Tuesday, February 5, 2019

தலைவரை மாற்றி தடையைத் தகர்த்த காங்கிரஸ்


தமிழக காங்கிரஸுக்கு ஒரு தலைவர் இருப்பார். ஆனால், அடுத்த நிலையில் இருக்கும் தலைவர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு கொடுக்கமாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலை எதிர் நோக்கி இருக்கும் இந்த நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலவரான திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு கே.எஸ்.அழகிரி தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கோஷ்டிப் பூசல்கள் டில்லித் தலைமையின் மனமாற்றம் என்பவற்றின் காரணமாக தலைமைப் பதவியை ஒருவர் அதிக காலம் வகிப்பதில்லை. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் ஒரு சில மாதங்கள் இருக்கையில் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் திருநாவுக்கரசர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை தமிழகத்தில் சந்திப்பதற்கு காங்கிரஸ் தயாராக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி வலுப்பெற வேண்டும் என்பதனாலேயே காங்கிரஸ் தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்த திருநாவுக்கரசர்  எம்.ஜி.ஆரின் துணையுடன் அரசியலில் பிரவேசித்தவர். எம்.ஜி.ஆருடனும் ஜெயலலிதாவுடனும் மிக நெருக்கமாகப் பழகிய திருநாவுக்கரசரால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பாசத்தை விட முடியவில்லை.  அதுவே அவரின் பதவிக்கு ஆபத்தாக மாறிவிட்டது.

தமிழக அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் ஸ்டாலினுடைய தலைமையில் நடைபெற்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கும் கட்சிகள் அனைத்தும் அதில் கலந்துகொண்டன. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதில் கலந்துகொள்ளாமல் தனியாக போராட்டம் நடத்தியதால் தமிழக காங்கிரஸார் அதனை ரசிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதை திருநாவுக்கரசர் விரும்பவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதையே திருநாவுக்கரசர் விரும்பினார். இதனை டில்லித் தலைமை விரும்பாததனால் திருநாவுக்கரசர் தூக்கி எறியப்பட்டார்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றிக் கூட்டணியில் இருப்பதால் தலைமைப் பதவிக்கு ஆபத்து இல்லை என்பதே திருநாவுக்கரசரின் எண்ணம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகையில் தலைமைப் பதவியில் கைவைப்பதற்கு தலைமைப் பீடம் விரும்பாது என்பதைத் தெரிந்துகொண்ட திருநாவுக்கரசர் நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை நான்தான் தலைவர் எனப்  பேட்டியளித்தார். தலைக்கனம் மிக்க அந்தப்பேட்டியும் அவருக்குப் பாதகமாக அமைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகக் கட்சியை உருவாக்கி அரசியல் செய்யும் தினகரனுடன் இணைவதற்கு திருநாவுக்கரசர் முயற்சி செய்தார். அந்த முயற்சியும் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் துணை சபாநாயகராகப் பதவி வகித்த திருநாவுக்கரசர் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தார். எம்ஜிஆர் மறைந்ததும் ஜெயலலைதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஜெயலலிதாவின் தலைமையிலும் எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் தலைமையிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதாவுக்குப் பக்க பலமாக இருந்தவர் திருநாவுக்கரசர். சாத்தூர் ராமச்சந்திரனுடன் சேர்ந்து தமிழக சட்டசபை உறுப்பினர்களை கைதி போல் வைத்திருந்தார். கூவத்தூர்  கூத்துக்கு அச்சாரம் போட்ட பெருமை திருநாவுக்கரசரைச் சாரும்.

திருநாவுக்கரசர் மீது ஜெயலலிதா நம்பிக்கை இழந்தபின்னர் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. தனக்கு மதிப்பிலாத இடத்தில் இருப்பதை விரும்பாத திருநாவுக்கரசர், அங்கிருந்து பாரதீய ஜனதாக் கட்சிக்குத் தாவினார். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சராக வலம் வந்தார். பாரதீய ஜனதாவில் செல்வாக்குக் குறையத்தொடங்கியதும் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார். 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததால் அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இராஜினாமாச் செய்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதியரைத் தேடியபோது ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவரான திருநாவுக்கரசரின் பெயரும் முன்னிலைப்படுத்தப்பட்டது.  பாரதீய ஜனதாக் கட்சியில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகக்கூடாது என கருத்டு முன்வைக்கப்பட்டது. திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் தலைவராக்கக்கூடாது என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டில்லித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். தமிழகத் தலிவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் திருநாவுக்கரசருக்கு தமிழக காங்கிரஸ் தலைமைப் பதவி வழங்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற திருநாவுக்கரசர் ஏனைய தலைவர்களுடன் கலந்தாலோசிக்காது தன்னிச்சையாகப் பலமுடிவுகளை அமுல்படுத்தினார். 45 மாவட்டத் தலைவர்கள் இருந்த நிலையில் அதனை 72 ஆக உயர்த்தி தனக்கு விசுவாசமானவர்களை மாவட்டத் தலைவரக்கினார். 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 13 ஆம் திகதி ஆட்டத்தை ஆரம்பித்த திருநாவுக்கர்  அடக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நெருக்கமாக இருக்கும் இவர், தேர்தலுக்கான பேச்சு வார்த்தையில் முக்கிய இடத்தை வகிப்பார். தமிழக காங்கிரஸ் தலைவர் பட்டியலில் பீட்டர் அல்போன்ஸின் பெயரும் இருந்தது. பீட்ட்டர் அல்போன்ஸ்தான் தலைவராவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மென்மையான போக்கைக் கொண்ட பீட்டர் அல்போன்ஸால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் போது இறுக்கமாகப் பேசமாட்டார். அதன் காரணமாக அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.எஸ். அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நம்பிக்கைக்குரியவர். 67 வயதான அழகிரி 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்கடலூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலும், 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலும் சிதம்பரம் தொகுதியில் தமிழக சட்ட சபைத் தேர்தலில்  போட்டியிட்டு  வெற்றி பெற்றவர்.  2003 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஏழு தலைவர்களை தமிழக காங்கிரஸ் கட்சி கண்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாக இருக்கும் அழகிரிக்கு ஜோதிமணி,குஷ்பு போன்ற பெண் தலைவர்களின் ஆதரவு இருக்கின்றது. அழகிரியுடன் சேர்த்து நான்கு செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் சேர்ந்து தமிழக காங்கிரஸை வலுப்படுத்த வேண்டிய கடமை அழகிரியின் முன்னால் உள்ளது.

சூரன்.ஏ.ரவிவர்மா.

No comments: