Sunday, January 24, 2016

தமிழகத்தில் கால் பதிக்கமுயலும் தேசியக்கட்சிகள்

இந்திய மத்திய அரசை தீர்மானிக்கும் காங்கிரஸ் பாரதீய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் கால் பாதிக்கமுடியாது திண்டாடுகின்றன. 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக‌த்திடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தயவில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவின் நிலையும் இதுதான்.   கருணாநிதி ஜெயலலிதா ஆகியோரின் துணையுடன் தான் தமிழகத்தில் தாமரை பூத்தது.  இந்தியாவை மாறிமாறி ஆட்சிசெய்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளையும்  நெருங்கமுடியாதுள்ளது. இரட்டை  இலைக்குள் தாமரை சங்கமமாகும் என்ற சந்தேகம் தமிழகத்தில்நிலவுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாரதீய ஜனதா சேரும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நிலவுகிறது.

தமிழகம்,புதுச்சேரி,அஸாம்,கேரளம்,மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைத்தேர்தல்கள் இந்த வருடம் நடைபெற உள்ளன. காங்கிரஸும்  பாரதீய ஜனதாவும் இந்த ஐந்து சட்டசபைகளிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. தமிழகத்தில் பலமான வாக்கு வங்கி உள்ள கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால்தான் வெற்றி பெறலாம் என்பதை தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.

2ஜி  ஊழல்  விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளதால்  காங்கிரஸுடன் தமிழகக் கட்சிகள் சேரத் தயங்குகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளவல் ஸ்டாலினும் காங்கிரஸின் இளவல் ராகுலும்  எதிரும் புதிருமாக நிற்பதனால் இணைப்பு சாத்தியமாக இல்லை. காங்கிரஸுடன் சேர ஸ்டாலின் விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர ராகுல் விருப்பப்படவில்லை. கருணாநிதி,கனிமொழி ஆகியோர் காங்கிரஸுடன் சேர விரும்புகிறார்கள். சோனியா பா.சிதம்பரம் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்வதை வரவேற்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் விட்ட தவறை சட்ட சபைத் தேர்தலிலும் தொடர இரண்டு கட்சித் தலைவர்களும் விரும்பவில்லை.

தமிழக கங்க்ராஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே .எஸ்.இளங்கோவன்,முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம்,சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு உட்பட 13தலைவர்கள் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இல்லையென ராகுல் அறிவித்துள்ளார். இதனால் இளங்கோவன் ஆறுதலடைந்துள்ளர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் தலைமையில் மற்றம் ஏற்படுவதை ராகுல் விரும்பவில்லை. தமிழக சட்ட சபைத் தேர்தலைசந்திக்க இளங்கோவனின் பங்களிப்பு முக்கியம் என ராகுல் நினைக்கிறார்.

காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு கட்சியும் திரும்பியும் பார்க்கவில்லை. பேரம் பேசி அதிக தொகுதிகளைப் பெற்ற   காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக ஏங்கிகுறது   கடைசி நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அழைப்பு விடும் என காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது.


விஜயகாந்தின் வரவுக்காக பாரதீய ஜனதா காத்திருக்கிறது. பாரதீய ஜனதாவுடன் சேர்ந்தால் வெற்றி பெற முடியாது என்பதால் விஜயகாந்த் உறுதியான முடிவை அறிவிக்கவில்லை. இதனால் தமிழக மக்களின் மனதில் இடம் பிடிக்க பாரதீய ஜனதா காய் நகர்த்துகிறது. மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், நிலக்கரித்துறை இணை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா நியமித்துள்ளார்.

தமிழக மக்களின்    உணர்வுப் போராட்டமான ஜல்லிக்கட்டை அமித் ஷா கையில் எடுத்துள்ளார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவேன் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்   அடித்து  கூறுகிறார். ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதி வ்ழநக்கியது. உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. காங்கிரஸ் கூட்டணி அட்சியில் இருந்தபோது    2011 ஆம் ஆண்டு  அப்போதைய   சுற்றுச்சுழல் அமைச்சர்  ஜெயராம் ரமேஷ்  சிங்கம், புலி என்பனவற்றோடு காளையையும் காட்சிப்படுத்தல் பட்டியலில் சேர்த்ததனால்  ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டது. இன்றைய சுற்றுச்சுழல் அமைச்சர்  பிரகாஷ் ஜவடேக்கர்  விழியிட்ட அறிக்கையின் பிரகாரம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

மத்திய சுற்றுச்சுழல் அமைச்சின் அறிக்கையை எதிர்த்து விலங்குகள் நலவாரியம் பீட்டா அமைப்பு என்பன உச்ச   நீதி மன்றத்தை நாடியதால் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  இதனால் தமிழக மக்கள் அனைவரும் மோடியின் அரசாங்கத்தின் மீது ஆத்திரமடைந்துள்ளனர்.  தமிழக அரசியல் கட்சிகளும்  தமது எதிர்ப்பை வெளியிட்டன.  ஜல்லிக்கட்டை நடத்ஹ்டுவதற்கு 2014 ஆம் ஆண்டு  உச்ச நீதி மன்றம் தடை விதித்த பின்னரும் சட்டத்தில் திருத்தம்  கொண்டுவந்து ஜல்லிக்கட்டை நடத்தாததை   தமிழகமே எதிர்த்து கேள்வி கேட்கிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஜல்லிக்கட்டுடன் தொடர்புள்ள விலங்குகள் துன்புறுத்தல் தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பாரதீய ஜனதா முயற்சி செய்கிறது. அப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்  பிரகாஷ் ஜவடேக்கர் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என பாரதீய ஜனதா கருதுகிறது.
தமிழ் மக்களின் உணர்வுடன்  கலந்த ஜல்லிக்கட்டை  தடையின்றி நடத்தினால் தமிழக மக்களின் மனதி இடம் பிடிக்கலாம்என்று  பாரதீய ஜனதா கருதுகிறது. பாரதீய ஜனதாவின் ஜல்லிக்கட்டு அரசியல் வாக்கு வங்கை அதிகரிக்குமா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்

ரமணி 
தமிழ்த்தந்தி
24/01/16

No comments: