Saturday, May 3, 2025

ஐபிஎல் 25சாதனைகளும் வேதனைகளும்

 இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள்  புதிய சாதனைகளிப் படைத்து வரலாற்றை எழுதுகிறார்கள். கோடிகளை அள்ளிக் கொடுத்து வாங்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்ய வில்லை.  ஐபிஎல்  இல் அதிக‌ ரசிகர்களை  கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்  மிக  மோசமாகத் தோல்வியடைந்துள்ளது. 

  சேவாக்கின் 17 வருட சாதனை உடைக்கப்பட்டது 

 சென்னைக்கு எதிராக விளையாடிய ப‌ஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதிலும் 5 பௌண்டரி 4 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சிஎஸ்கே அணியின் ஆறுதல் வெற்றியைப் பறித்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதனுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கப்டன் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.

கடைசியாக 2008ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கப்டன் வீரேந்திர சேவாக் சேப்பாக்கத்தில்  71 ஓட்டங்கள் அடித்தார்.  தற்போது அந்த 17 வருட சாதனையை ஸ்ரேயாஸ் 72  ஓட்டங்கள் அடித்து உடைத்துள்ளார். அத்துடன் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்ற கப்டன் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் வீரேந்திர சேவாக், அடம் கில்கிரிஸ்ட், கௌதம் கம்பீர், ரோஹித் சர்மா, ரஜத் படிதார் ஆகியோரும் அந்த சாதனையை படைத்துள்ளனர்.

சஹால் 'ஹட்ரிக்'

பிரிமியர் லீக் அரங்கில் யுவேந்திர சஹால், 2வது முறையாக 'ஹட்ரிக்' விக்கெட் கைப்பற்றினார். இதற்கு முன் 2022ல் ராஜஸ்தானுக்காக விளையாடிய இவர், மும்பையில் நடந்த கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் இச்சாதனை படைத்திருந்தார்.

 இது, பிரிமியர் லீக் வரலாற்றில் பதிவான 23வது 'ஹாட்ரிக்' ஆனது. அமித் மிஸ்ரா (2008, 2011, 2013) அதிகபட்சமாக மூன்று முறை இச்சாதனை படைத்தார். யுவராஜ் சிங் (2009ல் 2), சஹால் (2022, 2025) தலா 2, பாலாஜி (2008), நிடினி (2008), ரோஹித் சர்மா (2009), பிரவீண் குமார் (2010), அஜித் சண்டிலா (2012), சுனில் நரைன் (2013), பிரவீன் தாம்பே (2014), ஷேன் வாட்சன் (2014), அக்சர் படேல் (2016), சாமுவேல் பத்ரீ (2017), ஆன்ட்ரூ டை (2017), ஜெயதேவ் உனத்கட் (2017), ஷ்ரேயஸ் கோபால் (2019), சாம் கரான் (2019), ஹர்ஷல் படேல் (2021), ரஷித் கான் (2023) ஆகியோர்  தலா ஒரு முறை இச்சாதனை நிகழ்த்தினர்.

  வரலாறு காணாத   மோசமான  தோல்வி

 

  ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் திக‌தி சேப்பாக்கத்தில்பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வியடைந்தது.   

 10 போட்டிகளில் வெறும் 2 வெற்றி 8 படுதோல்விகளை சந்தித்த சென்னை அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் 2020, 2022, 2024க்குப்பின் 4வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் சென்னை தோல்வியை சந்தித்துள்ளது.   ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி   மோசமான சாதனைப் படைத்துள்ளது.

 இந்த வருடம் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளிலும் சென்னை தோற்றுள்ளது. இதன் வாயிலாக சேப்பாக்கம் மைதானத்தில் வரலாற்றில் முதல் முறையாக சிஎஸ்கே 5 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துள்ளது. இது போக ஒரு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக தோல்விகளையும் பதிவு செய்து சென்னை வரலாறு காணாத மோசமான சாதனை படைத்துள்ளது.  208 ஆம் ஆண்டும், 2012 ஆம் ஆண்டும் தலா 4 போட்டிகளில் சென்னை தோல்வியடைந்தது.

ரமணி

11/4/25

  

No comments: