்றின் காரணமாக ஒருசில பாலியல் குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. அல்லது மன்னிக்கப்டுகின்றன.  இப்படியான சந்தர்ப்பங்கள் தான்  இன்னொரு பாலியல் குற்றத்துக்கு  தூபமிடுகின்றன.  பாலியலால் பதிக்கப்பட்ட பெண்கள் அவமானத்தால் கூனிக்  குறுகி நடக்கையில் பாலியல் குற்றவாளி தலை நிமிர்ந்து நடக்கிறான். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட, பாலியல் தொந்தரவுக்கு  ஆளான பெண்களை ஏளனமாகவும் இளக்காரமகவும்  நோக்கும் நிலை மாற்றமடைய வேண்டும்.

உயர்ந்த நோக்குடன் ஆசிரியத் தொழிலை ஏற்ற ஆசிரியர்கள் தம்மை நம்பி வந்த மாணவிகளை போகப்பொருளாக நினைத்து விட்டார்கள். பிறர்  மனை நோக்குதல் பற்றி இவர்கள் படித்திருப்பார்கள். அதனை நடை முறையில் கடைப்பிடித்திருந்தால் இப்படிப்பட்ட இழி நிலையை அவர்கள்  நினைத்திருக்க மாட்டார்கள். சட்டம் தனது கடமையை சரிவர செய்யத் தொடங்கிவிட்டது. இவர்களைப் போன்ற ஆசிரியர் என்ற போர்வையைப் போர்த்திய காமப்பசி கொண்ட மிருகங்கள் இருந்தால் அவர்களை வெளிச்சத்துக்குக்  கொண்டு வரவேண்டும்.

ஒருசில ஊடகங்கள் பத்திரிக்கை தர்மத்தை மீறி அதிகளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. பாதிக்கப்பட்டது தமிழ் மாணவி என்ற  நினைப்பு இல்லாமல் பாலியல் குற்றத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. புங்குடுதீவு   மாணவியின் கொலை நடைபெற்று ஒரு வருடம் கடந்து விட்டது. அதனை மிகைப்படுத்தி ஒருவருட சம்பவத்தை முழுப்பக்கத்தில் படங்களுடன் பிரசுரித்து அந்த மாணவியை மீண்டும் ஒருமுறை சாகடித்தனர். பாலியல் வல்லுறவு ஒருநாள் வேதனை. பத்திரிகைச் செய்திகள் தினம் தினம் நரக வேதனை என்பதை சில ஊடகங்கள் நினைப்பதில்லை.

சிறந்த முறையில் பணியாற்றிய நல்லாசிரியர்களுக்கு ஜனாதிபதி வருடாந்தம் விருது வழங்கி கெளரவிக்கிறார்.ஜனாதிபதியிடம் இருந்து நல்லாசிரியர் விருதைப் பெறுவதற்கு பல ஆசிரியர்கள் விரும்புகின்றனர். நல்லாசிரியர்களின் மத்தியிலே இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் உடைய ஆசிரியர்களும் இருப்பது வெட்கக்கேடானது. யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதியில்  உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாலியல் சேட்டை செய்வதற்கு எப்படித் துணிவு வந்தது. நகரத்தை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் இடங்களில் நடைபெறும் அத்து மீறல்கள் நகரத்தின் கண்களுக்குத் தெரிவதில்லை. நகரத்தில் நடைபெறும் சிறு சம்பவமும் பெரிதாகப் பேசப்படும் நிலை உள்ளது. யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி  பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்,வானொலிகள்,இணைய தளங்கள் இயங்குகின்றன. அவற்றின் புலனாய்வுக் கண்களுக்கு இந்த அநியாயம் எப்படித் தெரியாமல் போனது.

 பாலியல் குற்றம் புரிந்த ஆசிரியரை காப்பாற்ற முயற்சி செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாலியல் குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்தவர்களின் நெஞ்சழுத்தம் எத்தகையது என்பதை நினைக்கையில் வியப்பாக உள்ளது. பாடசாலை மாணவன் சிறு தவறு செய்தால், குற்றம் செய்தால் அவனுக்கு அறிவுரை கூறி திருத்த வேண்டியது. ஆசிரியரின் கடமை. முதல் முறை இப்படியான குற்றத்தை அல்லது தவறை செய்துவிட்டாய் இனி இப்படிச்செய்யாதே. திருந்திவிடு என ஆசிரியர்கள் மாணவனை நல் வழிப்படுத்த வேண்டும்.தப்பான வழியில் செல்பவனுக்கு சரியான பாதையைக்காட்டுவதே ஆசிரியரின் பணி. ஆசிரியனே தவறான பாதையில் சென்றால் அந்த மானவனுக்கு நல்வழி காட்டுவது யார்? 

சில பாடசாலைகள் வியாபார நிலையமாக மாறி விட்டன. புதிய மாணவர்  சேர்க்கையில் அன்பளிப்பு, புதிய கட்டடம் கட்ட ஒப்பந்த செய்யும்போது தரகுப்பணம் கைமாறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலதிகாரிகளுக்கு இவை எல்லாம்தெரியும் ஆனால், சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். ஒரு பாடசாலையில் மோசடி செய்த அதிபரைப்பற்றி ஆதாரத்துடன் மேலிடத்துக்குத் தெரிவித்தால் அவரை வேறு இடத்துக்கு மாற்றி விடுகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்படுவதில்லை. மோசடி செய்த அதிபர் விசாரிக்கப்படுவதில்லை. 

தேசியப் பாடசாலை ஒன்றின் அதிபர் ஓய்வுபெற்று ஒருவருடம் கடந்து விட்டது. பிரதி அதிபர்தான் பாடசாலையை வழி நடத்துகிறார். பதில் அதிபர் ஏதோ ஒரு பரீட்சைக்குத் தோற்றியுள்ளாராம். அவரை அப் பாடசாலையின் அதிபராக்குவதற்காக இன்னொருவருக்கு அதிபர் நியமனம் வழங்காது இழுத்தடிக்கப்படுகிறது. இது போன்ற பிரச்சினைகளைத்  தீர்க்க முடியாத  நிலையில் கல்விச் சமூகம் இருக்கிறது.



புனிதமான ஆசிரியத்தொழில் புரிபவரின் பின்னணி சரியாக ஆராயப்பட வேண்டும். நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் வக்கிர புத்தி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்,.இளம் பிஞ்சுகளைப் பொசுக்குபவர்கள் ஆசிரியராக இருக்கத் தகுதி அற்றவர்கள். அகப்படாமல் அசமடக்காக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுபவர்களை சமுதாயத்தின் முன்னால் நிறுத்தி பகிரங்கப் படுத்தினால் இளம் சமுதாயம் காப்பாற்றப்படும்.  
வர்மா



2 comments:

Yarlpavanan said...

அருமையான பதிவு

வர்மா said...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
அருமையான பதிவு///

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா