Tuesday, February 14, 2012

இது ஒரு அரண்மனைக் காதல்

பிரிட்டனின் இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமீலா பாக்கர் பவுல்ஸை மணமுடிக்கப் போவதான செய்தி பிரிட்டிஷ் மக்களிடையே பெருத்த உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இளவரசர் திருமணம் முடிக்கலாம் என்று ஒரு சாராரும், விவாகரத்துச் செய்தவரை சார்ள்ஸ் மணக்கக் கூடாது என்று ஒரு சாராரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இளவரசர் சார்ள்ஸின் திருமண அறிவிப்பினால் இங்கிலாந்தின் தேவாயலங்கள் கூட திருமணத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக் கூறியுள்ளன. சார்ள்ஸின் இரண்டாவது திருமணம் இங்கிலாந்துத் தேவாலயங்களை இரண்டாக்கியுள்ளது.
டயானாவைத் திருமணம் செய்வதற்கு முன்னரே சார்ள்ஸ் கமீலா மீது காதல் கொண்டார். சார்ள்ஸ் டயானா திருமணத்துக்கு கமீலா பூரண ஆதரவு தெரிவித்தார். டயானாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே கமீலா மீதான காதலை தனது இதயத்தில் ஒரு மூலையில் சார்ள்ஸ் வைத்திருந்தார்.
சார்ள்ஸ் டயானா இருவருக்கும் இடையிலான திருமண வாழ்வு பற்றி உலகின் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. 1984 ஆம் ஆண்டு ஹரி பிறந்த பின்னர் அவர்களின் திருமண வாழ்வில் பெரும் விரிசல் ஏற்பட்டது. பின்னர் அது விவாகரத்தில் முடிந்தது.
இளவரசி டயானா எயிட்ஸ் நோயாளர்கள் மீது மிகுந்த கருணை காட்டினார். கண்ணிவெடியில் சிக்கியவர்கள் மீது மிகுந்த அனுதாபம் காட்டினார். எயிட்ஸ், கண்ணிவெடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக இளவரசி டயானா பல நல்ல திட்டங்களை முன்னெடுத்தார்.
இளவரசர் சார்ள்ஸ் விவாகரத்துச் செய்த பின்னர் எகிப்தின் கோடீஸ்வரர் அல்பாய்ட் டொடியை காதலித்தார் டயானா. பிரிட்டிஷ் அரண்மனை டயானாவின் காதலுக்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்தது. டயானாவை மோப்பம் பிடிக்கும் பத்திரிகைகள் டயானா டொடி ஆகியோர் அரைகுறை ஆடையுடன நிற்கும் படங்களை வெளியிட்டு பிரிட்டிஷ் அரண்மனையை மேலும் நெருக்குதலுக்குள்ளாக்கின.

பாரிஸில் இளவரசி தன் காதலருடன் நிற்பதை அறிந்த பத்திரிகைப் படப்பிடிப்பாளர்கள் அவர் தங்கியிருந்த ஹோட்டலை முற்றுகையிட்டனர். புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு போக்குக் காட்டிய டயானாவும் டொடியும் வேறு பாதையால் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறினர். அதனை அறிந்த புகைப்படப்பிடிப்பாளர்கள் அவர்கள் சென்ற காரை விரட்டிச் சென்றனர்.
மிக வேகமாகச் சென்ற கார் சுரங்கப் பாதையில் இருந்ததூணுடன் மோதியதில் டயானா, டொடி, சாரதி ஆகிய மூவரும் மரணமாகினர்.
டயானா கொல்லப்பட்ட விபத்து உண்மையில் விபத்து அல்ல திட்டமிட்ட செயல் என டொடியின் தந்தை தெரிவித்தார். டயானா இறக்கும் போது கர்ப்பிணியாக இருந்தார். முன்னால் வந்த கார் தான் விபத்தை ஏற்படுத்தியது என்று பல மர்ம முடிச்சுகள் டயானாவின் மரணத்தின் பின்னணியில் இருக்கின்றன. அந்த முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கப்படவில்லை. இந்த மர்மங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
டயானா மரணமான பின்னர் கமீலாவை சார்ள்ஸ் மணமுடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. டயானா கார் விபத்தில் கொல்லப்பட்டு எட்டு வருடங்கள் கடந்த பின்னர் சார்ள்ஸின் மறுமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சார்ள்ஸ், கமீலா இருவரும் விவாகரத்துப் பெற்றவர்கள். விவாகரத்துப் பெற்றவர்கள் மறுமணம் செய்வதற்கு கடுமையான விதிமுறைகளை இங்கிலாந்துத் திருச்சபை வகுத்துள்ளது. இளவரசி டயானா மரணமானதால் சார்ள்ஸ் திருமணம் செய்வதற்குத் தடை இருக்காது. கமீலாவின் முன்னாள் கணவர் பார்க்கர் பவுள்ஸ் உயிரோடு இருப்பதால் கமீலா திருமணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இளவரசர் சார்ள்ஸை த் திருமணம் செய்த பின்னர் கமீலாவுக்கு இளவரசிப் பட்டம் வழங்கப்படமாட்டாது. எலிஸபெத் மகாராணிக்குப் பின்னர் சார்ள்ஸ் மன்னராவார். அப்போதும் கமீலாவுக்கு மகாராணிப் பட்டம் வழங்கப்பட மாட்டாது.கான்வெல் கோ மகள் என்ற பட்டம் மட்டுமே கமீலாவுக்கு வழங்கப்படும்

சார்ள்ஸ் மூலம் கமீலாவுக்கு குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு அரசுரிமை கிடையாது. சார்ள்ஸு_க்குப் பின்னர் வில்லியம் இளவரசராகப் பட்டம் சூட்டப்படுவார். அரச விதிமுறைகளுக்கு மாறாக சார்ள்ஸ் திருமணம் முடிக்கப்போவதால் அவரது மகன் வில்லியத்துக்கு முடி சூட வேண்டும் என்று பிரிட்டனில் உள்ள சிலர் கூறுகின்றனர்.
சார்ள்ஸ், கமீலா திருமண அறிவிப்பு வெளியான பின்னர் சில திருச்சபைகள் கருத்து எதனையும் கூறவில்லை. ஆனால் ஒரு சில பிரிவுகள் இந்தத் திருமணத்துக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்து நாட்டின் மன்னன் பதவி வழியாக அந்த நாட்டில் உள்ள தேவாலயங்கள் அனைத்துக்கும் தலைவராகிவிடுவார். அப்படிப்பட்ட ஒருவர் மறுமணம் செய்யக்கூடாது என்பது ஒரு சிலரின் கருத்து. தேவாலயங்களின் முடிவெடுக்கும் உயர்மட்ட சினோட் கறுப்பினர்களில் அதிகமானோர் விவாகரத்துப் பெற்று மறுமணம் செய்த ஒருவர் தலைவராக வரக்கூடாது என்று அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
கமீலாவின் பாட்டியுடைய அம்மா அலிஸ் கைப்பல். இவர் சார்ள்ஸுடைய சின்னத்தாத்தாவின் அப்பாவான ஏழாம் எட்வேட்டின் மிக நெருங்கி நண்பர். மன்னர் எட்வேட்டை ராணி அலெக்சாண்டியா கவனிப்பதை விட நண்பனான அலிஸ் மிக நன்றாகக் கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை ஒன்று அரண்மனையில் நிலவியது.
கமீலாவின் கொள்ளுப்பாட்டியான அலிஸ் கெப்பனுக்கும் சார்ள்ஸின் கொள்ளுத் தாத்தாவான 7வது எட்வேட் மன்னருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக அந்தக் காலத்து பத்திரிகைகள் கிசுகிசுத்தன. அன்று ஆரம்பமான நெருக்கம் இன்றும் தொடர்கிறது போல் தெரிகிறது.
சிம்பாவேயின் சுதந்திர தினத்தன்று 1980ஆம் ஆண்டு சார்ள்ஸின் அதிகாரபூர்வ பாதுகாவலர் பொறுப்பை கமீலா ஏற்றார்.

சார்ள்ஸ் - கமீலா இருவரும் மிகவும் நெருங்கிப் பழகினாலும் அவர்களிடையேயான காதல் உடனடியாக ஆரம்பிக்கவில்லை.
உலகமே அதிசயித்து மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையில் மிகவும் ஆடம்பரமான முறையில் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது. டயானாவின் மீது பிரிட்டிஷ் மக்கள் அளவற்ற பாசம் வைத்தனர். இளவரசி டயானாவின் அழகு உலக மக்களைக் கவர்ந்தது.
சார்ள்ஸ் - டயானா இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்ட போது இருவரும் இணைந்து வாழவேண்டும் என்றே உலகில் உள்ள அனைவரும் விரும்பினார்கள். இளவரசியான டயானா மீது பிரியமுள்ளவர்கள் டயானாவுக்காக இரங்கினார்கள். பிரச்சினை விஸ்வரூபமாகி விவாகரத்தில் போய் நின்றது.
சார்ள்ஸ் விவாகரத்துச் செய்த டயானா, எகிப்திய கோடீஸ்வரரைக் காதலித்ததை பிரிட்டிஸ் மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. டயானா டொடி திருமணம் நடைபெறக் கூடாது என்றே பிரிட்டிஷ் மக்களில் பலர் விரும்பினார்கள். கார் விபத்தில் டயானா மரணமானதும் டயானா மீதான அனுதாபம் மேலும் அதிகமாகியது.
உலகில் உள்ள புகைப்படப் பிடிப்பாளர்களால் மிக அதிக தடவை படம் பிடிக்கப்பட்டவர் என்ற பெருமை டயானாவுக்கு உண்டு. புகைப்படப் பிடிப்பாளர்களின் வேட்டையே டயானாவின் மரணத்துக்குக் காரணம். டயானா மரணமானதும் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி விழுந்து விட்டது என்றே பிரிட்டிஷ் மக்கள் நம்பினார்கள். சார்ள்ஸின் திருமண அறிவிப்பு பிரிட்டிஷ் மக்களிடையே புதிய உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சார்ள்ஸுக்கு டயானா மூலம் வில்லியம், ஹரி என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கமீலாவுக்கும் இராணுவ அதிகாரி அன்ட்ரூ பாக்கர் பவுஸிக்கும் டாம், லாரா என்ற இருவர் உள்ளனர்.
சார்ள்ஸின் இரண்டாவது திருமண அறிவிப்பு இங்கிலாந்தில் புதிய பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது. தேவாலயங்களில் உள்ள சில பிரிவுகள் சார்ள்ஸின் மறுமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் காதலியைக் கரம்பற்றுவதா? அரியணைக்கு அரசனாக இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டும் என்று பல தேவாலயங்கள் சார்ள்ஸுக்கு நிர்ப்பந்தம் கொடுத்துள்ளன.
சினோட் அமைப்பின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் போது சார்ள்ஸின் மறுமண அறிவிப்பு அங்கே விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு விவாதிக்கப்படும் பட்டியலில் இந்தப் பிரச்சினை இடம்பெறவில்லை என்றாலும் இப்பிரச்சினை அங்கு முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த உறுப்பினர்கள் மூவர் இந்த விவாகரத்தைக் கிளறுவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து அவர்கள் கான்டர் பெற்றி பேராயர் ரோவன் வில்லியம்ஸின் கவனத்துக்கு கொண்டுவர உள்ளனர்.
சார்ள்ஸின் திருமண அறிவிப்பு வெளியான உடனே தேவாலயங்கள் பல அதற்கு ஆதரவு தெரிவித்தன. நாள் செல்லச்செல்ல எதிர்ப்புகள் வலுவடைந்ததால் சில தேவாலயங்கள் மௌனம் காக்கின்றன. சில தேவாலயங்கள் வெளிப்படையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
சார்ள்ஸ் கமீலா மறுமணம் தொடர்பாக பிரிட்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளன. சார்ள்ஸின் மறுமணத்துக்கு ஆதரவாகவும் அதற்கு எதிராகவும் பிரிட்டிஷ் மக்கள் கருத்து தெரிவித்தனர்.
டெய்லி மெயில் நடத்திய கருத்துக்கணிப்பில் 58 சதவீதத்தினர் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 27 சதவீதத்தினர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 14 சதவீதமானோர் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.டெய்லி மெயில் தொலைபேசி மூலமாகவே இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது.
த டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்புத் திருமணத்துக்கு ஆதரவாக 43 சதவீதத்தனரும் எதிராக 22 சதவீதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 30 சதவீதமானவர்கள் இதில் தமக்கு அக்கறை இல்லை எனத் தெரிவித்தனர்.



த டெய்லி எக்ஸ்பிரஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் 64 சதவீதத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். த சன் நடத்திய கருத்துக் கணிப்பில் 73 சதவீதத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். த டெய்லி மிரர்நடத்திய கருத்துக் கணிப்பில் 90 சதவீதமானவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு சார்ள்ஸ் மன்னராகக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
சார்ள்ஸ், டயானா திருமணத்தின் போது இங்கிலாந்தில் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போன்று சார்ள்ஸ், கமீலா மறுமணத்துக்கு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இது தொடர்பாக கேட்ஸ் ஹெட் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் விடுமுறை வழங்கப்பட மாட்டாதென இங்கிலாந்தின் பிரதமர் டொனி பிளேயர் அறிவித்துள்ளார்.
சார்ள்ஸ் திருமண அறிவிப்பு வெளியான பின்னர் பேட்டியளித்த கமீலா தன்னைத் திருமணம் செய்யும்படி இளவரசர் மண்டியிட்டுக் கேட்டதாகத் தெரிவித்தார். இது இளவரசரின் முறை தவறிய காதலை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது.
சார்ள்ஸ் மறுமணம் சம்பந்தமாக பிரிட்டிஸின் ஆதரவும், எதிர்ப்பும் தோன்றியுள்ள நிலையில் இளவரசனின் மகன் ஹரிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் மகள் ஜென்னாவுக்கும் திருமணம் நடைபெறப் போவதாகச் செய்திகள் கசிந்துள்ளன.
பட்டத்து இளவரசு வில்லியம் திருமணத்தில் அக்கறை செலுத்தவில்லை. அவர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அதனால் தான் திருமணத்தில் ஆர்வமில்லை என்று பத்திரிகைகள் எழுதி வருகின்றன. இளையவரான ஹரி அண்மையில் நாஜி உடுப்பில் விருந்துக்குச் சென்றதால் பத்திரிகைகள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தன.
அரண்மனையும், திருமணமும், கிசுகிசுவும் ஒன்றையொன்று விட்டு பிரியாதவை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.



1970 வின்ஸ்டன் போலோ போட்டியின் போது கமீலாவை இளவரசர் சந்தித்தார்.
1973இல் இராணுவ அதிகாரி ஆன்ட்ரூ பார்க்கர் பவுல்சை கமீலா மணந்தார். 1995இல் இவர்களது மணம் முறிந்தது. 1981இல் டயானாவை சார்ள்ஸ் மணந்தார்.
1992இல் சார்ள்ஸும், கமீலாவும் பேசிக்கொண்ட டெலிபோன் உரையாடல் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை வெளிக்காட்டியது. ஐ லவ் யூ என்று சார்ள்ஸ் கமீலாவிடம் சொல்லியிருந்திருக்கிறார்.
1995இல் கமீலா ஆன்ட்ரூவிடம் விவாகரத்துப் பெற்ற பின்னர் சார்ள்ஸ_டன் நெருங்க ஆரம்பித்தார்.
1996 ஓகஸ்டில் சார்ள்ஸ் இளவரசி டயானாவை விவாகரத்துச் செய்தார். 1997இல் இல் டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தார்.
1998இல் முதன் முறையாக இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியை கமீலா சந்தித்தார்.
1999இல் சார்ள்ஸ் 50 ஆவது பிறந்த நாளில் கமீலாவுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டார். அது வரை எந்த நிகழ்ச்சிக்கும் தனித்தனியே வந்து செல்வார்கள்.
1999 கமீலா மற்றும் இளவரசர்கள் சார்ள்ஸ், வில்லியம் மற்றும் ஹரியுடன் கிhPன் ஐலண்டில் விடுமுறைக்குச் சென்றனர்.
2000 ராணி எலிசபெத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு கமீலாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருவரும் அங்கு சந்தித்தனர். இதுதான் கமீலாவுடனான சார்ள்ஸ் நட்பை ராணி ஏற்றுக் கொண்டதன் அடையாளம் என்று கருதப்பட்டது.
2004இல் சார்ள்ஸின் அலுவலகத்தில் அடிக்கடி காணப்பட்டார்.
2005 இருவரும் மண முடிக்க ராணி எலிசபெத் சம்மதம் தெரிவித்தார்.
ரமணி
மெட்ரோநியூஸ் 18/02/2005

2 comments:

மதுரை சரவணன் said...

nalla thokuppu vaalththukkal

வர்மா said...

தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி
அன்புடன்
வர்மா