Tuesday, January 31, 2017

ராஜ ஶ்ரீகாந்தனின் "காலச் சாளரம்

எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களைப் பற்றிப் புலம் பெயர்ந்த பின்பு தான் அதிகம் அறிந்து கொண்டேன். நான் தாயகத்தில் இருந்த போது மல்லிகை இதழில் அவரின் எழுத்துகளைப் படித்திருக்கக் கூடும். அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் "ராஜ ஶ்ரீகாந்தன் நினைவுகள்" என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அவர் வழியாகவும், மறைந்த அன்புச் சகோதரி, எழுத்தாளர் திருமதி அருண்விஜயராணி வழியாகவும் அவர் பற்றி அறிமுகம் கிட்டியது, ஏன் இந்த நூல் கூட அருண் விஜயராணி அக்கா தன்னிடமிருந்த ஒரு தொகுதி நூலை எனக்கு அனுப்பிய போது கிட்டியது தான்.
காலச் சாரளம் என்ற நூல் ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியாக, எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் ஓகஸ்ட் 1994 இல் வெளியிட்டது.
ஈழத்தின் வடமராட்சிப் பிரதேசத்தின் குறிச்சியாக விளங்கும் வதிரி மண்ணின் மைந்தன் ராஜ ஶ்ரீகாந்தன். காலச் சாளரம் சிறுகதைத் தொகுதியின் 12 சிறுகதைகளில் மண் வாசனை தழுவிய கதைகள் வரணி மண்ணையே பகைப்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.
ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களுடைய எழுத்தைப் புதிதாக நுகரும் வாசகனாகவே அணுகி இந்தச் சிறுகதைத் தொகுதியை வாசித்து முடித்த போது எழுந்த உணர்வு என்னவெனில், தான் எடுத்துக் கொண்ட கதைப் பொருளை எடுத்து அமர்த்தும் அந்த உலகத்தை வாசகனுக்குக் காட்ட முனையும் போது கையாளும் வர்ணனை, அவரின் தொழில் சார்ந்த அனுபவங்களைக் கதைகளின் ஓட்டத்துக்குக் கையாண்ட திறன் இவற்றின் மூலம் ஈழத்தின் மிகச் சிறந்த கதை சொல்லியாக மனதில் அமர்கிறார். இவர் எழுதியவை சொற்பம், இன்றைய வாசகர்களுக்கும் இவை பரவலாகப் போய்ச் சேர இந்தச் சிறுகதைகளைப் பத்திரிகைகளில் மீள் பிரசுரம் செய்தல் வேண்டும் என்னுமளவுக்கு இந்த எழுத்தின் முக்கியத்தை உணர்கிறேன்.
தமிழர் பிரதேசங்கள் பரவலாக இராணுவ அச்சுறுத்தலை எதிர்நோக்கினாலும் வடமராட்சியைப் பொறுத்தவரை மற்றைய இடங்களுக்கு முன்னோடியாகப் போரியல் வாழ்வின் நெருக்கடிகளை எண்பதுகளில் சந்தித்திருக்கிறது. வான் குண்டுத் தாக்குதல் மட்டுமன்றி இராணுவத்தின் நேரடி அச்சுறுத்தல்களும் நிலவிய சூழல் அமைந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்து வாழ்வியல் வரலாறு இங்கே பதியப்பட்டிருக்கிறது.
இந்த சிறுகதைத் தொகுதியில் மிக முக்கியமான படைப்பாக "தத்து" என்ற படைப்பு அமைந்திருக்கிறது. கிராமத்துக் கிழவிக்கும் அடைக்கலம் தேடிவந்த போராளிகளுக்குமான உறவு முறை அங்கே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுகதையில் யாழ்ப்பாணத்துக் கிராமத்தின் வாழ்வியல் வெகு இயல்பாகக் காட்டப்பட்டிருப்பதோடு கதையின் முடிவை நகர்த்திய விதம் வெகு சிறப்ப்ய். "தத்து" சிறுகதை தன்னுடைய படைப்பு அத்தனையையும் படித்த தன் தாய்க்கு மிகவும் பிடித்தது என்கிறார் ராஜ ஶ்ரீகாந்தன். வெலிகடை மத்திய சிறைச்சாலையில் இருந்து மு.கந்தவரோதயன் என்ற அரசியல் கைதி இந்தக் கதையைச் சிலாகித்து எழுதிய கடிதமும் பகிரப்பட்டிருக்கிறது.
