Tuesday, July 25, 2023

தி.முக.வுக்கு நெருக்கடி கொடுக்கும் அமுலாக்கத்துறை

இந்திய அரசியலில் ஒட்டு மொத்தப் பார்வையும்  தமிழகத்தின் பக்கம்  உள்ளது. பாரதீய ஜனதாவுன் அரசியல் சித்து விளையாட்டுகளை  முறியடித்து வட இந்தியத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார் ஸ்டாலின். அரசியல் ரீதியாக ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க முடியாத  பாரதீய ஜனதா ஆளுநர் அமுலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் அளுத்தம் கொடுக்கிறது.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ரவி ,  மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  உறுப்பினர்களை அடக்கி ஆளப் பார்க்கிறார். செந்தில் பாலாஜியைக் கைது செய்து காவலில் வைத்திருக்கும் அமுலாக்கத்துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மகன்  ஆகியோரைக் குறிவைத்துள்ளது.அதிகாலையில் திடீரென அமைச்சர்  பொன்முடி வீட்டுக்குள் நுழைந்த அமுலாக்கத்துறை 18  மணிநேரம் விசாரணை செய்தது. அதே வேளை அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி,  அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்  ஆகியோரின் வீடு  அலுவலகங்கள் ஆகியவற்றில் சல்லடை போட்டுத் தேடியது.

முதலமைச்சர் ஜப்பானுக்குச் சென்ற  போது  செந்தில் பாலாஜியைத் தூக்கிய அமுலாக்கத்துறை அவர் பெங்களூருக்குப் புறப்படும்போது அமைச்சர் பொன்முடியைக் குறி வைத்தது. பெங்களூரின் எதிர்க் கட்சிகளின்  கூட்டம் நடை பெறும் வேளையில் அச்செய்தியைப் பின்னுக்குத் தள்ளுவதற்காக தமிழகத்தில்  அமுலாக்கத் துரை காலடி வைத்துள்ளது.செந்தில் பாலாஜிக்கு எதிரான  குற்றச் சாட்டும்,   பொன்முடிக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்  சாட்டும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பதியப்பட்டவை.

“மத்திய அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. அந்தத் துறையின் இயக்குநரை அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை முடக்கவும் பலவீனப்படுத்தவும் அதிகார அத்துமீறலைக் கட்டவிழ்த்துவிடுகிறது பா.ஜ.க” என அமலாக்கத்துறைமீது தொடர்ச்சியான விமர்சனத்தை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். சமீபத்தில் அமலாக்கத்துறை இயக்குநர் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் தலையில் பலமாகவே குட்டு வைத்தது. “ஒரு குறிப்பிட்ட நபரின் பதவிக்காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதன் காரணம் என்ன... அந்த ஒரு நபரால் மட்டும்தான் அமலாக்கத்துறை இயக்குநருக்கு உரிய கடமையைச் செய்ய முடியுமா... வேறு யாராலும் செய்ய முடியாதா... அவர் ஓய்வுபெற்ற பிறகு அந்தப் பதவியின் நிலை என்னவாகும்..?” என மத்திய அரசைக் கேள்விக்கணைகளால் சல்லடையாக்கினர் நீதிபதிகள்.

அமலாக்கத்துறை மீதான நம்பகத்தன்மை, இந்தியா முழுக்க இருக்கும் எதிர்க்கட்சிகளால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில்தான், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது 2012-ல் பதியப்பட்ட வழக்குக்காக, 11 வருடங்கள் கழித்து அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது  அமலாக்கத்துறை.

 திராவிட முன்னேற்றக் கழகம்   ஆட்சிக்காலத்தில் [2006௨011]  இருந்ட்தபோது , கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி விழுப்புரம் மாவட்டம், பூந்துறையிலுள்ள செம்மண் குவாரியை முறைகேடாகத் தன் மகன் கெளதம சிகாமணிக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 2011-ல் ஜெயலலிதா

 முதல்வராந்தும் ,  அந்தப் புகார் குறித்துத் தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டார்.  செம்மண் குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட, பல மடங்கு மண் வெட்டி எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தது போலீஸ். 2,64,644 லோடு செம்மண் வெட்டியெடுக்கப்பட்டதாக, வானூர் தாசில்தார் குமாரபாலன் அளித்த புகாரின்பேரில், விழுப்பும் மாவட்டக் குற்றப்பிரிவு பொலி ஸார் 2012-ல் வழக்கு தொடுத்தனர்.

அந்தச் செம்மண் வழக்கில் பொன்முடி, கெளதம சிகாமணி, பொன்முடியின் மைத்துனர் ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், புதுச்சேரியைச் சேர்ந்த சதானந்தம் உள்ளிட்ட ஏழு பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதில், அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள்மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. பொன்முடி கைதுசெய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் அவர் வெளியே வந்தாலும், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இப்படியே 2012-லிருந்து 2021 வரை இழுத்துக்கொண்டே போனது வழக்கு விசாரணை.  இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கும்படி பொன்முடியும் அவரது மகனும் நீதிமன்றத்தை நாடினார்கள்.  வழக்குக்குத் தடை போட முடியாது  என நீதிமன்றம் கைவிரித்தது.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர்தான் அமுலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது என்றாலும். அரசியல் களத்தை நோக்கும்போது  ச்டாலினுக்கு குடைச்சல் கொடுக்கும் நோக்கில் நாள் தெரிவு செய்யப்பட்டது என்ற குற்றச் சாட்டையுக்ம் நிராகரிக்க முடியாது.

2023, ஜூலை 17-ம் திகதி, காலை 6:50 மணிக்கு  சைதாப்பேட்டை, நகர் காலனி வீட்டில்தான் இருந்தார் அமைச்சர் பொன்முடி. அவருடைய மகன் அசோக் சிகாமணியும் அவருடன் வீட்டில்தான் இருந்தார். அமுலாக்கத் துறையினர் வீட்டுக்குள் நுழைந்ததும் வரவேற்ற பொன்முடி, ‘சோதனைக்கான வாரன்ட் இருக்கிறதா?’ எனக் கேட்டார். வாரன்ட்டை எடுத்துக் காட்டியதும், அதற்கு மேல் பொன்முடி எதுவும் பேசவில்லை” என்கிறார்கள் சோதனைக்குச் சென்ற அதிகாரிகள்.வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமைச்சரின் கார், அவர் மகன்களின் உயர்ரக கார்கள் முதற்கட்டமாகச் சோதனையிடப்பட்டன. அவற்றிலிருந்து சில பேப்பர்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர் அதிகாரிகள்.

சென்னையில் சோதனை தொடங்கிய சமயத்தில், விழுப்புரம் சண்முகாபுரம் காலனியிலுள்ள பொன்முடியின் வீடு, அவர் மகன் கெளதம சிகாமணியின் வீடு, கயல் பொன்னி & கோ அலுவலகம், விக்கிரவாண்டியிலுள்ள சூர்யா அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரி என நான்கு இடங்களில் சோதனையை ஆரம்பித்தது அமலாக்கத்துறை. அனைத்து இடங்களிலும், சி.ஆர்.பி.எஃப் காவலர்கள் பாதுகாப்புடன்தான் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சரின் விழுப்புரம் வீடு பூட்டப்பட்டிருந்ததால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வாசலிலேயே காத்திருந்தனர் அமலாக்கத்துறையினர். பொன்முடியின் உறவினர் சாவியுடன் வந்து வீட்டுக் கதவைத் திறந்த பிறகே அங்கு சோதனை தொடங்கியது.

வீட்டிலிருந்த இரண்டு பீரோக்கள், ஒரு லாக்கரைத் திறக்க அதிகாரிகள் சாவியைக் கேட்டபோது, அங்கிருந்த உதவியாளர்கள் பீரோ சாவி தம்மிடம்  இல்லை  என்றார்கள்.  மாற்று சாவி செய்யும்  செய்யும் தொழிலாளி ஒருவரை வரவழைத்து லாக்கரைத் திறக்க முயன்றனர்.  டிஜிட்டல் லாக்கர் என்றபடியால் அவரால் திறக்க முடியவில்லை. 

மகாராஷ்டிரா மாநிலக் கூட்டுறவு வங்கி முறைகேட்டில், அதாவது பல கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டுக்குள்ளான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மீதும் அமலாக்கத்துறையில் வழக்கு பதிவாகியிருக்கிறது. ஆனால், பாரதீய ஜனதா   கூட்டணிக்கு அஜித் பவார் மாறியதும், அவர்மீது மேல் நடவடிக்கை எதையும் அமலாக்கத்துறை எடுக்கவில்லை. அப்படியே பெட்டிப் பாம்பாக முடங்கிவிட்டது. குற்றப்பத்திரிகையில்கூட அவர் பெயர் இடம்பெறாமல் ‘கச்சிதமாக’ அமலாக்கத்துறை பார்த்துக்கொண்டது. ஆனால், தங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு அமலாக்கத்துறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. 

 “ஆம் ஆத்மி தலைவர்கள்மீது கைது நடவடிக்கை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள்மீது விசாரணை எனத் தேர்தல் நெருக்கத்தில் அமலாக்கத்துறையின் பாய்ச்சல்கள், நீதியை நோக்கி நகர்வதாகத் தெரியவில்லை. அவை வாக்குச்சாவடியை நோக்கியும், கூட்டணி வியூகங்களை நோக்கியுமே பாய்ச்சலைக் காட்டுகின்றன. இந்தப் பாய்ச்சல் நாட்டுக்கு மட்டுமல்ல, அமலாக்கத் துறைக்கே ஆரோக்கியமானதல்ல” என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

“அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்கில், இதுவரை நூற்றில் இரண்டில்கூட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை. 11 வருடங்களாக அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்ன செய்துகொண்டிருந்தது... குட்கா உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதில் ஒன்றிய அரசு காலம் தாழ்த்துவது ஏன்... இது அப்பட்டமான அரசியல் இல்லையா?” - என திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்புகிறார்.

  அடுத்த குறி அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு  என்கிறார்கள்  பாரதீய ஜனதாவின் தமிழகத் தலைவர்கள். இவர்கள் சொல்வதைப் பார்த்தால் அமுலாக்கத் துறையை யார் ஏவிவிடுகிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிடும்.

 

No comments: