Tuesday, August 8, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -75


 பத்மினியும், சாவித்திரியும் தமிழ் சினிமாவில்  கொடிகட்டிப் பறந்த  நேரத்தில்  நடிப்பு,அழகு ஆகியவற்றால் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை தேவிகா.  தேவிகாவின் கண்கள் அவருக்கு பிளஸ் பொயின்ராக  இருந்தன. பெண்மைக்கே உரிய அச்சம், மடம், நாணம்  என்பன அவருடன்  பிறந்தவை போல் வெளிப்படும். இவர் நடிக்கும் போதும் சரி, பாடல்வரிகளுக்கு வாயசைத்து நடிக்கும்போதும் சரி, முதலில் நடிப்பை வெளிப்படுத்துவது இவரது கண்களே எனலாம்.

நடிகை தேவிகா 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் thikaதி ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்தார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். வசீகர சிரிப்பு, சங்கீதம், நாட்டியக்கலைகளில் தேர்ந்தவர். தமிழ்சினிமாவின் எவர்கிரீன் நடிகைகளில் ஒருவர் தேவிகா. தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம், கன்னடம் என பன்மொழிப்படங்களில் நடித்தவர். கவிஞர் கண்ணதாசனின் மதிப்பிற்குரிய கலைஞர்களில் இவரும் ஒருவராக இருந்துள்ளார்.

இவருக்கு இவரது பெற்றோர் வைத்த பெயர் பிரமீளா.  இவருக்கு 2 அக்கா, 1 தம்பி உள்ளனர். தெலுங்கு திரையுலகில் பிரபலமான ரகுபதி வெங்கய்யா நாயுடு என்பவரின் பேத்தி ஆவார். பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் இவரது பாட்டி பாட, இவர் எப்போதும் அதற்கேற்ப அற்புதமாக நடனமாடுவார். பெற்றோரின் அனுமதியுடன் சங்கீதம், நாட்டியக்கலைகளைக் கற்றுக் கொண்டார். இவர்களின் குடும்பம் ஒரு காலத்தில் கொடிக்கட்டி வாழ்ந்து வந்தது. சொத்து பிரச்னை காரணமாக அவர்களின் வீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கைவிட்டு போனது. அவர்களின் குடும்பம் வறுமையில் சிக்கியது.  அப்போது அவருக்கு படத்தில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்ததால் அவரின் தந்தை படத்தில் நுழைய அனுமதி கொடுத்தார்.

 மிகப்பெரிய வெற்றி பெற்ற  “நாட்டிய தாரா” என்ற தெலுங்குப்படத்தில்  தனது சொந்தப் பெயரிலேயே, இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.  அந்தப்படம் தமிழிலும்  திரையிடப்பட்டது. அவருடைய நடைப்பையும், அழகையும் பார்த்தவர்கள்    “யார் இந்த அழகு தேவதை?” என்று கேட்டு வியந்தனர். சிவாஜிகணேசன் நடைத்த் "மணமகன் தேவை” என்ற படத்தை பி. பானுமதி தயாரித்தபோது இரண்டாவது கதாநாயகியாக பிரமீளா (தேவிகா) நடித்தார்.

தமிழ்த்திரைப்படத்தின் மீதுள்ள காதலால் தமிழ்த்திரையிலும் புகழ் பெறவேண்டும் என்ற ஆசை பிரமீளா (தேவிகா)வுக்கு ஏற்பட்டது. அதற்காக, நல்ல நடிப்பு பயிற்சிபெற விரும்பி, அக்காலக் கட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய எஸ். வி.சகஸ்ரநாமத்தின் “சேவா ஸ்டேஜ் ” நாடகக்குழுவில் சேர்ந்தார்.  சேவா ஸ்டேஜ் நாடகங்களில் நடிகர் முத்துராமன் நடித்து வந்தார்.  நாடகத்தில் நடித்ததன் மூலம் , தேவிகாவின் நடிப்பில் மெருகு ஏறியது. தமிழை அழகாகவும், திருத்தமாகவும் பேசக் கற்றுக்கொண்டார்.

  இயற்பெயரான பிரமிளாவை தேவிகா என மாற்றியவர்  வேணு என்ற இயக்குனர்.  முதலாளி என்ற திரைப்படத்திற்காக. அந்த படத்தின் நடிகர், நடிகைகளை தேர்வு செய்தபின் அவர்கள் பெயரை வரிசையாக படப்பிடிப்பில் தெரியப்படுத்துவார்களாம். அதில் தேவிகா  படத்தின் நாயகி என போடப்பட்டுள்ளது. 

அதைப் பார்த்து தேவிகா யார் என்று கேட்க அங்கு இருந்த உதவி இயக்குனர் என்.எஸ்.ராஜேந்திரன் அது நீங்கள் தான் என்று கூறியிருக்கிறார். பிரமிளா என்ற பெயர் தெலுங்கு பெயர் போல இருப்பதால் படத்திற்காக தேவிகா என்று மாற்றிவிட்டார் என்று அவர் கூற அதற்கு தேவிகா படப்பிடிப்பில் தேம்பி தேம்பி அழுதிருக்கிறார்.  என் அம்மா எனக்கு ஆசை ஆசையாக வைத்த பெயர் பிரமிளா. அதை போய் மாற்றிவிட்டீர்களே என்று சொல்லி அழுதாராம். ஆனால் பின்னாளில் தேவிகா என்ற பெயர் எந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்கிறது என்று   என்.எஸ்.ராஜேந்திரன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

1957-ல் எம்.ஏ.வேணு “முதலாளி” என்ற படத்தைத் தயாரித்தார். இதில் கதாநாயகன் எஸ். எஸ்.ராஜேந்திரன். கதாநாயகி தேவிகா. பல படங்களில் துணை டைரக்டராக இருந்த “முக்தா” சீனிவாசன் டைரக்டராக அறிமுகமானார். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, 1957 தீபாவளிக்கு வெளி வந்த இப்படம், பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களையும், பெரிய பேனர் படங்களையும் தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றது. “ஏரிக்கரை மேலே போறவளே பெண் மயிலே … ஆபோகி ராகத்தில் அமைந்த அந்த பாடலை எஸ் .எஸ். ராஜேந்திரன் (ரி.எம். சவுந்தரராஜன் குரலில்) பாட தேவிகா வயல் வெளியில் நடந்து செல்வார். பாட்டும், இந்தக் காட்சியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதன் விளைவாக தேவிகா நட்சத்திர அந்தஸ்தை எட்டிப்பிடித்தார்.

“பாவமன்னிப்பு”, “பந்த பாசம்”, “அன்னை இல்லம்”, “குலமகள் ராதை “, “ஆண்டவன் கட்டளை”, “கர்ணன்”, “முரடன் முத்து”, “சாந்தி”, “நீல வானம்”, “பழநி” , பலே பாண்டியா போ ன்ற குறிப்பிடும் படியான நிறைய படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஜோடியாக தேவிகா நடித்தார். . 

“ஆண்டவன் கட்டளை” என்ற படத்தில் வரும் ஆழகே வா என்ற இந்தப்பாடல், இக்கதையின் ஓட்டத்திற்கும், அந்த கதாபாத்தி ரத்திற்கும் கட்டாயமாகத்  தேவைதான் . அதை அளவோடு தந்திருப்பார்கள். அதுவும் தேவிகா அவர்கள் பெரிதாக கவர்ச்சி ஏதும் காட்டாமல் தனது கண்களிலேயே உணர்ச்சிகளைக் காட்டி, சிவாஜி யை மட்டுமல்ல அந்த பாடலைப் பார்க்கும் நம்மையும் சுண்டி இழுப் பார்.

இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் தேவிகா நடித்த “நெஞ்சில் ஓர் ஆலயம், “நெஞ்சம் மறப்பதில்லை” ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்கள் ஆகும். “நெஞ்சில் ஓர் ஆலயம், திரைப்படத்தில் சொன்னது நீதானா என்ற பாடல் வரிகளுக்கு வாயசைத்து நடித்ததோடு அல்லாமல் ஏதோ அவரே சிதார் இசைக்கருவியை இசைப்பது போலவே தனது விரல்களால் மீட்டுவதுபோல் நடித்திருப்பது அற்புதம்.

காதல் மன்னன் ஜெமினிகணேசனுடன் தேவிகா ஜோடியாக நடித்த “சுமைதாங்கி” மிகச்சிறந்த படம். இதை ஸ்ரீதர் டைரக்ட் செய்தார். எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் தேவிகா நடித்த “அன்பு எங்கே?”, ” வானம்பாடி”, “மறக்க முடியுமா?” ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வை. ஏ.நாகேசுவரராவ், கே.பாலாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ஆர்.எஸ். மனோகர், கல்யாணகுமார் ஆகியோருடன் இணைந்து நடித்தவர் தேவிகா.

எம்.ஜி.ஆருடன் “ஆனந்தஜோதி” என்ற ஒரே ஒரு படத்தில் கதா நாயகியாக தேவிகா நடித்தார். பீம்சிங்கிடம் துணை டைரக்டராகப் பணியாற்றிய தேவதாசுக்கும், தேவிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் மணம் செய்து கொண்டனர். இவர்களுடைய ஒரே மகள் கனகா. “வெகுளிப்பெண்” என்ற படத்தைத் தேவிகா சொந்தமாகத் தயாரித்தார்.

இதை டைரக்ட் செய்தவர் தேவதாஸ். கதை– வசனம் கலைஞானம். மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த தேவிகாவுக்கும், தேவதாசுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளிலும் 150-க்கு மேற்பட்ட படங்களில் நடித்த தேவிகா, பின்னர் பட உலகில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தார். அம்மா, அக்கா போன்ற வேடங்களில் நடிக்கவில்லை. குடும்பப்பாங்கான படங்களில் நடிக்கப் பொருத்தமானவர் என்ற பெயரைத் தேவிகா பெற்றிருந்தார்.

சிவாஜியுடன் தொடர்ச்சியாகப் பல படங்களில் ஜோடி  சேர்ந்ததால்  கிசுகிசு உருவானது.நடிகர் திலகம் சிவாஜி- பத்மினி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி. அதேபோல சிவாஜி- தேவிகா ஜோடியும் ரசிகர்களால் விரும்பப்பட்டது.

‘வானவில்’ என்கிற நாடகத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தே தமிழ்த் திரையுலகில் கால் பதித்தார் தேவிகா. தேவிகாவின் முதல் சினிமா கதாநாயகனாக சிவாஜி அமைந்ததாலோ என்னவோ, இந்த ஜோடி நடித்த படங்களில் அந்நியோன்யமான கெமிஸ்ட்ரி அற்புதமாக இருக்கும். அதனாலேயே இந்த ஜோடியைப் பற்றி அரசல்புரசலாக கிசுகிசுவும் கிளம்பியது. இது தேவிகாவின் தாயாரின் காதுகளுக்கும் எட்டியது. பிஸியான நடிகையாக இருந்த தேவிகா தினமும் தன் வீட்டிலிருந்து ஷூட்டிங்கிற்காக கிளம்பும்போதெல்லாம், தாயார்  கேட்பாராம்.  அப்படியெல்லாம்  இல்லை என தேவிகா பதிலளிப்பாராம். ஆனால் கிசுகிசு அதிகரிக்க அதிகரிக்க தேவிகாவின் தயாரின் சந்தேகமும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில், “என்ன... சிவாஜிய கல்யாணம் பண்ணிக்கப்போறியா?” ‘கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே?” என கேள்விகளால் துளைத்தவர் உச்சகட்டமாக... “நீ வீட்டவிட்டு ஓடிப்போய் சிவாஜிய கல்யாணம் பண்ணிக்க திட்டம் போட்டிருக்கியாமே?” என்று கேட்கத் தொடங்கினார். இதனால் தேவிகாவுக்கும், அவரின் அம்மாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் நடந்திருக்கிறது. ஆனால் தேவிகா மனதில் அப்படி எந்த எண்ணமும் இருக்கவில்லை.

No comments: