Tuesday, March 22, 2011

குழம்பிய கூட்டணிகலங்கிய தொண்டர்கள்

தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்த தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை பலத்த இழுபறியின் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை ஒருவரை ஒருவர் மிரட்டலுடன் ஆரம்பமானது. இரண்டு கட்சித் தலைவர்களும் பத்திரிகைகளுக்கு முன்னால் சிரித்தபடி நிற்கிறார்களே தவிர இரு கட்சித் தலைவர்களின் மனதிலும் சந்தேõஷம் இல்லை. கட்சித் தலைவர்களே முட்டி மோதிக் கொண்டிருக்கையில் தேர்தலின் வெற்றிக்காகத் தொண்டர்கள் முழு மூச்சுடன் ஒற்றுமையாகச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சட்ட சபைத் தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 15 தொகுதிகள் அதிகமாகக் கிடைத்துள்ளது. தொகுதி மறுசீரமைப்புச் செய்யப்பட்டதால் சில தொகுதிகள் இல்லாமல் போய் விட்டன. சில தொகுதிகள் இரண்டு தொகுதிகளாகி விட்டன. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில் 33 தொகுதிகள் புதிய தொகுதிகள். புதிய தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலை உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. அந்த 63 தொகுதிகளிலும் தமது ஆதரவாளர்களை நிறுத்துவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முட்டி மோதுகிறார்கள். தமிழகக் காங்கிரஸ் கட்சியே ஒரு கூட்டணி போல் உள்ளது. வாசன் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, சிதம்பரம் ÷காஷ்டி, இளங்கோவன் ÷காஷ்டி என்று பல கோஷ்டிகள் உள்ளன. இத்தனை கோஷ்டி போதாதென்று இளைஞர் காங்கிரஸ் கோஷ்டி இப்போது உருவாகியுள்ளது. ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடன் இளைஞர் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இத்தனை காலமாகப் போராடியவர்களை முன்னிலைப்படுத்தாது இளைஞர் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது. மூத்த தலைவர்களுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இளங்கோவன், மணிசங்கர அய்யர் போன்ற பிரபலமானவர்களே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தனர். தொகுதியின் செல்வாக்குப் பெற்றவர்களே தோல்வியடைந்த நிலையில் மக்களின் அபிமானம் பெறாத இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் வெற்றி பெறுவார்களா என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.
சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையும் ராகுல் காந்தியின் மூலம் விடுக்கப்படலாம். அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகி மத்திய மத்திரியாகி விடுவார்கள் என்ற அச்சம் ஒரு சில காங்கிரஸ் தலைவர்களிடம் உள்ளது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியைத் தூக்கி எறிய வேண்டும். கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற பொதுக் கொள்கையுடன் ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த், இடதுசாரித் தலைவர்கள் ஆகியோர் செயற்படுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறும் போது நாமும் சேர்ந்து ஏற வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸுக்கு உள்ளது. அதன் காரணமாகத்தான் ஆட்சியில் பங்கு அதிக தொகுதிகள் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இளங்கோவன் போன்றவர்களினால் வைக்கப்பட்டுள்ளது. தொகுதி ஒதுக்குவதில் முக்கிய பங்கு வகித்த தங்கபாலு மீது பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதிக தொகுதிகள் கிடைத்தும் திருப்தி இல்லாத நிலையே காங்கிரஸ் கட்சிக்குள் உள்ளது.
மக்களுடனும் கடவுளுடனும் கூட்டணி என்று மேடைதோறும் முழங்கிய விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததாகக் கூறியுள்ளார். உண்மையிலேயே அவர் கூட்டணி சேர்ந்தது கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதற்காக அல்ல. தனது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. இரட்டை இலையின் நிழலில் ஒதுங்கியுள்ளார் விஜயகாந்த். ஆறு சதவீத வாக்கும் இரண்டு சட்ட சபை உறுப்பினர்களும் இருந்தால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். விஜயகாந்த் மட்டும்தான் சட்ட சபை உறுப்பினராக உள்ளார். தனித்துப் போட்டியிட்டால் மீண்டும் விஜயகாந்த் மட்டும்தான் வெற்றி பெறுவார். 10 சதவீத வாக்கு உள்ள விஜயகாந்தின் கட்சிக்கு இன்னொரு சட்ட சபை உறுப்பினர் வெற்றி பெற வேண்டுமானால் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதைக் காலம் கடந்து உணர்ந்துள்ளார் விஜயகாந்த்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற கோஷத்துடன் அரசியலில் குதிக்கும் விஜகாந்துக்கு அரசியல் என்றால் என்னவென்று அனுபவப்பட்ட பின்னர்தான் புரிந்தது. கூட்டணி இல்லாது தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளார் விஜயகாந்த். விஜயகாந்துக்கு 41 தொகுதிகளை அள்ளி வழங்கியுள்ளார் ஜெயலலிதா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்ட சபைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுத்தவர் விஜயகாந்த். கூட்டணிக் கட்சியின் ஆதரவு இன்றி விஜயகாந்தால் வெற்றி பெற முடியாது. கூட்டணிப் பலத்தில் எத்தனை தொகுதிகளில் விஜயகாந்த்தின் கட்சி வெற்றி பெறுகிறது என்பதில்தான் விஜயகாந்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி இளைப்பாறிய சரத்குமாரின் கட்சிக்கு ஜெயலலிதா இரண்டு தொகுதிகள் ஒதுக்கியுள்ளார். இது சரத்குமாருக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரமல்ல. சரத்குமாரின் சமூகத்துக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம். தனித்து நின்று தேர்தலில் போட்டியிட முடியாது என்பதை விஜயகாந்த்தைப் போல் காலம் தாழ்த்தி அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளார் சரத்குமார். கடைசி நேரத்தில் கூட்டணியில் சரத்குமாருக்கு இடம் கிடைத்தது. கார்த்திக்கின் நிலை பரிதாபகரமாக உள்ளது. தமிழகத்தின் செல்வாக்குமிக்க சமூகத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். தமிழகத்தின் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக்குக்கு ஜெயலலிதா ஒரு தொகுதியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் ஜெயலலிதா கைவிட்டதனால் என்ன செய்வதென்று தெரியாது தடுமாறுகிறார் கார்த்திக். காங்கிரஸும் விஜயகாந்தும் தம்மை வளர்ப்பதற்காகவே கூட்டணி சேர்ந்துள்ளனர். கருணாநிதியும், ஜெயலலிதாவும் இதனைத் தெளிவாகப் புரிந்துள்ளனர்.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு20/03/11

No comments: