Saturday, January 23, 2016

பாதுகாப்பான தொகுதியை தேடும் தலைவர்கள்

தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.தேர்தல் திணைக்களம் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவது போன்ற வேலைகளை துரிதகதியில் நடைபெறுகின்றன.   தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை பிரதான கட்சிகள் ஆரம்பித்துவிட்டன.  மெகா கூட்டணிக்கனவில் இருக்கும் கட்சிகள் இன்னமும் கூட்டணி சேரவில்லை. தலைவர்களின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் காத்திருக்கின்றனர். உறுதியான முடிவை எடுக்க தலைவர்கள் தயக்கம் காட்டிவருகின்றனர்.
விஜயகாந்தை  கூட்டணியில் சேர்த்தால் இலகுவாக வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் அவருடன் கூட்டணி சேர பாரதீய ஜனதாக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் நலகூட்டணி என்பன காத்திருந்தன. விஜயகாந்த்தின் பிடிகொடாத அரசியலினால் வெறுப்படைந்த கட்சிகள் அவரை கைவிடத்தயாராகிவிட்டன. தன்னை முதல்வராக அறிவிக்க வேண்டும் என பாரதீய ஜனதாவுடன் பேரம் பேசினார். துணைமுதல்வர் பதவியுடன் பலம் வாய்ந்த அமைச்சர்கள்   அதிக தொகுதிகள் வேண்டும்  என திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கோரிக்கை விடுத்தர். மக்கள் நலக் கூட்டணி  வெற்றிபெறாது எனத்தெரிந்துகொண்டு மற்றைய கட்சிகளுடன் பேரம் பேசுவதற்காகஅதனுடன்  பேச்சு வார்த்தை நடத்தினார்.
பாரதீய ஜனதாக் கட்சி விஜயகாந்தை கைகழுவி விட்டது. மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்கலாம் என . வைகோ கூறினார். விஜயகாந்த் வரமாட்டார் எனத்தெரிந்ததும் நல்லகண்ணுவா வைகோவா முதல்வர் வேட்பாளர் என்ற கருத்து உருவானது. தேர்தலுக்கு பின்னரே முதல்வரை அறிவிக்கலாம் என வைகோ கூறியதால் அந்தப் பிரச்சினை  அடங்க்கிவிட்டது
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணைந்தால் வெற்றிபெறலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. எதற்கும்கிறங்காத விஜயகாந்த் வழமைபோல கூட்டணி பற்றி வாய்திறக்கவில்லை. அவரின் மனைவி பிரேமலதா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வசைபாடுவதிலே  கண்ணும் கருத்துமாக இருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரின் அரசியல் சாணக்கியம் அனுபவம் ஆகியவற்றை கருத்தில் எடுக்காது அவர்களை தரக்குறைவாக விமர்சித்து கைதட்டல் வாங்குவதில் குறியாக உள்ளார். விஜயகாந்த், பிரேமலதா ஆகிய இருவரின் அரசியல் பாதையை திராவிட முன்னேற்றக் கழகத்  தலைவர்களும் தொண்டர்களும் விரும்பவில்லை.  
தமிழக சட்ட சபைக்கான தேர்தல் மிக நெருக்கத்தில் உள்ளது. கூட்டணி  பற்றிய அறிவிப்பை தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்த ஜெயலலிதா இறங்கிவந்து  கூட்டணிக் கதவைத் திறந்து வைத்துள்ளார்.  பாரதீய ஜனதாவைத் தவிர பெரிய கட்சிகள் எவையும் ஜெயலலிதாவுடன் சேரத்தயராக இல்லை. பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது என்பதனால் அக்கட்சியை இணைப்பதற்கு ஜெயலலிதா தயங்குகிறார். இப்போதைக்கு திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக்கட்சி, மக்கள் நலக் கூட்டணி ஆகியனவே களத்தில் உள்ளன. நானும் உள்ளேன்   அய்யா என ராமதாஸ் சத்தமாகக் கூறுகிறார். யாரும் கணக்கில் எடுப்பதாகத்தெரியவில்லை.
 விஜயகாந்த் சேருவதற்கு தகுதியான ஒரே ஒரு இடமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகமும் கதவைச்சாத்தத்  தயாராகி விட்டது.விஜயகாந்தை வருந்தி அழைத்த கருணாநிதி அவர் வந்தால் வரட்டும் என தெரிவித்து விட்டார். கருணாநிதி அழைத்தபோது சென்றிருந்தால் கணிசமான தொகுதிகளைப் பெற்றிருக்கலாம். விஜயகாந்த் தானாகப் போனால் கொடுப்பதை வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்ததனால் விஜயகாந்தின்  வாக்கு வங்கி அதிகரித்தது.  அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அவரது வாக்கு வங்கிபடுத்துவிட்டது. இந்த உண்மையை உணராது தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக விஜயகாந்த் நம்புகிறார்.


விஜயகாந்தை   தூக்கிப்பிடிப்பதனால் அவர் அளவுக்கு மீறி பந்தாகாட்டுகிறார் என்ற எண்ணம்  எழுந்ததனால் அவரைக் கைவிட திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு எதிரான வாக்குகள் விஜயகாந்தை அரசியலில் மின்னச்செய்தன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிராக பாரதீய ஜனதா,மக்கள் நல கூட்டணி, நம் தமிழர்,பட்டாளி மக்கள் கட்சி ஆகியன இருப்பதனால் விஜயகாந்துக்குச்செல்லும் வாக்குகள் பிரிந்துவிடும்  நிலை உள்ளது. விஜயகாந்தை கண்டுகொள்ளாமல் விட்டார்ல் அவராக வருவர் அல்லது கவிழ்ந்து விடுவர் என திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.  இறுதி முடிவெடுக்க வேண்டிய கட்டத்துக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபைத்தேர்தலில் தொடர்ந்து ஒரே தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடவில்லை. முதலமைச்சர் தொகுதி என்ற பந்தாவுடன் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்   ஜெயலலிதா  அதன் பின்னர் தொகுதிப்பக்கமே எட்டிப்பார்ப்பதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு வேறு தொகுதியில் சங்கமமாகி விடுவர் ஜெயலலிதா.இது வரைகாலமும் சென்னைக்கு வெளியே போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில்விடுதளையான பின்னர் சென்னை ஆர்.கே  நகரில் போட்டியிட்டு வரலாறு காணாத  வெற்றி பெற்றார்.
சென்னையை   சீரழித்த மழை  வெள்ளம் ஜெயலலிதாவை யோசிக்க வைத்துள்ளது. சென்னைக்கு வெளியே போட்டியிடுவதுதன் புத்திசாலித்தனம் என அவர் நினைக்கிறார். தென் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவர் எனத்தெரிகிறது. சென்னை மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்ட மழை வெள்ளம் முதலமைச்சரையும் விட்டு வைக்கவில்லை.
சென்னையிலே முகாமிட்டு வெற்றிபெற்ற கருணாநிதி  2011 ஆண்டு சட்டசபைத்தேர்தலில் தனது ஊரான திருவரூரில் போட்டியிட்டார். சொந்த ஊர் கைவிடாது என்பதனால் மீண்டும் திருவாரூரில்  போட்டியிடுவர் என உடன் பிறப்புகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த தேர்தலின் போது இதுதான் கடைசித்தேர்தல்  என வாக்குக்கேட்டர். இம்முறை என்ன சொல்லப்போகிரரோ தெரியவில்லை.ஸ்டாலின் கடந்த ஐந்து மாதங்களாக நமக்கு நாமே என்ற கோஷத்துடன் வளம் வருகிறார். தமிழகம் முழுவதும்  செல்வதே இவரின் திட்டம். கடந்த தேர்தலில் கொளத்தூரில்  போட்டியிட்டார். தலைமை அனுமதித்தால் மீண்டும் கொளத்தூரில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
 2006 ஆம் ஆண்டு விருத்தாசலத்திலும்  2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியத்திலும் போட்டியிட்ட விஜயகாந்த் இம்முறை மீண்டும் ரிஷிவந்தியத்தில் போட்டியிடுவர் என கருதப்படுகிறது. ரிஷிவந்தியத்தில் அவரது ரசிகர்கள் அதிகமாக இருப்பதனால் வெற்றிபெறலாம் என நினைக்கிறார்.
 வைகோவின் செல்வாக்கு நலிவடைந்துள்ளது. இழந்த செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள வைகோ தேர்தலில் போட்டியிடுவர். வெற்றி வாய்ப்புள்ள  தொகுதியை அவரது விசுவாசிகள் தேடுகின்றனர். வைகோவை விழுத்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் களத்த்தில்   இறங்குவார்கள் அதனை அவர் எப்படி சமாளிப்பார் எனத்தெரியவில்லை.
 பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி  நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனால் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. விஷப்ரீரிட்சையில்  இறங்குவதற்கு அவர் தயாராகவில்லை.  மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர்    ஜி,ராமகிருஷ்ணன்,  இந்திய   கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர்   இராமுத்தரசன், விடுதலைச்சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சட்டசபைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை.
பலமான கூட்டணி இல்லாமையால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடத் தயங்கிகின்றனர். திராவிட முன்னேற்றக் கழக‌தத்தித் தவிர  வேறு கட்சிகள் எதனுடனும் காங்கிரஸ் கட்சி கூட்டுச்சேர  முடியாத நிலை உள்ளது. கடைசி நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் கூட்டணி சேர்ந்தால் தமிழக  காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது  வாரிசுகளும் போட்டியிடுவார்கள்.

கூட்டணி சேரும் தாற்பரியத்தை சகல கட்சித்தலைவர்களும் உணர்ந்துள்ளனர்.  தமிழக அரசைத்தெரிவு செய்யப்போவது  கட்சி சார்பற்ற நடுநிலை வாக்காளர்கள் என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்
வர்மா
தமிழ்த்தந்தி
24/01/16

2 comments:

கரிகாலன் said...

நல்லதொரு அலசல்

வர்மா said...

கரிகாலன்

தங்களுடைய கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
த‌ங்களின் ஆலோசனைகளை கருத்தில் எடுத்துள்ளேன்.
அன்புடன்
வர்மா