Friday, March 5, 2021

தினகரனுக்கு அதிர்ச்சியையும் எடப்பாடிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்த சசிகலா

ஜெயலலிதாவின் உடன் பிறவாசகோதரியான சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்ததால் தமிழக அரசியலில்  பல  பிரச்சினைகளுக்கு  முடிவு  கட்டப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா, பொது எதிரியான திராவிட முன்னேற்றக் கழகத்தை  ஆட்சிபீடம் ஏற அனுமதிக்கக் கூடாது என அறிக்கை விடுத்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களுக்கு எதிராக சசிகலா எதுவும் சொல்லவில்லை.

பாரதீய ஜனதாக் கட்சியின் அழுத்தத்தால் மீண்டும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் செல்லலாம் என சசிகலா எதிர்பார்த்தார்.  ஆனால், எடப்பாடி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர் பார்ப்பு உள்ளது.  சசிகலாவைச் சேர்க்காமல் தோல்வியடைந்தால் தினகரனின் மேல் பழியைப் போடலாம் என எடப்பாடி கருதுகிறார்.

கட்சி அதிகாரத்தில் இருந்து எடப்பாடியை அகற்ற பன்னீர் காத்திருக்கிறார். தோல்விக்கு எடப்பாடிதான் காரணம் என பன்னீர் பிரசாரம் செய்வார். எடப்பாடியும், பன்னீரும் ஏட்டைக்குப் போட்டியாக விளம்பரம் செய்த்து தம்மை முன்னிலைப் படுத்துகிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த  சசிகலா விடுதலயானதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்  பிரளயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று  அமைச்சராக வலம் சிலரும், சட்டசபை உறுப்பினர்களில் சிலரும் சசிகலாவால்  ஜெயலலிதாவுடம் பரிந்துரைக்கப்பட்டவர்கள். 

ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்ச்செல்வத்தை  முதலமைச்சர் பதவியில் இருந்து   விலக நெருக்கடி கொடுத்த சசிகலா தான் விரும்பிய எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்றார். சிறைத்தண்டனை முடிந்து தான் வெளிவரும்போது    எடப்பாடி தனக்கு விசுவாசமாக இருப்பார் என சசிகலா நினைத்தார்.

ஆனால், பதவி ஆசை யாரை விட்டது.  எதிரியுடன் சமாதானமானால்தான் ஆட்சியைத் தக்க வைக்கலாம் என உணர்ந்துகொண்ட  எடப்பாடி பன்னீரின் விருப்பத்துக்கமைய நடந்துகொண்டாட்.

 சசிகலா கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரிடம் இருந்த  பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. தாமரைக்குக்கீழே இரட்டை இலையைச் செருகியதால்  ஸ்டாலினிடமிருந்து எடப்பாடி தப்பினார்.

எல்லாம் சுமுகமாகச் சென்ரு கொண்டிருந்தபோது சசிகலா விடுதலையாகும் நாள்  அறிவிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா சுகமாகி தமிழகம் வரும் நாள் குறிக்கப்பட்டது. அன்று சசிக்லாவின் மீதா ஊடக வெளிச்சத்தைத் தவிர்ப்பதற்காக ஜெயலலிதாவின் நினைவிடம் அவசர அவசரமாகத்  திறக்கப்பட்டது. ஆனால், சசிகலா அன்று தமிழகத்துக்கு வரவில்லை. 

ஒரு வாரம் கடந்து சசிகலா தமிழகத்துக்கு வந்த போது  கர்நாடகத்தில் இருந்து  சென்னை வரை பிரமாண்டமான பேரணியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா பயணம்  செய்ததால்  தமிழக அமைச்சர்களின் புகார் அவரிடம் கையளிக்கப்பட்டது. சசிகலா பயனம் செய்த கார் அண்னா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரின் கார் என்பதால் கொடி அகற்றப்படவில்லை.

மிகப்பெரிய திட்டத்துடன் சசிகலா வந்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர் கைப்பற்றுவார் என தினகரனின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று சசிகலா விடுத்த அறிக்கை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே சசிகலா ஒதுங்கவில்லை , பதுங்குகிறார்.

சசிகலாவின் அறிக்கை எடப்பாடிக்கு  ஏற்பட இருந்த  பிரச்சினைக்குத் தீர்வாகிவிட்டது. சசிகலாவைச் சேர்க்கும்படி பாரதீய ஜனதா கொடுத்த அழுத்தத்தில் இருந்து எடப்பாடி தப்பி விட்டார். டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த பின்னர்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சசிகலாவைச் சேர்ப்பதில்லை  என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.   

இந்திய அரசியல் மாயவித்தைக் காரனான அமித் ஷாவின் வேண்டுகோளையும் எடப்பாடி ஏற்கவில்லை. சசிகலாவைக் கட்சியில் சேர்த்துவிட்டு மன்னார்குடி குடும்பத்துக்கு அடிமையாக  இருப்பதை எடப்பாடி விரும்பவில்லை.  சசிகலாவின் விடயத்தில் ஓ.பான்னீர்ச்செல்வம் அமைதியாக இருக்கிறார். வாழும் பரதன் என்று விளம்பரம்  செய்து தன் விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது இரண்டு முறை  பன்னீரிடம்  முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்தார்.  இரண்டு முறையும் அவர் ஜெயலலிதாவிடம் திரும்பக் கொடுத்தார்.  பன்னீரிடம் இருந்த  முதலமைச்சர் பதவியைப்  பறித்து  எடப்பாடியிடம் கொடுத்துவிட்ட சசிகலா சிறைக்குச் சென்றார்.  சசிகலா சிறையில் இருக்கும்போதே அவரிடம் இருந்த பொதுச்செயலாளர் பதவியைப் பறித்து கட்சியில் இருந்து அவரை நீக்கினார் எடப்பாடி. பன்னீரின்  விளம்பரம் எடப்பாடிக்கும் எதிரானதுதான்.

சசிக்லாவின் அறிவிப்பால்  தினகரன் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்றுவதற்காகவே புதிய கட்சியை ஆரம்பித்ததாக தினகரன் பிரசாரம் செய்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இடம் இல்லையானால் சசிகலா தன்னுடன் இருப்பார் என தினகரன் நம்பி இருந்தார். அந்த நம்பிக்கை இன்று தவிடுபொடியானது.

அரசிலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவிக்கவில்லை. ஒதுங்கி இருப்பதாக்தனா அறிவித்துள்ளார். தேர்தலில் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தால் தீவிர அரசியலில் இறங்குவார். இரட்டை இலை சின்ன வழக்கு நிலுவையில் உள்ளது.  அதன் தீர்ப்பின் பின்னர்  அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்யாருடைய கையில் இருக்கும் எனத் தெரியவரும்.

எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது. எம்.ஜி.ஆரின்  மனைவி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என  பிரிந்தது அப்போது ஏற்பட்ட மன  உழைச்சலால்  அரசியலில் இருந்து வெளியேறுவதாக ஜெயலலிதா கடிதம் எழுதினார். சசிகலாவின் கணவரான நடராஜன் அந்தக் கடிதத்தை வெளியிடாமல் மறைத்து வைத்தார். அதனை அறிந்த அன்றைய அரசு கடிதத்தைத்தேடி நடராஜனின்  வீட்டில் தேடுதல் நடத்தியது. ஜானகி அரசியலை விட்டு ஒதுங்கியதும்.   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஜெயலிதாவிடம் சரணடைந்தது. அதே  போன்ற ஒரு நிலை இன்றைக்கு சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்களாக  சட்டசபை உறுப்பினர்களாக வட்ட, மாவட்ட பொறுப்பில் இருப்பவர்களில் பலர் சசிகலாவின் தயவால் பதவி பெற்றவர்கள். அவர்கள் பதவி இழந்ததும் தன்னிடம் வருவார்கள் என சசிகலா எதிர்பார்க்கிறார்.

No comments: