Saturday, June 11, 2016

குழம்பிக் கிடக்கும் மக்கள் நலக் கூட்டணி


தமிழக சட்ட மன்றத் தேர்தலில் படு  தோல்வியடைந்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் துவண்டு போயுள்ளனர்.  நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் வியஜகாந்த்தான் முதலமைச்சர் என்று முழங்கிய தலைவர்கள் தமது தேர்தல் தோல்வியை  பணபலத்தின் மீது சுமத்திவிட்டு பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டனர். திராவிட முன்னேற்றக் கழக‌மும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌மும் பணத்தைக்கொடுத்து தமது வெற்றியைப் பறித்துவிட்டதாக மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் தோல்வியின்  பின்னர் நிர்வாகிகளைச் சந்தித்த வைகோ வழமைபோல கருணாநிதியையும் ஸ்டாலினையும் வசைபாடி தனது தோல்வியை பூசி மெழுகிவிட்டர்.

தோல்விக்கான உணமையான காரணத்தை வைகோ தெரிவிக்கவில்லை. விஜயகாந்தின் வருகைக்குப் பின்னரே மக்கள் நலக் கூட்டணி தோல்விப்பாதையை நோக்கிச்சென்றதை அவரது நிர்வாகிகள் வெளிப்படுத்தவில்லை. இந்தத் தோல்வியால் நம் துவண்டுவிட மாட்டோம். அடுத்த தேர்தலில் வெற்றி  பெறுவோம் என  தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறுதல் கூறினார். மற்றைய தலைவர்களுடன் எதுவித கருத்துப் பரிமாற்றங்களையும் செய்யாது மக்கள் நலக்  கூட்டணி தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக்  கூட்டணி  தொடரும் என வைகோ கூறியதை ஏனைய தலைவர்கள் ரசிக்கவில்லை. அதனைஎதிர்த்து அல்லது ஆதரித்து எதுவித அறிக்கையையும் ஏனைய தலைவர்கள் வெளியிடவில்லை. மெளனமாக நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலக்  கூட்டணியில் இ ணைந்தால் வெற்றி பெறலாம் என கனவுகண்ட மக்கள் நலக்  கூட்டணியின் தலைவர்கள்  மக்கள் நலக்  கூட்டணியால் தான் நாம் தோல்வியடைந்தோம்  என நினைக்கத் தொடங்கிவிட்டனர். 

விஜயகாந்த்தும் வாசனும் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளனர்.
விஜயகாந்த் தனித்து தேர்தலில் போட்டியிட்டபோது வெற்றி பெற்றார். பத்து சத வீத வாக்கு பெற்று அனைவரையும் வியக்கவைத்தார். ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவரானார். மக்கள் நலக்  கூட்டணியின் உதவியால் முதலமைச்சராகலாம் என விஜயகாந்த்  போட்ட கணக்கு பிழைத்துவிட்டது. பலமான கூட்டணி என விஜயகாந்த் நம்பிய மக்கள் நலக் கூட்டணியால் அவரை சட்டமன்ற உறுப்பினராக்க முடியவில்லை.  தனித்துப் பெற்ற வாக்குகள்  அனைத்தும் கூட்டணியில் சேர்ந்ததும் காணாமல் போய்விட்டது.


 திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என விஜயகாந்தின் கட்சி நிர்வாகிகள் விரும்பினார்கள்.  விஜயகாந்தும் அதற்கு உடன்பட்டார். ஆனால், விஜயகந்தினுடைய மனைவி பிரேமலதா        அதற்கு உடன்படவில்லை மக்கள் நலக்  கூட்டணியில் சேர்ந்தால் விஜயகாந்த் முதல்வராகிவிடுவர்  என பிரேமலதாமனப்பால் குடித்தார். தேர்தல் பரப்புரையின் போது கருணாநிதியை விளாசித் தள்ளிய பிரேமலதா தேர்தல் தோல்வியால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டார்.

கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து   தேர்தல்  தோல்வி பற்றி விஜயகாந்த ஆராய்ந்தார். மக்கள் நலக்  கூட்டணியில் சேர்ந்ததால் தான் தோல்வியடைந்தோம் என அனைவரும்  ஒட்டு மொத்தமாகச் சொல்லிவிட்டனர்.  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டும் என விஜயகாந்தின் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை சொன்னபோது அதனைப் பொருட்படுத்தாமல் வைகோவின் வேண்டுகோளை  ஏற்று மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த்  சேர்ந்தார்.

 திராவிட முன்னேற்றக் கழகத்தி விட்டு விஜயகாந்த் காததூரம் செல்வதற்கு அவருடைய மனவி பிரேமலதாதான் முழுமுதல் காரணம். ஒரு கட்சியின் பெரும்தலைவன் மனைவியின் சொல்லுக்குக் கடுப்பட்டு கட்சியின் எதிர்காலத்தை சின்னா பின்னமாக்கிவிட்டார். தேர்தல் தோல்விக்குப் பின்னர் விஜயகாந்தையும் பிரேமலதாவையும் பொது வெளியில் காணமுடியவில்லை.  தேர்தல் தோல்வியில் இருந்து அவர்களால் மீண்டுவெளிவர முடியவில்லை. கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக அவர் ஏதாவது செய்ய வேண்டும், இல்லையேல், அவரது கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள்  கட்சி மாறும் நிலை ஏற்படும். விஜயகாந்தின் கட்சியை இல்லமல் செய்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் காய் நகர்த்துகின்றன. அவற்றின் வலையில் விஜயகாந்தின் கட்சி நிர்வாகிகள் விழுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் காலடியில் சரணடைய தயாராக இருந்த வாசன் கடைசி நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியில்  தஞ்சமடைந்தார். இரட்டை இலைஅயில் போட்டியிட வேண்டும். ஒற்றை இலக்க தொகுதியை ஒதுக்குகிறேன் என்ற ஜெயலலிதாவின் நிபந்தனைக்கு மறுப்புத் தெரிவித்து மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். எதிர்பார்த்ததற்கு அதிகமாக 29 தொகுதிகளில் வாசனின் கட்சி போட்டியிட்டது.  இரண்டு தொகுதிகளைத்தவிர ஏனைய தொகுதிகளில் கட்டுப்பணத்தை பறிகொடுத்தார். தனது கட்சி தோல்வியடைந்ததற்கு மக்க;ள் நகக் கூட்டணிதான் காரணம் என வாசன் புலம்புகிறார்.

விஜயகாந்தும் வாசனும்மக்க;ள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி இருக்கின்றனர்திருமாவளவனும் கூட்டணியில் தொடர்வது சாத்தியம் இல்லை என்பதை சூசகமாகத் தெரிவித்துவிட்டார் வைகோவும் இடதுசாரிகளும்தான் மக்கள் நலக் கூட்டணீயில் நீடிக்கப்போகின்றனர். தமிழகத்தில் மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன.  வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில்  அரவக்குறிச்சி, தஞ்சை ஆகியதொகுதிகளின் தேர்தல் இடை நிறுத்தப்பட்டது. திருப்பங்குன்ற  தொகுதி சட்ட மன்ற  உறுப்பினர் மரணமானதால் அத் தொகுதி காலியாக உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்கும் நிலையில் மக்கள் நலக் கூட்டணி இல்லை.

மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடந்தாலும் சற்றும் தொய்வில்லாது அறிக்கைகள் மூலம் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் குடைச்சல் கொடுக்கிரார் கருணாநிதி.தோல்வியைத் தோல்வியாகக்  கருதாது வெற்றி இலக்கை நோக்கி தொண்டர்களை பயனிக்க வைக்கும் திட்டத்தை அவர் முன்னெடுக்கிறார்.  அடுத்து வரப்போகும் மாநகாராட்சி, நகராட்சி,உள்ளாட்சித் தேர்தலுக்காக ஜெயலலிதாவும் கருணாநிதியும் தம்மைத் தயார்ப்படுத்துகின்றனர்.  மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அதில் அக்கறை  காட்டவில்லை

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தோல்வியடைந்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் இதுவரை ஒன்று கூடிப்பேசவில்லை. அடுத்து என்ன செய்வதென்ற திட்டம் அவர்களிடம் இல்லை. மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களின் மெத்தனத்தால் அடுத்த நிலையில் இருக்கும் தலைவர்களும் தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்த தவறினால் கூட்டணி காணாமல்  போய்விடும்.


வர்மா


No comments: