Wednesday, March 23, 2022

ஆயுத வியாபாரிகளை வாழவைக்கும் வல்லரசுகள்

முதலாவது உலக மகா யுத்தமும்,இரண்டாவது உலகப் போரும்  தந்த இழப்புகள், போர் வடுகள் என்பன இன்றளவும் பேசு பொருளாக உள்ளன. அமெரிக்கா  வீசிய  அணுகுண்டுகளின் பாதிப்பு இன்றும் ஜப்பானில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகின் பல நாடுகளை அழித்த ஜேர்மனியும், மோசமன அழிவைச் சந்தித்த ஜப்பானும் ஆயுத உற்பத்தியில் அதிக அக்கறை காட்டவில்லை. யுத்தம் இல்லாத நாடாக நோர்வே தலை நிமிர்ந்து நிற்கிறது.

 இனி யுத்தமே வேண்டாம் என உலக நாடுகள் முடிவெடுத்தன. அந்த முடிவுரை அறிக்கையில் மடும்தான் இருக்கிறது.பல நாடுகளின் இராணுவ, பாதுகாப்பு பட்ஜெட் எகிறிக்கொண்டே போகிறது. கடந்த நூற்றாண்டில் ஆரம்பித்த பயங்கரவாதத்தால் பாரிய அழிவுகள் ஏற்பட்டன.  அமெரிக்க -வியட்நாம் போர், வடகொரியா- தென். கொரியா சன்டை, இந்திய – பாகிஸ்தான் யுத்தம், இந்திய - சீன  போர், இங்கிலாந்து -ஆர்ஜென்ரீனா  சண்டை, இஸ்ரேல் -எகிப்து மோதல் என்பன அடங்கிவிட்டன. இஸ்ரேல்- பாலஸ்தீன முற்றுகை நூற்றான்டு கடந்தும் தொடர்கிறது.

ஈரான்,ஈராக்,எகிப்து, குவைத்,ஆப்கானிஸ்தான் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற தொடர் யுத்தங்கள்  ஆயுத வியாபாரிகளை வளப்படுத்தின.அல்- கொய்தாவும், தலிபான்களும் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்ததால் ஆயுத வியபாரிகளின் உற்பத்தி அமோகமாக  இருந்தது. ஆப்கானில் இருந்து அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ படைகள் விலகியதால்  ஆயுத வியாபாரிகளின் வருமானம் வீழ்ச்சியடைந்தது.அடுத்து ஒரு போரை எதிர் பார்த்து காத்திருந்தவர்களுக்கு ரஷ்யா கைகொடுத்தது.

போர் காரணமாக இரண்டு நாடுகளின்  பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. ஆயுத பலம் ஆள் பலம் உள்ளநாட்டின் இராணுவ நடவடிக்கை மூர்க்கமடைவதால் மற்றைய நாடு உருக்குலைந்து போகிறது.அரச கட்டடங்கள், இரானுவ மையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள்  என்பனவற்றின் மீது நடை பெறும் தாக்குதலால் அவை உருக்குலைந்து  போகின்றன. பாடசாலைகள், வைத்தியசாலைகள்,பொது மக்களின் வாழ்விடங்கள் என்பனவும் அழிக்கப்படுகின்றன.   மக்கள் அகதியாகின்றனர். உணவு,உடை, நீர்  என்பன கிடைக்காமையினால்  அல்லல்படும் மக்களை ஆயுத வியாபாரிகள் கண்டுகொள்வதில்லை.


மரணத்தையும் அழிவையும் வைத்தே ஆயுத வியாபாரம் நடக்கிறது. உலகின் பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் எல்லா ஆயுதங்களும் நன்றாக விற்க வேண்டும் என்றால், அவர்களுக்கு ஒரு போர் தேவை. ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய போர், ஈராக், சிரியா என்று பல நாடுகளுக்குப் பரவி ஆயுத நிறுவனங்களை வாழ வைத்தது. ஆப்கன் இப்போது தாலிபன் கைகளுக்குப் போய்விட்டது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு காணாமல்போய்விட்டது. ஆப்பிரிக்க தேசங்களில் நிகழும் உள்நாட்டுப் போர்களால் ஆயுத வியாபாரம் பெரிதாக நடப்பதில்லை.இந்த அமைதியைக் குலைத்து ஒரு பெரிய போர் நடந்தால்தான் ஆயுதங்களுக்குத் தேவை ஏற்படும். புதிய ஆயுதங்களைப் பரிசோதனை செய்து பார்க்கவும், யார் உருவாக்கிய ஆயுதங்கள் வலிமையானவை என்பதை நிரூபிக்கவும் போரே சரியான வழி.

ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு முன்பே, அடுத்த களம் உக்ரைன்தான் என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. 2017-ம் ஆண்டே உக்ரைனுக்கு அமெரிக்க நிறுவனங்கள் ஆயுதங்களை விற்க ஒப்புதல் அளித்தார், அப்போதைய ஜனதிபதி டொனால்டு ட்ரம்ப். `இது சமாதான முயற்சிகளைச் சிக்கலாக்கி, ரஷ்ய ஜனாதிபதி புட்டினை   போர்முனைக்குக் கொண்டுவந்து நிறுத்தும்' என்று அப்போதே பலர் எச்சரித்தனர். ட்ரம்ப் போய் ஜோ பைடன் வந்தபிறகும் இது மாறவில்லை. அமெரிக்க ஏவுகணைகள் அடுக்கடுக்காகப் போய் அங்கே இறங்கியதைப் பார்த்து வெகுண்டார் புட்டின். விளைவாகப் போர் வந்திருக்கிறது.

 

உலகின் ஆயுத மார்க்கெட்டைக் கட்டுப்படுத்தும் டாப் 5 நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ். உலக நாடுகள் பயன்படுத்தும் 75.9 சதவிகித ஆயுதங்களை இவையே விநியோகிகின்றன. இஸ்ரேல், இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகியவை அடுத்த இடங்களில் இருக்கும் ஐந்து நாடுகள். இவை 14.4 சதவிகித ஆயுதங்களை விநியோகிக்கின்றன.

இவற்றில் குறிப்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் மட்டுமே 57 சதவிகித ஆயுத மார்க்கெட்டை வசப்படுத்தி வைத்துள்ளன. உலகின் டாப் 10 ஆயுத நிறுவனங்களில் அமெரிக்காவில் மட்டுமே ஐந்து உள்ளன. உலகின் பெரிய ஆயுத நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின், டாங்கிகளை அழிக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்குக் கொடுத்திருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் சாப் நிறுவனம், டாங்கிகளை அழிக்கும் ராக்கெட் லாஞ்சர்களைக் கொடுத்திருக்கிறது.ஜேர்மனி, இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்றிருக்கின்றன. வரலாற்றில் முதல்முறையாக ஐரோப்பிய யூனியன் தன் செலவில் ஆயுதங்களை வாங்கி உக்ரைனுக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இயற்கைச் சீற்றங்களின்போது உதவி செய்வதற்காகத் தன்னார்வலர்களை அழைப்பதுபோல, தங்களுக்காகப் போர் புரிய தன்னார்வலர்களை அழைத்திருக்கிறது உக்ரைன். ஆயுதங்களின் வாசமே அறியாத பலர் போர்க்களத்தில் இப்போது ஆயுதமேந்தி நிற்கிறார்கள். மொத்தத்தில் ஆயுத வியாபாரம் சூடுபிடித்துவிட்டது.

இந்தச் சூழலில் சாமர்த்தியமாக இன்னொரு விஷயத்தையும் செய்ய நினைக்கிறது அமெரிக்கா. ஒட்டுமொத்தமாக ரஷ்யாவின் ஆயுத வியாபாரத்தை முடக்கிவிட்டு, அதைத் தன்வசப்படுத்தும் முயற்சியே அது. போர் விமானங்கள், கவச வாகனங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், எலெக்ட்ரானிக் போர் அமைப்புகள், ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் போன்றவற்றைச் செய்யும் 22 ரஷ்ய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்திருக்கிறது. `இனி புதிதாக ஆயுத விற்பனை செய்வதோ, ஏற்கெனவே விற்ற ஆயுதங்களுக்குப் பராமரிப்புப் பணி செய்வதோ இனி இந்த நிறுவனங்களுக்குக் கடினமாக இருக்கும்' என்கிறது அமெரிக்கா.

ரஷ்யாவுக்குப் பெரும் வருமானத்தைத் தருவது ஆயுத ஏற்றுமதி பிசினஸ்தான். அவர்கள் பெரிதாக மேற்கத்தியத் தொழில்நுட்பங்களை நம்பி இல்லை. அதனால் இந்தத் தடை தங்களை ஒன்றும் செய்யாது என்கிறார்கள் அவர்கள். தாக்குதல்களைத் தாங்கி நிற்கும் அளவுக்கு வலிமையான போர் வாகனங்களைச் செய்வதற்கான மெட்டலர்ஜி நுட்பம், சென்சார் மற்றும் ரேடார் டெக்னாலஜி போன்றவற்றில் அமெரிக்காவைவிட ரஷ்யா சிறப்பாக உள்ளது. காஷ்மீரின் உறைபனிச் சூழலிலும், அரேபியாவின் தகிக்கும் பாலைவனத்திலும் தடையில்லாமல் இயங்கும். விலையும் குறைவு. அதனாலேயே ரஷ்யப் போர்க்கருவிகள் பலராலும் விரும்பப்படுகின்றன. இந்தியா, சீனா, எகிப்து, அல்ஜீரியா, வியட்நாம், ஈரான், லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவை ரஷ்ய ஆயுதங்களை அதிகம் பயன்படுத்துகின்றன.

ரஷ்யாவின்  s 400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை இந்தியா வாங்கியுள்ளது. அடுத்து ஏ.கே 203 துப்பாக்கிகளை ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கவுள்ளன. உலகின் மிக வேகமான ஏவுகணையாகக் கருதப்படும் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை மேம்படுத்த ரஷ்யா உதவி செய்யவுள்ளது. அமெரிக்காவின் தடை இந்தத் திட்டங்களை என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.

No comments: