Sunday, May 1, 2016

வைகோ வெளிநடப்பு கூட்டணித்தலைவர்கள் அதிர்ச்சி

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும்  வீட்டுக்கு அனுப்புவதற்காக மூன்றாவது அணியை வெற்றிகரமாக உருவாக்கிய வைகோ, தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். வைகோவின் இந்த முடிவு மக்கள் நலக் கூட்டணித தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக‌மும்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌மும் இதனால்  மகிழ்ச்சியடைந்துள்ளன.தமிழக அரசியல் திராவிடக் கழகங்களைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது.  புதிய கட்சி ஆரம்பிப்பவர்களும் திராவிடம் என்ற பெயர் வருவதை விரும்புகிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கும் மாற்றீடாக  மூன்றாவது அணியை உருவாக்குவதில் வெற்றி பெற்ற வைகோவால் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் சவால் விடும் தலைவராக உருவாக முடியவில்லை. புதிய கூட்டணியை உருவாக்கிய அவரால் சக்தி மிக்க தலைவரை உருவாக்க முடியவில்லை. தேர்தலுக்கு  முன்னரே   வைகோ தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெறுவோம் ஆட்சியை அமைப்போம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்று பிரசாரம் செய்யும் தலைவர்கள் தமது கட்சி வெற்றி பெறும் தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளனர். தமது  கூட்டணி வெற்றி பெறும் என்று மேடையில்  உறுதியாக அடித்துக்கூறும தலைவர்கள் கூட்டணிக் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதியின் மீது கண்வைத்துள்ளனர். 

மக்கள் நலக் கூட்டணியின் இணைப்பாளரான வைகோ,கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.  கோவில்பட்டி கொம்யூனிஸ்ட் கட்சியின்  கோட்டை.   அங்கு தொடர்ச்சியாக ஏழு முறை கொம்யூனிஸ்ட் கட்சியின்  வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளனர்.கோவில்பட்டியை விட்டுக்கொடுக்க இடதுசாரிகள் விரும்பவில்லை. கூட்டணித் தலைவரின் வெற்றி முக்கியம் என்பதனால் வைகோவுக்காக கோவில்பட்டியை    விட்டுக்கொடுத்தனர். வைகோ போட்டியில் இருந்து விலகியதால் அவருடைய் கட்சியைச் சேர்ந்த இன்னொருவரின் வெற்றிக்காக  கொம்யூனிஸ்ட்கள்  களத்தில்   இறங்குவார்களா என்பது சந்தேகம்.

 தமிழகத்தின் எந்தத்  தொகுதியிலும் போட்டியிடும் துணிவு கட்சித் தலைவருக்கு இருக்க வேண்டும். எல்லாத் தலைவர்களும் தமது கட்சிக்குச் சாதகமான தொகுதியையே  தேர்ந்தெடுத்துள்ளனர். தனது  கூட்டணி தான் வெற்றி பெறும் என்று மேடைதோறும்  முழங்கும் வைகோ, இடதுசாரிகளின்  கோட்டையில் பாதுகாப்பாக போட்டியிட திட்டமிட்டார். தனது  கட்சியின் மூலம் தான் வெற்றி பெறும் ஒரு தொகுதியை அவரால் அடையாளம் காண முடியவில்லை. என்னை முன்னிலைப்படுத்தி சாதிச்சண்டையை உருவாக்க திராவிட முன்னேற்றக் கழக‌ம் முயற்சி செய்கிறது. அதனால்தான், தேர்தலில் போட்டியிடவில்லை என்று வைகோ  கூறியுள்ளார். வைகோவின் இந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோல்வி  நிச்சயம் எனத்தெரிந்ததனால் வைகோ போட்டியிடவில்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது.

கோவில்பட்டி தொகுதியில் தேவர் சமுதாய மக்கள் அதிகமாக உள்ளனர். தேவர் சமுதயத்தைச் சேர்ந்த ஒருவரை திராவிட முன்னேற்றக் கழக‌ம் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.  வைகோவின் சமுதாயத்தைச் சேர்ந்தவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. தேவர் சமுதாய வாக்குகள் அதிகளவில் திராவிட முன்னேற்றக் கழக‌ வேட்பாளருக்குப் போகும். வைகோவின் சமுதாய வாக்குகள் பிரிபடும் நிலை உள்ளது. வைகோவை வீழ்த்துவதற்காக  அவருடைய சமுதாயத்தவர்கள் வேட்பாளர்களாக  களமிறக்கப்படுவர்கள் அதனால் வாக்குகள் மேலும் சிதறும்நிலை உள்ளது. இவற்றை எல்லாம் துல்லியமாக கணக்குப்பார்த்து  தேர்தலில்  போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கியுள்ளார் வைகோ.
 வைகோவின் முடிவு மக்கள் நலக் கூட்டணிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கட்சித்தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் பின்னடித்தால் தொண்டர்களின் மனநிலை பாதிப்படையும். வைகோவின்  துணிச்சலில் கூட்டணிக்  கட்சித் தலைவர்கள் அதீத நம்பிக்கை  வைத்திருந்தனர்.  சோர்ந்திருந்த தலைவர்களை சுறுசுறுப்பாக்கிய வைகோவின் முடிவு அடிமட்டத் தொண்டர்களை துவளவைத்துள்ளது.

கோவில்பட்டியில்   வைகோ வேட்பு  மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தால் கறுப்பு கொடி காட்டப்போவதாக அகில இந்திய தேவர் இன கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.இதனால்   பஸ் நிலையம்  அருகே தேவர் சிலை பகுதியில் திரண்ட அந்த அமைப்பை சேர்ந்தவர்களை பொலிஸார் கைது செய்தனர்   .

வேட்புமனு தாக்கல் செய்வதற்காக  தொண்டர்களுடன் வைகோ ஊர்வலமாக அப்பகுதியை கடந்து சென்றார். அப்போது வைகோவை எதிர்த்துத அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போதுவைகோவுடன் வந்த தொண்டர்கள் அவர்கள் மீது கற்களை வீசினர். பொலிஸார் இருதரப்பினரையும் ஒழுங்குபடுத்தினர்.
    
மதியம் 12.30 மணிக்கு ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்ற வைகோ வாசல் அருகில் பிரசாரம் செய்தார். பின் வைகோ   மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ரமேஷ் சட்டத்துறை செயலர் தேவதாஸ் மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ரமேஷ்இந்திய கம்யூ. நிர்வாகி அழகு முத்துப்பாண்டியன்ஆகியோர் மட்டும் அலுவலகத்திற்குள் சென்றனர்.
அங்கு வைகோ ''மாற்று வேட்பாளர் விநாயகா ரமேஷ் வேட்பு மனு செய்வார். நான் ஏப் 27ல் மனு தாக்கல் செய்வேன்'' என்றார்.
 வேட்புமனு தாக்கல் செய்ய  ரமேஷிடம்    பணம் இருக்கவில்லை. இதனால் வைகோ பணம் செலுத்தினார். பிஇ ஆர்.டி.ஓ கண்ணபிரானிடம் விநாயகா ரமேஷ் மனு தாக்கல் செய்தார். வைகோவுடன் சென்றவர்கள் திகைத்தனர். என்ன செய்வதெனத் தெரியாது தடுமாறினர்.

 அலுவலகத்தை விட்டு வெளியே வந்த  வைகோ, திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாகத் தாக்கிப் பேசிவிட்டு சாதிக்கலவரத்தை திராவிட முன்னேற்றக் கழகம்  தூண்டுவதால் தேர்தலில்  போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தார். தோல்விப்பயத்திலேதான்  வைகோ தேர்தலில் போட்டியிடவில்லை என்று எதிரணிகள் குதூகலம் கொள்கின்றன. யாரும் எதிர்பார்க்காத வைகோவின் முடிவு அவருக்கு விசுவாசம்   உள்ள தொண்டர்களை அதிர்ச்சியடைய  வைத்துள்ளது.   
போராளி, புரட்சிக்காரர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வைகோ; ஸ்டெர்லைட், கொக்க கோலா போன்ற பிரம்மாண்ட பன்னாட்டு நிறுவனங்களை  எதிர்க்க தயங்காத வைகோ, ஏழு பேர் அடங்கிய ஒரு கும்பல் எழுப்பிய கூச்சலுக்கு அஞ்சி, தேர்தல் போட்டியில் இருந்தே விலகி விட்டார் என்பதை, தமிழகத்தில் யாராலும் நம்ப முடியவில்லை.
 தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கச்சென்றபோது நடந்தது   ஒரு சின்ன உரசல் தான். அதையும், தேவர் சமூகத்தை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக  வேட்பாளர் தனது சமூகத்தின் எண்ணிக்கையை பற்றி பேசியதையும், இணைத்து வைகோ, விஷயத்தை பெரிதாக்கிவிட்டாட்ர்.    திராவிட முன்னேற்றக் கழக  வேட்பாளர் பேசியதை அந்த கட்சியின் தலைமை கண்டிக்கவில்லை. அதனால்,  திராவிட முன்னேற்றக் கழகம்  சாதிக் கலவரத்தை துாண்ட முனைகிறது என்று வைகோ வைகோ கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதுவரை, கோவில்பட்டி பகுதியில், தேவர்களுக்கும், நாயுடுகளுக்கும் எந்த கலவரமும் ஏற்பட்டதில்லை  . அப்படி இருக்க, ஒரு சிலை சம்பவத்தை வைத்து கலவரத்தை ஏற்படுத்திவிட முடியுமா? ஒவ்வொரு ஊரிலும், பொருளாதார ரீதியாக ஒவ்வொரு சாதியும், ஒன்றை ஒன்று சார்ந்து தான் வாழ்கின்றன 
  வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், நடிகர் கருணாசின் புலிப்படை அமைப்பு மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என, பொலிஸ்  வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. கருணாஸ், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின்., சார்பில் திருவாடானை தொகுதியில் போட்டியிடுகிறார்.  வைகோவுக்கு எதிராக கலவரம் செய்தவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் ஆதரவாளர்கள். ஆனால், வைகோ திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் மீது பழி போடுகிறார். 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக்  கழகத்தின் இன்னொரு வடிவம் தான் மக்கள் நலக் கூட்டணி என்ற கருத்து பரவலாக உள்ளது. வைகோவின் நடவடிக்கை அதனை உறுதிப்படுத்துவது போல இருக்கிறது. அனல் கக்கும் வைகோவின் தேர்தல்  பிரசாரம்  ஸ்டாலினைக் குறிவைத்து நடத்தப்படுகிறது. ஸ்டாலினையும் கருணாநிதியையும்  மிக மோசமாகத் தாக்கிப் பேசும் வைகோ ஜெயலலிதாவுக்கு எதிராக எதனையும் பேசவில்லை.

வைகோவின் கட்சியைச்சேர்ந்தவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அதனை வைகோவின் வெற்றியாகக் கருத முடியாது.  தேர்தலுக்கு முன்னரே வைகோ தோல்வியடைந்துவிட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் பெண் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் தமிழக முதலமைச்ர் ஜெயலலிதா சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து பிரதான அரசியல் கட்சிகள் சார்பில் பெண் வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான  திராவிட முன்னேற்றக் கழக‌ த்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் சற்குணப்பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் நிறுத்தப்பட்டுள்ளார்.பட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட மகளிர் சங்கச் செயலாளர் பி.ஆக்னஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.

  மக்கள் நலக்   கூட்டணியில் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில் கல்வியாளரும் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்தி தேவி போட்டியிடுவார் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.இதுதவிர நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருநங்கையான சி.தேவியும் இங்கு களம் இறங்கியுள்ளார்

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் கல்வியாளர் வசந்தி தேவியை பொது வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அரசுக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய வசந்தி தேவி கடந்த 1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்இ திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அப்போது புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்த வசந்தி தேவி தமிழகத்திலேயே முதன் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள்களின் நகல்களை பெறும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

கல்விக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள வசந்திதேவியை ராதாகிருஷ்ணன் நகரில் பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  ஜெயலலிதாவை எதிர்த்து பெண்கள் போட்டியிடுவதால் பண்களின் வாக்கு சிதறும் நிலை உள்ளது.

ஜெயலலிதாவை எதிர்த்து திருமாவளவன் போட்டியிடுவார்  என்ற தகவல் பரவியது. கட்சித்தலைவரை எதிர்த்து இன்னொரு கட்சித் தலைவர்   போட்டிபோட்டதாக சரித்திரம் இல்லை முதலமைச்சர் கனவில் இருக்கும்  விஜயகாந்த் தனது அரசியல் எதிரிகள் போட்டியிடும் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். ஜெயலலிதா ,கருணாநிதி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் விஜயகந்தின் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.

உளுந்தூர்பேட்டை தொகுதியில்  விஜயகாந்த் போட்டியிடப்போவதை அறிந்த   திராவிட முன்னேற்றக் கழக‌ம் அங்கு தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. தோழமைக் கட்சியான மனித நேயகட்சிக்கு ஒதுக்கிய உளுந்தூர்பேட்டையை திரும்பப் பெற்று விஜயகாந்துக்கு  சவால் விடும் ஒருவரை அங்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளது. கட்சித் தலைவர்களும் பிரதான பேச்சாளர்களும் தமது பிரசாரத்தை முன்னெடுத்துவரும் நிலையில் அடுத்த முதலமைச்சர் என வர்ணிக்கப்படும் விஜயகாந்த் பேசாமடந்தையாக இருக்கிறார். வாயைத் திறந்தால் தப்புத் தப்பாக பேசுகிறார். வைகோவின் முடிவும் விஜயகாந்தின் மெளனமும் மக்கள் நலக் கூட்டணிக்கு பின்னடைவைத் தோற்றுவித்துள்ளன.
வர்மா.
 தமிழ்த்தந்தி
02/05,2016

No comments: