Sunday, November 17, 2013

கூலிக்கு மாரடிப்போர்

அன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலையிலேயே கேட்ட அழுகுரலும், பறையொலியும் எம்மைத் துயிலெழுப்பின. ஆடைகளைச் சரிசெய்து கொண்டு பாட்டி வீட்டிற்கு ஓடினோம். வெளி விறாந்தைக்கும் வேலிக்குமிடையில் இருந்த பரந்த முற்றத்தில் அயலயவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு கூட்டத்தின் மத்திக்குச் சென்றோம். உயிரற்ற பாட்டியின் உடலைக் கிடத்தியிருந்தியிருந்தார்கள். முதல் நாளிரவே அவர் இறந்துவிட்டாராம். பயத்தினால் உடல் வெலவெலத்தது. நான் சென்றிருந்த முதல் செத்தவீடு அதுதான்.

                பறையொலியையும், அழுகுரலையும் மீறி ஒரு முரட்டுக்குரல் ஒலித்தது. அவர்தான் மாமனார். கிராமத்துக் கொட்டிற் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியராகவிருந்த அவர்தான் செத்தவீட்டு அலுவல்களை மேற்பார்வையிட்டார். சாதாரணமாகவே அவர் தனது சிம்மக் குரலில் வேகமாகக் கதைப்பார். கோபம் வந்தால் கேட்கவே வேண்டாம், வீராவேசம் கொண்டு ஊரே அதிரும்படி தொண்டை கிழியக் கத்துவார். அன்றும் அவர் கோபத்தின் உச்சிக் கொப்பிலே நடமாடிக் கொண்டிருந்தார். கூலிக்கு மாரடிப்பவர்கள் இன்னும் வந்து சேராததே அதற்குக் காரணம்.
"நானே போய் அவளவையின்ரை சிண்டைப் பிடிச்சு இழுத்து வாறன்" என்று தனக்குத்தானே பலமாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டவனாக நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.

                மணல் ஒழுங்கைகளுடாகவும், புழுதி படிந்த ஒற்றையடிப் பாதைகளுடாகவும் சென்று கொண்டிருந்தோம். தூரத்தே நரிகளின் ஊளையொலி கேட்டது. பற்றைகளிலிருந்த சருகுகளிடையே பாம்புகள் சரசரத்து ஓடின. மாமனாரை ஒட்டி உரசிக் கொண்டு நடந்தேன்.

                "! அதுகள் சாரைப்பாம்புகள். ஒரு நாளும் கடியாது, நீ பயப்பிடாதே"

                சின்னஞ்சிறு குடிசைகள் தென்பட்டன. அவை நேராக, ஒரே சீராக அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரைப் பகுதிக்கு வந்துவிட்டோம், சில மீனவர்கள் மனைவிமாரின் உதவியுடன் மீன்பிடி வலைகளைச் செப்பஞ் செய்துகொண்டிருந்தனர். இன்னுஞ் சிலர் கட்டுமரங்களைக் கடலிற் தள்ளிக்கொண்டிருந்தனர்.

                "டேய்! நில்லுங்கோடா அயோக்கியப் பயல்களே. " மாமனார் கோபத்தோடு கத்தினார். ~~இண்டைக்கென்ரை குஞ்சியாத்தேன்ரை செத்தவீடென்று உங்களுக்குத் தெரியாதோ? கீழ் சாதிப்பயல்களே எல்லாரும் அங்கை நடவுங்கோடா.||

                "எங்களுக்குத் தெரியாது ஐயா! ~நாம்| கோவிக்கக் கூடாது. நாங்கள் இப்பவே வாறம்" வலைகளைப் போட்டுவிட்டுப் பௌவியமாக வந்து கைகட்டி நின்று கொண்டு சொன்னார்கள்.

                அவர்களைக் கடந்து கூலிக்கு மாரடிப்பவர்களைத் தேடிச் சென்றோம். நாம் முன்பு பார்த்த குடிசைகளை விடச் சிறிய குடில்கள் சில தெரிந்தன.

                "அந்த ஈனப்பெண்டுகள் இங்கினைதான் இருக்கிறவளள்"

                ஒரு குடிலின் முன்னே நின்னேகொண்டு சத்தமிட்டுக் கூப்பிட்டார். கிடுகுப்படலையைத் திறந்து கொண்டு இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை அணிந்திருந்த வளையல்கள் கிலுகிலுத்தன. அழுக்கேறிய சேலைகளை மார்பின் குறுக்கே வரிந்து கட்டியிருந்தார்கள்.

                "என்ர குஞ்சியாத்தையின்ரை செத்தவீடு இண்டைக்கென்று சொல்லி அனுப்பினனானெல்லோ, இன்னும் அங்கை வராமல் இங்கை என்னடி செய்யிறியள்? " மாமனார் பொரிந்து தள்ளினார்.

                "நயினார் கோவிக்கக்கூடாது. நாங்கள் அங்கை வாறதுக்குத் தான் வெளிக்கிடுறம். சுணங்கினதுக்கு நயினார் மன்னிக்க வேணும்" அவர்களில் ஒருத்தி சொன்னாள்.

                "மற்றவள்களெல்லாம் எங்கை போயிட்டாளுகள்? "

                "இப்ப இங்கை எங்களைவிட ரெண்டுபேர்தான் இருக்கினம். ரெண்டு பேரும் அக்கா, தங்கைகள் அவவையைவிட வேறை ஒருத்தருமில்லை. அதுகளும் வரமாட்டுதுகள் இண்டைக்கு விடியக்காத்தாலை அதுகளின்ரை தாய் மனிசி செத்துப்போச்சு. "
                "சே! கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்களாக் கிடக்கு. அவளள் எங்கை இருக்கிறவளள்? "

                "உதிலை கிட்டத்தான் நயினார்"

                "எனக்கொருக்கால் அவளளின்ரை குடிலைக் காட்டு"

                அவ்விரு பெண்களையும் பின்தொடர்ந்து சென்றோம். ஒரு குடிசையிலிருந்து விசும்பலொலி கேட்டது. அதன் முன்னாற் சென்று நின்றோம். எம்முடன் வந்த பெண்கள் அங்குள்ளோரைக் கூப்பிட்டனர். கண்ணீரால் நனைந்து நெகிழ்ந்திருந்த சேலைகளை குத்திட்டு நிற்கும் மார்பின் குறுக்கே இறுக்கிச் செருகியவாறு அச்சகோதரிகள் வெளியே வந்தனர்.

                "நயினார் எங்களைப் பொறுத்துக் கொள்ள வேணும். எங்கடை ஆத்தை காலமை மோசம் போயிட்டா. இந்த நிலமேலை நாங்கள் மற்றவயின்ரை செத்தவீட்டுக்கு எப்படி வாறது?||

                "மானங்கெட்ட நாய்களே என்ர குஞ்சியாத்தேயின்ர செத்த வீட்டிற்கு ரண்டு மாரடிக்கிறவளள் என்னத்துக்குக் காணும்? அவ ஆரெண்டு தெரியுமல்லே|| மாமனார் சீறி விழுந்தார்.

                "நயினார் கொஞ்சம் பொறுக்க வேணும்" அயலிலுள்ள பெண்ணொருத்தி அவர்களுக்காகப் பரிந்து பேசினாள். ~~சொந்தத் தாய் சீவன் போய்க்கிடக்கேக்கை அந்தத் துக்கத்தில இருக்கிறதுகளை உங்கடையிடத்துக்கு வந்து போலியாக அழச்சொல்லிறது நல்லா இல்லப் பாருங்கோ. "

                மாமனாரின் உதடுகள் கோபத்தால் துடித்தன, கண்கள் ஓடிச்சிவந்தன, உடல் பதறியது. பரிந்து பேசிய பெண் தலைகுனிந்து நிலம் நோக்கினாள். அவர்களுடைய நிலையை எண்ணி எனது கண்கள் பனித்தன. கவலையுடன் தலையை அசைத்தேன். அவருடைய கோபம் என்மேற் திரும்பியது.

                "மடப்பயலே! இதுகளைப் பற்றியெல்லாம் உனக்கென்ன தெரியும்? செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் சுப்பிறீம் கோட்டு நீதவான், பொலிஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளள் இல்லாட்டில் அவையெல்லாம் எங்களைப் பற்றி என்ன நினைப்பினம்? "

                அவ்விரு சகோதரிகளும் முழந்தாளிட்டுக் கெஞ்சினார்கள். "நயினாற்றை சொல்லுக்கு மாறாக நடக்கிறமெண்டு நினைக்க வேண்டாம். உங்களைக் கும்பிட்டம். இம்முறை மட்டும் எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. அடுத்தமுறை நயினார் வீட்டுச் வீட்டுக்கு எங்கடை தொண்டைத்தண்ணி வத்துமட்டும் அழுவம்"

"கர்வம் பிடிச்சவளே! என்ரை வீட்டிலை இன்னுமொரு சவம் விழவேண்டுமெண்டு விரும்பிறியோடீ. அற்பப் பிராணிகளே, உந்தச் சொல்லுக்காக உங்களைக் கோட்டுக்கேத்துவேன்" கோபாவேசம் மிகுந்த நிலையில் கையைப் பிடித்துத் தரதரவென்றிழுத்துச் சென்றார்.

                "நயினார்! கையை விடுங்கோ நயினார். நாங்கள் இப்பவே வாறம். "

                அப்பெண்கள் நால்வரையும் முன்னேவிட்டு அலுவல்காரர் பின்னாற் சென்றார். அவரைத் தொடர்ந்து நானும் சென்றேன்.

                பாட்டி வீட்டை நெருங்கிவிட்டோம். அப்பெண்களின் நடையில் ஒரு வேகம் காணப்பட்டது. கூந்தலை அவிழ்துத் தலையை விரித்துக் கொண்டு, இரு கைகளையும் வானோக்கி உயர்த்தியவாறு ~...| வென்று கதறியபடி உட்சென்றார்கள். அங்கே அயலவர்களும் உறவினர்களுமாகிய பெண்கள் சிறு சிறு குழுக்களை அமைத்துக் கொண்டு ஒருவரின் தலையை அடுத்தவரின் கழுத்திற் சாய்த்துக்கொண்டு அழுதவண்ணம் இருந்தார்கள். அவர்களுக்குச் சிறிது ஒதுக்கமாய் அமர்ந்து கொண்டு மாரடிக்கும் பெண்கள் அழுதார்கள். கைகளை மேலே தூக்கித் தலையில் அடித்தார்கள். பாட்டியின் நற்பண்புகளைச் சொல்லி ஒப்பாரி வைத்தார்கள்.

                பாட்டியின் அன்புக்குப் பாத்திரமான பேரப்பிள்ளை தம்பு மலேசியாவிலிருந்து வரும்வரை பாட்டியை விட்டுவைத்த முழுமுதற் கடவுள் சிவனின் கருணையே கருணை என்று சொல்லி உறவினர் சிலர் அழுவதை அவதானித்த மாரடிக்கும் பெண்கள் அதனைக் கருவாகக் கொண்டு ஒப்பாரி வைத்தனர்.

                "வாயைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன்
                வளத்தினைச் சொல்லனனை
                கண்ணைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன்
                கதையைச் சொல்லனணை"
               
                அதே வேளையில் அலுவல்கார மாமனார் தனது நண்பர் குழாத்தில் தனது கெட்டிக்காரத்தனத்தைப் பறைசாற்றினார். மாரடிக்கும் பெண்களை இழுத்துவந்ததனைச் சுவையாக விபரித்தார். அவருடைய மனிதாபிமானமற்ற செயல்களை நண்பர்கள் மறுதலித்தனர். அந்த ஈனச்செயலுக்காக அவ்விரு பெண்களிடமும் மன்னிப்புக் கோருமாறு வற்புறுத்தினர். வந்திருந்த பலர் அப்பெண்களுக்காக வருந்தினர். அவர்களை வீட்டிற்கு அனுப்பும்படி எனது தந்தையார் சொன்னார்.

                அலுவல்காரர் பொங்கியெழுந்து அப்பெண்களிடம் சென்றார். ஏதோவெல்லாம் கூறி அதட்டினார். இறுதியில் மரணச் சடங்கு முடியும் வரை நின்று தங்கள் கடமையைச் செய்து முடிக்க அவர்கள் இணங்கினார்கள்.

                அலுவல்காரர் முன்பைவிடச் சுறுசுறுப்பாக ~அலுவல்| பார்த்தார். அவருடைய கொடூரச் செயலை விஷயமறிந்த ஒவ்வொருவரும் விமர்சித்தனர். அவரோ எதையும் காதிற்போடாமல் சுழன்று சுழன்று அலுவல் பார்த்தார். பறையடிப்பவர்களிடம் சென்று மாரடிக்கும் பெண்களின் குரலைவிடச் சத்தமாக வேகமாகப் பறையை முழங்கச் சொன்னார். பின்பு ஒரு பை நிறைய அரிசியையும் மரணச் சடங்கிற்குத் தேவையான சமித்து முதலிய முக்கிய பொருட்களையும் எடுத்துக்கொண்டு பிரேதக் கட்டிலருகே வந்தார்.

                நன்றாக வியர்த்துக் களைத்தது. மாரடிக்கும் பெண்களைக் கட்டிலருகே கூட்டிவரக் காலடி எடுத்துவைத்த போது உடல் தள்ளாடியது. கைகளால் தலையைப் பிடித்துக்கொண்டு தடால் என்று வீழ்ந்து விட்டார். சுற்றிலுமிருந்தவர்கள் கலவரப்பட்டனர். சிலர் அவரை ஓர் ஒதுக்குப்புறமாகத் தூக்கிச் சென்றனர். இன்னுஞ் சிலர் உதவிக்கு விரைந்தனர். ஒருவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். வேறொருவர் விசிறி கொண்டு விசுக்கினார். சிறிது நேரம் சிசுருஷையின் பின் மாமனார் கண்களைத் திறந்து எழுந்திருக்க முயன்றார். நண்பர்கள் விடவில்லை. நன்றாக ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தினர்.

                மாரடிப்போரிடையே அவ்விரு சகோதரிகளின் குரல்கள் வெகு துல்லியமாகக் கேட்டன. நயினாரின் குஞ்சியாத்தையின் செத்த வீட்டில் ஒன்றிவிட முடியவில்லை.

                "ஏழையள் எம்மைவிட்டு எங்கை போனாய் ஏந்திழையே
                ஏழையள் நாம் எங்கு போவோம் எழுந்துவாராய்
                எங்கதாயே"

                அவர்களுடன் மற்றைய இருவரும் சேர்ந்து கொண்டனர். குருக்கள் வந்து மரணச்சடங்கை ஆரம்பித்த போது அழுகுரல் விண்ணையொட்டி ஓய்ந்தது. குருக்கள் பாட்டியின் அன்புப் பேரனான தம்புவை அருகிலழைத்துத் தேவாரம் பாடச்சொன்னார். குரல் கரகரத்துத் தளதளத்தது. கண்கள் குளமாகிப் பார்வையை மறைத்தது. ஈற்றடிகளை முற்றாகப் பாடிமுடிக்க முடியவில்லை. பிரேதத்தின் மேல் தலையைப் புதைத்து அழுதார்.

                "எத்தனையோ வருஷங்களாக எனக்காகக் காத்திருந்தியே. கடைசீல என்னோடு ஒரு சொல்லுக்கூடப் பேசாமல் அறிவற்ற நிலையிலேயே செத்துப் போனியே என்ரை ஆச்சி. " தம்பு உணர்ச்சிவசப்பட்டு ஓலமிட்டார்.

                மாரடிக்கும் பெண்கள் ஒப்பாரியைத் தொடர்ந்தனர்.

                "அப்புக்காத்தினருமைத் தாயே நீயின்று அசையாமலிருப்பதேனோ?
                அசையாமலிருப்பதாலே அன்பானோர் அல்லல் கொண்டழுகிறார்கள்
                ....................................
                கண்ணைத் திறந்துந்தன் கயல்விழியைக் காட்டனம்மா
                கண்ணைத் திறந்திந்தக் காட்சியினைப் பாரனம்மா
                .....................................
                வாயைத் திறவனம்மா, நீ வளர்த்தவர் வந்துவிட்டார்
                உன் வளத்தினைச் சொல்லனம்மா
                கண்ணைத் திறவனம்மா நீ வளர்த்தவர் வந்துவிட்டார்
                உன் கதையளைச் சொல்லனம்மா"
ஆங்கில மூலம்: அழகு சுப்பிரமணியம்
தமிழில் : ராஜ ஸ்ரீ காந்தன்,

புத்தகம் :நீதிபதியின் மகன்
முதல் பதிப்பு : 1999 ஜூன் 30

இரண்டாம் பதிப்பு: 2003 பெப்ரவரி 15

1 comment:

இராய செல்லப்பா said...

நெஞ்சை உருக்கும் கதை. நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது எழுத்து. இதை ஆங்கில மூலத்தின் மொழிபெயர்ப்பு என்கிறீர்களே, அந்த ஆங்கிலத்தில் இத்தகைய பேச்சுநடையை எப்படிக் கொண்டுவந்திருக்க முடியும் என்று வியக்கிறேன். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்) சென்னை