வட தமிழீழத்தின் மீதான மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக 1987 இல் வடமராட்சி நோக்கி முன்னெடுக்கப்பட்ட ஒபரேஷன் லிபரேஷனின் தாக்கத்தை, இழப்புகள் தந்த துயர் தோய்ந்த வடுக்களை வரலாற்றுப் பதிவாக்குகிறது "அரை ஞாண் தாலி" .
போர்க்காலக் கதைகளில் வரும் காட்டிக் கொடுப்பவன், இராணுவத்தின் அத்துமீறல் போன்றவற்றைப் படிக்கும் போது அக்காலச் சூழலில் இவற்றை எதிர்கொண்டவர்கள் நெருக்கடியான வாழ்வியலோடு அவற்றைப் பொருத்திப் பார்க்க முடியும்.
ஒரு எழுத்தாளனை இவர் இப்படியான தோரணையில் தான் எழுதுவார், இவரின் படைப்புகள் இந்த மாதிரியான வாழ்வியல் பண்புகளைத் தான் கையாளும் என்ற தோற்றப்பட்டை மறுதலிக்குமாற் போல "ஓர் உண்மைக் காகம் செத்துப் போச்சு", "ஜேன் ஆச்சி" ஆகியவை முற்றிலும் மாறுபட்ட உலகத்தில் சஞ்சாரிக்கும் படைப்புகள்.
போரியல் வாழ்வில் ஒரு சாதாரணன் எதிர்கொள்ளும் அவமானங்களையும், வலியையும் பதிவாக்குகிறது "நினைவுத் தடத்திலொரு கொடிய வடு".
"நண்பனை இனம் புரிந்து கொண்டான்" சிறுகதையில் தான் மாலுமியாகப் பணி புரிந்த அனுபவங்கள் கை கொடுக்க, நடுக்கடலில் குத்திட்டு நிற்கும் கப்பலில் நிகழ்ந்தவைகளை நேர்த்தியான விபரணை மூலம் கையாளுகிறார். இந்த மாதிரியான கதைகளுக்கு குறித்த துறை சார் அனுபவங்கள் எவ்வளவு தூரம் கை கொடுக்கும் என்று உணர முடிகிறது.
அபலைக்கு இன்னொரு அடித்தள வாழ்க்கை கொண்டவர் தான் ஆதரவு என்ற தொனியில் எழுதப்பட்ட "உயர்குலத்து உத்தமர்கள்" சமூகத்தில் போலி முகத்தோடு சமூக சேவையாளராக வலம் வருவோரின் முகத்திரையைக் கிழிக்கிறது.
நெருக்கடியான சூழலில் சைவத்தின் பாதுகாவலராக இயங்கிய ஆறுமுக நாவலரின் சாதீய அணுகுமுறையை மிகவும் எள்ளலோடு பதிவு செய்கிறார் ராஜ ஶ்ரீகாந்தன்.
அதே வேளை சமூகப் போராளி சூரன் அவர்கள் முன்னெடுத்த கல்விப் பணியையும் பாத்திரத்தினூடு வெளிக் கொணருகிறார்.
வரலாற்றில் மறக்க முடியாதவற்றைப் புனைகதைகளில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் சேர்க்கும் திறனைச் சிறுகதை புனைவோர் இவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.
"
காலத்தின் கதவுகள்" புரையோடிப் போயிருக்கும் சாதீய விஷம் குறித்துப் பேசுகிறது.
போர் நெருக்கடியிலும் இந்தச் சாதீய வரட்டு ஈழத்தவரிடையே பிணைந்திருப்பதையும் தன் கதைக் களனின் பாத்திரங்கள் வழியே பகிர்கிறார்.
உயரச் செல்பவர்களெல்லாம் உயர்ந்தவர்களல்ல, யதார்த்தம் போன்ற சிறுகதைகள் மன விசாரம் செய்து கொள்ளும் பாணியில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
"சமூக வாழ்க்கையினை, சம கால வரலாற்று நிகழ்வுகளை உள்வாங்கி, அவற்றைத் தெளிவான சிந்தனைத் தளத்தில் புடமிட்டு, தேவையான போது கடந்த கால நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி, கற்பனைச் சுவை சேர்ந்து "வாசிக்கின்ற" மனிதர்களுக்குப் பயனுள்ள கருத்துகளைக் கலையம்சத்துடன் தருபவனே "படைக்கின்ற" மனிதன். யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான தொடர்புகளைச் சரியான விகிதத்தில் அழகியல் அம்சங்களுடன் பேணுவதிலேயே படைக்கின்ற மனிதனின் ஆற்றல் தங்கியுள்ளது." என்கிறார் ராஜ ஶ்ரீகாந்தன்.
தொண்ணூறுகளுக்குப் பின்னான ஈழத்துயரத்தை இவ்வகைப் படைப்புகளூடே எடுத்து வர ராஜ ஶ்ரீகாந்தம் தற்போது நம்மிடையே இல்லை என்ற ஏக்கமும் எழுகிறது.
காலச் சாளரம் சிறுகதைத் தொகுதி ஈழத்து நூலகத்திலும் கிடைக்கிறது.

கானா பிரபா.



No comments: