Thursday, May 18, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 67


 தமிழ்த்திரை  உலகின் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.  திரைத்துறையின் இன்னொரு பரிமாணமாக இரட்டை வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர் அதற்கான  முன்னேற்பாடுகளைச் செய்தார்.

 பி.யு.சின்னப்பா நடித்து வெளிவந்த ‘உத்தம புத்திரன்’ படத்தை மறுபடியும் எடுக்க வேண்டும். அதில்   இரட்டை வேடங்களில் தான்  நடிக்கவேண்டும் என்று எம்ஜிஆர் ஆசைப்பட்டார்.  1950-களின் நடுப்பகுதியில்  எம்ஜிஆர் நடிக்கும் ‘உத்தம புத்திரன்’ படம் குறித்த விளம்பரம் முன்னணி நாளிதழில் வெளிவந்தது. தனது கனவு நிறைவேறப்பொகும் என நினைத்திருந்தவருக்கு அன்றைய பத்திரிகையில் வெளியான  இன்னொரு விளம்பரம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்த்தியது. அதேநாளில் அதே பத்திரிகையில்  சிவாஜி இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘உத்தம புத்திரன்’ படத்தின் விளம்பரம்  பிரசுரமாகி இருந்தது.

  1940- ஆம் ஆண்டு  பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தி நடித்த  ‘உத்தம புத்திரன்’  வெளியாகை  பரபரபாகப் பேசபட்டது.   மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திடம் அந்தத் திரைக் கதையின் உரிமையை   வாங்கிய  வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம்  சிவாஜியை வைத்து ‘உத்தம புத்திரனை’ எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் அந்தப் போட்டியிலிருந்து விலகினார்  எம்ஜிஆர். என்றாலும் இரட்டை வேடம்  என்ற கனவு  தொடர்ந்தது.

 எம்.ஜி.ஆருக்காக எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் நிறுவனம் இரட்டை வேடக் கதை ஒன்றைத் தயார் செய்தது.

‘பிரிசனர் ஆஃப் ஜென்டா’ (1937) எ, ‘இஃப் ஐ வேர் கிங்’ (1938) , ‘விவா ஜபட்டா’ (1952) எஆகிய படங்களின் கதைகளைக் கலந்து  ஒரு அற்புதமான திரைக்கதையை எம்ஜிஆருக்காக உருவாக்கினார்கள் எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவினர்.ஆர்.எம்.வீரப்பன், வித்வான் வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோர் அப்போது எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் இருந்தார்கள். இவர்களுக்கு உதவியாக இருந்த ரவீந்தரும் கவியரசு கண்ணதாசனும் வசனமெழுதுவது என்று முடிவானது.

 ‘நாடோடி மன்னனை’ இயக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இயக்குநர் அந்தப் பணியில் இணைய முடியாமல் போனது. எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி உறுதியாகச் சொன்னார்: "இந்தப் படத்தைத் தம்பி எம்ஜிஆர் இயக்கினால் செய்யட்டும். இல்லையென்றால் ‘நாடோடி மன்னன்’ படமே வேண்டாம்!" இதை மறுத்து எம்ஜிஆர் எவ்வளவோ வாதாடிப் பார்த்தார். இறுதியில் வேறு வழியே இல்லாமல் ‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்க எம்ஜிஆர் ஒத்துக்கொண்டார். படத்தில் அவருக்குச் ஜோடி பானுமதி. நம்பியார், எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சந்திரபாபு, ஜி.சகுந்தலா, எம்.என்.ராஜம் ஆகியோரும் இதில் நடித்தார்கள். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்தார்.

நாடோடி மன்னன் படத்தில் இன்னொரு எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜா தேவியை ஒப்பந்தம் செய்தார்கள். சரோஜாதேவியை முதன்முதலில் எம்ஜிஆருக்கு அறிமுகம் செய்துவைத்தவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். இவரை எம்ஜிஆர் தனது குருவாக மதித்தார்.

முதல் கதாநாயகி பானுமதிக்கு இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டது. அதனால் பாதி படத்திலேயே அவர் வெளியேறிவிட்டார். படத்தின் கதையில் பானுமதி முதுகில் குத்தப்பட்டு வீழும் காட்சிதான் கடைசியாக எடுக்கப்பட்டது. கதையின் போக்கிலும் அவர் இறப்பதாக இருந்ததால் அத்துடன் அவரது பகுதியை முடித்துவிட்டார்கள்.  எம்ஜிஆர் பிக்சர்ஸ் சின்னத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கைகளில் திமுக கொடியைப் பிடித்திருப்பதுபோல வடிவமைத்தார் எம்ஜிஆர். திரையில் அதைக் காட்டும்போது ‘செந்தமிழே வணக்கம்’ என்ற சுரதாவின் பாடல் பின்னணியில் ஒலிக்கும். ‘பார்புகழும் உதய சூரியனே... பசியின்றி புவி காக்கும் பார்த்திபனே...’ என்று அந்தப் பாடலின் இறுதி வரிகள் இயம்பின.

  “இந்தப் படம் வெற்றிபெற்றால் நான் மன்னன், தோல்வியடைந்தால் நான் நாடோடி”. என்று   வெளியிடுதற்கு முன்பாக எம்ஜிஆர் சொன்னார்:1958 ஆகஸ்ட் 22-ல் ‘நாடோடி மன்னன்’ வெளிவந்து எம்ஜிஆரை மன்னனாக்கியது. திரைத்துறை, அரசியல் இரண்டிலும் எம்ஜிஆர் என்ற தனிப்பெரும் அடையாளத்தை நிறுவியது இந்தப் படம். உலகம் முழுவதும் 23 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது ‘நாடோடி மன்னன்’. தமிழகத்தில் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. 1959 அக்டோபர் 26 அன்று மதுரையில் மதுரை முத்து ஏற்பாட்டில் மாபெரும் வெற்றிவிழா நடந்தது.

ராஜாராணி படங்களில்  எம்.ஜி.ஆரும், சமூகப் படங்களில் சிவாஜியும்  கொடிகட்டிப் பறந்தார்கள். எம்.ஜி.ஆர் நடைத்த அந்தமான்கைதி,  கூண்டுக்கிளி ஆகிய சமூகப் படங்கள்  தோல்வியடைந்ததால் சமூகப் படத் தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரின்  பக்கம் செல்லவில்லை. 

  கதாசிரியர் ரவீந்திரனும் , இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும் எம்ஜிஆருடன்  உரையாடியபோது , ராஜா ராணி படங்களில் இருந்து வெளிவந்து சமூகபப்டங்களில் நடிக்க வேண்டும் என சுப்பையா நாயுடு ஆலோசனை சொன்னார்.  சமூகப்படங்கலில் நடிக்கும் ஆர்வம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. மற்றவர்களும் அதனை விரும்புவதால் சமூகப்படங்களில் நடிக்க வேண்டும் என  முடிவெடுத்தார். 

ஏ.எல்.எஸ். புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் ‘திருடாதே’ பட வாய்ப்பு வந்தது. சரோஜாதேவியே நாயகி. இடையில், சீர்காழியில் ‘இன்பக் கனவு’ நாடகம். அதில் குண்டுமணியைத் தூக்குகிற காட்சியில் ஏற்பட்ட விபத்தில் எம்ஜிஆருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆறு மாத ஓய்வு. அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்க நினைத்தபோது சரோஜாதேவி பிசி ஆகிவிட்டார். அவரது  திகதி கிடைப்பதில் சிக்கல்  ஏற்பட்டது.  எம்ஜிஆர் நடித்த ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ படமும் படுதோல்வி கண்டது.

‘திருடாதே’ படப்பிடிப்புக்கு சரோஜாதேவி பெரும்பாலும் தாமதமாகத்தான் வருவார்.  தன்னால் அரிமுகப்படுத்தப்பட்ட சரோஜாதேவிக்காக்  எம்ஜிஆர் பொறுமையாகக் காத்திருப்பார். எப்படியாவது சமூகப் படமொன்றில் நடித்து வெற்றியடைவதே அவருக்கு ஒரு சவாலாக இருந்தது. கடும் உழைப்பும் பொறுமையும் காட்டிய அவருக்கு ‘திருடாதே’ படம் பெரும் வெற்றியைப் பரிசளித்தது.

முன்பு தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ பெரும் வெற்றியைத் தந்தது எம்ஜிஆருக்கு நினைவில் வந்தது. உடனே சின்னப்பா தேவருக்கு அழைப்பு விடுத்தார். “படம் எடுங்கள், நடிக்கிறேன்” என்றார் இரண்டே சொற்களில். உடனே களமிறங்கினார் தேவர். ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்ற வெற்றிப்படம் வந்தது. அடுத்த ஆண்டே, ‘தாயைக் காத்த தனயன்’, ‘குடும்பத் தலைவன்’ என இரண்டு எம்ஜிஆர் படங்களைத் தேவர் தயாரித்தார்.

பாசம்’ படத்தில்   க்ளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் எம்ஜிஆர் இறந்துவிடுகிறார். முதலில் இயக்குநர் ராமண்ணாவிடம், “ரசிகர்கள் இதை ரசிக்கமாட்டார்கள்” என்று சொல்லிப் பார்த்தார் எம்ஜிஆர். “கதையின் போக்கில் அதை ஏற்பார்கள்” என்றார் இயக்குநர். படம் வெளிவந்து படுதோல்வி கண்டது. எம்ஜிஆர் சொன்னது மெய்யானது.

அதன் பிறகு கதைத் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தினார். எம்ஜிஆர். ரசிகர்கள் தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாகவே பார்க்க விரும்புகிறார்கள் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. தன்னுடைய பாத்திரப்படைப்பு எப்படிப்பட்ட குணமுடையதாக இருக்க வேண்டும், எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்றெல்லாம் வரையறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வந்துசேர்ந்தார் எம்ஜிஆர்.சிவாஜியைப் போலவோ மற்ற நாயகர்களைப் போலவோ பலதரப்பட்ட வேடங்களில், குடும்பப்பாங்கான, இயல்பான படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.  ஆனால், அவரை வில்லனோடு சண்டையிட்டுச் ஜெயிக்கும் மாஸ் ஹீரோவாக மட்டுமே இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் பெரிதும் விரும்பினார்கள். அதனால் எம்ஜிஆரின் மாறுபட்ட நடிப்புகள் மழுங்கடிக்கப்பட்டு, எம்ஜிஆர் படம் என்றால் இப்படித்தான் இருக்கும். இதுதான் எம்ஜிஆர் ஃபார்முலா என்று தனியாக ஒரு ஃபார்முலாவையே உருவாக்கிவிட்டார்கள்.

No comments: