Sunday, May 16, 2010

தூது விடுகிறது பா.ம.க.மௌனம் காக்கிறது தி.மு.க.


செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தமிழக முதல்வர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த வாரம் டில்லிக்கு விஜயம் செய்த தமிழக முதல்வர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்திக்கும் அவர் முறைப்படி அழைப்பு விடுத்தார்.
செம்மொழி மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை அழைப்பதற்காகவே கருணாநிதி டில்லிக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான சில பிரச்சினைகளைத் தீர்ப்பதே தமிழக முதல்வரின் டில்லிப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
அமைச்சர் ஆர். ராசாவுக்கு எதிரான ஊழல் புகார் பற்றிய பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியான செய்திகளால் அமைச்சர் ராசா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது. அமைச்சர் ராசாவுக்கு எதிராக தமிழகத்திலும் எதிர்ப்புக் குரல் வலுவடைந்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சில அமைச்சர் ராசாவுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. அமைச்சர் ராசாவுக்கு எதிரான ஊழல் புகார் பற்றிய ஆவணங்களை அவரை எதிர்க்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதேவேளை, சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அமைச்சர் ராசாவுக்கு பூரண ஆதரவு தெரிவித்துள்ளன. அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றினால் அல்லது ராசா இராஜினாமாச் செய்தால் ஊழலுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து விடும் என்ற பயமும் அரசிடம் உள்ளது.
அமைச்சர் ராசா ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இந்திய மத்திய அரசு உள்ளது. ராசாவை அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் எதிர்க் கட்சிகளும் சில ஊடகங்களும் குறியாக உள்ளன. அமைச்சர் ராசாவைக் கைவிட திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை.
அமைச்சர் அழகிரிக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன. அவை அனைத்தும் ஆதாரமற்ற பொய்கள் என்று அடித்துக் கூறுகிறார் அமைச்சர் அழகிரி. தமிழக முதல்வர் கருணாநிதியின் சொல்லுக்கு கட்டுப்படாது அடம் பிடிக்கும் அழகிரி மத்திய அரசின் சட்ட திட்டங்களையும் துச்சமாக மதிக்கிறார். அமைச்சர் அழகிரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நேரில் ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு காண்பதும் முதல்வர் கருணாநிதியின் டில்லி விஜயத்தின் ஒரு அங்கமாகும்.
தமிழக அரசியலில் தான் அழகிரிக்கு கண் வைத்துள்ளார், மத்திய அமைச்சராக இருப்பதில் அவருக்கு அதிக விருப்பம் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் அமைச்சர் அழகிரி.
ஆனால், அமைச்சர் அழகிரியின் மறுப்பு அனைத்தும் அறிக்கையாக வெளியாகிறதே தவிர, அவரின் நடவடிக்கைகள் எதுவும் சாதகமானதாக இல்லை. விருப்பம் இல்லாத இடத்தில் அழகிரியை விட்டு வைக்க முடியாத இக் கட்டான நிலையில் உள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
தமிழக முதல்வர் கருணாநிதியின் டில்லி விஜயத்தின் போது அமைச்சர் ஆர். ராசா, அமைச்சர் மு. க. அழகிரி ஆகியோரின் பிரச்சினைகள் பற்றி முதல்வர் கருணாநிதி விரிவாக ஆராய்ந்துள்ளார். அமைச்சர் ராசாவுக்கு எந்தப் பிரச்சினையும் இப்போதைக்கு ஏற்படும் சாத்தியம் இல்லை. மத்திய அரசில் தொடர்ந்தும் இருப்பதற்கு அழகிரி கஷ்டப்படவில்லை என்றால் அவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றி விடுவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. அமைச்சர் அழகிரியை தமிழகத்தில் அரசியல் செய்யவே விரும்புகிறார். தமிழக அரசியலில் அழகிரி காலடி எடுத்து வைத்தால் துணை முதல்வர் ஸ்டாலினில் செல்வாக்கில் பங்கம் ஏற்படலாம். கட்சியையும் தமிழக அரசையும் தன் கைக்குள் வைத்திருக்கவே அழகிரி விரும்புவார்.
தமிழக அரசியலில் துணை முதல்வர் ஸ்டாலினின் பங்கு அளப்பரியது. ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டதல்ல. இந்திய அரசியல் தலைவர்கள் தமது அரசியல் வாரிசுகளை திட்டமிட்டு அரசியலில் நுழைத்தார்கள். தமது செல்வாக்கும் பலத்தினால் அரசியல் வாரிசுகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தினார்கள்.
ஆனால், ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் எதிர்க்கட்சிகளினால் உருவாக்கப்பட்டது. மாணவப் பருவத்தில் அரசியலில் ஆர்வமுடன் செயற்பட்ட ஸ்டாலின் போராட்டங்களில் பங்குபற்றி சிறை சென்றால் வாரிசு அரசியல் என்ற சொல்லினுள் துணை முதல்வர் ஸ்டாலினின் அரசியல் வாழ்வை புகுத்தி விட முடியாது.
திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவையில் ஸ்டாலினுக்குப் பின்னர் அரசியல் வாழ்வை ஆரம்பித்த பலர் அமைச்சர்களானார்கள். தனது மகன் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு ஸ்டாலினுக்கு அமைச்சுப் பதவி எதனையும் முதல்வர் கருணாநிதி கொடுக்கவில்லை. அரசியலில் சகலவற்றையும் கற்று உணர்ந்த பின்பே தமிழக அமைச்சரவையில் ஸ்டாலினுக்கு இடம் கொடுத்தார் முதல்வர் கருணாநிதி. அழகிரியின் விஜயத்தில் எதிர்மாறாகச் செயற்பட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி. இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அழகிரி போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியானபோதே அவர் அமைச்சராகி விடுவார் என்று அரசியல் வல்லுனர்கள் ஆரூடம் கூறினார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற அழகிரி அமைச்சரானார். மூத்த உறுப்பினர்கள் இருக்கையில் அழகிரியை அமைச்சராக்கி அழகிரியின் ஆசையை நிறைவேற்றினார் தமிழக முதல்வர் கருணாநிதி.
முதல்வரின் ஆசையை முழுமையாக நிறைவேற்றாத அமைச்சர் அழகிரி, தனது ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார். மத்திய அமைச்சரவை எதிர்பார்த்தது போன்று இலகுவானதல்ல என்பதை காலம் கடந்த பின்னர் அமைச்சர் அழகிரி உணர்ந்து கொண்டார். தமிழக அரசியலில் அழகிரி தீவிரம் காட்டத் தொடங்கினார். அவருக்கு என்ன பதவி வழங்குவதென்று தடுமாறுகிறார் முதல்வர் கருணாநிதி. துறை முதல்வரான ஸ்டாலின் முதல்வராவது உறுதி. ஆகையினால் முதல்வர் பதவி அழகிரிக்கு கிடைக்க சந்தர்ப்பம் இல்லை. முதல்வர் கட்சித் தலைவராக இருப்பார் ஸ்டாலினை முதல்வராக்கி அழகிரியை கட்சித் தலைவராக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது.
கட்சித் தலைவர் பதவியை அழகிரிக்கு விட்டுக் கொடுக்க ஸ்டõலின் தயாராக இல்லை. நெருக்கடி எதுவும் இல்லாத கட்சித் தலைவராக இருக்கவே ஸ்டாலின் விரும்புகிறார். ஸ்டாலினையும் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவே அழகிரி விரும்புகிறார். கருணாநிதிக்குப் பின்னால் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று கூறியதன் மூலம் ஸ்டாலினுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார் அழகிரி. அழகிரியின் குணத்தைப் பற்றி நன்கு அறிந்துள்ள முதல்வர் கருணாநிதி; அழகிரியினால் ஸ்டாலினுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாக்கவே முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். ஆகையால் அழகிரியின் விருப்பம் இப்போதைக்கு நிறைவேறும் சாத்தியம் இல்லை.
இதேவேளை தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய பாட்டாளி மக்கள் கட்சி சீண்டு வாரின்றி தவிக்கிறது. பென்னாகரம் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும் விட அதிகளவு வாக்குகளைப் பெற்றதால் உற்சாகத்தில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர பாட்டாளி மக்கள் கட்சி விரும்புகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பத்தைப் புரிந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் சாதகமான சமிக்ஞை எதுவும் காட்டாது மௌனம் காத்து வருகிறது.
ஜூன் மாதத்துடன் அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைகிறது. தனது மகன் அன்புமணி தொடர்ந்து எம்.பியாக இருப்பதையே டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால்தான் அன்பு மணி நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்பதை டாக்டர் ராமதாஸ் மிக நன்றாக உணர்ந்து கொண்டுள்ளார். மகனின் எதிர்காலத்துக்காக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியமைக்க தயாராக உள்ளார் டாக்டர் ராமதாஸ்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகச் செயற்படுகிறது. டாக்டர் அன்புமணி மீது முதல்வர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் மதிப்பு வைத்துள்ளார். மத்திய அரசும் டாக்டர் அன்புமணி மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆசியுடன் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு டாக்டர் அன்புமணி விரும்புகிறார். திராவிட முன்÷னற்றக் கழகத்தவர்களில் சிலர் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ப்பதற்கு விரும்பவில்லை.
பென்னாகரம் இடைத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் மோதியதால், இரண்டு கட்சித் தொண்டர்களும் எதிரும் புதிருமாக உள்ளனர். அன்புமணியின் பதவி தொடர்வதற்காக தனது கட்சித் தொண்டர்களும் அடங்கிப் போக வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார். அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினராவது முதல்வர் கருணாநிதியின் கையிலேயே உள்ளது.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 09/05/10

2 comments:

இளங்கோ said...

ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனுக்கு பென்னாகரம் பார்முலா!ராமதாஸ் மகன் அன்புமணிக்கு என்ன பார்முலா?

வர்மா said...

இளங்கோ said...
ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனுக்கு பென்னாகரம் பார்முலா!ராமதாஸ் மகன் அன்புமணிக்கு என்ன பார்முலா?

ராஜ்ய‌ச‌பா எம்.பி தான்
அன்புட‌ன்
வ‌ர்மா