Thursday, August 13, 2009

யசூசிஅகாசி

நம் உறவு முறைமிகவும் அலாதியானது வயதுக்கு மூத்தவர்களை பேர் சொல்லி அழைப்பதில்லை. அண்ணா அண்ணண்ணா,சின்னண்ணா,பெரியண்ணா,மூத்தண்ணா,ஆசைஅண்ணா,குட்டிஅண்ணா.

இதேபோன்றுதான் அக்கா,அக்கக்கா,சின்னக்கா,ஆசைஅக்கா,பெரியக்கா,குட்டிஅக்கா. பெரியப்பா இன்னருவர் இருந்தால் ஆசை அப்பா ,ஆசை அய்யா,சித்தப்பா, இவருக்கு போட்டியாக வேறுபெயர் இருப்பதாகத்தெரியவில்லை.

அண்ணனின் ம்கன் என்னை சித்தப்பா என்று கூப்பிடத்தெரியாது சித்தா என்றான்.அது ஏதோ புதுமுறை என்று நினைத்த அயலட்டையில் உள்ளவர்கள்தங்கடை சித்தப்பாவையும் சித்தா என்றுசுருக்கிவிட்டார்கள்.

அம்மாவை தங்கச்சி என்று சொல்லத்தெரியாத அம்மாவின் அண்ணன் முறையான ஒருவர் அன்னைச்சி என்றார்.அதுவும் ஒருபுதுமுறை எனநினைத்தசிலர் தங்கடை சொந்தக்காரரில் ஒருவரை அன்னைச்சி என்றார்கள்.

அம்மா தனது சகோதரனை அண்ணா என்று கூப்பிடுவதைப்பார்த்து நாங்களும் அவரை அண்ணா என்றுகூப்பிடுவோம்.

கொப்பரை கோயிலிலை கண்டனான்,
கொம்மா சந்தைக்குபோட்டா.
கொப்பர் பெரியாளே
கொம்மாவை வரச்சொல்லு
கொக்கா எங்கபோட்டா
அப்பா அம்மாவை ஓய் என்றுதான் கூப்பிடுவார்.
அம்மா, வாருங்கோ என்பா
மாமா, அப்பாவை ஓய் மச்சான் என்பார்

இப்ப எல்லாம் தலை கீழாப்போச்சு.புருசனை பேர்சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.அவரும் பெண்டிலை பேர் சொல்லி மரியாதையாக வாருங்கோ போங்கோ என்பார்.அந்தக்காலத்திலை ஒரு பெண்ணிடம் வீட்டுக்காரரின் பெயரைக்கேட்டபோது , வீட்டுக்காரரின் பெயரை சொன்னால் பாவம் என்று மறுத்து விட்டார். எந்த ஊர் என்று கேட்டபோது அதுதானே அவற்றை பேர் என்றார். ஊர் பெயர் சிதம்பரம்.

அம்மாவை பெரியவர்கள் சின்னவர்கள் எல்லோரும் அன்னச்சி என்பதுபோல்சில உறவுகள் பொதுச்சொல்லாக மாறிவிடும்.எனது தம்பி ஒருவன் என் மகளை எங்கு கண்டாலும் ஹலோ என்பான். அவனை என்மகள் ஹலோ சித்தப்பா என்பார். அவனை நாம் எல்லோரும் ஹலோ சித்தப்பா என்போம்.

கொழும்பிலை ஆம்பிளயள் அங்கிள்,பொம்பிளையள் அன்ரி வேறுமுறை தெரியாது. எனது அலுவலகத்தில் ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. நான் எடுத்தேன். ஒரு பெண்குரல்
என்னுடன் வேலை செய்யும் ஒருவரக்கேட்டது. அவர் வெளியே போய்விட்டார் என்றேன்.
அங்கிள் அவருக்கு ஒரு மசேச் சொல்லுவியளா என்று கேட்டது பெண்குரல்
எல்லாவற்றயும் கவனமாகக்கேட்டுவிட்டு கடைசியில் , தங்கச்சி எனக்கு 22 வயது. நான் வேலைக்குச்சேர்ந்து மூன்றுமாதம் தான் என்றேன். குழைஞ்சி குழைஞ்சு மன்னிப்புக்கேட்டார். எனக்குவயசு 40 என்றும் நான் 10 வருடமாக அங்கு வேலை செய்வதும் அவவுக்குத்தெரியாது.

ஜேர்மனியில் உள்ள தனது மகளீடம் போவதற்காக எனது உறவினர் ஒருவர் கொழும்புக்கு வந்தார். அவரை எல்லோரும் அக்காசி என்றுதான் அழைப்போம். சிறுவயதிலிருந்தே கொழும்பில் வளர்ந்த என்மகளூக்கு அக்காசி என்ற சொல் புதிதாக இருந்தது. ஒருநாள் வாய்தடுமாறி அக்காசியை யசூசிஅக்காசி என்றார். இப்போ அக்காசி மறைந்து யசூசிஅக்காசி நிரந்தரமாகிவிட்டது.

அயலட்டை////////////////////////////////பக்கத்துவீடுகள்
கொப்பர்///////////////////////////////////அப்பா
கொம்மா//////////////////////////////////அம்மா
கொப்பு////////////////////////////////////அப்பா
கோத்தை//////////////////////////////////அம்மா
கொக்கா///////////////////////////////////அக்கா
பெண்டில்//////////////////////////////////மனைவி
வீட்டுக்காரர்////////////////////////////////கணவன்
குழைஞ்சு குழைஞ்சு/////////////////////////அசடுவ‌ழிதல

நன்றி:http://eelamlife.blogspot.com/2009_07_01_archive.html

No comments: