Friday, November 9, 2018

சினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்


அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்யும். தமிழகத்ஹ்டில் அரசாங்கம் விஜய்க்கு எதிராகப் போராடுகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மலையாளம்,தெங்கு,கன்னடம் ஆகிய மொழி ரசிகர்களும் விஜயின் ரசிகர்களாகத் தம்மை வெளிப்படுத்தியுள்ளனர்.விஜயின் படங்களால் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் இலாபத்தைப் பங்கு போடுகின்றனர். விஜயின் படம் வெளியாகும் நாள் அவரது ரசிகர்களுக்கு பண்டிகை தினம். சில அரசியல் கட்சிகள் விஜயைக் குறிவைப்பதால் பலதடைகளின் பின்னரேஅவரது படங்கள் வெளியாகின்றன.

சர்கார் படத்தின் வில்லியின் பெயர் கோமளவல்லி என்பதாலும், அரசு வழங்கிய இலவசப் பொருட்களைத்தூக்கி எறியும் காட்சி உள்ளதாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கொதிப்படைந்துள்ளனர். கோமளவலி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர். ஜெயலலிதாவின் பெயரை வில்லிக்குச் சூட்டியதால் விஜய், ஜெயலலிதாவைக் கேலவப்படுத்திவிட்டார். இலவசங்களைத் தூக்கி எறியும் காட்சியால் ஜெயலலிதாவை அவமானப்படுத்திவிட்டார்கள் என அண்ணா திராவிட முன்னெற்றக் கழகத்தின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சர்கார் படம் வன்முறையைத் தூண்டியுள்ளது எனத் தமிழக அமைச்சர்கள் குமுறினார்கள். அதனால் கோபப்பட்ட தமிழக சட்டசபை உறுப்பினர்கள் தமது தொண்டர்களைக் குண்டர்களாக மாற்றினார்கள். வீதிகளிலும் தியேட்டர்களிலும் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரப் பதாகைகளை அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கிழித்தெறிந்தனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் வன்முறையைத் தடுக்க வேண்டிய பொலிஸார் வழமைபோல கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர்.

அழகிய தமிழ் மகன் திரைப்படம் வெளியானபோது ஆரம்பமான பிரச்சினை இன்றுவரை தொடர்கிறது. கத்தி படத்தில் 2ஜி விவகாரம் பேசப்பட்டது. அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியில் இருந்தமையால் பெரிதாக எதிர்ப்பு வெளியாகவில்லை. 2ஜி விவகாரத்தில் கனிமொழியும் ஆர்.ராசாவும் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. தலைவா வெளியாவதில் சிக்கல் எழுந்ததால் விஜயும் அவரது தகப்பனும் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தனர். மெர்சலில் பாரதீய ஜனதாவின் பலவீன அரசியல் வெளிப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி, பணமதிப்பு என்பனவற்றை விமர்சித்தால் தமிழக பாரதீய ஜனதத் தலைவர்கள் எதிர்த்தார்கள்.இப்போ சர்காருக்கு எதிராக தமிழக ஆளும் கட்சி கிளர்ந்தெழுந்துள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அடங்கி இருந்த விஜய், அவர் இல்லாத நிலையில் தம்மை நேரடியாகத் தாக்குவதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கருதுகின்றனர். சர்காருக்கு எதிர்ராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு,  சட்டத்தைக் கையிலெடுத்து வன்முறையைத்  தூண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்காத தமிழக அரசு சர்கார் பிரச்சினையைக் கையில் எடுத்து தனது இருப்பை வெளிக்காட்டியுள்ளது. ஆனால், நடுநிலையாளர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக் இருக்கின்றனர்.

விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் பல நல்ல காரியங்களை விஜய் செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இரவில் தனி ஆளாகச் சென்று உதவிகள் செய்கிறார். அவரது நற்பணி மன்றங்கள் பலவகையான உதவிகளைச் செய்து வருகிறது. விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக அவரது தகப்பன் எஸ்.ஏ சந்திரசேகரன் பல மேடைகளில் சொல்லி வருகிறார். ஆனால், விஜய் அதைப்பற்றி இன்னமும் வாய் திறக்கவில்லை.  விஜய், அரசியலுக்கு வருவார் என அவரைச் சுற்றி இருப்பவர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.  விஜய்யை மையப்பொருளாக வைத்து நடக்கும் சம்பவங்கள் அரசியலை நோக்கி அவரை தள்ளுவதுபோலத் தெரிகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழக சட்டமன்ற உறுபினர்களும் நாடாளுமன்ற  உறுப்பினர்களும் வெற்றி பெற்ற பின்னர் தொகுதிப்பக்கம் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகிறது.தொகுதிக்குச் சென்ற பலரை அங்குள்ளவர்கள் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை அண்மையில் தொகுதிக்குச் சென்ற போது பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கமுடியாமல் தடுமாறினார்.

சர்கார் படதில்  இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் மறுதணிக்கை செய்யப்பட்டு மீண்டும் தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. இது மிக மோசமான முன்னுதாரணம். ஆளும் கட்சியை விமர்சித்து திரைப்படங்கள் வெளிவரமுடியாத சூழ்நிலை ஏற்படவாய்ப்புள்ளது. தியேட்டர்களுக்குள் அத்துமீறி விளம்பரப்பலகைகளைச் சேதமாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சி என்றால் சட்டத்தைக் கையில் எடுத்து  சொத்துக்களைச் சேதப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் வரலாறு நூறு ஆண்டுகளைக்  கடந்து விட்டது. பல சினிமாக்கள் அரசியலைப்பேசின அப்போது இன்று போல கடும் நெருக்கடி தோன்றவில்லை. கல்கியின் “அலை ஓசை” படத்துக்கு அப்போது தடை விதிக்கப்படப் போவதாக செய்தி வெளியானது. எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் வெளிவராது அன்றைய திராவிட முன்னேற்றக் கழகம் சவால் விட்டது. எல்லாத் தடைகளையும் மீறி உலகம் சுற்றும் வாலிபன் திரையிடப்பட்டது. ரஜினியின் பாபா படம் வெளிவராமல் தடுக்கும் காரியத்தை பாட்டாளி மக்கள் கழகம் செய்தது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் ரஜினியின் ரசிகர்களும் மோதினார்கள்.
கமலின் சில திரைப்படங்களும் பல பிரச்சினைகளை முறியடித்துத்தான் வெளியாகின. ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறப்போவதாக விரக்தியுடன் தெரிவித்தார் கமல். தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடப்போவதாக கமல் தெரிவித்துள்ளார். தேவர் மகன் வெளியானபோது பல மாவட்டங்களில் சாதிச்சண்டை நடைபெற்றது. அதன் இரண்டாம் பாகம் வெளியானால் மீண்டும் அதே சாதிச்சண்டை உருவாகும் என டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு படம் வெளியாகும் முன்னரே அதற்கு எச்சரிக்கை விடுக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல.

அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலைச் சந்திக்க கமல், தயாராகிவிட்டார். கட்சிக்கான் ஆயத்தப்பணிகளை ரஜினி தொடங்கிவிட்டார். விஜய், அரசியலுகு வருவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். தமிழகத்தின் அடுத்த அரசியல் தலவர்கள் நடிகர்களா அல்லது பரம்பரை அரசியல் வாதிகளா என்பதை அடுத்துவரும் தேதல்தான் தீர்மானிக்கும்.

No comments: