Sunday, January 8, 2017

தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தலைமை

பக்தவக்சலம்,ராஜாஜி,அண்ணா,கருணாநிதி,எம்.ஜி.ஆர், ஜெயலிதா ஆகிய தலைவர்களினால் வழிநடத்தப்பட்ட தமிழகம், புதிய  தலைமையின்கீழ் செயற்படுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்தெறிய மற்றைய கட்சிகளால் முடியவில்லை. கருணாநிதி என்ற ஏகபோக தலைமைக்கு எதிராகப் புறப்பட்ட எம்.ஜி.ஆர்  உயிரோடு இருக்கும் வரை அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.எம்.ஜி ஆரின் பாசறையில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா,கருணாநிதியின் அரசியல் வாழ்வுக்கு சவாலாக விளங்கினார்.

கருணாநிதி,ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களுக்கும் இணையான தலைமைத்துவம் தமிழகத்தில் இல்லை என்பதை சட்டமன்றத் தேர்தல் முடிவு எடுத்தியம்பியது.தோல்வியில் இருந்து   மீண்டெழும்  ஆற்றல் இருவருக்கும் உண்டு.முதுமை காரணமாக கருணாநிதியால் முன்புபோல் செயற்பட முடியவில்லை. ஸ்டாலினுக்கு தலைமைப்பதவியை விட்டுக்கொடுக்க கருணாநிதி தயங்கினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அப்படி இரு நிலை இருக்கவில்லை. தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரான ஜெயலலிதாவின் எதிர்பாரத மரணம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் மரணம் தந்த அதிர்ச்சி அகலுவதற்கிடையில் சசிகலாவை  கழகப் பொதுச்செயலாளராக நியமித்து ஆச்சரியப் படுத்தினர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள்.

முதுமையும் உடல் நிலை பாதிப்பும் கருணாநிதியை முடக்கியது.திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப்பீடமும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. ஆனால், வெற்றிடம் இருப்பதை வெளியில் தெரியாதவாறு  கருணாநிதியின் அறிக்கைகளும் ஸ்டாலினின் செயற்பாடுகளும் மூடி மறைத்துள்ளன. தலைவர் கருணாநிதி செயற்பட முடியாதவராக இருக்கிறார். கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்காக செயல் தலைவர் என்ற புதிய பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. செயல் தலைவர் என்ற ஒரு பதவி திராவிட முன்னேற்றக் கழக யாப்பில் இல்லை.. தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்க கருணாநிதி  விரும்பாமையினால் யாப்பு திருத்தப்பட்டு செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை இப்போதைக்கு யூகிக்க முடியாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவியை ஸ்டாலின் பொறுப்பேற்கும் சந்தர்ப்பங்கள் பலமுறை ஏற்பட்டும் அவை தட்டிக்கழிக்கப்பட்டன. தவிர்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். கழகத்தை வழி நடத்தும் சகல தகுதிகளும் ஸ்டாலினுக்கு உள்ளது. கருணாநிதியின் மகன் என்பதை விட அவரது அரசியல் அனுபவம் கூடுதல் தகமையாக இருக்கிறது. 63 வயதான ஸ்டாலினுக்கு    45 வருட அரசியல் அனுபவம் உடையவர். மாணவப் பருவத்திலேயே அரசியலில் செயற்பட்டவர். அவசரகலச்சட்டம்,மிசா ஆகியவற்றில் காது செய்யப்பட்டு பலமாகத் தாக்கப்பட்டு சிறை வசம் அனுபவித்தவர்.

இளைஞர் அணிச்செயலாளர்,பொருளாளர்,மேயர்,சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்  ஆகிய பொறுப்புக்களின் மூலம் அரசியல் பாடம் படித்தவர்.  செயல் தலைவர் பொறுப்புடன் இளைஞர் அணிச்செயலாளர்,பொருளாளர் ஆகிய  பதவிகளும் ஸ்டாலினின் வசம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இரண்டு நாட்களின் பின்னர் இளைஞர் அணி செயலாளர் பதவியைத் துறந்தார்.துணைச்செயலாளர் வெள்ளகோவில் மூ.வெ.சாமிநாதன் இளைஞஅணி செயலாளர் ஆனார்.

 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 48 வருடங்களாகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தான் கருணாநிதி பங்குபற்றவில்லை. தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் புதிய தலைவர்களின் வழிகாட்டலில் செயற்படத் தொடங்கிவிட்டன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாப்புத் திருத்தம் செய்ய முடியாததனால் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் யாப்பைத் திருத்தி செயல் தலைவராக ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார். தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சசிகலா கண்ணீர் மல்க எழுதிவைத்திருந்த உரையைப் படித்தார். அமைதியாக இருந்த நிர்வாகிகள்  அடிக்கடி கைதட்டினார்கள். ஸ்டாலினை முன்மொழிந்த அன்பழகன் கண்கலங்கினர். வழிமொழிந்த துரைமுருகன் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். நிர்வாகிகள் கண்ணிருடன் கைதட்டி வரவேற்றனர். அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது  ஸ்டாலின் திணறினார்.


 எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்போது இருக்கும் அடிமட்டத் தொண்டர்களில் அதிகமானோர் ஜெயலலிதாவின் விசுவாசிகள். எம்.ஜி.ஆரின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அழிந்து  இரண்டு தசாப்தங்க ளாகி  விட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் ஜெயலலிதா  என நினைப்பவர்கள் தான் அங்கு உள்ளனர். ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலாவை நிர்வாகிகள் இருத்தி உள்ளனர். ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலாவை அலங்கரிக்க தொண்டர்கள் விரும்பவில்லை.
ஜெயலலிதாவின் வழியில் ஒற்றுமையாக இருப்பதற்கு சசிகலா அழைப்பு விடுத்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இப்போ மூன்று பிரிவாக உள்ளது. நிர்வாகிகளும் அவர்களது தொண்டர்களும் சசிகலாவின் பின்னால் நிற்கின்றனர். சசிகலாவின் நியமனத்தை விரும்பாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். கட்சியின் முதுகெலும்பு தொண்டர்கள். கட்சியை வளர்ப்பவர்கள் நட்சத்திரப் பேச்சாளர்கள். வாக்களிக்கும் தொண்டர்களும் கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் மனதி பதிய வைக்கும் .நட்சத்திரப் பேச்சாளர்களும் வெளியேறுவது மிகவும் ஆபத்தானது.  ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள் அவரது அண்ணன் மகளான தீபாவைத் தலைமை ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கிறார்கள்.


அண்ணா இறந்த பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற போட்டி நிலவியது. திராவிடக் கழகத்தில் இருந்து வெளியேறிய அண்ணாத்துரை புதிய கட்சியை உருவாக்கினர். அவரால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை இருக்கை  காலியாக வைக்கப்பட்டது. கட்சியின் தலைவர் பெரியார் தான் என்பதை அண்ணா சொல்லாமல் சொன்னார். நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் இடையில் இருந்த பிணக்கைத்  தீர்ப்பதற்காக தலிவர் பதவி உருவாக்கப்பட்டு கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. பொதுச்செயலாளராக நெடுஞ்செழியன்    பொறுப்பேற்றார். அதன் பின்னர் கருணாநிதியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. அது கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக கருணாநிதி இருக்கிறார். அனால், கட்சி இப்போது  ஸ்டாலினின் கையில் உள்ளது. நிர்வாகிகளும் தொண்டர்களும் கருணாநிதியை விட்டு விலகி ஸ்டாலினின் பக்கம் சாய்ந்துள்ளனர். ஸ்டாலினுக்கு எதிராகக் கருத்துக் கூறிய கோசி மணி, வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் உயிருடன் இல்லை.  ஸ்டாலினை மூர்க்கமாக எதிர்த்த அழகிரி  கட்சியை விட்டு  வெளியேற்றப்பட்டுவிட்டார். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஸ்டாலினை எதிர்க்கும் பலமான அரசியல் தலைவர்கள் யாரும் இல்லை.
ஸ்டாலினுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு சசிகலா தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்ய ஸ்டாலின் ஆரம்பத்தில் பயந்தார்.  அண்மைக் காலத்தில் மிகத் துணிச்சலுடன் அரசியல் ரீதியாக அவர் ஜெயலலிதாவை  எதிர்த்தார். ஸ்டாலினின் அரசியல் அனுபவத்துக்கும் ஆளுமைக்கும் எதிராக  சசிகலாவால் நிற்க முடியாது.

 ஜனநாயகம் இப்போது பணநாயகமாக மாறிவிட்டது. தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இலவசங்களும் பண விநியோகமும் முன்னிலை பெற்றுள்ளன. காலியாக இருக்கு ஜெயலலிதாவின் ஆர் கே நகர் தொகுதியின் இடைத் தேர்தல் அடுத்த தலைமையை அடையாளம்  கட்டும்.
வர்மா . 

No comments: