Sunday, August 1, 2010

களையெடுக்கிறார் ஜெயலலிதாஉற்சாகத்தில் அ.தி.மு.க.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறுவோர் அனைவரும் ஜெயலலிதாவின் தலைமைத்துவத்தையே விமர்சித்து வருகின்றனர். ஜெயலலிதாவை இலகுவில் சந்திக்க முடியாது. அவரைச் சுற்றி இருப்பவர்கள் தவறான கருத்துகளை வழங்கி வருகின்றனர். அவற்றை அப்படியே நம்பி விடும் ஜெயலலிதா தவறான முடிவுகளை எடுக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் கூறுவதில் ஓரளவு உண்மை உள்ளது. கட்சியில் திட்டமிட்டு ஓரம் கட்டப்படும் சிலர் தமது சார்பு நியாயங்களை எடுத்துச் சொல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. ஜெயலலிதாவைச் சுற்றி இருப்பவர்கள் விடும் ஒரு சில தவறுகளினால் தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் பலர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றுள்ளனர். இதனை எல்லாம் காலம் தாழ்த்தி உணர்ந்து கொண்ட ஜெயலலிதா அதிரடியாக சில முடிவுகளை அமுல்படுத்தி உள்ளார்.
ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியான சசிகலாவின் உறவினர்கள் பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ளனர். வாரிசு அரசியல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இல்லை என்றாலும் சசிகலாவின் உறவினர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
சசிகலாவின் நெருங்கிய உறவினரான டாக்டர் வெங்கடேஷ் கடந்த ஆண்டு மே மாதம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பலர் இருக்கையில் சசிகலாவின் உறவினர் என்ற ஒரே ஒரு தகுதியுடன் கட்சியின் முக்கிய பொறுப்பில் டாக்டர் வெங்கடேஷ் நியமிக்கப்பட்டதை பலர் விரும்பவில்லை. அதே நேரம் சசிகலாவைப் பகைத்துக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டது தவறு என்று சுட்டிக்காட்டவில்லை.
தஞ்சாவூர், திருவாவூர் ஆகிய மாவட்டங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் பதவியில் இருந்து டாக்டர் வெங்கடேஷ் அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு பெரும் தடையாக இருந்தவர் டாக்டர் வெங்கடேஷ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சரணடைவதற்கு டாக்டர் வெங்கடேஷ்தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. டாக்டர் வெங்கடேஷின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக அவரிடமிருந்த பதவிகளில் ஒன்றை மட்டும் ஜெயலலிதா பிடுங்கியுள்ளார்.
டாக்டர் வெங்கடேஷை ஜெயலலிதா எச்சரிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுத்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதனால் கட்சியில் உள்ள சில முறைகேடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையை ஜெயலலிதா ஆரம்பித்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களும் தொண்டர்களும் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையினால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் டி. வி. டி. தினகரனின் பதவியையும் பிடுங்கியுள்ளார் ஜெயலலிதா. மாநிலங்களவை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் பதவியிலிருந்து டி. வி. டி. தினகரன் நீக்கப்பட்டுள்ளார். டாக்டர் வெங்கடேஷ், டி. வி. டி. தினகரன் ஆகிய இருவரையும் ஜெயலலிதா ஓரம் கட்டியதால் அடாவடி செய்யும் ஏனையவர்கள் கலங்கிப் போயுள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்காக துரிதகதியில் செயற்படும் ஜெயலலிதாவுடன் டாக்டர் கிருஷ்ணசாமி இணைந்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக ஜெயலலிதாவுடன் முதன் முதலில் இணைந்துள்ளார் கே. ஏ. கிருஷ்ணசாமி. தலித் மக்களின் கணிசமான வாக்கு வங்கி இவரிடம் உள்ளது. திருமாவளவன், கே. ஏ. கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் தலித் மக்களின் பெரு நம்பிக்கைக்குரிய தலைவர்களாவர். கிருஷ்ணசாமி ஜெயலலிதாவுடன் ஐக்கியமானதால் திருமாவளவனை கைக்குள் வைத்துக் கொண்டு தலித் வாக்குகளை கவர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
காங்கிரஸ் கட்சியையும், விஜயகாந்தையும் எதிர்பார்க்கும் ஜெயலலிதா, சிறிய கட்சிகளை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். யாருடன் கூட்டணி சேர்வதென்று தெரியாது தனித்திருக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் ஜெயலலிதா சாதக சமிக்ஞை காட்டியுள்ளார். கூட்டணியின் பலமறிந்து வெல்லும் கூட்டணியில் சேர்வதற்காக முடிவை அறிவிக்காது காத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
தமிழக முதல்வர் கருணாநிதி தான் விரும்பிய அனைத்தையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்கிறார். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசிடமிருந்து எதனையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக இளங்கோவன் போன்ற தமிழகத் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கூறி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்துவது போன்று ராகுல் காந்தியும் காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்று அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் அல்லது சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது வெளிப்படையானது. திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையின் கீழ் தேர்தலில் போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்ற உண்மை காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக உள்ளனர். காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்தை ஜெயலலிதா நன்கு உணர்ந்துள்ளார். ஆகையினால் ஆட்சியில் பங்கு கொடுத்து காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தால் காங்கிரஸ் தலைவர்களின் முதல் தெரிவு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கும்.
ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதை சோனியா விரும்பமாட்டார். தமிழக ஆட்சியில் பங்கு கொடுக்க ஜெயலலிதா தயாராக இருக்கிறார் என்றால் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதியும் இறங்கி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க முதல்வர் கருணாநிதி ஒப்புதலளித்தால் ராகுல் காந்தியின் திட்டமும் இளங்கோவன் போன்றவர்களின் எதிர்பார்ப்பும் தவிடு பொடியாகி விடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் எழுந்த பூசலுக்கு முடிவு காணப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் போதிய பரிச்சயமின்மையினால் அழகிரி அமைச்சுப் பதவியைத் துறந்து விட்டு தமிழக அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக பரபரப்பாகச் செய்தி வெளியானது. நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் எழுதிப் பதிலளிக்கலாம் என்ற சபாநாயகரின் அனுமதியினால் உற்சாகமடைந்துள்ளார் அழகிரி. நாடாளுமன்றத்தில் நெருக்குதல் இன்றி கடமையாற்றலாம் என்ற நம்பிக்கையில் தமிழக சட்ட சபைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளார் அழகிரி.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு
25/07/10

1 comment:

Anonymous said...

ஆடிய ஆட்டங்களும்
வாங்கிய கோடிகளும்
கரைந்து வரும் நேரம்
நீதியைத் தள்ளி வைக்கலாம் நேர்மயைத் தள்ளிவைக்கலாம்
திமிரை என்ன செய்வது? நடிகரையே,தலைவரையேத் தள்ளிவைத்தத் திமிர்!
துதிபாடும் ஓநாய்கள்
புழல் பக்கம் வாராது !