Sunday, October 6, 2024

இறங்கி வந்த பிரதமர் மோடி சாதித்துக் காட்டிய முதல்வர் ஸ்டாலின்

தமிழக  முதலமைசராக  ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து மத்திய அரசின் கெடுபிடிகளைச் சமாளிப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவளிக்கிறது. மத்திய அரசின் ஏஜென்டான தமிழக ஆளுநர் ரவியின் செயற்பாடுகள் தமிழக அரசுக்கு தலையிடியாக உள்ளது.

தமிழக அரசு  கேட்டது எதனையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. இயற்கை பேரிடர்களின்  போது கொடுக்க வேண்டிய  கொடுபனவுகளை  குறைத்தே கொடுத்தது. தமிழக கல்வியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக் கட்டை போடுவதாக  குற்றச் சாட்டு  எழுந்தது. 

இந்த நிலையில் பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்குச் சென்றார். அந்தப்பயணம்  பெரும் விமர்சனங்களை எதிர் நோக்கியது.  பிரதமரை தமிழக  முதல்வர் சந்தித்தது நல்லதொரு பலனைக் கொடுத்துள்ளது.

நீண்ட கால காத்திருப்பு மற்றும் போராட்டத்திற்கு பிறகு சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது மொத்தம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. உயர் மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவை அமைக்கும் பணிகள் சென்னையில் 45 க்கும் அதிகமான இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மொத்தமாக ரூ.63,246 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7500 கோடி. இதனை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.

சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் 2026ம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்காக விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கேட்டு வந்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும், தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் நேரில் டில்லி சென்றும், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மூலமாகவும் வலியுறுத்தி வந்தார். சமீபத்தில் முதல்வர், டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த போதும் கூட இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்  மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சென்னை மெட்ரோ திட்டத்தின் இரம்டாம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சென்னை மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள். சென்னை மெட்ரோவின் 2வது கட்ட திட்டமானது சென்னை நகரின் வாழ்க்கைத் தரத்த்தை மேலும் மேம்படுத்தும். போக்குவரத்தை எளிதாக்கும். பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு..ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த முறை நான் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது சென்னை மெட்ரோ 2வது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தேன். அதை அவர் ஏற்றுக் கொண்டு தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டு மக்களின் நீண்ட காலக் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.  இந்ததத் திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே  உரசல்கள்  இருக்கின்ற போதிலும் சில விட்டுக்கொடுப்புகளால் ஸ்டாலின் மத்திய அரசுடன்  ஒத்துப் போகிறார். கலைஞர் நூற்றாண்டு விழா முத்திரை  வெளியீட்டுக்கு மத்திய அமைச்சரை ஸ்டாலின் அழைத்ததும்  பெரும் விமர்சனங்களைக் கிளப்பியது. 

இதேவேளை பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு போய் விட்டது. அவர் மிகவும் பலவீனமான பிரதமராக இருக்கிறார். அதேசமயம், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி தன்னை ஸ்திரப்படுத்தி விட்டார். தனது திறமையை நிரூபித்து விட்டார். பிரதமர் மோடியின் 3வது அரசு எத்தனை காலம் நீடிக்கும் என்பது கேள்விக்குறி என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பிகே என்று அழைக்கப்படும் பிரஷாந்த் கிஷோர், தேர்தல் உத்தி வகுப்பாளராக அரசியல் களத்தில் அறியப்பட்டவர். இவர்தான் முதல் முதலில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணமாக அமைந்தார். இவர் வகுத்துத்  தந்த திட்டங்களைத்தான் பாஜக மோடிக்காக கடைப்பிடித்தது. மோடி முதல் முறை பிரதமராக பிகேவும் முக்கியக் காரணம். அதன் பிறகு பல்வேறு கட்சிகளுக்கும் பிஆர் வேலை பார்த்தவர் பிகே. 

திமுக, திரினமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று இவரால் பலன் அடைந்த கட்சிகள் அதிகம். காங்கிரஸுக்கும் கூட இவர் பணியாற்ற தீவிரமாக முயன்றார். ஆனால் ராகுல் காந்தியை ஒதுக்கி விட்டு அவர் வைத்த ஸ்டிராட்டஜியை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விடவே, காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற பிகேவால் முடியவில்லை. இந்த கோபத்தில் இன்னும் பல வருடங்களுக்கு பாஜகதான் ஆட்சியில் இருக்கும். பாஜக அசுரத்தனமாக வளர்ந்திருக்கிறது என்றெல்லாம் கூறி வந்தார் பிகே. ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போய் விட்டது. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிதான் மத்தியில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த  இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துதான் பாஜகவின் எதிர்கால அரசியல்  இருக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் 9 மாநில சட்டசபைகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தோல்வி அடைந்தால், தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மை சீர்குலையும், அதன் ஆயுள்காலம் கேள்விக்குறியாகும்.  அதேசமயம், 9 மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியைப் பெற்றால், ஆட்சிக்கு பெரிதாக ஆபத்து இருக்காது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு விட்டார். அவர் தன்னை நிரூபித்து விட்டார் என்றுதான் கூற வேண்டும். அதேசமயம், தேசியத் தலைவராக அவர் தன்னை முழுமையாக நிரூபிக்க இன்னும் அவர் நிறைய செய்ய வேண்டியுள்ளது.  காங்கிரஸ் கட்சிக்குள் இப்போது தன்னை அவர் நிரூபித்து விட்டார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. 2024 தேர்தலில் 90 சீட்டுகளை காங்கிரஸ் வென்றுள்ளது மிகப் பெரிய விஷயம்.  இதற்கு ராகுல் காந்திதான் காரணம்.

அதேசமயம், 1977ம் ஆண்டு  தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைத்த போதும் கூட இந்திரா காந்தி தலைமையில் 154 சீட்டுகளை காங்கிரஸ் வென்றது. எனவே ராகுல் காந்தி  அந்த அளவுக்கு இன்னும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். இந்திரா காந்தி மிகப் பெரிய தேசியத் தலைவராக இருந்தார். ராகுல் காந்தி அந்த நிலையை இன்னும் அடையவில்லை.

பீகார் அரசியலில் பாஜகவின் நற்பெயர், நிதீஷ் குமாரால் கெட்டுப் போய் விட்டது. லாலு பிரசாத் யாதவின் காட்டாட்சியை காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்து வந்ததால்தான் காங்கிரஸ் கட்சியை பீகார் மக்கள் தூக்கிப் போட்டனர். தற்போது நிதீஷ் குமாரால், பாஜகவுக்கும் அதே கதிதான் பீகாரில் ஏற்படும். பாஜகவை பீகார் மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள்.

ரமணி

 6/10/24

No comments: