டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் விராட் கோலி.
இந்திய
கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் தடுமாறினாலும் அப்போதைய கப்டன் டோனியின் அபிமான வீரராக ஆதரவு பெற்றார். அந்த ஆதரவை சரியாகப் பயன்படுத்திய விராட் கோலி நாளடைவில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு துடுப்பாட்டத்தில் முதுகெலும்பாக
உருவெடுத்தார். குறிப்பாக 2013க்குப்பின் உலகின் அனைத்து வகையான மைதானங்களிலும் சூழ்நிலைகளிலும் அசத்திய விராட் கோலி தொடர்ச்சியாக பெரிய ஓட்டங்
குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். டோனி
2014இல் கப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து கப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி இந்திய அணியை முழுமையாக மாற்றினார்.
அவரது
தலைமையில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்தியா 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் ஐசிசி டெஸ்ட் அணியாக முன்னேறி வெற்றிகளைக் குவித்தது. குறிப்பாக அவுஸ்திரேலிய மண்ணில் 2018 19 ஆம் ஆண்டு பார்டர் – கவாஸ்கர் கிண்ணத்தை வென்ற
இந்தியா சரித்திர சாதனை படைத்தது.
68 போட்டிகளில்
கப்டனாக செயல்பட்ட விராட் கோலி தலைமையில் இந்தியா 40 வெற்றிகளை குவித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைக் குவித்த இந்திய, ஆசிய கப்டன் என்ற இரட்டை சாதனையை விராட் கோலி படைத்தார். இருப்பினும் அவரது தலைமையில் இந்தியா ஐசிசி உலகக் கிண்ணத்தை வெல்லத்
தவறியதால் விமர்சனங்கள் எழுந்தன. அதனால் 2022இல் கப்டன்ஷிப் பொறுப்பை இராஜினாமா செய்த விராட் கோலி சாதாரண வீரனாக விளையாடி
வந்தார்.
சமீபத்தில்
ஓய்வு பெற்ற ரோகித் சர்மாவின் நண்பனாக விராட் கோலியும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டு ரி 0 உலகக் கிண்ண வெற்றியுடன்
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதைப் போல அவர்கள் மீண்டும் ஜோடியாக டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளனர்..
இதுவரை
123 போட்டிகளில் விராட் கோலி 31 அரை சதம் 20 சதம் உட்பட 9230 ஓட்டங்களை 46.85 சராசரியில் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள்
அடித்த வீரர் என்ற வரலாற்றை விராட் கோலி தவற விட்டுள்ளார்.
அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரின் மூலம், அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கான சுற்றுகள் தொடர்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு இந்த போட்டிகள் நீடிக்கும். இதனைக் கருத்தில் கொண்டே எதிர்கால தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். அதே காரணத்தால் தான், விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment