Tuesday, March 23, 2010

தேர்தல் களத்தில் ராமதாஸ்உற்சாகத்தில் தொண்டர்கள்




தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா? பாட்டாளி மக்கள் கட்சியா? என்ற சந்தேகம் தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
பெண்ணாகரம் இடைத் தேர்தல் காரணமாக தமிழகமே பரபரப்பாக இருக்கையில் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா கொடாநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி, ஜி.தேவமணி, காடு வெட்டி குரு போன்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பம்பரமாகச் சுழன்று பெண்ணாகரத்தில் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகமும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக பெண்ணாகரத்தில் தமது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து சுமார் இரண்டு மாதமாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பெண்ணாகரத்தில் முகாமிட்டு வாக்காளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இணையாக பாட்டாளி மக்கள் கட்சி பெண்ணாகரத்தில் பிரசாரம் செய்து வருகிறது.
தமிழகத்தின் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்கிஸ்ட் கட்சி ஆகியன முழுமூச்சாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
பெண்ணாகரத்தில் ஊழல், முறைகேடு என்பன நடக்காமல் இருக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது. இந்த விசயத்தில் பொலிஸாரையும் தேர்தல் அதிகாரிகளையும்விட உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகிறது பட்டாளி மக்கள் கட்சி.
தமிழக அரசியலில் இழந்த பெருமையை மீண்டும் பெறுவதற்கு முழுமூச்சாகச் செயற்படுகிறது பாட்டாளி மக்கள் கட்சி. வன்னியரின் கோட்டையான பெண்ணாகரத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தலை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பெற வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது.
தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அதனை வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தலை எதிர்நோக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைகுனிந்து நிற்கிறது.
1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளரான சுப்பிரமணியம் 32 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 1996 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிட்ட ஜி. கே. மணி வெற்றி பெற்று திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமை வெளிப்பட்டதால் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர திராவிடக் கட்சிகள் முன்வந்தன. 2001ஆம் ஆண்டு கூட்டணிக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஜி.கே. மணி வெற்றி பெற்றார். 2006 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தது பாட்டாளி மக்கள் கட்சி. அப்போது பெண்ணாகரம் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகம் தன்வசம் வைத்துக் கொண்டது. 2006 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட பெரியண்ணன் வெற்றி பெற்றார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். பெண்ணாகரம் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதனால் நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சகல இடைத் தேர்தல்களிலும் பணமும் தாராளமாக புழங்கியதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. பணம், வேட்டி, சேலை போன்ற அன்பளிப்புகள் ஆங்காங்கே ஏதோ ஒரு வைபவத்தில் வழங்கப்பட்டதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த அன்பளிப்புகளை வெளிப்படுத்துவதில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னணியில் இருந்தது. சந்தேகப்படும் இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் தீவிரமாகக் கண்காணிப்புச் செய்தனர். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் நடவடிக்கைகளை திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கண்காணித்தனர். தேர்தல் அதிகாரிகளும் பொலிஸாரும் செய்ய வேண்டிய கடமைகளை கட்சித் தொண்டர்கள் கச்சிதமாகச் செய்தனர்.
தமிழக முதலமைச்சராக ஐந்தாவது முறை கருணாநிதி பதவி ஏற்ற பின்னர் மதுரை மேற்கு, மதுரை மத்தி, திருமங்கலம், கம்பம், இளையான்குடி, தொண்டாமுத்தூர், பாகூர், ஸ்ரீ வைகுண்டம், வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய பத்துத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த பத்துத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களின் பிரசாரத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலினும் மத்திய அமைச்சர் மு. க. அழகிரியும் தலைமை வகித்தனர். உடல் நிலை காரணமாக முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்யவில்லை.
ஆனால் பெண்ணாகரம் இடைத் தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் கருணாநிதி பெண்ணாகரம் செல்லப் போகிறார். பாட்டாளி மக்கள்கட்சியின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக முதல்வர் கருணாநிதி நேரடியாக பிரசாரக் களத்தில் இறங்குகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகமும் பாட்டாளி மக்கள் கட்சியும் பெண்ணாகரத்தில் முழு மூச்சுடன் ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியும் பிரசாரத்தில் சற்று பின்தங்கி உள்ளன. ஜெயலலிதா கொடா நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் பெண்ணாகரத்தில் பிரசாரம் செய்கின்றனர். அவர்களினது பிரசாரம் சுறுசுறுப்பாக இல்லாததனால் தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர்.
விஜயகாந்தின் மனைவி பெண்ணாகரத்தில் சூறாவளி பிரசாரம் செய்கிறார். பெண்ணாகரத்தில் வெற்றி பெற முடியாது எனத் தெரிந்தும் போட்டியிடும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சியை விட அதிகளவான வாக்குகளைப் பெற வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறது. விஜயகாந்தின் மீது தமிழக அரசியலில் ஏற்பட்ட நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்துள்ளது. அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான முன்னோடியாகவே பெண்ணாகரம் இடைத் தேர்தல் முடிவை எதிர்பார்க்கிறார் விஜயகாந்த்.
இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கும் இடையிலான பனிப் போர் உச்சக் கட்டத்தை அடைந்து விட்டது. வெகு விரைவில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறி விடும் என்று அடித்துக் கூறியவர்களின் வாயை அடைக்கும் வகையில் தமிழக சட்டப் பேரவை வளாகத் திறப்பு விழா நடந்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியும் சட்டப் பேரவைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதியின் மீது தமக்கு இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களில் சிலர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகச் செயற்பட்டாலும் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைப் பீடம் தமிழக முதல்வர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது.
தமிழக சட்டசபையை இடம் மாற்றுவதற்கு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் நடவடிக்கை எடுத்தார். பெரும் போராட் டங்களின் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. புதிய சட்டசபை அமைத்து தனது பெயரைப் பொறிக்க ஜெயலலிதா ஆசைப்பட்டார். அவரின் ஆசை மக்களின் எதிர்ப்பினால் நிராசையானது. தமிழக முதல்வர் கருணாநிதி புதிய சட்டசபையை அமைத்து தனது பெயரை பொறித்து விட்டார்.
தமிழக சட்ட சபையில் கருணாநிதியின் படத்தை மாட்டுவதற்கு தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா கடுமையாக எதிர்த்துள்ளார். ராஜாஜி, அண்ணா, காமராஜர், எம். ஜி. ஆர்., நேரு ஆகியோரின் படங்கள் தமிழக சட்டசபையில் உள்ளன. அவற்றுடன் கருணாநிதியின் படத்தை வைப்பதற்கு ஜெயலலிதா கடுமையாக எதிர்த்துள்ளõர். தான் முதல்வரானதும் கருணாநிதியின் படத்தை அகற்றப் போவதாகவும் ஜெயலலிதா சபதமிட்டுள்ளார்.
சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் முதல்வர் கருணாநிதியுடன் மிகநெருக்கமாக இருந்தாலும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு வேறுவிதமாகவே உள்ளது.
அண்மையில் திருச்சிக்கு விஜயம் செய்த ராகுல் காந்தி இளைஞர் காங்கிரஸை பாரிய முறையில் கட்டியெழுப்பும் தனது நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார். பலமான தமிழக காங்கிரஸை உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை தமிழக இளைஞர்கள் விரும்புகின்றனர்.
விஜயகாந்தின் மீது தமிழக இளைஞர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர் கட்சி ஆரம்பித்ததும் பெருமளவிலான இளைஞர்கள் இணைந்தனர். அரசியலில் அவருக்கு ஏற்பட்ட தோல்வியும் குடும்ப அரசியலை அவர் ஊக்குவிப்பதும் பிடிக்காததனால் விஜயகாந்தின் மீது வைத்த நம்பிக்கை தகர்ந்தது. தமிழக இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் ராகுல் காந்தி இறங்கி உள்ளõர்.
துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோரின் செல்வாக்கை உடைத்து இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் ராகுல்காந்தியின் முயற்சி வெற்றியளிக்குமா என்பதை தமிழக சட்டசபைத் தேர்தலின் முடிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 21/03/10

2 comments:

Anonymous said...

what is the relation between that post and Mr.M.Kannappan Photo?

வர்மா said...

தவறுதலாகபிரசுரமாகிவிட்டது.
நன்றி
அன்புடன்
வர்மா