Wednesday, February 1, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள்21

வெளிநாட்டில் படித்து அந்நிய கலாசாரத்திற்கு அடிமையான இளைஞன் ஒருவர் தமிழ்க்கலை, கலாசாரம், இந்துமதம் என்பவற்றைக் கிண்டலடிக்கிறான். மனைவியை மறந்து விபசாரி வீடே கதியென்று கிடக்கும் இளைஞன் இறுதியில் குஷ்டரோராகியாகிறான். பால்வினை நோயான‌ எயிட்ஸ் பற்றி அதிகம் அறிந்திடாத காலத்தில் வெளியான இப்படத்தின் மூலம் விபசாரியிடம் சென்றால் வாழ்க்கை சீரழியும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
வெளிநாட்டில் படித்துவிட்டு நாடு திரும்பும் எம்.ஆர்.ராதா வெளிநாட்டு கலை கலாசாரத்தைத் தனது கிராமத்திலும் புகுத்துவதற்கு விரும்புகிறார். விபசாரியின் வீடேட கதியென்று எம்.ஆர்.ராதா கிடப்பதனால் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்கின்றனர். திருமணம் முடிந்தால் விபசாரியிடம் எம்.ஆர்.ராதா @பாகமாட்டார் என்று பெற்றோர் நம்பினர். திருமணத்தின் பின்னர் விபசாரியிடம் போவதை எம்.ஆர்.ராதா நிறுத்தவில்லை. விபசாரி எம்.என்.ராஜத்தின் வீடே கதியென்று கிடக்கிறார் எம்.ஆர்.ராதா. எம்.ஆர்.ராதாவுக்கு குஷ்டரோகம் வருகிறது. அவரது அவலட்ச‌ணமான உருவத்தை ச‌கிக்க முடியாத எம்.என்.ராஜம் அவரை விரட்டி விடுகிறார். நல்ல உணவை தூக்கி எறிந்த எம்.ஆர்.ராதா சாப்பிடுவதற்கேக வழியின்றி பிச்சை எடுக்கிறார். அவருடைய அவலட்ச‌ணமான உருவத்தை பார்த்த சிலர் அருவருப்புடன் பிச்சை கொடுக்காது விலகி செல்கின்றனர்.
நண்பனான எஸ்.எஸ்.ஆரிடம் பிச்சைகேட்கிறார். எஸ்.எஸ்.ஆரினால் கூட எம்.ஆர்.ராதாவை அடையாளம் காண முடியவில்லை. கண் பார்வை இழந்த எம்.ஆர்.ராதாவால் உலகத்தை பார்க்க முடியவில்லை. சாப்பாட்டுக்கே வழியின்றி அலையும்போது இளமை பருவத்தில் செய்த செயல்கள் ஞாபகத்தில் வருகின்றன. தன் மீது உயிரை வைத்திருந்த மனைவி ஸ்ரீரஞ்ச‌னி மீதும் நண்பன் எஸ்.எஸ்.ஆரின் மீதும் வீண் பழி சுமத்தியதை நினைத்து வருத்தப்படுகிறார். சாப்பாட்டுக்கு மூன்று மைல் தூரம் போக வேண்டும் என்று ஒருவர் கூற தாயின் பிரேதத்துடன் மூன்று மைல் தூரம் உள்ள சுடலைக்கு நடந்து போக வேண்டுமா என்று கேட்ட ஞாபகம் வந்து எம்.ஆர்.ராதாவை வாட்டியது.
எஸ்.எஸ்.ஆரும் ஸ்ரீரஞ்ச‌னியும் எம்.ஆர்.ராதாவை அடையாளம் காண்கின்றனர். எஸ்.எஸ்.ஆரையும், ஸ்ரீரஞ்ச‌னியையும் இணைத்து தப்பாக நினைத்த எம்.ஆர்.ராதா. தன் மனைவியை காப்பாற்றும்படி எஸ்.எஸ்.ஆரின் கையில் ஒப்படைக்கிறார்.


ரத்தக்கண்ணீர் படத்தின் வச‌னங்கள் அனைத்தும் இந்துமத கொள்கையை நக்கலடிப்பவையாகவே உள்ளன. 3000 தடவைமேடைஏறிய ரத்தக்கண்ணீர் என்ற நாடகம் திரைப்படமான போதும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது. பாடல்கள் திரைப்படங்களை ஆக்கிரமித்திருந்த வேவளையில் வெளியான இப்படத்தின் வச‌னங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்தன. எம்.ஆர்.ராதா வச‌னங்கள் இன்றும் மனதில் நிழலாடுகின்றன.மாமனாரைப் பார்த்து மிஸ்டர் பில்லை என்பார். நெற்றியில் இருக்கும் விபூதியைசுட்டிக் காட்டி என்ன மான் இது கோடு கோடா இருக்கு என்று எம்.ஆர்.ராதா கேட்க. இது பட்டை விபூதி என்கிறார் மாமன், வாட் பாட்டை என்று திரும்ப கேட்பார். எல்லா க‌ட்சிலையும் பிஸினஸ்ல பூத்துட்டான் பெக்கர்ஸ் என்ற அரசியல் கட்சி அனைத்தும் வியாபார நோக்கத்தில் அமைந்தவை என்ற வச‌னம் இன்றைக்கு சாலப் பொருந்துகிறது.
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது என்ற சி.எஸ்.ஜெயராமனின் பாடலும், எம்.ஆர்.ராதாவின் இடைக்குரலும் காலத்தால் அழியாதவை. நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்தில் ஜொலித்த எம்.ஆர்.ராதா ரத்தக்கண்ணீர் படத்தின் மூலம் மிகச் சிற்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோன்று வித்தியாச‌மான பாத்திரங்கள் கிடைத்திருந்தால் அவரது நடிப்பு இன்னமும் ஒருபடி கூடுதலாக புகழ் பெற்றிருக்கும்.


பாடல்களில் தமிழ் சினிமா உலகம் கட்டுண்டிருந்த வேளையில் வச‌னத்தின் மூலம் மக்களின் பேரபிமானத்தை பெற்ற படம் ரத்தக்கண்ணீர். நடிப்பாலும் பேச்சாலும் கவர்ந்தவர் எம்.ஆர்.ராதா. அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களைச் சுண்டி இழுத்தார் எம்.என்.ராஜம்.
1954 ஆம் ஆண்டு இப்படத்தைத் தயாரித்தது பெருமாள் முதலியாரின் நஷனல் பிக்ஸர்ஸ். கதை வச‌னம் கே.தங்கராசு. இசை சிதம்பரம் எஸ்.ஜெயராமன். பாடல்கள் அ.மருதகாசி, ஆத்மநாதன். எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர், ச‌ந்திரபாபு, துரைசாமி, ஸ்ரீரஞ்ச‌னி, எம்.என்.ராஜம், எஸ்.ஆர்.ஜானகி, அங்கமுத்து ஆகியோர் நடித்தனர். எம்.எல்.வச‌ந்தகுமாரி பாடிய கதவைச்சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச்சாத்தடி என்ற பாடல் விபசாரியின் மனநிலையை நன்கு விளக்குகிறது. ரி.பி.ரத்தினம் பாடிய ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆட்டத்தைப் பார்த்திடாது ஆளை ஆளைப் பார்க்கிறார் என்ற பாடல் விபசாரியைத் தேடிச் செல்பவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

ரமணி


மித்திரன்

No comments: